"சீர்திருத்தம் செய்பவர்கள் எவ்விதக் கட்டுப்பாட்டிற்கும் ஆளாயிருத்தல் கூடாது. கட்டுப்பாடுகளுக்கு அடங்கிய சீர்திருத்தம் என்பது ... சிறிதும் பயனற்றது."
- பெரியார்
பெரியார் ஏன் சிறுவயதுப் பெண்ணை தன் முதிய வயதில் மணமுடித்தார் எனும் கேள்விக்கான பதில் மேற்சொன்ன கூற்றில் உள்ளது.
பெரியார் சொல்லும் கட்டுப்பாடானது சடங்கு சம்பிரதாயங்கள் மற்றும் சமூக உளவியல் கட்டுமானங்கள்.
சொல்லப்போனால் திருமணத்தை நம்புவதும் அபத்தமே. அது தரும் சட்டரீதியான பாதுகாப்பைத் தவிர என பெரியார் நம்பியிருப்பார் என அவரது "பெண் ஏன் அடிமையானாள்?" நூலைப் படிக்கையில் தோன்றுகிறது.
திருமணம் என்பது ஒரு உடன்படிக்கை, அதைத்தாண்டி திருமணத்தில் எந்த புனிதமும் இல்லை என அவர் சொல்லுகிறார். அதில் லட்சியங்களுக்கும் இடமில்லை. திருமணம் பரஸ்பர ஆதரவுக்கான, பாதுகாப்புக்கான, குழந்தைப் பேறுக்கான, பணத்துக்கான ஒரு உடன்படிக்கையாகவும் இருக்கலாம். சம்மந்தபடும் ஆண்-பெண்ணுக்கு ஏற்புடையதெனில் அது சரியே. இல்லையெனில் உடைத்து விடலாம். ஒரு வர்த்தக உடன்படிக்கையின் போது நடப்பதுதான் திருமணத்திலும் நடக்கிறது.
இந்த அனார்க்கிசக் கருத்தை ஏற்க முடியாதவர்களே பெரியார் இளம்வயதுப் பெண்ணான மணியம்மையை மணமுடித்ததைச் சாடுகிறார்கள். திருமணத்தை ஒரு சமூகக்கட்டமைப்பாக முன்னெடுத்து, அதை வைத்து இன்றுள்ள அரச, பொருளாதார இயக்கங்களைக் குறித்த மாயைகளைக் கட்டமைப்பது, நியாயப்படுத்துவது அவர்களுக்கு அவசியமாக இருக்கிறது. பெரியார் இந்த பாவனைகளை உடைத்தார்.
இங்கு அனேகமாய் எல்லா திருமண உறவுகளும் உள்ளுக்குள் ஒரு 'குறுகின' நோக்கத்துக்கு உட்பட்ட, எளிய தேவைகளை நிறைவேற்ற ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையாய் தான் இருக்கிறது - பெண்ணுக்கு ஆண் எல்லாம் செய்வது, ஆணுக்குப் பெண் எல்லாம் செய்வது என இருப்பதில்லை; அது ஒரு கனவு, எதார்த்தமில்லை.
திருமணத்தின் மீது ஏற்றப்பட்ட லட்சியங்கள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகளை உடைத்தாலே பெண்கள் - கூடவே ஆண்களும் - விடுதலை பெற்று விடுவார்கள்.
ஒரு extreme ஆன உதாரணம் தருகிறேன்.
செக்ஸ் இல்லாத திருமணங்கள் இங்கே எத்தனை? மிக மிக அதிகமாய். ஆனால் வெளியே ஒரு நாடகத்தை போட்டுக்கொண்டு ஏமாற்றுகிறார்கள். செக்ஸ் இல்லாவிட்டால் என்ன குழந்தைக்காக வாழ்வோம், வசதிக்காக, பாதுகாப்புக்காக வாழ்வோம் என சமாதானம் கொள்கிறோம். ஆனால் வெளிப்படையாக இதைச் சொல்லாமல் நாடகத்தைத் தொடர்கிறோம். இதை மறைக்காமல் பேசி வைத்துக் கொண்டால் - திருமணம் ஒரு சாதாரண ஒப்பந்தம் மட்டுமே என நம்பிக்கொண்டால் - இப்போதுள்ள பல மனக்கசப்புகளில் இருந்து கொலைக்குற்றங்கள் வரை ஆண்-பெண் உறவில் இராது. வாழ்க்கையில் பசப்பு, சுய ஏமாற்று, பாசாங்கு, அதனாலான துன்பங்கள் இராது. யாரையோ மனதளவில் அண்டியிருந்து பின்னர் நாசமாய்ப் போக வேண்டி வராது.
