Skip to main content

இன அழிப்பின் வரலாற்று வடுக்களை மறக்காதிருப்பது முக்கியம்




ஈழப்பிரச்சனையைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் எனக்குள் அடிக்கடி எழும் கேள்வி இது.


நாம் ஏன் யூத அழித்தொழிப்பை மறந்து விடவில்லை? இத்தனை வருடங்களாய் எத்தனை எத்தனை படங்கள், புத்தகங்கள்!


 யூதர்கள் தமக்கென ஒரு தனி நாட்டையே உருவாக்கிக் கொண்டாலும் அவர்களும் 

அவர்களின் ஆதரவாளர்களும் நாஜிக்களின் கொடூரமான செய்கைகளை, பேரினவாத அரசியல் சித்தாந்தங்களை, பிரம்மாண்டமான அளவில் அவர்கள் நிகழ்த்திய இன அழித்தொழிப்பை மறக்கவில்லை. தொடர்ந்து பண்பாட்டு, அரசியல் தளத்தில் இது பேசப்பட்டபடியே இருக்கிறது. உலகம் எந்த சர்வாதிகாரியை மறந்தாலும் ஹிட்லரை மறக்கவில்லை - ஏனென்றால் இந்த கதையாடல் யூதர்களுக்கு வரலாற்றில் மிகப்பெரிய அனுகூலங்களை ஏற்படுத்தித் தந்தன.

 உளவியல் ரீதியாக தம்மை வரலாற்றில் நினைவு கொள்ளவும் இன அழிப்பின் (யூதர்-நாஜிக்கள்) இருமை அவர்களுக்கு அவசியமாக இருந்தது. இதன் வெக்கை பொறுக்க முடியாமல் போகும் போது சில யூதர்கள் தம்மை ஒரு கலாச்சார, வரலாற்று மறதிக்குள் தள்ளுவதை, வரலாற்றுக் குற்றங்களை இயல்பாக்கம் செய்ய முயன்றதைப் பற்றி ஹேரிண்ட் எனும் யூத தத்துவஞானி பேசுகிறார். ஈழத் தமிழர்களைப் போன்றே யூதர்கள் மத்தியிலும் எல்லா வகையான மக்களும் இருந்தார்கள் - தப்பித்துப் போனவர்கள், முடியாதவர்கள், இன அழிப்பை மறக்க முயன்றவர்கள், மறுத்தவர்கள், ஹிட்லருடன் சமாதானமாகப் போக முயன்றவர்கள், வெளியே போய் இன அழிப்புக்கு எதிராக தொடர்ந்து பேசியவர்கள், அதை சினிமா, இலக்கிய கதையாடல்களில் பதிவாக்கி நிரந்தரமான ஒருவடுவாக்கியவர்கள்’, மறக்க முடியாத ஒரு துயரப்பாடலை அரை நூற்றாண்டுக்கும் மேலாக பாடிக் கொண்டிருப்பவர்கள். எனக்குத் தெரிந்து ஒரு இன அழித்தொழிப்பு லட்சக்கணக்கான எண்ணிக்கையில் நிகழ்ந்த பின்னர் மக்கள் அது நடக்காததைப் போல நம்பி சுமூகமாய் வாழ்ந்ததாய் வரலாறில்லை. ஏனென்றால் அப்படி நடந்தால் உங்கள் வரலாற்று நினைவில் ஒரு கண்ணி உடைந்து போகும், நினைவுச்சங்கிலியில் பிற கண்ணிகள் மொத்தமாய் பொலபொலவென உதிந்து விடும். ஆகையால் ஒரு இனத்தின் தக்கவைப்புக்கு சில நினைவுகளை மறக்காமல் தக்க வைப்பது அவசியம்.


அடுத்து, ஈழத்தமிழர்களுக்கு ஒரு சிறந்த நிரந்தர தீர்வு என்ன?


 இன அழித்தொழிப்புக்கு சிறந்த தீர்வு புதிய தேசத்தை உருவாக்குவது தான் என்பது என் பார்வை. ஒரு சில பெரிய தேசங்கள் ஒத்துழைத்தால் மட்டும் போதும். (ஆனால் இதற்கு நடைமுறை சாத்தியம் குறைவு, பின்விளைவுகளும் பாரதூரமானவை.)

