Skip to main content

“கொலைத்தொழில்” பழகு



இலக்கிய விமர்சனம் என்பது எவ்வளவு ஆபத்தான தொழில் என்பது செல்வேந்திரன், சு.வெ போன்றோரைப் பார்க்கையில் தெரிகிறது - ஒரு கதை, கவிதையை திட்டிவிட்டால் பின்னர் அந்த எழுத்தாளர் ஜென்மப் பகைவர் ஆகி விடுவார். (அதுவும் அதிர்ந்து ஒரு வார்த்தை பேசாதமௌனராகம்மோகனான சு.வெவையே கொடும் வில்லனாக சித்தரிக்கிறார்கள் என்றால் பாருங்கள்.) செல்வேந்திரன் சொல்வது உண்மையென்றால், விமர்சனத்தால் புண்பட்ட ஒருவர் ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயல்கிறார் (எனக்கென்னவோ அவர் ரயில்முன் விமர்சகரைத் தள்ளி கொல்லவே பார்ப்பார் என நினைக்கிறேன்!) ஒரு இதழ் நம் படைப்பை பிரசுரிக்க மறுத்தால் பின்னர் அதை படிக்கவே மாட்டோம், அல்லது படித்து படித்து கழுவி ஊற்றுவோம். ஒரு பதிப்பாளர் நம் புத்தகத்தை பரிசுரிக்க மறுத்தால் அவரை நாயே பேயே எனத் திட்டுவோம். இதுவே சமூக அரசியல் தளத்தில் விவாதங்கள், சர்ச்சைகளில் வசையாகப் பொழிந்தாலும் அது இரு தரப்பிலும் இப்படி ஒரு அந்தரங்கமான வெறுப்பை, பழியுணர்வை உண்டுபண்ணுவதில்லை. இலக்கியம் ஒரு விசித்திரமான மிருகம்!

வைரமுத்து தன் கவிதை ஒன்றில் இலக்கிய விமர்சகன் ஒரு பாலைவனக் கள்ளிச்செடி என்கிறார். தீவிர இலக்கியத்திலும் நமக்கு அந்த சித்திரமே உள்ளது.

இலக்கிய விமர்சகன் இதனாலே நேசிக்கப்படுவதில்லை; எவ்வளவு படிக்க வேண்டும்! அதை அலசி, வரையறுத்தி தொடர்ந்து எவ்வளவு எழுத வேண்டும்! ஓரளவுக்கு பெயர் கிடைத்ததும் நிறைய பேர் இலவசமாக நூல்களை அனுப்புவார்கள். ஆரம்பத்தில் கிளுகிளுப்பாக இருந்தாக தபாலில் வரும் இந்த புத்தகங்கள் போகப் போக எரிச்சலூட்டும். அவன் விமர்சகனாக நிலைப்பெற்றதும் கண்டு லேசாய் அஞ்சுகிறோம், அதைக்காட்டிக் கொள்ளாமல் இருக்க கூட்டங்களில் கைகட்டி நின்று அதீத மரியாதை காட்டுகிறோம். அல்லது அவனைக் கடுமையாக வெறுக்கிறோம். அவனுக்கு அரிதாகவே விருதளிக்கிறோம். எப்போதுமே அவன் ஒருதலை சார்பானவன் என சந்தேகப்படுகிறோம். தன் கற்பை தொடர்ந்து நிரூபித்தே அவன் களைத்துப் போகிறான். இயல்பிலேயே நம் சமூகம் ஏற்றத்தாழ்வு மிக்கது, அநீதியின் பால் நிற்பது என்பதும் நீதிபரிபாலகர்கள் மீது அச்சமும் அவநம்பிக்கையும் ஏற்படக் காரணம். நீதிபரிபாலகனாக விமர்சகன் தன்னைக் கருதினால் அவனை தாதாவாகவும், அவன் அனைவரையும் பாராட்டுகிற மென்போக்குவாதி எனில் அவனை ராபின்ஹுட்டாகவும் பாவிக்கிறோம் - ஆனால் ரெண்டு பேருமே அடிப்படையில் கொள்ளைக்காரர்கள்.