பெரியார் இதற்கு எல்லாம் அவசியமில்லை என நினைத்தார். தன் இதயம் சொல்வதை, தன் பகுத்தறிவு ஏற்றதை செய்தார். நியாயம் என்பதை ஒழுக்கத்துடம் பிணைக்கும் போது அது போலித்தனமாகும், போலித்தனத்துக்குப் பணிவதே நம்மை பயந்து நடுங்க, ஊருக்கு அடங்கிப் போகச் செய்கிறது. திருமணம் குறித்த அரசியல் அழுத்தம் ஏற்பட பெரியார் அதையும் புறக்கணித்தார்.
ஒரு கேள்வி: ஒரு ஆண் தன் தேவைக்கேற்ப ஒப்பந்தம் போட்டுக்கொண்டால் அதனால் பெண் பாதிக்கப்பட மாட்டாளா? பெண்கள் கவனமாய் இருந்தால் மாட்டார்கள், பெண்களின் தரப்பில் இருந்து ஆண்களே முடிவெடுத்து அவர்களைக் காப்பாற்றுவதாய் நினைத்து முனைவது ஏமாற்றுத்தனம் என பெரியார் சொல்கிறார் - பெண் விடுதலை பெண்களின் பொறுப்பு, அதை ஆண்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். மணியம்மையின் முடிவை மணியம்மை தான் எடுக்க வேண்டும். எடுத்த பின் அதை ரத்து செய்யவும் அவருக்கு உள்ள உரிமையை பயன்படுத்திக் கொள்ளலாம். தனக்கு சமத்துவமில்லை என நினைத்தால் அவர் அதை எதிர்க்கலாம். அது அவரது பொறுப்பு. பெரியார் அவரை விடுதலை செய்கிறேன் என பொய்யுரைக்க மாட்டார். அதுதான் பெரியார். பெண்களுக்காய் யோசிக்கிற ஆண் நான் எனும் பாவனைகளைப் புனைய மாட்டார். "பெண் ஏன் அடிமையானாள்?" நூலில் இதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்.
காந்தியால் கூட அது முடியவில்லை. கஸ்தூர்பாவிடம் இருந்து பிரிந்து, சரளாதேவி எனும் பெண்ணை மணமுடிக்க நினைத்து பின்னர் அரசியல் நண்பர்களும், ஆதரவளர்களும் அறிவுரைக்க அவர் பின்வாங்கினார். போலியாக இணைந்து வாழ்ந்தார். காந்தி தன் உண்மையை வெளிப்படையாக வைத்தவர். ஆனால் பெரியாரோ காந்தியை விட உண்மையானவர். சமரசங்களில் நம்பிக்கை இல்லாதவர் - இதனால் தான் அவரை அனார்க்கிஸ்ட் என்கிறேன்.
நாம் Fight Club போன்ற படங்களில் பார்த்து ரசித்த விசயங்களை அன்றே செய்து பார்த்தார், சிந்தனை, அரசியல் உலகில் பெரியார் - ஒரு ஆண் ஆணாக இருந்தாலே பெண்கள் தம் போக்கில் நிம்மதியாக சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வார்கள். பெண்களும் பசப்பில்லாமல், ஒழுக்க பாவனைகள், லட்சிய கிரீடம் அணியாமல் தன் தேவையை தெரிவிக்கும் - ஆண் விலங்காக இருக்கும் - ஆண்களையே விரும்புகிறார்கள். (கலாச்சார விலங்குகளே பெண்கள் மீதான வன்முறையில் ஈடுபடுவார்கள், ஆண் விலங்குகள் அல்ல) எல்லா பிரச்சனைகளும் அவர்களின் வாழ்வில் நாம் மூக்கை நுழைத்து நியாயம் பேச நினைக்கும் போதே ஆரம்பித்தது.
பெரியார் இதைத் தெளிவாகப் புரிந்து கொண்டவர் என்பதே சிறப்பு. கோகுல் தனது ஒரு பதிவில் சொல்வதைப் போல பெரியார் ஒரு ஆல்பா மேல் தான், குற்றவுணர்வு, பயமில்லாத ஆல்பா மேல்.
Comments