 இரண்டாவதாய், இரு இனங்களும் சமாதானமாகப் போக வேண்டும். ஒரே தேசத்தில் சகோதர ஒற்றுமையுடன் வாழ வேண்டும். ஆனால் இப்போதைய ஜனநாய அமைப்பில் அது சுலபம் அல்ல. ஒற்றுமை வர வேண்டுமென்றால் ஒரு சிறிய முக்கியமான மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றம் என்பது எப்படி பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்ய்யப்படுகிறார்கள் என்பதில் வர வேண்டும். இம்மாற்றம் வந்தால் பேரினவாத அரசியல் காலவதியாகி விடும். இன அழித்தொழிப்புகள் நிகழாது. மத, இன, சாதி அடிப்படையிலான வன்முறை ஒரு முடிவுக்கு வரும்


 எப்படி?

 வாக்கரசியலை எண்ணிக்கையின் அடிப்படையில் அல்லாமல் சமமாக்குவதன் வழி. அதாவது ஒரு தேசத்தில் எத்தனை சாதிகள், இனங்கள், மதங்கள் இருக்கின்றனவோ அவர்களுக்கு சரிவிகிதமான எண்ணிக்கையில் இடங்கள், பிரதிநுத்துவம். அப்போது பேரினவாத, பெரும்பான்மைவாத அரசியல் அர்த்தமற்றுப் போகும். இலங்கையில் இம்மாற்றம் முதலில் வர வேண்டும். அடுத்து இந்தியாவில்.


 இரண்டுமல்லாமல் மூன்றாவதான தீர்வு சிறிய இனங்கள் பேரினங்களுடன் சமாதானமாகப் போவது. உரிமைகளை இழந்தாலும் சுயமரியாதையை இழந்தாலும் மௌனமாய் அதைப் பொறுத்துக் கொண்டு இரண்டாம் தரமாய் நடத்தப்பட்ட ஒப்புக் கொள்வது. இன்றைய நிலையில் இந்த மூன்று சாத்தியங்கள் தாம் கண்ணில் படுகின்றன.


 குறிப்பாக இன்று பாசிசமும் மத இனவாதங்களும் கைகோர்த்து முதலீட்டியத்தின் ஆதரவுடன் கோலோச்சி நிற்கும் போது ஒரு லட்சியபூர்வமான ஜனநாயகம் சாத்தியமில்லை எனத் தோன்றுகிறது. அடிமை-ஆண்டான் வாழ்வுமுறையையே இன்றைய ஜனநாயகம் ஒரு பளபளப்பான காகிதம் சுற்றி நமக்கு அளிக்கிறது - அங்கு நாம் அடிப்படையில் சமத்துவம் அற்றவர்களாக இருந்தபடியே வாக்களிப்பதில் மட்டும் சமத்துவம் பெறுகிறோம். இது வேலைப் பங்கீட்டில் மட்டும் சமத்துவம், ஊதியத்தில் இல்லை என்பதைப் போன்றது.


ஒரு நாட்டில் இரு மதங்களை / இனங்களை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். ஒரு தரப்பு 5%, மற்றொன்று 95%. தேர்தலில் 5% வாக்களிக்கலாம். ஆனால் ஆட்சியாளர்கள் அவர்களின் உரிமைகளுக்கு, மேம்பாட்டுக்கு, இருப்புக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்க மாட்டார்கள். தேவை ஏற்பட்டால் 95%க்காக 5%யை சிறுக சிறுக ஒடுக்கி அழிக்கப் பார்ப்பார்கள்.

