Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

தமிழ் தேசியத்தின் மீது எழுதப்படும் கணக்குகள்

தமிழ் தேசியத்தின் மீது எழுதப்படும் கணக்குகள்

தமிழ் தேசியம் குறித்து பேராசிரியர் ராஜ்குறைக்கும் மனுஷ்ய புத்திரனுக்கும் இடையிலான பேஸ்புக் நேரலை விவாதத்தைக் கேட்டேன். அதில் ராஜன்குறை சொல்கிற பெரும்பாலான விசயங்களுடன் உடன்படுகிறேன் - திராவிடம் என்பது ஒரு முற்போக்கான, மற்றமை மீதான வெறுப்பற்ற கூட்டமைப்பு தத்துவம், ஆனால் அந்த முற்போக்கும், அரவணைப்பும் தமிழ் தேசியம் என வரும்போது இல்லாமல் ஆகி விடுகிறது, குறிப்பாக தமிழ் தேசியம் பிறப்பு அடிப்படையிலான அடையாள அரசியலாகும் போது, அது இறையாண்மை தத்துவமாக உருவாகும் போது ஆபத்தான ஒன்றாகிறது எனக் கூறுகிறார். இறையாண்மையை சுய-இறையாண்மை, சுய-ஆட்சி என (காந்திய பார்வையில்) உள்முகமானதாக அவர் வரையறுக்கிறார். இறையாண்மைக்கு “இன்னொரு பெயரும்” உண்டு - தேசியம், மற்றமை மீதான வெறுப்பரசியல், ராணுவம் போன்ற வன்முறை, ஒடுக்குமுறை கருவிகள் இந்த கொடூர இறையாண்மைக்கு இருக்கும் (காங்கிரஸ் முதல் பாஜக வரையிலான பல இந்தி-இந்தி தேசியங்கள்) என்கிறார். 
எனக்கிருந்த மாற்றுக் கருத்து திராவிட அடையாளம் என்பது ஒரு மகத்தான நோக்கத்திற்காக மட்டுமே ஏற்பட்டிருக்காது என்பது. அதற்குப் பின்னால் உயர்சாதி, மத்திய சாதி மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் ஆகியோரின் ஒருங்கிணைப்புக்கான நோக்கமும் உண்டு என பலரும் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ராஜன்குறை இதன் ஒரு நேர்மறையான லட்சியபூர்வ பக்கத்தை மட்டும் காட்டுகிறார். அதுவும் தேவைதான் நான் மறுக்கவில்லை. ராஜன்குறை பேசும் போது மொழிவெறுப்பற்ற ஒரு பண்பாடு நமக்குண்டு என்கிற தெளிவு ஏற்பட்டது. திராவிட இயக்கம் இங்கு தோன்றி தழைப்பதற்கு தமிழரின் பண்பாட்டிலேயே பல்லடையாள, பன்மொழி இருப்பை ஏற்கிற பண்பு இருந்தது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். 
தமிழுணர்வை அண்ணா பிறப்பால் அன்னியராக இருப்போரிடத்தான வன்மம் இன்றி முன்வைத்தார் என ராஜன்குறை சொல்வதும் உண்மைதான். இது லட்சியம் - ஆனால் நடைமுறையில் இப்படித்தான் இருந்திருக்குமா?
 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பிறப்பால் மாற்றுமொழியைக் கொண்ட தமிழுணர்வாளர்கள் பங்கேற்றார்கள் என்பது உண்மை தான். ஆனால் இந்தி-இந்தியா vs தமிழ்-திராவிடர் எனும் ஒரு இருமை அங்கு தோன்றும் போது இயல்பிலேயே அது இந்திய இறையாண்மை மீதான அச்சமாக, மிக மென்மையான வன்மமாகத் தானே மாறியது; ஒரே வித்தியாசம் பாதிக்கப்பட்டவர் எனும் இடத்தில் நம்மை வைத்திருந்தோம், இப்போதும் வைத்திருக்கிறோம். அதே நேரம் இந்தி பிரச்சார சபைகள் இங்கு தழைக்கவும் அனுமதித்திருக்கிறோம். “இந்தி தெரியாது போடா”, “இந்தி ஒழிக” போன்ற பிரச்சாரங்கள் “இந்திக்காரர்கள் ஒழிக” என மாறவில்லை. நமது வரலாற்று நாவல்களில் சேர மன்னர்கள் (பாண்டியர், சோழருக்கு இணையாகவே) சதிகாரர்களாக ஆக்கிரமிப்பாளர்களாக வருவதுண்டு, ஆனால் அது மலையாள வெறுப்பாக காட்டப்பட்டதில்லை. பல்லவ மன்னர்களைக் கூடப் போற்றியிருக்கிறோம். யோசித்துப் பார்க்கும் போது இம்மண்ணில் பிறந்ததற்கு சற்றே பெருமைப்படலாம் எனத் தோன்றுகிறது.

