இந்தி என இன்று அறியப்படும் மொழி என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் கில்கிறிஸ்ட் எனும் வெள்ளைத் துரையால் தில்லி மற்றும் அதை ஒட்டின பகுதிகளில் பேசப்பட்ட கரிபோலி எனும் வட்டாரவழக்கில் சமிஸ்கிருதத்தைக் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு புது மொழி. அவர் ஏன் இந்தியை உருவாக்கினார்?
பத்தொன்பதாம் கட்டத்தில் வட இந்தியாவின் ஹிந்துஸ்தானி மொழி பாரசீகக் கலவையால் உருதுவாக உருக்கொள்ளத் தொடங்கி இருந்தது. மற்றொரு பக்கம் ஹிந்துஸ்தானி மொழி வட்டார வழக்காக கரிபோலி பேசப்பட்டு வந்தது. ஆனால் இந்த மொழிகளுக்கு இடையே தெளிவான வித்தியாசங்களோ சட்டதிட்டமான வடிவங்களோ இல்லை. இந்த சந்தர்பத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு இந்தியர்கள் இப்படி பல மொழி, பல கலாச்சார பிரதேசமாக விரிந்து கிடந்தது சிக்கலாக இருந்தது. அவர்கள் ஒரு மொழிக்குடையின் கீழ் இந்தியர்களை ஒற்றை அடையாளமாக வகுத்துக் கொள்ள விரும்பினர். ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து மொழி அறிஞர்கள் பாலி, சமிஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்று தம் சொந்த மொழிக்கு வேதங்கள் மற்றும் மத நூல்களை மொழியாக்கிக் கொண்டிருந்தனர். மாக்ஸ் முல்லர், ஸ்கிளீகல், வில்லியம் ஜோன்ஸ் போன்றோர் உதாரணங்கள்.
அவரைப் போல மேலும் பலர் அப்போது இருந்தார்கள். அவர்கள் இந்தியர்கள் பெரும்பாலும் இந்துக்கள், அவர்களின் மூலம்மொழி, புனித மொழி சமிஸ்கிருதம் என நம்பினர். அவர்களுக்கு இங்குள்ள வட்டார வழக்குகள், தொன்மையான மாற்று மரபுகள், அவைதீக மதங்கள், சிறுதெய்வ வழிபாடுகள் குறித்தெல்லாம் ஒன்று தெரியாது அல்லது தெரிந்து கொள்ள விருப்பமில்லை. அவர்கள் மேற்கில் உள்ள இஸ்லாமிய வெறுப்பை தமது இந்திய ஆய்வுக்குள்ளும் கொண்டு வந்தனர். இந்தியாவுக்கு ஒரு மகத்தான புராதான பழங்காலம் இருந்தது, அதன் பின்னர் மத்திய காலத்தில் இஸ்லாமியர்கள் படையெடுத்து வந்தது இந்தியாவின் பண்பாட்டையும், மதச்சின்னங்களையும் அழித்தார்கள், இது முடிந்து காலனிய காலத்திலே கிறித்துவர்கள் வந்து இந்தியாவை அதன் சீரழிவில் இருந்து காப்பாற்றி மீட்டெடுத்தார்கள் என ஒரு கதையாடலை அவர்கள் வரலாறாக கட்டமைத்தார்கள். (இன்று இந்துத்துவர்கள் முன்வைக்கும் இஸ்லாமிய வெறுப்பு வரலாறு என்பது Indologists என அறியப்படும் இந்த கிறித்துவ காலனியாத இந்திவியலாளர்கள் கட்டமைத்ததே.)
இந்த இந்தியவியலாளர்கள் ஒருவிதத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு தலைவலியாக அமைந்தார்கள். இந்தியர்களின் தாய்மொழி சமிஸ்கிருதமே, ஆகையால் அதுவே அவர்கள் ஆட்சிமொழியாகவும் இருக்க வேண்டும் என இந்தியவியலாளர்கள் விரும்பினார்கள். ஆனால் இந்தியாவை ஆட்சி செய்ய, அது குறித்து ஆராய்ந்து நிர்வாகம் செய்ய ஆங்கிலேயர்களுக்கு இந்திய நிர்வாகிகளின், அறிவுக்கூலிகளின் படை ஒன்று தேவைப்பட்டது. இவர்கள் சமிஸ்கிருதம் பேசினால் வேலைக்காகாது அல்லவா? அப்படித்தான் மெக்காலே வருகிறார் - அவர் 1835இல் ஆங்கிலேயக் கல்வி சட்டத்தை கொண்டு வருகிறார். இது அடுத்த தலைமுறை இந்தியர்கள் எப்படி தோற்றத்தில் கறுப்பர்களாகவும் மனத்தளவில் வெள்ளையராகவும் இருக்க வேண்டும், அவர்கள் ஆங்கிலேயே இலக்கியம், தத்துவம் போன்றவற்றை பயின்று பண்பாட்டில் மேம்பட வேண்டும் - அதாவது அவர்கள் சமிஸ்கிருதம், வேதம் படித்து இந்தியவியலாளர்களைப் போல மீட்புவாதத்தை முன்னெடுக்காமல் நவீன கல்விக்குள் வர வேண்டும் எனக் கோரியது.
இது இந்திவியலின் மீட்புவாதிகளில் செவிட்டில் பளிச்சென்று அடித்ததைப் போல ஆனது. அவர்கள் மெல்ல மெல்ல முடங்கினர். இன்றைய இந்தி-ஆங்கில சர்ச்சைகளின் அடிநாதமே இங்குதான் துவங்குகிறது. ஆங்கிலம் படித்தால் நான் அறிவியலை, பகுத்தறிவைக் கற்கலாம், உலக அளவில் உயரலாம், ஆங்கிலம் என்னை வேற்றுமையின்றி அணைத்துக்கொள்கிறது, உங்கள் சமிஸ்கிருதம் அதை செய்யுமா? என அ.ராசா கேட்பதன் வரலாற்றுப் பின்னணி இதுவே. மெக்காலே தனது சுயநலத்துக்காக ஆங்கிலக் கல்வியை கொண்டு வந்தாலும் அதன் பலன்களை அதிகமாய் இந்திய மத்திய வர்க்கம் பெற்றது. இங்கு மகத்தான வளர்ச்சி ஏற்பட்டது. அம்பேத்கர் போன்ற தலித் போராளிகள், தலித் தத்துவ அறிஞர்கள், காந்தி, தாகூர், நேரு போன்ற தேசியவாதிகள், சாவர்க்கர் போன்ற இந்து தேசியவாதிகள் ஒருவிதத்தில் மெக்காலே அமைத்துக்கொடுத்த இந்த ராஜபாட்டையில் நடையிட்டு முன்னேறி வந்தவர்களே. ஆங்கிலக் கல்வி இம்மக்களை வெள்ளையருக்கு அடிமையாக வைக்காமல் எதிர்த்து விடுதலைக்குப் போராட வழிவகுத்தது என்பதே நகைமுரண்.
ஆனால் சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் மொழிக்கொள்கை குறித்த விவாதங்கள் மீண்டும் தோன்றின. மெக்காலே துரத்திய இந்தியவியலாளர்களின் சமிஸ்கிருத சார்புவாதம், மென் இந்துத்துவா இங்கு முளைவிட்டது. இது எப்படி நடந்தது?
(புத்தகத்தை கிண்டிலில் வாங்க: https://www.amazon.in/dp/B08HD9ZY14/ref=cm_sw_r_fa_apa_0sDuFbVS4BAVZ)

Comments