 இந்தியாவில் இன்று இஸ்லாமியர்களுக்கு இதுவே நிகழ்கிறது. அவர்களின் எண்ணிக்கை பெருகுவதைப் பற்றி ஒரு நூறாண்டுக்கு மேலாக இந்துத்துவர்கள் கவலை தெரிவித்து வந்ததை அறிவோம். ஏனென்றால் நமது தேர்தல் அமைப்பில் எண்ணிக்கையே அதிகாரம். என்ன ஒரு அநியாயம் இல்லையா! உத்தரபிரதேசம் எனும் மாநிலத்தில் மக்கள் தொகை இவ்வளவு அதிகமாய் இல்லை என்றால் இந்துத்துவம் இவ்வளவு பெரும் சக்தியாகத் தோன்றுவதோ, வழிபாட்டுத்தலங்கள் இடிப்பது, மக்கள் உயிருடன் கொளுத்தப்படுவது, கூட்டங் கூட்டமாய் கொல்லப்படுவது, அவற்றின் விளைவாக தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தது என இந்தியாவின் வரலாறு இவ்வளவு கறைபடிந்ததாக இருந்திருக்காது.


 சாதி ஒழிப்பு, சமத்துவம் எனும் அம்பேத்கரின் கனவு முறியபடிக்கப்பட்டது இந்த பெரும்பான்மைவாத அரசியலினால் தான். எண்ணிக்கை அடிப்படையிலான பிரதிநுத்துவம் என்பது மக்களிடையே அச்சத்தை, பொறாமையை, வெறுப்பை உண்டு பண்ணுகிறது. அரசியல் கட்சிகள் இதை வைத்து அறுவடை பண்ணுகின்றன. ஒரு கட்சி ஒரு சிறுபான்மை மதத்தவரை தேர்தலுக்கு முன்பு கலவரத்தின் பெயரில் ரத்த பலிகொடுத்தால் கொடுத்தவருக்கு தேர்தல் வெற்றி நிச்சயம் எனும் நிலை ஏற்படுகிறது.

ஜெர்மனியின் யூத பலி, இலங்கையின் தமிழர் பலி ஆகியவை இதன் இனவாத சொரூபங்களே அன்றி வேறில்லை. சிறுபான்மையினரை தொடர்ந்து சாதி, இன, மத ரீதியில் சிறுமைப்படுத்தாமல், துன்புறுத்தி, அடிமைப்படுத்தி, அடிப்படை உரிமைகளைப் பறிக்காமல் நம் எண்ணிக்கை அடிப்படையிலான ஜனநாயக தேர்தல் எந்திரத்தால் வேலை செய்ய முடியாது. ஆம், சில முற்போக்கான மாநிலங்களில், நாடுகளில் சமரசத்துடன் அனைத்து பிரிவினரும் ஒரு உயர்ந்த லட்சியத்தின் அடிப்படையில் வாழ முடியும். ஆனால் கடந்த சில பத்தாண்டுகளில் இந்த லட்சியங்கள் செத்து விட்டன. இனி எளியோரின்ரத்த பலிமட்டுமே நமது ஜனநாயக அமைப்பை தக்க வைக்கும். அடுத்த 50 ஆண்டுகள் எல்லாவகையான சிறுபான்மையினருக்கும் உலகம் முழுக்க நரகமாக அமையும் என நம்புகிறேன்.


 இச்சூழலில் status பிரதி quoவை தக்க வைப்பது அடுத்த அரை நூற்றாண்டில் மிக ஆபத்தான ஒன்றாக சிறுபான்மையினருக்கு மாறும். இந்த பார்வை தவறாகவும் இருக்கலாம், எதிர்காலத்தில் உலகம் முழுக்க அரசியல் போக்குகள் மாறலாம், ஆனால் இப்போதைக்கு இதுவே என் நம்பிக்கை.



நான் சொல்கிற முறையில் வாக்களிப்பை மாற்றினால் ஹத்ராஸ் மாதிரியான சம்பவமே எங்கும் நிகழாது. ஏன் தமிழ்நாட்டுக்கு ஒரு தலித் முதல்வர் இல்லை, ஏன் திராவிட கட்சிகளில் மத்திய சாதியினர் மட்டும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் எனும் கேள்வி இராது. அரை நூற்றாண்டாக திராவிடக் கட்சிகளை எதிர்த்து வரும் பிராமணர்கள் கூட மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள்.

ஒரே நாளில் இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சமம் எனும் நிலை தோன்றும். உலகம் முழுக்க இது இன, மத அளவிலான வேற்றுமையை அழித்து சமத்துவத்தை கொண்டு வரும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...