இதில் பெரிதாக டேமேஜ் ஆகாமல் தப்பித்தவர்கள் கோட்பாட்டாளர்கள் - அவர்களும் இலக்கியத்தை காவு கொடுக்கிறார்கள் என அழகியல்வாதிகளால் தாக்கப்படுகிறார்கள்

எழுத்தாள-விமர்சகர்களின் கதி இன்னும் பரிதாபம் - அவர்களது கதை, நாவல்கள் அவர்கள் சொல்லும் கருத்துக்களுக்காக நிராகரிக்கப்படும்; அல்லதுஇவ்வளவு பேசுறியே, நீ எழுதுறது கக்கான்னு உனக்கே தெரியாதா?” என திரும்பக் கேட்பார்கள்.

சில புத்திசாலி எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் - யாரையும் பாராட்டவோ திட்டவோ மதிப்பிடவோ மாட்டார்கள். அது எதற்கு தம் முகநூல் பக்கத்தில் மற்றொரு எழுத்தாளனின் பெயர், படம், புத்தக அட்டைப்படம் எதுவுமே வராமல் பார்த்துக்கொள்வார்கள். எந்த அடையாளத்தையும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். எந்த அரசியல் சித்தாந்தத்திலும் பட்டுக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் எல்லா முகாம்களிலும் நல்ல பிள்ளைகளாக இருப்பார்கள். இது ஒரு அரிய கலை. எல்லாருக்கும் கைவராது. (சரவணன் சந்திரன் இவ்விசயத்தில் ஒரு லெஜண்ட்)

பிடிக்காத படைப்புகளைப் பற்றி எழுதாமல் தவிர்த்து, பிடித்தவற்றை மட்டுமே பாராட்டுவது தன் கொள்கை என .முத்துலிங்கம் சொல்லியிருக்கிறார். எப்போதாவது (அல்லது அவ்வப்போது) கொலைவெறி வந்து சில படைப்புகளை சாபமிடுவதைத் தவிர நான் பெரும்பாலும் இதைப் பின்பற்ற முயல்கிறேன்.


எழுத்தாளனாக நாம் நமது பங்களிப்பு குறித்த ஒரு அதீத மதிப்பூட்டுடனே இருக்கிறோம். விமர்சனம் அதை அசைத்து விடுகிறது. ஆக அதை ஒரு கொலைத்தாக்குலாகப் பார்க்கிறோம். என்ன பிரச்சனையென்றால் இந்த மிகையான சுயமதிப்பீடு ஒரு எழுத்தாளனாக நாம் தாக்குப்பிடிக்க அவசியம்.

ஜெயமோகன் இதை நன்றாக அறிவார்; அவர் இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார் - அவர் தன்னைப் புகழ்கிறவர்களை மட்டுமே தன்னைச் சுற்றி வைக்க ஆரம்பித்தார். அவர்கள் தம் பணியை சரியாக ஆற்றாவிடில் அவரே தன்னைப் புகழ்ந்து கொள்வார். புகழ்ச்சி நம்மை நிலைகுலைவுகளில் இருந்து பாதுகாக்கிறது. அடுத்தடுத்து எழுத ஊக்கமளிக்கிறது, அரணாக இருந்து ஆக்கிறது. இது ஒரு நல்ல உளவியல் உத்தி என்றே நினைக்கிறேன். (இதை வெறும் கிண்டலுக்காக சொல்லவில்லை.)  


எழுதுவதற்கு இது அவசியம் - ஆனால் எழுதுவதற்கு முன்பான தயாரிப்பிலும் பின்பான எடிட்டிங்கிலும் மட்டுமே விமர்சகர்களின் கருத்துக்கள் கைகொடுக்கும். இது என் அனுபவம். சரியான கருத்துக்களை எடுத்துக்கொண்டால் நம் எழுத்து மேம்பட கைகொடுக்கும்.


பி.குசெல்வேந்திரன்-சு.வெ சர்ச்சையில், விமர்சகனை சுற்றி நின்று வாள் சுழற்றுவோரை வைத்து இதைச் சொல்கிறேன்.

          

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...