“மத்திய கல்வி அமைச்சகம் கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கைப்படி மும்மொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படுகிறது என்றோ, அல்லது 2 மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என்றோ தமிழக அரசிடமிருந்து உங்களுக்கு பரிந்துரை வந்துள்ளதா என்று கேள்வி எழுப்பியிருந்தார் தமிழச்சி தங்கபாண்டியன்.
இதற்கு பதிலளித்துள்ள கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தமிழக அரசு சார்பில், 2 மொழிக் கொள்கையை பின்பற்றுவோம் என்று பரிந்துரை அனுப்பியுள்ளனர். ஆனால், நாட்டில் மும்மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும். மூன்றாவது எந்த மொழி என்பதை மாநில அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம். மாணவர்கள் விருப்பம் அது. புதிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழி பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது. இவ்வாறு அமைச்சர் திட்டவட்டமாக எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் தெரிவித்துள்ளார்.”
- செய்தி
தமிழகத்தில் மட்டுமல்ல கர்நாடகம், வங்காளம், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களிலும் மும்மொழிக்கொள்கை, இந்தி திணிப்புக்கு எதிர்ப்புள்ளது. தமிழகத்தின் கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டால் அது பின்னர் நாடுமுழுக்க இப்படியான கோரிக்கைகளை உருவாக்கும் என மத்திய அரசு அஞ்சுகிறது. இது அவர்களுக்கு ஒரு மானப்பிரச்சனை ஆகி விட்டது.
பாஜக இந்தி என்பது ஒரு இந்து மொழி என நம்புகிறது; ஆகையால் இந்தி எதிர்ப்பை அது ‘இந்து’ எதிர்ப்பாகக் காண்கிறது. எது தேசிய / ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் எனும் விவாதம் தேசவிடுதலைக்கு முன்பு ஏற்பட்ட போதிருந்தே இந்து - இஸ்லாமிய மொழி எனும் பிரிவினையின் அடிப்படையில் தான் பாகிஸ்தானுக்கு உருது என்றால் நமக்கு இந்தி என காங்கிரஸ் சங்கிகள் முடிவெடுத்தார்கள்.
காங்கிரசார் விசயத்தில் வடக்கத்திய அரசியல்காதிகள் அதிகாரத்தை மொத்தமாய் கைப்பற்ற இது உதவியது. மொழி என்பது ஒரு காலனிய ஆயுதம். நீங்கள் இந்தியை செவ்வனே கற்று, அதில் பேசினால் அதிகாரமும் அந்தஸ்தும் கிடைக்கும் எனும் நிலை ஏற்பட்டால் அதைப்பேசுவோருக்கு தாய்மொழி, சொந்த மொழி மீது தாழ்வுணர்வு ஏற்படும். இந்தியை சிறப்பாய் பேசுவோரை விட எப்போதுமே வடக்கிந்திய மண்ணின் மைந்தர்களே அதிகாரத்தில் அமர முடியும். மற்றோர் அவர்களுக்கு அடிமைகள். இந்தி பேசத் தெரியாவிடில் இன்னும் மோசம் - அதிகாரம் பற்றி கனவே காண முடியாது. (காமராஜரால் ஏன் பிரதமர் ஆக முடியவில்லை?)
ஜெயலலிதா இருந்திருந்தால் அவரால் ஒருநாள் பிரதமர் ஆகியிருக்க முடியும் என சிலர் சொல்கிறார்கள் - ஒருவேளை ஒரு டம்மி பிரதமராக இருந்திருக்கலாம், அவரால் ஒரு போதும் இந்தியை / இந்திக்கு நெருக்கமான மொழியை தாய்மொழியாகக் கொண்ட ஒரு வடக்கிந்தியனைப் போல ஆளுகை செய்ய முடியாது. இது மொத்த இந்தியர்களிடமும் பேச ஒரு பொதுமொழி வேண்டும் என்கிற நிபந்தனை அல்ல - வடக்கந்தியர்களுக்கு உங்களைப் பார்த்தால் அவர்களது ஆள் எனத் தெரிய வேண்டும். அப்போது மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். அவர்களைத் தவிர மிச்ச இந்தியர்களின் விருப்பம் இங்கு முக்கியமில்லை. அவர்களுக்கு மட்டும் தலையில் கொம்பு முளைத்திருக்கிறது.
மோடிக்கு தன் சொந்த மாநிலத்தின் மீது பாசம் அதிகம். அவர் அங்கு முதல்வராக இருக்கும் போது குஜராத்தி கலைகளை முன்னெடுக்க முயன்றிருக்கிறார். பிரதமர் ஆன பிறகும் குஜராத்திகளுக்கே முக்கிய பொறுப்புகளை அளிக்கிறார். ஆனால் அவரால் குஜராத்தி மொழியைப் புகழ்ந்து பேசவோ குஜராத்தியில் உரையாடவோ முடியாது. அமித் ஷாவும் இப்படியே - அவர் இந்தியை புகழ்வதும் இந்தி-மையமிட்ட தேர்தல் அரசியலை மையமிட்டே. ஆனால் வாஜ்யாய்க்கு இந்த இரட்டை நிலை இல்லை - அவர் இந்தியில் கவிதை எழுதி இந்தியில் பேசி இந்தியில் குளித்து இந்தியில் தூங்கி அது குறித்து பெருமையும் கொள்ளலாம். எப்படியான பாகுபாடு பாருங்கள்.
இது அப்படியே காலனிய காலகட்டம் போல இருப்பதை கவனிக்கலாம் - அப்போது ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் வெள்ளையனுக்கு அருகில் இருக்கலாம், ஆனால் ஆங்கிலத்தை சொந்த மொழியாகக் கொண்டவரே நாட்டை ஆள முடியும். ஆங்கிலத்தைப் படிக்கும் இந்தியர்கள் தமது தாய்மொழி, பண்பாடு, விழுமியங்கள், அடையாளம் குறித்த தாழ்வுணர்வுடனே இருந்தனர். அந்நிய மொழிகளின் தன்மை இது - அது உங்களுக்குள் வந்ததும் ஒரு அடிமை மனநிலையை உங்களை அறியாமலே விதைக்கும். அடுத்து உங்களை அடையாளமற்றவராக, எங்கும் பொருந்த முடியாதவராக ஆக்கும். அன்று ஆங்கிலம் என்றால் இன்றைய அரசியலில் அந்த இடத்தில் இந்தி அமர்ந்திருக்கிறது.
வேறெந்த வித்தியாசமும் இல்லை.
இதனால் தான் பாஜக ஒரு போதும் இந்தி முன்னெடுப்பை கைவிட மாட்டார்கள் என்கிறேன். காங்கிரஸ் ரொட்டியில் வெண்ணெய் தடவுவதைப் போல இந்தியைப் பிடித்து தொங்கும், பாஜக நேரடியாக நம் தொண்டைக்குள் திணிப்பார்கள். இரண்டு பேருமே நவ-காலனியை கட்சிகள் தாம்.
அதிமுக எப்படி இதை சமாளிக்கும்? நீட் தேர்வைப் போலத்தான். நாங்கள் பரிந்துரை அனுப்பியிருக்கிறோம் எனச் சொல்லும். மத்திய அரசு ஒப்புக் கொள்ளும்வரை மும்மொழிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் எனச் சொல்லி இரட்டை வேடம் போடும். அதற்குள் மக்கள் மும்மொழிக்கு பழகி விடுவார்கள் என எடப்பாடி குருவும் சீடர்களும் நம்புவார்கள்.

Comments