பன்மொழிக் கல்வி என்பது கொள்கை அளவில் நியாயமானதே, ஏற்கத்தக்கதே, ஆனால் மேலும் வடிவேலு சொல்வதைப் போல, “உங்கிட்ட பினிஷிங் சரி இல்லையேப்பா”. நீங்கள் இதுவரை தமிழகத்துக்கு பிரஞ்சு, ஜெர்மன், அல்லது இந்தி, சமிஸ்கிருதம் தவிர்த்த இந்திய மொழி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்திருப்பதாகவோ அவர்களை வேலைக்கு எடுத்துள்ளதாகவோ எதிர்காலத்தில் அதற்கு ஒரு காலக்கெடு விதித்திருப்பதாகவோ தெரியவில்லை. ஆக, டிமானிடைசேஷன் போல சரியான திட்டமிடல் இன்றி முரட்டுத்தனமாக சட்டங்களை நிறைவேற்றுகிற நீங்கள் இதையும் அப்படியே செய்து விடுவீர்களோ என அஞ்சுகிறோம். அந்த அச்சத்துக்கான முகாந்திரமும் இருக்கிறது. இத்திட்டம் நடைமுறையில் வரும் போது உலக மொழிகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பெரும் தட்டுப்பாடு வரும். தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, வங்காளம், குஜராத்தி, மராத்தி போன்ற மொழிகளைச் சொல்லித் தர ஆசிரியர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இந்த மொழிகளிலேயே தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளுக்கு உள்ள செல்வாக்கு பிற மொழிகளுக்கு தமிழகத்தில் இருக்கப் போவதில்லை. ஆனால் இம்மொழிகளிலும் போதுமான ஆசிரியப் பயிற்சி பெற்றவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்? இப்போதைக்கு இந்தி, சமிஸ்கிருத ஆசிரியர்களே அதிகமாக இருப்பர். ஆக, இந்த மும்மொழித் திட்டத்தை அவசரமாக இப்படித் திணிப்பதன் மூலமாக பாஜக அரசு தமிழர்களை இந்தி மற்றும் சமிஸ்கிருதத்தைக் கற்கும் நெருக்கடியை நோக்கி மறைமுகமாக தள்ளுகிறது என்பதே உண்மை.
ஒரு உதாரணம் தருகிறேன்:
மாணவர்கள் கற்கப் போகும் மூன்றாவது மொழி என்பதை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள எந்த மொழியாகவும் இருக்கலாம், இம்மொழி ஆசிரியர்கள் நாடு முழுக்க நியமிக்கப்பட அரசு ஆவன செய்யும் என புதிய கல்விக் கொள்கை கூறுகிறது (4.12). ஆனால் அதே நேரம் மும்மொழி கொள்கையின் ஒரு இலக்கு என்பது தேசிய ஒற்றுமையை ஊக்குவிப்பது என இது குறிப்பிடுகிறது (4.13). தமிழகத்தில் ஒரு மாணவன் தமிழ், ஆங்கிலத்துடன் தெலுங்கோ மலையாளமோ கற்றால் எப்படி தேசிய ஒருமைப்பாடு சாத்தியமாகும்? தேசிய ஒருமைப்பாடு என்பதே மக்களை மொழி, இடம் கடந்து இணைப்பது தானே? இப்போதைக்கு பாஜக அரசு அது இந்தியாக மட்டுமே இருக்க முடியும் எனும் போது இரு திராவிட மொழிகளை ஆங்கிலத்துடன் படிப்பது எப்படி அது தேசிய ஒற்றுமைக்கான வழியாக அங்கீகரிக்கும்? அதாவது ஒரு பக்கம் எந்த மொழியையும் ஒரு மாநிலத்தின் மீது திணிக்க மாட்டோம் எனச் சொல்லியபடியே அவர்கள் பழத்தில் ஊசியைப் போல இந்தியை தேசிய ஒருமைப்பாட்டின் பெயரில் மறைமுகமாக திணிப்பதை கவனியுங்கள்.
இதற்கு அடுத்ததாக, “மும்மொழிப் பாடத்திட்டத்தின் ஒரு மொழியாக சமஸ்கிருதம் பள்ளிக் கல்வித்திட்டத்தின் எல்லா நிலைகளிலும், கல்லூரிகளிலும் ஒரு முக்கிய வளமூட்டக்கூடிய விருப்பப் பாடமாக வழங்கப்படும்” என்று வேறு சொல்கிறது - அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் சமமாக பாவிக்கப்படும் என்று சொல்லிக் கொண்டே இந்தியாவின் ஆட்சி மொழியாகவோ, மக்களின் பேச்சு மொழியாகவோ இல்லாத சமிஸ்கிருதத்துக்கு ஏன் இவ்வளவு தனி முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்? இந்த முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களே இந்த கல்விக்கொள்கையின் அரசியல் குறித்த சந்தேகங்களுக்கு வளமிடுகின்றன.
ஒரு பக்கம் எந்த மொழியையும் கற்பியுங்கள் என்றபடியே இந்திக்கும் சமிஸ்கிருதத்துக்குமான ஆசிரியர்களை அதிகமாய் பயிற்சி அளித்து நியமித்துக் கொண்டு போனால் மறைமுகமாக அது சொல்வதொன்று செய்வதொன்றாகவே முடியும். தமிழக மாணவர்கள் இந்தி / சமிஸ்கிருத கருவறைகள் முன்பு வரிசையாக நின்று, ஐயர் வந்து மணியடித்து சூடம் காட்ட, வாயைப் பொத்தி தரிசனம் பெற வேண்டிய அவலம் ஏற்படும்.
போதுமான மொழி ஆசிரியர்கள் இல்லாதது எங்கள் தப்பல்ல என பாஜக ஆதரவாளர்கள் சொல்லித் தப்பிக்க முடியாது. ஏனென்றால், ஒரு திட்டத்தை திணிக்கும் போது அதைப் பின்பற்றுவதற்கான தயாரிப்புக்கான அவகாசத்தையும் நீங்களே வழங்க வேண்டும். போதுமான மனித வளத்தையும் நீங்களே உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் கைகால்களைக் கட்டி எங்களை நீந்து என கடலுக்குள் தள்ளுவதைப் போல ஆகும். நீங்கள் எங்களுக்கு கோழிக்கறி, மட்டன் வறுவல், கூடவே தயிர்சாதம், சாம்பார் சாதம் என அறுசுவை விருந்து படைக்கிறீர்கள். பார்த்தீர்களா, நீங்கள் அசைவர்கள் என்று தெரிந்தே கோழிக்கறி, மட்டன் எல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறோம் என மார்தட்டிக் கொள்கிறீர்கள். ஆனால் கறியை எடுத்து வாயில் போட்டால் உப்புக்கரிக்கிறது. சாப்பிட முடியவில்லை. இப்போது வேறு வழியின்றி நாங்கள் தயிர்சோறு, சாம்பார் சாதத்துடன் திருப்திப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். மும்மொழிக் கொள்கையிலும் பாஜகவினர் நீங்கள் இதையே எங்களுக்கு செய்கிறீர்கள்.
(புத்தகத்தை கிண்டிலில் வாங்க: https://www.amazon.in/dp/B08HD9ZY14/ref=cm_sw_r_fa_apa_0sDuFbVS4BAVZ)

Comments