முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன அழிப்பின் வரலாற்று வடுக்களை மறக்காதிருப்பது முக்கியம்




ஈழப்பிரச்சனையைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் எனக்குள் அடிக்கடி எழும் கேள்வி இது.


நாம் ஏன் யூத அழித்தொழிப்பை மறந்து விடவில்லை? இத்தனை வருடங்களாய் எத்தனை எத்தனை படங்கள், புத்தகங்கள்!


 யூதர்கள் தமக்கென ஒரு தனி நாட்டையே உருவாக்கிக் கொண்டாலும் அவர்களும் 

அவர்களின் ஆதரவாளர்களும் நாஜிக்களின் கொடூரமான செய்கைகளை, பேரினவாத அரசியல் சித்தாந்தங்களை, பிரம்மாண்டமான அளவில் அவர்கள் நிகழ்த்திய இன அழித்தொழிப்பை மறக்கவில்லை. தொடர்ந்து பண்பாட்டு, அரசியல் தளத்தில் இது பேசப்பட்டபடியே இருக்கிறது. உலகம் எந்த சர்வாதிகாரியை மறந்தாலும் ஹிட்லரை மறக்கவில்லை - ஏனென்றால் இந்த கதையாடல் யூதர்களுக்கு வரலாற்றில் மிகப்பெரிய அனுகூலங்களை ஏற்படுத்தித் தந்தன.

 உளவியல் ரீதியாக தம்மை வரலாற்றில் நினைவு கொள்ளவும் இன அழிப்பின் (யூதர்-நாஜிக்கள்) இருமை அவர்களுக்கு அவசியமாக இருந்தது. இதன் வெக்கை பொறுக்க முடியாமல் போகும் போது சில யூதர்கள் தம்மை ஒரு கலாச்சார, வரலாற்று மறதிக்குள் தள்ளுவதை, வரலாற்றுக் குற்றங்களை இயல்பாக்கம் செய்ய முயன்றதைப் பற்றி ஹேரிண்ட் எனும் யூத தத்துவஞானி பேசுகிறார். ஈழத் தமிழர்களைப் போன்றே யூதர்கள் மத்தியிலும் எல்லா வகையான மக்களும் இருந்தார்கள் - தப்பித்துப் போனவர்கள், முடியாதவர்கள், இன அழிப்பை மறக்க முயன்றவர்கள், மறுத்தவர்கள், ஹிட்லருடன் சமாதானமாகப் போக முயன்றவர்கள், வெளியே போய் இன அழிப்புக்கு எதிராக தொடர்ந்து பேசியவர்கள், அதை சினிமா, இலக்கிய கதையாடல்களில் பதிவாக்கி நிரந்தரமான ஒருவடுவாக்கியவர்கள்’, மறக்க முடியாத ஒரு துயரப்பாடலை அரை நூற்றாண்டுக்கும் மேலாக பாடிக் கொண்டிருப்பவர்கள். எனக்குத் தெரிந்து ஒரு இன அழித்தொழிப்பு லட்சக்கணக்கான எண்ணிக்கையில் நிகழ்ந்த பின்னர் மக்கள் அது நடக்காததைப் போல நம்பி சுமூகமாய் வாழ்ந்ததாய் வரலாறில்லை. ஏனென்றால் அப்படி நடந்தால் உங்கள் வரலாற்று நினைவில் ஒரு கண்ணி உடைந்து போகும், நினைவுச்சங்கிலியில் பிற கண்ணிகள் மொத்தமாய் பொலபொலவென உதிந்து விடும். ஆகையால் ஒரு இனத்தின் தக்கவைப்புக்கு சில நினைவுகளை மறக்காமல் தக்க வைப்பது அவசியம்.


அடுத்து, ஈழத்தமிழர்களுக்கு ஒரு சிறந்த நிரந்தர தீர்வு என்ன?


 இன அழித்தொழிப்புக்கு சிறந்த தீர்வு புதிய தேசத்தை உருவாக்குவது தான் என்பது என் பார்வை. ஒரு சில பெரிய தேசங்கள் ஒத்துழைத்தால் மட்டும் போதும். (ஆனால் இதற்கு நடைமுறை சாத்தியம் குறைவு, பின்விளைவுகளும் பாரதூரமானவை.)

