Skip to main content

மும்மொழிக் கொள்கையை ஏன் பிடிவாதமாய் பின்பற்ற வேண்டும்?


 

“மத்திய கல்வி அமைச்சகம் கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கைப்படி மும்மொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படுகிறது என்றோ, அல்லது 2 மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என்றோ தமிழக அரசிடமிருந்து உங்களுக்கு பரிந்துரை வந்துள்ளதா என்று கேள்வி எழுப்பியிருந்தார் தமிழச்சி தங்கபாண்டியன்.

இதற்கு பதிலளித்துள்ள கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தமிழக அரசு சார்பில், 2 மொழிக் கொள்கையை பின்பற்றுவோம் என்று பரிந்துரை அனுப்பியுள்ளனர். ஆனால், நாட்டில் மும்மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும். மூன்றாவது எந்த மொழி என்பதை மாநில அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம். மாணவர்கள் விருப்பம் அது. புதிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழி பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது. இவ்வாறு அமைச்சர் திட்டவட்டமாக எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் தெரிவித்துள்ளார்.”

- செய்தி


தமிழகத்தில் மட்டுமல்ல கர்நாடகம், வங்காளம், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களிலும் மும்மொழிக்கொள்கை, இந்தி திணிப்புக்கு எதிர்ப்புள்ளது. தமிழகத்தின் கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டால் அது பின்னர் நாடுமுழுக்க இப்படியான கோரிக்கைகளை உருவாக்கும் என மத்திய அரசு அஞ்சுகிறது. இது அவர்களுக்கு ஒரு மானப்பிரச்சனை ஆகி விட்டது.

பாஜக இந்தி என்பது ஒரு இந்து மொழி என நம்புகிறது; ஆகையால் இந்தி எதிர்ப்பை அது ‘இந்து’ எதிர்ப்பாகக் காண்கிறது. எது தேசிய / ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் எனும் விவாதம் தேசவிடுதலைக்கு முன்பு ஏற்பட்ட போதிருந்தே இந்து - இஸ்லாமிய மொழி எனும் பிரிவினையின் அடிப்படையில் தான் பாகிஸ்தானுக்கு உருது என்றால் நமக்கு இந்தி என காங்கிரஸ் சங்கிகள் முடிவெடுத்தார்கள்.

 காங்கிரசார் விசயத்தில் வடக்கத்திய அரசியல்காதிகள் அதிகாரத்தை மொத்தமாய் கைப்பற்ற இது உதவியது. மொழி என்பது ஒரு காலனிய ஆயுதம். நீங்கள் இந்தியை செவ்வனே கற்று, அதில் பேசினால் அதிகாரமும் அந்தஸ்தும் கிடைக்கும் எனும் நிலை ஏற்பட்டால் அதைப்பேசுவோருக்கு தாய்மொழி, சொந்த மொழி மீது தாழ்வுணர்வு ஏற்படும். இந்தியை சிறப்பாய் பேசுவோரை விட எப்போதுமே வடக்கிந்திய மண்ணின் மைந்தர்களே அதிகாரத்தில் அமர முடியும். மற்றோர் அவர்களுக்கு அடிமைகள். இந்தி பேசத் தெரியாவிடில் இன்னும் மோசம் - அதிகாரம் பற்றி கனவே காண முடியாது. (காமராஜரால் ஏன் பிரதமர் ஆக முடியவில்லை?)

