இலக்கிய விமர்சனம் என்பது எவ்வளவு ஆபத்தான தொழில் என்பது செல்வேந்திரன், சு.வெ போன்றோரைப் பார்க்கையில் தெரிகிறது - ஒரு கதை, கவிதையை திட்டிவிட்டால் பின்னர் அந்த எழுத்தாளர் ஜென்மப் பகைவர் ஆகி விடுவார். (அதுவும் அதிர்ந்து ஒரு வார்த்தை பேசாத ‘மௌனராகம்’ மோகனான சு.வெவையே கொடும் வில்லனாக சித்தரிக்கிறார்கள் என்றால் பாருங்கள்.) செல்வேந்திரன் சொல்வது உண்மையென்றால், விமர்சனத்தால் புண்பட்ட ஒருவர் ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயல்கிறார் (எனக்கென்னவோ அவர் ரயில்முன் விமர்சகரைத் தள்ளி கொல்லவே பார்ப்பார் என நினைக்கிறேன்!) ஒரு இதழ் நம் படைப்பை பிரசுரிக்க மறுத்தால் பின்னர் அதை படிக்கவே மாட்டோம், அல்லது படித்து படித்து கழுவி ஊற்றுவோம். ஒரு பதிப்பாளர் நம் புத்தகத்தை பரிசுரிக்க மறுத்தால் அவரை நாயே பேயே எனத் திட்டுவோம். இதுவே சமூக அரசியல் தளத்தில் விவாதங்கள், சர்ச்சைகளில் வசையாகப் பொழிந்தாலும் அது இரு தரப்பிலும் இப்படி ஒரு அந்தரங்கமான வெறுப்பை, பழியுணர்வை உண்டுபண்ணுவதில்லை. இலக்கியம் ஒரு விசித்திரமான மிருகம்!
வைரமுத்து தன் கவிதை ஒன்றில் இலக்கிய விமர்சகன் ஒரு பாலைவனக் கள்ளிச்செடி என்கிறார். தீவிர இலக்கியத்திலும் நமக்கு அந்த சித்திரமே உள்ளது.
இலக்கிய விமர்சகன் இதனாலே நேசிக்கப்படுவதில்லை; எவ்வளவு படிக்க வேண்டும்! அதை அலசி, வரையறுத்தி தொடர்ந்து எவ்வளவு எழுத வேண்டும்! ஓரளவுக்கு பெயர் கிடைத்ததும் நிறைய பேர் இலவசமாக நூல்களை அனுப்புவார்கள். ஆரம்பத்தில் கிளுகிளுப்பாக இருந்தாக தபாலில் வரும் இந்த புத்தகங்கள் போகப் போக எரிச்சலூட்டும். அவன் விமர்சகனாக நிலைப்பெற்றதும் கண்டு லேசாய் அஞ்சுகிறோம், அதைக்காட்டிக் கொள்ளாமல் இருக்க கூட்டங்களில் கைகட்டி நின்று அதீத மரியாதை காட்டுகிறோம். அல்லது அவனைக் கடுமையாக வெறுக்கிறோம். அவனுக்கு அரிதாகவே விருதளிக்கிறோம். எப்போதுமே அவன் ஒருதலை சார்பானவன் என சந்தேகப்படுகிறோம். தன் கற்பை தொடர்ந்து நிரூபித்தே அவன் களைத்துப் போகிறான். இயல்பிலேயே நம் சமூகம் ஏற்றத்தாழ்வு மிக்கது, அநீதியின் பால் நிற்பது என்பதும் நீதிபரிபாலகர்கள் மீது அச்சமும் அவநம்பிக்கையும் ஏற்படக் காரணம். நீதிபரிபாலகனாக விமர்சகன் தன்னைக் கருதினால் அவனை தாதாவாகவும், அவன் அனைவரையும் பாராட்டுகிற மென்போக்குவாதி எனில் அவனை ராபின்ஹுட்டாகவும் பாவிக்கிறோம் - ஆனால் ரெண்டு பேருமே அடிப்படையில் கொள்ளைக்காரர்கள்.
