மனுநீதியில் பெண்களைப் போற்றும் பகுதிகளும் உண்டு என முட்டுக்கொடுக்கிற இந்துத்துவர்கள் உண்டு. ஆனால் ஒரு சமூகத்தில் பெண்கள் போற்றப்படும் அதே சமயம் இழிவுபடுத்தப்படுவதும் சகஜம் தான் - அதற்கு கடந்த அரைநூற்றாண்டு இந்திய வரலாற்றைப் பார்த்தாலே தகும். பெண்கள் தெய்வம் என கையெடுத்து கும்பிடும் நாம் தாம் பல கொடுமைகளையும் அவர்களுக்கு இழைக்கிறோம், ஆடை சுதந்திரம், சிசுக்கொலை, குடும்ப வன்முறை, பொதுவிடங்களை அவர்களுக்கு தடை செய்வது, வரதட்சணைக் கொடுமைகள், தாழ்த்தப்பட்ட பெண்களை பலாத்காரம் செய்து கொல்வது என. இரண்டும் கலந்தது தான் ‘இந்து’ சமூகம். ஒன்றை வைத்து இன்னொன்று இல்லையென்பது ஒரு பக்கம் அடிபட்ட கனியின் அழுகாத பக்கத்தைக் காட்டி ஒரு வியாபாரி நம்மை ஏமாற்றுவதைப் போன்றது.
மேலும் மனுநீதியில் பெண்களைப் போற்றும் பகுதிகளும் அவர்களைப் போற்றினால் குடும்பம் செழிக்கும், செல்வம் பெருகும், கடவுளர் மகிழ்வர், ஆகையால் பெண்களுக்கு குடும்பத்தின் ஆண்கள் சிறந்த ஆடைகள், உணவு, நகைகள் ஆகியவற்றை விழாக்கள், சடங்குகளின் போது வழங்க வேண்டும் என மனு சொல்வதும் உண்டு (3-55, 56, 57, 58, 59). ஆனால் இந்த பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் என்றோ, சுயமரியாதை அவர்களின் உரிமை என்றோ மனு சொல்வதில்லை. குடும்பத்தைப் பாதுகாக்க, செழிக்க வைக்க பெண்கள் ஒரு கருவி எனும் ஆணாதிக்க நோக்கிலேயே இது உள்ளது.
இன்னொரு பக்கம் இந்த வரையறைக்குள் வராத பெண்களை இழிந்தவர்கள், நரிவயிற்றில் பிறக்கத் தக்கவர்கள் என சபிக்கிற ஸ்லோகங்களும் உண்டு.
சாம்பிளுக்கு இந்த ஸ்லோகத்தைப் பாருங்கள்:
“பெண்களின் இயல்பே ஆண்களை இச்சைக்கு இரையாக்குவது தான்; ஞானிகள் பெண்களிடத்து தனிமையில் இருக்க மாட்டார்கள்” (2-214)
“ஞானம் பொருந்திய ஆண்கள் தம் தாய், மகள் மற்றும் சகோதரியுடன் கூட தனித்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். உடலிச்சை என்பது வலுவானது. நீங்கள் எப்போதும் வேண்டுமெனிலும் காமத்தின் தூண்டுதலுக்கு பலியாகக் கூடும்.” (2-215)
இதன் சாரம் என்ன?
1) ஆணின் காமத்துக்கு பெண்ணே பொறுப்பு.
2) இந்த விசயத்தில் - ஆணை காமத்தில் ஈடுபட வைப்பதில் - தாய்மார், பெண் குழந்தைகள், சகோதரிகள் கூட சளைத்தவர்கள் அல்ல.
சனாதன தர்மம் பெண்களை விபச்சாரிகளாகப் பார்க்கிறது என திருமா சொன்னதில் என்ன பிழை சொல்லுங்கள்? குஷ்பு இப்படியான கருத்துக்களே மனு நீதியில் இல்லை, இருக்கிறதெனில் திருமா அதை நிரூபிக்க வேண்டும், இல்லையெனில் மன்னிப்பு கோர வேண்டும் என்றார். நியாயமாக குஷ்புவும் பிற சங்கிகளுமே நம் பெண்களிடமும் திருமாவிடமும் மன்னிப்பு கோர வேண்டும்.
பின்குறிப்பு:
தன் பெயரை ‘திருமாவலன், திருமாவலன்/ எனத் தவறாகச் சொல்வதற்கும் குஷ்புவுக்கு எதிராக திருமா வழக்குத் தொடுக்க வேண்டும். இந்த சங்கிகள் பல்லு விளக்காமல், எதையும் உச்சரிக்க நா வழங்காதவர்களையே ஏன் தம் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்? ஒருவர் பாரதி ராஜா கட்சி என்றால் இவர் திருமாவலன் என்கிறார்.


Comments