Skip to main content

இந்த புத்தகத்தின் நோக்கம் என்ன?




இந்த தேசிய கல்விக் கொள்கையின் வரைவு ஒரு தேன்மிட்டாயைப் போல இருக்கிறது - பார்க்க சிவப்பாய் அழகாய், உள்ளே ஜீரா வடிய, சுவையாய், ஆனால் உள்ளே பொத்தலாய், சத்தின்றி உள்ளது. நமது பிரதமர் ஜியின் பல உணர்ச்சி பொங்கும் பேருரைகளைப் போல, நிறைய அறிவிப்புகள், முழக்கங்கள், நம்பிக்கையூட்டும் பிரச்சாரங்களுடன் இதுவும் தோன்றுகிறது. ஜியின் அறிவிப்புகள் ஒன்று ‘ராவோடு ராவாக பொட்டியை தூக்கிக்கொண்டு ஊரை விட்டு காலி பண்ணு’ என பணமதிப்பிழப்பைப் போல மாரடைப்பை வரவழைப்பதாக இருக்கும், அல்லது ‘நாளைய விடியலோடு உங்கள் இருப்பில் பத்து லட்சம் டெபாசிட் ஆகும், வசந்தம் தோன்றும், தேனும் பாலும் வீதிகளில் ஓடும், வல்லரசுகளுக்கே வல்லரசாக நாம் இருப்போம்’ என தேர்தல் வாக்குறுதிகளாய் சர்க்கரை லெவலை ஒரேயடியாக ஏற்றுவதாக இருக்கும், இந்த கல்விக்கொள்கையோ முதலாவதை இரண்டாவதுக்குள் வைத்து மடித்து வைத்து நீட்டுகிறது. அநேகமாய் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் இந்த ‘520’ பீடாவுக்கு மயங்கி சாய்ந்து விட்டன, என்னவொரு அற்புதமான கல்வித்திட்டம் இது, புரட்சி வருகிறது, இந்தியா வல்லரசாகிறது என ஆங்கில நாளிதழ்கள் புகழாரம் சூட்டி மன்னருக்கு சாமரம் வீசுகின்றன. தமிழகம் மட்டுமே இந்த பீடாவுக்குள் இருக்கும் போதை விஷத்தை, அரசியலை, கண்டுணர்ந்து எதிர்த்து நின்று போராடுகிறது.

 இதற்கான காரணங்கள் நாம் (1) ஏற்கனவே கல்வியிலும் பொருளாதார வளர்ச்சியில் சிகரம் ஏறி நிற்பது, (2) மொழி அரசியலின், தேசியத்தின் சாதக பாதகங்களை நாம் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பிருந்தே தெரிந்து வைத்திருப்பது, (3) தமிழ் தேசியவாதிகள் மற்றும் பெரியார் போன்ற பெருந்தலைவர்கள் துவங்கி இன்றைய திராவிட அரசியல் இயக்கங்களை வரை இம்மண்ணில் அணையாது பாதுகாத்து வைத்துள்ள தமிழ் தேசியக் கனல், (4) மற்ற (வடக்கத்திய) மாநிலங்களைப் போலல்லாது நம்மவர்கள் ஆங்கிலத்தில் சிறந்து விளங்குவது, வெளிநாடுகளுக்கு அதிகமாய் வேலைக்கு படையெடுக்கும் திறன் படைத்திருப்பது, இந்தி ஆதிக்க மாநிலங்களில் போலல்லாது நமக்கு ஆங்கிலம் குறித்த தாழ்வுணர்ச்சி குறைவாக இருப்பது, (5) ஒரு தேசம், ஒரு மதம், ஒரே மொழி எனும் ஆணைக்கு மண்டியிடாமல் எதிர்த்து நிற்கும் அளவுக்கு இங்கு முற்போக்கு அரசியல் பார்வை உயிர்ப்புடன் இருப்பது.

இந்த நூலுக்கான ஆதாரப் புள்ளியும் மேற்சொன்ன காரணங்களிலேயே இருக்கிறது.

 சுருக்கமாய் சொல்வதானால், இந்த தேசிய கல்விக் கொள்கையின் பிரச்சனையே பிரதானமாய் இதன் அரசியல், நாம் இவ்வளவு மூர்க்கமாய் இதை எதிர்க்கக் காரணமும் நமது அரசியலே. குறிப்பாய், மும்மொழிக் கொள்கை, மாநிலத்தின் கல்வி உரிமைகளைப் பறித்து, நம்மை மத்தியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அவர்களின் செயலர்களின் இமையசைவுக்கு காத்து கைகட்டி நிற்க வைக்கும் இதன் நோக்கம், தனியார் பள்ளிகளைப் பின்பற்றி சிறார்களை கடுமையாய் ஒடுக்குகிற தேர்வு முறைமைகளை இது கொண்டு வருவது மற்றும் பாடத்திட்டத்தினுள் தொழிற்கல்வி எனும் பெயரில் இது கொண்டு வரும் அபத்தமான மாற்றங்கள் போன்றவை.


எந்த ஐயமும் தேவையில்லை. இச்சிறிய நூல் இந்த மோசமான அரசியலை அலச, விவாதிக்க, அம்பலபடுத்த எழுதப்பட்ட ஒன்று. அதே நேரம் இந்த தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களையும் சுட்டியிருக்கிறேன். இதன் சில சாதகமான அம்சங்களையும் குறிப்பிட வேண்டிய என் கடமையையும் உணர்ந்து முன்வைத்திருக்கிறேன்.


வாங்க, உரையாடுவோம்.


புத்தகத்தை கிண்டிலில் வாங்க: https://www.amazon.in/dp/B08HD9ZY14/ref=cm_sw_r_fa_apa_0sDuFbVS4BAVZ

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...