பல மொழித் திறன் கொண்டோரை நமக்குத் தெரியும். அவர்களால் ஏகப்பட்ட மொழிகளைப் புரியவும் அவற்றில் பேசவும் ஓரளவுக்கு முடியும். ஆனால் எந்த மொழியிலும் அவர்களுக்கு தனித்த ஆளுமையோ நிபுணத்துவமோ இராது. ஏனென்றால் ஒரு மொழியை தக்க வைக்க அதனை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். ஏழெட்டு மொழிகளில் ஒரே சமயம் அனுதினமும் உரையாடும் சூழல் பெரும்பாலானோருக்கு வாய்ப்பதில்லை. ஆகையால், தினமும் பயன்படுத்தும் ஒன்றிரண்டு மொழிகளைத் தவிர மற்ற மொழிகள் காலப்போக்கில் உதிர்ந்து விடுகின்றன. அதாவது மொழி என்பது அறிவியல், வரலாறு போல படித்தால் வாழ்நாளெல்லாம் மூளையில் தகவல் தொகுப்பாக நிலைக்காது. என் மாணவர்கள் சிலரிடம் இந்த சிக்கலைக் கண்டிருக்கிறேன் - அவர்களுக்கு பிரஞ்சு ஓரளவுக்குத் தெரியும், ஆனால் சரளமாக பேச முடியாது, இந்தி, மலையாளத்தில் பேச முடியும், ஆனால் எழுத வராது, இம்மொழிகளில் அவர்களின் சொல்வளமும் மிக சொற்பமாகவே இருக்கும். மொழிக் கற்பித்தல் கோட்பாட்டில் இதை immersion என்பார்கள். நீருக்குள் மூழ்கி இருப்பதைப் போல ஒரு மொழிக்குள் நீங்கள் இருக்க வேண்டும், அதையே கேட்க வேண்டும், அதிலேயே பேச வேண்டும், அதையே படிக்க வேண்டும். இல்லாவிடில் நீர் காய்ந்து விடுவதை போல மொழியும் உலர்ந்து மறைந்து விடும். வடிவேலுவின் ஜோக் ஒன்றில் சரிவர பார்க்க முடியாத ஒரு காரோட்டி “வரும் ஆனா வராது” என்பாரே, அப்படித்தான் இந்த பன்மொழித் திறனும் இருக்கிறது. இதை நான் சொல்லவில்லை, மொழியியல் ஆய்வு சொல்லுகிறது.
எனில், மூன்றாவதாக நம் பிள்ளைகள் கற்கிற பிரஞ்சோ இந்தியோ சமிஸ்கிருதமோ எப்படி அவர்களின் திறனாக நீடிக்கும்? அவர்கள் தினமும் யாருக்காவது சமிஸ்கிருதத்தில் காதல் கடிதம் எழுதுவார்களா? அவர்கள் தமிழகத்தில் உள்ள தம் நண்பர்களுக்கு தினமும் இந்தியில் வாட்ஸாப் பண்ணுவார்களா? அவர்கள் தம் தாயிடம் சென்று பிரஞ்சில் “ஆத்தா நான் பாஸாயிட்டேன்” என சொல்வார்களா? ஆங்கிலத்திலாவது சொற்பமாகவேனும் நாம் வகுப்பில் உரையாட கட்டாயம் ஏற்படுகிறது, வேலையிடங்களில் ஆங்கிலம் கட்டாயமாகிறது, பெரும்பாலான தகவல்களை நாம் கூகிளில் ஆங்கிலத்திலே தேடிப் படிக்கிறோம். ஒரு வேலைக்கான நேர்முகத்தில் நீங்கள் ஆங்கிலத்தில் கேட்கப்படுகிற கேள்வியில் இந்தியில் பதில் சொல்ல முடியுமா? நீங்கள் பீகாருக்கு கல் சுமக்க போகாத பட்சத்தில் அப்படியான ஒரு இந்தி நேர்முகம் சாத்தியமில்லை.
