இந்த கேள்விக்குள் போகும் முன் முகநூலில் இதைப் பற்றி 'காலச்சுவடு' கண்ணன் எழுதியுள்ளதை பகிர்கிறேன்:
"முப்பது வருடங்களிருக்கும். வீட்டு மொட்டைமாடியில் ஒரு
நார்க்கட்டிலில் அமர்ந்தபடி ஜெயமோகனுடன் பேசிக்
கொண்டிருக்குதேன். சரியாகச் சொல்வதென்றால்
பேசக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவருடன் அதிகப் பழக்கம் இல்லாத காலகட்டம் (கடைசிவரை ஒட்டவில்லை என்பது வேறு செய்தி). ராமஜென்மபூமி இயக்கம் பற்றி உணர்ச்சிப்பிழம்பாக பேசிக்கொண்டிருந்தார். என் அசுவாரசியம் முகத்திலேயே வழிந்திருக்க வேண்டும். எனவே என்னைப்போன்ற 'மேற்கத்தியச் சிந்தனை'
மரபினர்மீது கொஞ்சேநேரம் பொழிந்தார். ஆர்.எஸ்.எஸ்.ஸுடன்
தனக்கு வேறுபாடு ஏற்பட்டிருந்தாலும் ராம ஜென்ம பூமியில் கோயில் கட்டுவது இன்றும் ஒரு உணர்வுபூர்வமான விஷயம்தான் என்றார். அப்படிப்பேசும் ஒரு தமிழ் எழுத்தாளரை அப்போதுதான்
முதலில் பார்த்தேன். அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 30 வருடங்களுக்குப் பின்னர் அப்படி ஒரு தமிழ் எழுத்தாளர்தான் இப்போதும் இருக்கிறார்.
ராமஜென்மபூமி இயக்கம் உருவாகியிராவிட்டால் ஜெயமோகனின்
படைப்புலகின் ஒரு முக்கியக் கூறு உருப்பெற்றிருக்காது. அல்லது இப்படிச் சொல்லலாம். ராம ஜென்ம பூமி இயக்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் 'இந்து எழுச்சி'யின் வழி உருவான மனம்தான் 'இந்திய ஞான மரபு' என்பதான படைப்புலகை உருவாக்கியது. எனவேதான் அதற்குத் தமிழில் முன்னோடிகள் யாருமில்லை.
ஆர்.எஸ்.எஸ்.ஸிலிருந்து வேறுயாரும் தமிழ் இலக்கியத்திற்கு வரவில்லை என்பதால் பின்னோடிகளுமில்லை.
கார்கில் யுத்தமும் அதை பாஜக அரசு தேசியவெறியாக வளர்த்தெடுத்த லாவகமும் நடந்திராவிட்டால் ஜெயமோகன் எனும் சமூக அரசியல் கருத்தாளருக்கு அத்தலைமுறையில் விசிறிகள் உருவாகியிருக்கமுடியாது. IPKF இலங்கையில் யாரையும் வன்பாலுறவு செய்யவில்லை
என்பதையோ இந்தியாவுக்கு எதிரான மதச் சிறுபான்மையினரின் சதிகளைப் பற்றிய பினாத்தல்களையோ செரிக்க தேசிய வெறி இருத்தல் வேண்டும். (இதற்கும் தேசப்பற்றுக்கும் சம்பந்தமில்லை).
பெண்ணியம், தலித்தியம், இடதுசாரிக் கருத்தியல் சார்ந்து சிலர்
கவனம்பெற்றுவிடுவதாக ஆக்ரோஷப் பதிவுகளைப் பார்க்கும்போது
இதை நினைவில் கொள்க.
விஷ்ணுபுரம் நாவலின் அச்சாக்கத்திற்கும் விநியோகத்திற்கும்
ஆர்.எஸ்.எஸ். நேரடியாக உதவிசெய்தது. இதுபற்றி இன்னொரு
சந்தர்ப்பத்தில் ஆதாரப்பூர்வமான செய்திகளைப் பார்க்கலாம்."
அடுத்து என் எதிர்வினை:
ஜெயமோகனுக்குள் ஒரு சங்கி உண்டு, ஆனால் சங்கிகளை ஏற்காத தரப்புகளும் அவருக்குள் உண்டு. நிறைய உள்முரண்கள் கொண்ட படைப்பாளி அவர். ஜெயமோகன் இந்து தேசியவாதத்தைக் கடந்து எவ்வளவோ எழுதி இருக்கிறார். அவரை கண்ணன் இப்படி ஒரு இந்துத்துவ புனைவெழுத்தாளராக சுருக்குவது அநீதி.
மேலும், கண்ணன் குற்றம் சாட்டுவதைப் போல "விஷ்ணுபுரம்" ஒன்றும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சார நாவல் அல்ல. (அது எப்படி வெளியிடப்பட்டது என்பது வேறு கதை) அது இந்திய சுதந்திரத்துக்குப் பின்பான அரசியல் மாற்றங்களை ஒரு நீதிக்கதையாக (parable) முன்வைக்கிற, இந்து, தத்துவ மரபுகளின் மோதல்களை, தத்துவ இயக்கத்தின் சாரமின்மையை மார்க்வெஸின் "நூற்றாண்டுகளின் தனிமை" நாவலின் பாணியில் சித்தரிக்கிற, மிக முக்கியமாக மானுட இருப்பு குறித்து கவித்துவமான கேள்விகளை எழுப்புகிற ஒரு படைப்பு. தமிழில் அதற்கு முன்போ பின்னரோ அப்படி ஒரு இலக்கிய பிரதி உருவாகவில்லை. அவ்வளவு பெரிய சவாலை ஒரு எழுத்தாளன் துணிந்து மேற்கொண்டதில்லை. அதற்கே ஜெயமோகனுக்கு நாம் கைத்தட்டலாம்.
இவ்விசயத்தில் கண்ணனுடன் முழுக்க மாறுபடுகிறேன். நாம் இலக்கியத்தை இப்படி அரசியல்படுத்திப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்!
முக்கியமாக, ஒருவரைத் தாக்க அவரது படைப்புலகை பயன்படுத்தக் கூடாது.
Comments