Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

விவசாயிகள் மசோதா - கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படுகிறோம் நாம்





முதலில் மாநிலங்கள் வரிவசூலிக்கும் உரிமையைப் பறித்தார்கள்.

அடுத்து, கல்வி மீதான உரிமையைப் பிடுங்கினார்கள்.

இப்போது விவசாயிகள் மசோதா வழி அத்தியாவசியப் பொருட்களின் விலையை மாநில அரசு நிர்ணயிக்கும் உரிமையும் பறிபோகிறது.


ஜெயரஞ்சன் சொல்வதைப் போல இது பிரம்மாண்டமான கார்ப்பரேட்டுகளுக்கு நேரடிக் கூலிகளாக விவசாயிகளை மாற்றப் போகிறது. இனி எந்த மாநிலத்தில் எந்த உணவுப்பொருளின் விலையையும் அந்த மாநிலமல்ல, இந்த சங்கிலித்தொடர் சூப்பர் மார்க்கெட்டுகளின் வியாபார காந்தங்களே தீர்மானிப்பர். இந்த நிறுவனங்களே கதியென ஆகிய பின்னர் இவர்கள் விலையை சரியான நேரத்தில் தரவில்லை எனில் விவசாயிகளுக்கு அரசிடம் உதவி கோர முடியாது. மத்தியஸ்த இடத்தில் மாநில அரசு இருக்காது. அதை ஒரு அம்பானியோ அதானியோ தான் தீர்மானிப்பார். உணவுப்பொருட்களை மொத்தமாய் வாங்கி பதுக்குகிற பணியை ஒரு பெரிய கார்ப்பரேட் செய்தால் பின்னர் அதன் விளைவு எவ்வளவு பாரித்ததாக இருக்கும்?

அது மட்டுமல்ல, ஒரு மாநில மக்களுக்கு அவசியமான உணவுப்பொருட்களை விடுத்து எவற்றினால் ஒரு குறிப்பிட்ட சந்தர்பத்தில் கூடுதல் லாபம் வருமே அதை மட்டுமே அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் பயிரிடும் கட்டாயத்துக்கு ஆட்படலாம். 


அவகடோ எனும் பழம் கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவுக்கு மெக்ஸிகோ, சிலே போன்ற நாடுகளில் இருந்து பெருமளவுக்கு ஏற்றுமதியாகின. இதற்குத் தோதாக அவிகடோ எடைக்குறைப்புக்கு ஏற்ற பழம் என ஒரு கதை பரப்பட்டது. விளைவாக இதன் தேவையும் விலையும் கன்னாபின்னாவென ஏறியது. மெக்ஸிகா, சிலேவில் பாரம்பரிய விவசாயம் கைவிடப்பட்டு, எங்கு பார்த்தாலும் அவகடோ பயிரிட்டார்கள். இந்த அவகடோவைப் பயிரிடுவதற்கு ஒருநாளைக்கு அங்கே 9.5 பில்லியன் நீரை பயன்படுத்த வேண்டும். இதனால் இந்த நாடுகளில் சூழல் சீரழிந்து, தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டது. எல்லா நதிகளும் வற்றி விட்டன. வெப்பம் அதிகமாகி அடிக்கடி புயல்மழை வரத் தொடங்கியது. மக்களால் எதிர்க்க முடியாதபடிக்கு கார்ப்பரேட்டுகள் விவசாய நிலங்களையும் நீர்வளத்தையும் கட்டுப்படுத்துகின்றன. அரசு எதிலும் தலையிடாமல் முதலாளிகளிடம் கட்டிங் வாங்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. அத்தகைய நிலைதான் இந்தியாவிலும் இனி கார்ப்பரேட் விவசாயச் சூழலில் ஏற்படும். ஒரு மாநிலத்தின் மக்களுக்குத் தேவையான உணவுப்பொருளை இனி பயிரிட முடியாது. இதுவரை எளிதில் வாங்கி சாப்பிட்டவை இனி கிடைக்காது. இங்கு உற்பத்தி ஆகிற பொருட்கள் வெளியே அனுப்பப்படுவதால் அதுவும் நமக்குக் கிடைக்காது. ஒவ்வொரு மாநிலத்தையும் தம் வியாபார இலக்குக்கான ஒரு சோதனைக் களமாக அம்பானி, அதானிகள் மாற்றுவார்கள்.   