அரசு உங்களுக்கு ஒரு யானையை எப்படி பயிற்சி அளித்து, உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சொல்லித் தருகிறது. ஆனால் பயிற்சிக்கு உங்கள் முன் யானை இல்லை. பாகனாக தேர்ச்சி பெற்ற பின் உங்களிடம் தொரட்டி மட்டுமே இருக்கும், என்றாவது ஒருநாள் நிஜ யானையைக் காணும் போது பயத்தில் ஒளிந்து கொள்வீர்கள்.
இந்தி கற்றால் என்ன வேலை கிடைக்கும் என்கிற கேள்விக்கே நான் வரவில்லை - அதை எப்படி தக்க வைப்பது, எப்படி பயன்படுத்தாமல் நினைவில் தேக்குவது எனும் கேள்வியையே கேட்கிறேன். மலையாளிகளில் பலரும் ஓரளவுக்கு உடைந்த இந்தியில் பேசுவார்கள், அவர்களால் வடக்கிந்தியாவில் சமாளிக்க முடியும். பாலிவுட் படம் பார்க்க முடியும். வேறேன்ன பயன்? அவர்களால் இந்தியில் ஒரு புத்தகம் எழுத முடியுமா? சொந்தமாய் ஒரு நாவலோ கவிதையோ இந்தியில் எழுதுகிற, இந்திக்காரர்களால் கொண்டாடப்பட்ட எத்தனை மலையாளி எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்? மோகன்லாலால் இந்தியில் பேசி அங்கு சல்மான்கான், ஷாருக்கான் அளவுக்கு உயர முடியுமா? பிரகாஷ் ராஜால் தமிழுக்கு வந்து தமிழைக் கற்று பெரும் நடிகராக முடிகிறது, ஆனால் அவரால் ஏன் பாலிவுட்டில் கால்பதிக்க முடிவதில்லை. திராவிட மொழிகளுக்கு இடையிலான இந்த கொடுக்கல் வாங்கல் ஏன் ஹிந்துஸ்தானி மொழிகளிடம் சாத்தியமாவதில்லை? ஏனென்றால் மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடியர்கள் அருகாமையில் இருக்கிறோம், தமிழகத்தில் மற்ற மூன்று மொழிக்காரர்களும் தமிழில் சரளமாக புழங்கியபடி இருக்கிறார்கள். ஆனால் பிராந்திய அருகாமை இல்லாததாலே இந்த ஊடுபாவல் இந்தி பெல்ட் மக்களுடன் சாத்தியமாவதில்லை. ஆம், திலீப் குமாரைப் போன்ற ஒரு எழுத்தாளர் தமிழில் மிகுந்த ஆளுமையுடன் செயல்பட்டார். ஆனால் எதார்த்தத்தில் ஒவ்வொரு தேர்தலின் போதும் சௌகார்பேட்டைக்காரர்கள் தம் சொந்த மாநிலத்துக்கு சென்று வாக்களிப்பதே நடக்கிறது. அவர்கள் என்னதான் தமிழில் பேசினாலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றை தாய்மொழியாகக் கொண்டவர்களைப் போல, தமிழர்களாக தம்மை அடையாளப்படுத்துவதோ கருதுவதோ இல்லை. ஒரு நாயுடு இங்கு பெரியார் ஆவதைப் போல, ஒரு மேனன் எம்.ஜி.ஆனதைப் போல, ஒரு பல்வீந்தர் சிங்ங்கோ, ஒரு ஜெயினோ தம்மை தமிழராகக் கருதி அரசியல் தலைவர் ஆவது இல்லை. இதுதான் மொழி அடையாளத்துக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்குமான தொடர்பு. இது இப்படி இருக்க, இந்தியைக் கற்றுக் கொள்வது உங்களுக்கு ஒரு மொழியை புதிதாக சொந்தமாக்கும், ஆனால் அந்த மொழியின் அடையாளமோ, சமூகமோ, நிலப்பரப்போ உங்களுக்கு சொந்தமாகாது. இந்தியை கற்கும் தென்னகத்தோர் என்றுமே அதில் வெளிநபர் தான். இந்திக்கே இதுதான் நிலை என்றால் சமிஸ்கிருதத்தின் நிலை அதை விட பரிதாபம்.

Comments