 இரண்டாவதாய், இரு இனங்களும் சமாதானமாகப் போக வேண்டும். ஒரே தேசத்தில் சகோதர ஒற்றுமையுடன் வாழ வேண்டும். ஆனால் இப்போதைய ஜனநாய அமைப்பில் அது சுலபம் அல்ல. ஒற்றுமை வர வேண்டுமென்றால் ஒரு சிறிய முக்கியமான மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றம் என்பது எப்படி பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்ய்யப்படுகிறார்கள் என்பதில் வர வேண்டும். இம்மாற்றம் வந்தால் பேரினவாத அரசியல் காலவதியாகி விடும். இன அழித்தொழிப்புகள் நிகழாது. மத, இன, சாதி அடிப்படையிலான வன்முறை ஒரு முடிவுக்கு வரும்


 எப்படி?

 வாக்கரசியலை எண்ணிக்கையின் அடிப்படையில் அல்லாமல் சமமாக்குவதன் வழி. அதாவது ஒரு தேசத்தில் எத்தனை சாதிகள், இனங்கள், மதங்கள் இருக்கின்றனவோ அவர்களுக்கு சரிவிகிதமான எண்ணிக்கையில் இடங்கள், பிரதிநுத்துவம். அப்போது பேரினவாத, பெரும்பான்மைவாத அரசியல் அர்த்தமற்றுப் போகும். இலங்கையில் இம்மாற்றம் முதலில் வர வேண்டும். அடுத்து இந்தியாவில்.


 இரண்டுமல்லாமல் மூன்றாவதான தீர்வு சிறிய இனங்கள் பேரினங்களுடன் சமாதானமாகப் போவது. உரிமைகளை இழந்தாலும் சுயமரியாதையை இழந்தாலும் மௌனமாய் அதைப் பொறுத்துக் கொண்டு இரண்டாம் தரமாய் நடத்தப்பட்ட ஒப்புக் கொள்வது. இன்றைய நிலையில் இந்த மூன்று சாத்தியங்கள் தாம் கண்ணில் படுகின்றன.


 குறிப்பாக இன்று பாசிசமும் மத இனவாதங்களும் கைகோர்த்து முதலீட்டியத்தின் ஆதரவுடன் கோலோச்சி நிற்கும் போது ஒரு லட்சியபூர்வமான ஜனநாயகம் சாத்தியமில்லை எனத் தோன்றுகிறது. அடிமை-ஆண்டான் வாழ்வுமுறையையே இன்றைய ஜனநாயகம் ஒரு பளபளப்பான காகிதம் சுற்றி நமக்கு அளிக்கிறது - அங்கு நாம் அடிப்படையில் சமத்துவம் அற்றவர்களாக இருந்தபடியே வாக்களிப்பதில் மட்டும் சமத்துவம் பெறுகிறோம். இது வேலைப் பங்கீட்டில் மட்டும் சமத்துவம், ஊதியத்தில் இல்லை என்பதைப் போன்றது.


ஒரு நாட்டில் இரு மதங்களை / இனங்களை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். ஒரு தரப்பு 5%, மற்றொன்று 95%. தேர்தலில் 5% வாக்களிக்கலாம். ஆனால் ஆட்சியாளர்கள் அவர்களின் உரிமைகளுக்கு, மேம்பாட்டுக்கு, இருப்புக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்க மாட்டார்கள். தேவை ஏற்பட்டால் 95%க்காக 5%யை சிறுக சிறுக ஒடுக்கி அழிக்கப் பார்ப்பார்கள்.