இதில் பெரிதாக டேமேஜ் ஆகாமல் தப்பித்தவர்கள் கோட்பாட்டாளர்கள் - அவர்களும் இலக்கியத்தை காவு கொடுக்கிறார்கள் என அழகியல்வாதிகளால் தாக்கப்படுகிறார்கள்.
எழுத்தாள-விமர்சகர்களின் கதி இன்னும் பரிதாபம் - அவர்களது கதை, நாவல்கள் அவர்கள் சொல்லும் கருத்துக்களுக்காக நிராகரிக்கப்படும்; அல்லது “இவ்வளவு பேசுறியே, நீ எழுதுறது கக்கான்னு உனக்கே தெரியாதா?” என திரும்பக் கேட்பார்கள்.
சில புத்திசாலி எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் - யாரையும் பாராட்டவோ திட்டவோ மதிப்பிடவோ மாட்டார்கள். அது எதற்கு தம் முகநூல் பக்கத்தில் மற்றொரு எழுத்தாளனின் பெயர், படம், புத்தக அட்டைப்படம் எதுவுமே வராமல் பார்த்துக்கொள்வார்கள். எந்த அடையாளத்தையும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். எந்த அரசியல் சித்தாந்தத்திலும் பட்டுக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் எல்லா முகாம்களிலும் நல்ல பிள்ளைகளாக இருப்பார்கள். இது ஒரு அரிய கலை. எல்லாருக்கும் கைவராது. (சரவணன் சந்திரன் இவ்விசயத்தில் ஒரு லெஜண்ட்)
பிடிக்காத படைப்புகளைப் பற்றி எழுதாமல் தவிர்த்து, பிடித்தவற்றை மட்டுமே பாராட்டுவது தன் கொள்கை என அ.முத்துலிங்கம் சொல்லியிருக்கிறார். எப்போதாவது (அல்லது அவ்வப்போது) கொலைவெறி வந்து சில படைப்புகளை சாபமிடுவதைத் தவிர நான் பெரும்பாலும் இதைப் பின்பற்ற முயல்கிறேன்.
எழுத்தாளனாக நாம் நமது பங்களிப்பு குறித்த ஒரு அதீத மதிப்பூட்டுடனே இருக்கிறோம். விமர்சனம் அதை அசைத்து விடுகிறது. ஆக அதை ஒரு கொலைத்தாக்குலாகப் பார்க்கிறோம். என்ன பிரச்சனையென்றால் இந்த மிகையான சுயமதிப்பீடு ஒரு எழுத்தாளனாக நாம் தாக்குப்பிடிக்க அவசியம்.
ஜெயமோகன் இதை நன்றாக அறிவார்; அவர் இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார் - அவர் தன்னைப் புகழ்கிறவர்களை மட்டுமே தன்னைச் சுற்றி வைக்க ஆரம்பித்தார். அவர்கள் தம் பணியை சரியாக ஆற்றாவிடில் அவரே தன்னைப் புகழ்ந்து கொள்வார். புகழ்ச்சி நம்மை நிலைகுலைவுகளில் இருந்து பாதுகாக்கிறது. அடுத்தடுத்து எழுத ஊக்கமளிக்கிறது, அரணாக இருந்து ஆக்கிறது. இது ஒரு நல்ல உளவியல் உத்தி என்றே நினைக்கிறேன். (இதை வெறும் கிண்டலுக்காக சொல்லவில்லை.)
எழுதுவதற்கு இது அவசியம் - ஆனால் எழுதுவதற்கு முன்பான தயாரிப்பிலும் பின்பான எடிட்டிங்கிலும் மட்டுமே விமர்சகர்களின் கருத்துக்கள் கைகொடுக்கும். இது என் அனுபவம். சரியான கருத்துக்களை எடுத்துக்கொண்டால் நம் எழுத்து மேம்பட கைகொடுக்கும்.
பி.கு: செல்வேந்திரன்-சு.வெ சர்ச்சையில், விமர்சகனை சுற்றி நின்று வாள் சுழற்றுவோரை வைத்து இதைச் சொல்கிறேன்.

Comments