இந்த நிறுவனங்கள் இடையே ஒரு புரிந்துணர்வு இருக்குமென்பதால் வாங்கும் விலையில் பெரிய வித்தியாசமில்லாமல் பார்த்துக்கொள்வார்கள்; முதலில் நல்ல விலைக்கு வாங்கி மொத்த சந்தையையும் இடைத்தரக வர்த்தகர்களிடம் இருந்து பறித்து விட்டு தாம் மட்டுமே ஒரே போக்கிடம் எனும் நிலையை உருவாக்கிய பின்னர் ஆட்டத்தை ஆரம்பிப்பார்கள் - வெங்காயத்தை அதானி / அம்பானி மிகக்குறைந்த விலைக்கு வாங்கி அதிக விற்பதாய் முடிவெடுத்தால் விவசாயிகளால் அவரை எதிர்த்து யாரிடம் போக முடியும்? மாநில அரசால் அதை எதிர்க்க முடியுமா? வழக்காடு மன்றம் தான் செல்ல முடியும். ஆனால் அங்குள்ள ரப்பர்-முதுகு சங்கி நீதிபதிகள் என்ன பதிலளிப்பார்கள் எனத் தெரியாதா? 


ஒருமுறை மடியை அவிழ்த்து சரணடைந்து விட்டால் பின்னர் வேறெந்த பெரிய நிறுவனமும் விவசாயிகளுக்கு கூடுதல் விலையைத் தர மாட்டார்கள். சிறுவணிகர்களோ வேறு வர்த்தகத்துக்கு பெயர்ந்திருப்பார்கள். கசாப்புக்கு அனுப்பப்பட்ட மாட்டின் நிலைதான் நம் விவசாயிகளுக்கும் ஏற்படும். பேரம் பேசுவது போக ஒரு வார்த்தை எதிர்த்துக் கேட்க முடியாது.  


எந்த மாநிலத்திலும் யாரும் உணவுப்பொருட்களை வாங்கி விற்கலாம் என திறந்த சந்தை உருவானால் போட்டி ஏற்படும், போட்டிச்சூழலில் விவசாயிக்கு கூடுதல் லாபம் வரும் என்பது பச்சைப் பொய். இன்றைய நவதாராளவாதச் சூழலில் போட்டியென்பது ஆரம்பத்தில் மட்டுமே இருக்கும், பின்னர் ஒரே விலை தான்.


அதுமட்டுமல்ல, அரசு இதுவரை விவசாயிகளுக்கு அளித்து வரும் குறைந்தபட்ச ஆதார விலையும் மெல்ல மெல்ல கைவிடப்படும். நீங்களாச்சு அம்பானி/அதானியாச்சு என அரசு தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும்.


மோடி அரசு தனது பிரதான விசுவாசம் பெருவர்த்தக நிறுவனங்களிடத்தே என மீண்டும் காட்டியுள்ளது. மோடி எவ்வளவு குரூரமானவர் என்றால் விவசாயிகளின் விதைப்பையை வெட்டிவிட்டு அவர்களுக்கே வாழ்த்துக்கள் சொல்வார்?

அதிமுக அரசு எந்தளவுக்கு வெட்கம் கெட்டது எனில் இப்படி ஒன்றன் பின் ஒன்றாக மாநில உரிமைகளை தாரை வார்த்துக் கொடுத்து விட்டு தன் எஜமான்களுக்கு சலாம் போடும்? இவர்கள் ஊழல் செய்து குவித்த பல்லாயிரம் கோடி பணம் அலாவுதீனின் பூதம் போல மத்திய அரசிடம் அடிமைப்பணி செய்ய வைக்கிறது. இப்படி ஒரு மாநிலத்தில் வாழவே நாமெல்லாம் வெட்கப்பட வேண்டும்.

Comments

Murugan R.D. said…
கட்டுரையும் ஓகே
ஆளுங்கட்சிய விமர்சிக்கிறதுலாம் ஓகே
ஆனா வேற எந்த மாநில அரசு இதை கடுமையாக எதிர்க்கிறதுனு சொல்ல முடியுமா, எதிர்த்தாலும் அவர்கள் மாநிலங்களில் இந்த சட்டத்தை வரவிடாமல் தடுக்க முடியுமா?

நீங்க திராவிட தீவிர ஆதரவாளரா இருக்கீங்கன்னு தெரியுது,, அதே திமுக இப்ப ஆட்சியில் இருந்தால் என்ன செஞ்சிருப்பாங்கன்னு நினைக்கிறீங்க,,,

அரசியல்வாதிகளை மிரட்ட பல துறைகளையும் நுணுக்கமாக பயன்படுத்தும் மத்தியஅரசின் கிடுக்கிப்பிடியையும் மீறி (ஒரு வேளை ஆட்சியிலிருந்திருந்தால்) திமுக நீங்க எதிர்பார்ப்பது போல மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்திருக்குமா,,

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...