 இந்தியாவில் இன்று இஸ்லாமியர்களுக்கு இதுவே நிகழ்கிறது. அவர்களின் எண்ணிக்கை பெருகுவதைப் பற்றி ஒரு நூறாண்டுக்கு மேலாக இந்துத்துவர்கள் கவலை தெரிவித்து வந்ததை அறிவோம். ஏனென்றால் நமது தேர்தல் அமைப்பில் எண்ணிக்கையே அதிகாரம். என்ன ஒரு அநியாயம் இல்லையா! உத்தரபிரதேசம் எனும் மாநிலத்தில் மக்கள் தொகை இவ்வளவு அதிகமாய் இல்லை என்றால் இந்துத்துவம் இவ்வளவு பெரும் சக்தியாகத் தோன்றுவதோ, வழிபாட்டுத்தலங்கள் இடிப்பது, மக்கள் உயிருடன் கொளுத்தப்படுவது, கூட்டங் கூட்டமாய் கொல்லப்படுவது, அவற்றின் விளைவாக தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தது என இந்தியாவின் வரலாறு இவ்வளவு கறைபடிந்ததாக இருந்திருக்காது.


 சாதி ஒழிப்பு, சமத்துவம் எனும் அம்பேத்கரின் கனவு முறியபடிக்கப்பட்டது இந்த பெரும்பான்மைவாத அரசியலினால் தான். எண்ணிக்கை அடிப்படையிலான பிரதிநுத்துவம் என்பது மக்களிடையே அச்சத்தை, பொறாமையை, வெறுப்பை உண்டு பண்ணுகிறது. அரசியல் கட்சிகள் இதை வைத்து அறுவடை பண்ணுகின்றன. ஒரு கட்சி ஒரு சிறுபான்மை மதத்தவரை தேர்தலுக்கு முன்பு கலவரத்தின் பெயரில் ரத்த பலிகொடுத்தால் கொடுத்தவருக்கு தேர்தல் வெற்றி நிச்சயம் எனும் நிலை ஏற்படுகிறது.

ஜெர்மனியின் யூத பலி, இலங்கையின் தமிழர் பலி ஆகியவை இதன் இனவாத சொரூபங்களே அன்றி வேறில்லை. சிறுபான்மையினரை தொடர்ந்து சாதி, இன, மத ரீதியில் சிறுமைப்படுத்தாமல், துன்புறுத்தி, அடிமைப்படுத்தி, அடிப்படை உரிமைகளைப் பறிக்காமல் நம் எண்ணிக்கை அடிப்படையிலான ஜனநாயக தேர்தல் எந்திரத்தால் வேலை செய்ய முடியாது. ஆம், சில முற்போக்கான மாநிலங்களில், நாடுகளில் சமரசத்துடன் அனைத்து பிரிவினரும் ஒரு உயர்ந்த லட்சியத்தின் அடிப்படையில் வாழ முடியும். ஆனால் கடந்த சில பத்தாண்டுகளில் இந்த லட்சியங்கள் செத்து விட்டன. இனி எளியோரின்ரத்த பலிமட்டுமே நமது ஜனநாயக அமைப்பை தக்க வைக்கும். அடுத்த 50 ஆண்டுகள் எல்லாவகையான சிறுபான்மையினருக்கும் உலகம் முழுக்க நரகமாக அமையும் என நம்புகிறேன்.


 இச்சூழலில் status பிரதி quoவை தக்க வைப்பது அடுத்த அரை நூற்றாண்டில் மிக ஆபத்தான ஒன்றாக சிறுபான்மையினருக்கு மாறும். இந்த பார்வை தவறாகவும் இருக்கலாம், எதிர்காலத்தில் உலகம் முழுக்க அரசியல் போக்குகள் மாறலாம், ஆனால் இப்போதைக்கு இதுவே என் நம்பிக்கை.



நான் சொல்கிற முறையில் வாக்களிப்பை மாற்றினால் ஹத்ராஸ் மாதிரியான சம்பவமே எங்கும் நிகழாது. ஏன் தமிழ்நாட்டுக்கு ஒரு தலித் முதல்வர் இல்லை, ஏன் திராவிட கட்சிகளில் மத்திய சாதியினர் மட்டும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் எனும் கேள்வி இராது. அரை நூற்றாண்டாக திராவிடக் கட்சிகளை எதிர்த்து வரும் பிராமணர்கள் கூட மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள்.

ஒரே நாளில் இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சமம் எனும் நிலை தோன்றும். உலகம் முழுக்க இது இன, மத அளவிலான வேற்றுமையை அழித்து சமத்துவத்தை கொண்டு வரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.