இந்த தேசிய கல்விக் கொள்கையின் வரைவு ஒரு தேன்மிட்டாயைப் போல இருக்கிறது - பார்க்க சிவப்பாய் அழகாய், உள்ளே ஜீரா வடிய, சுவையாய், ஆனால் உள்ளே பொத்தலாய், சத்தின்றி உள்ளது. நமது பிரதமர் ஜியின் பல உணர்ச்சி பொங்கும் பேருரைகளைப் போல, நிறைய அறிவிப்புகள், முழக்கங்கள், நம்பிக்கையூட்டும் பிரச்சாரங்களுடன் இதுவும் தோன்றுகிறது. ஜியின் அறிவிப்புகள் ஒன்று ‘ராவோடு ராவாக பொட்டியை தூக்கிக்கொண்டு ஊரை விட்டு காலி பண்ணு’ என பணமதிப்பிழப்பைப் போல மாரடைப்பை வரவழைப்பதாக இருக்கும், அல்லது ‘நாளைய விடியலோடு உங்கள் இருப்பில் பத்து லட்சம் டெபாசிட் ஆகும், வசந்தம் தோன்றும், தேனும் பாலும் வீதிகளில் ஓடும், வல்லரசுகளுக்கே வல்லரசாக நாம் இருப்போம்’ என தேர்தல் வாக்குறுதிகளாய் சர்க்கரை லெவலை ஒரேயடியாக ஏற்றுவதாக இருக்கும், இந்த கல்விக்கொள்கையோ முதலாவதை இரண்டாவதுக்குள் வைத்து மடித்து வைத்து நீட்டுகிறது. அநேகமாய் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் இந்த ‘520’ பீடாவுக்கு மயங்கி சாய்ந்து விட்டன, என்னவொரு அற்புதமான கல்வித்திட்டம் இது, புரட்சி வருகிறது, இந்தியா வல்லரசாகிறது என ஆங்கில நாளிதழ்கள் புகழாரம் சூட்டி மன்னருக்கு சாமரம் வீசுகின்றன. தமிழகம் மட்டுமே இந்த பீடாவுக்குள் இருக்கும் போதை விஷத்தை, அரசியலை, கண்டுணர்ந்து எதிர்த்து நின்று போராடுகிறது.
இதற்கான காரணங்கள் நாம் (1) ஏற்கனவே கல்வியிலும் பொருளாதார வளர்ச்சியில் சிகரம் ஏறி நிற்பது, (2) மொழி அரசியலின், தேசியத்தின் சாதக பாதகங்களை நாம் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பிருந்தே தெரிந்து வைத்திருப்பது, (3) தமிழ் தேசியவாதிகள் மற்றும் பெரியார் போன்ற பெருந்தலைவர்கள் துவங்கி இன்றைய திராவிட அரசியல் இயக்கங்களை வரை இம்மண்ணில் அணையாது பாதுகாத்து வைத்துள்ள தமிழ் தேசியக் கனல், (4) மற்ற (வடக்கத்திய) மாநிலங்களைப் போலல்லாது நம்மவர்கள் ஆங்கிலத்தில் சிறந்து விளங்குவது, வெளிநாடுகளுக்கு அதிகமாய் வேலைக்கு படையெடுக்கும் திறன் படைத்திருப்பது, இந்தி ஆதிக்க மாநிலங்களில் போலல்லாது நமக்கு ஆங்கிலம் குறித்த தாழ்வுணர்ச்சி குறைவாக இருப்பது, (5) ஒரு தேசம், ஒரு மதம், ஒரே மொழி எனும் ஆணைக்கு மண்டியிடாமல் எதிர்த்து நிற்கும் அளவுக்கு இங்கு முற்போக்கு அரசியல் பார்வை உயிர்ப்புடன் இருப்பது.
இந்த நூலுக்கான ஆதாரப் புள்ளியும் மேற்சொன்ன காரணங்களிலேயே இருக்கிறது.
சுருக்கமாய் சொல்வதானால், இந்த தேசிய கல்விக் கொள்கையின் பிரச்சனையே பிரதானமாய் இதன் அரசியல், நாம் இவ்வளவு மூர்க்கமாய் இதை எதிர்க்கக் காரணமும் நமது அரசியலே. குறிப்பாய், மும்மொழிக் கொள்கை, மாநிலத்தின் கல்வி உரிமைகளைப் பறித்து, நம்மை மத்தியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அவர்களின் செயலர்களின் இமையசைவுக்கு காத்து கைகட்டி நிற்க வைக்கும் இதன் நோக்கம், தனியார் பள்ளிகளைப் பின்பற்றி சிறார்களை கடுமையாய் ஒடுக்குகிற தேர்வு முறைமைகளை இது கொண்டு வருவது மற்றும் பாடத்திட்டத்தினுள் தொழிற்கல்வி எனும் பெயரில் இது கொண்டு வரும் அபத்தமான மாற்றங்கள் போன்றவை.
எந்த ஐயமும் தேவையில்லை. இச்சிறிய நூல் இந்த மோசமான அரசியலை அலச, விவாதிக்க, அம்பலபடுத்த எழுதப்பட்ட ஒன்று. அதே நேரம் இந்த தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களையும் சுட்டியிருக்கிறேன். இதன் சில சாதகமான அம்சங்களையும் குறிப்பிட வேண்டிய என் கடமையையும் உணர்ந்து முன்வைத்திருக்கிறேன்.
வாங்க, உரையாடுவோம்.
புத்தகத்தை கிண்டிலில் வாங்க: https://www.amazon.in/dp/B08HD9ZY14/ref=cm_sw_r_fa_apa_0sDuFbVS4BAVZ

Comments