ஜெயலலிதா இருந்திருந்தால் அவரால் ஒருநாள் பிரதமர் ஆகியிருக்க முடியும் என சிலர் சொல்கிறார்கள் - ஒருவேளை ஒரு டம்மி பிரதமராக இருந்திருக்கலாம், அவரால் ஒரு போதும் இந்தியை / இந்திக்கு நெருக்கமான மொழியை தாய்மொழியாகக் கொண்ட ஒரு வடக்கிந்தியனைப் போல ஆளுகை செய்ய முடியாது. இது மொத்த இந்தியர்களிடமும் பேச ஒரு பொதுமொழி வேண்டும் என்கிற நிபந்தனை அல்ல - வடக்கந்தியர்களுக்கு உங்களைப் பார்த்தால் அவர்களது ஆள் எனத் தெரிய வேண்டும். அப்போது மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். அவர்களைத் தவிர மிச்ச இந்தியர்களின் விருப்பம் இங்கு முக்கியமில்லை. அவர்களுக்கு மட்டும் தலையில் கொம்பு முளைத்திருக்கிறது.

மோடிக்கு தன் சொந்த மாநிலத்தின் மீது பாசம் அதிகம். அவர் அங்கு முதல்வராக இருக்கும் போது குஜராத்தி கலைகளை முன்னெடுக்க முயன்றிருக்கிறார். பிரதமர் ஆன பிறகும் குஜராத்திகளுக்கே முக்கிய பொறுப்புகளை அளிக்கிறார். ஆனால் அவரால் குஜராத்தி மொழியைப் புகழ்ந்து பேசவோ குஜராத்தியில் உரையாடவோ முடியாது. அமித் ஷாவும் இப்படியே - அவர் இந்தியை புகழ்வதும் இந்தி-மையமிட்ட தேர்தல் அரசியலை மையமிட்டே. ஆனால் வாஜ்யாய்க்கு இந்த இரட்டை நிலை இல்லை - அவர் இந்தியில் கவிதை எழுதி இந்தியில் பேசி இந்தியில் குளித்து இந்தியில் தூங்கி அது குறித்து பெருமையும் கொள்ளலாம். எப்படியான பாகுபாடு பாருங்கள்.

இது அப்படியே காலனிய காலகட்டம் போல இருப்பதை கவனிக்கலாம் - அப்போது ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் வெள்ளையனுக்கு அருகில் இருக்கலாம், ஆனால் ஆங்கிலத்தை சொந்த மொழியாகக் கொண்டவரே நாட்டை ஆள முடியும். ஆங்கிலத்தைப் படிக்கும் இந்தியர்கள் தமது தாய்மொழி, பண்பாடு, விழுமியங்கள், அடையாளம் குறித்த தாழ்வுணர்வுடனே இருந்தனர். அந்நிய மொழிகளின் தன்மை இது - அது உங்களுக்குள் வந்ததும் ஒரு அடிமை மனநிலையை உங்களை அறியாமலே விதைக்கும். அடுத்து உங்களை அடையாளமற்றவராக, எங்கும் பொருந்த முடியாதவராக ஆக்கும். அன்று ஆங்கிலம் என்றால் இன்றைய அரசியலில் அந்த இடத்தில் இந்தி அமர்ந்திருக்கிறது. 

வேறெந்த வித்தியாசமும் இல்லை.

இதனால் தான் பாஜக ஒரு போதும் இந்தி முன்னெடுப்பை கைவிட மாட்டார்கள் என்கிறேன். காங்கிரஸ் ரொட்டியில் வெண்ணெய் தடவுவதைப் போல இந்தியைப் பிடித்து தொங்கும், பாஜக நேரடியாக நம் தொண்டைக்குள் திணிப்பார்கள். இரண்டு பேருமே நவ-காலனியை கட்சிகள் தாம்.   

அதிமுக எப்படி இதை சமாளிக்கும்? நீட் தேர்வைப் போலத்தான். நாங்கள் பரிந்துரை அனுப்பியிருக்கிறோம் எனச் சொல்லும். மத்திய அரசு ஒப்புக் கொள்ளும்வரை மும்மொழிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் எனச் சொல்லி இரட்டை வேடம் போடும். அதற்குள் மக்கள் மும்மொழிக்கு பழகி விடுவார்கள் என எடப்பாடி குருவும் சீடர்களும் நம்புவார்கள்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...