இந்திய இறையாண்மை உள்முகமாய் தோன்றி சமூகநீதிக்கான மாற்றமாக வளர்ந்து பின்னர் அதிகாரக் குவிப்பைக் கோரும் இந்திய தேசியமாக மாறியிருக்கிறது என ராஜன்குறை கூறுகிறார். வரலாற்றைப் பார்க்கும் போது இந்த இரு போக்குகளும் ஆரம்பத்தில் இருந்தே காங்கிரசுக்குள் இணைந்தே வளர்ந்திருக்கிறது எனத் தோன்றுகிறது. காங்கிரஸில் இஸ்லாமியருக்கு சமத்துவம் கிடைக்க வாய்ப்பில்லை என ஜின்னா சும்மாவொன்றும் கூறவில்லையே? அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கினாலும் மேற்தட்டு, மேல்சாதி, பிற்போக்குத் தலைவர்களை கணிசமாகக் கொண்ட கட்சியாகத் தான் காங்கிரஸ் இருந்தது. (பட்டேல் அந்த கும்பலுக்குத் தலைவராக இருந்தார்.) அதே கும்பல் தான் காந்தியின் கோரிக்கையை மறுத்து இந்தியை தேசிய, ஆட்சி மொழியாக்க வேண்டும் எனக் கோரினர்; அதற்கு செவிசாய்த்து காங்கிரஸ் தனக்குள் இருக்கும் ஆதிக்கவாத இறையாண்மைக்கு வளமிட்டது. 1947க்குப் பிறகு காங்கிரஸ் செய்த எதுவுமே புதிதில்லை. அவற்றுக்கான வேர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே நம் வரலாற்றில் இருந்தது. கோட்சே ஆரம்பத்தில் ‘காங்கிரஸ்’ ஆதரவாளர் தானே. பிரிவினையின் போது தோன்றிய இஸ்லாமிய-பாகிஸ்தானிய வெறுப்பலை என்பது அதிகாரத்தைக் கைப்பற்றிய பின் இந்திய இறையாண்மை தோற்றுவித்த ஒன்றல்ல. அதற்கு முன்பே அது இங்கு இருந்தது. இந்துத்துவர்கள் வந்து சேர்ந்துள்ள இடத்துக்க்கான துவக்கப்புள்ளி அன்றைய காங்கிரசில் நிச்சயமாக உள்ளது. எனில் இறையாண்மை எப்போதும் இத்தகைய உள்முரணான, அந்நியன்-அம்பி சங்கதியாகத் தான் இருந்தாக வேண்டுமோ? இது நான் ராஜன்குறையிடம் கேட்க விரும்பும் கேள்வி.

தேசிய அரசியல் இப்படித்தான் உள்முரண்களுடன் - சமூகநீதி, ‘அந்நிய வெறுப்பு’ என - வளர முடியுமெனில், இஸ்லாமியர்களை வெறுத்து ஒடுக்கியபடியே அவர்களை அரவணைத்து ஒன்றிணைத்து காங்கிரஸின் இறையாண்மையால் செய்ய முடிந்தது எனில், மிக பிற்போக்காய் இருந்தபடியே முற்போக்கையும் ஏற்க முடிந்தது எனில், அதுவே எதார்த்தம் எனில், மற்ற அடையாளவாத தேசியவாதங்களால் அது ஏன் முடியாது?
 உ.தா., கடந்த இருபதாண்டுகளில் இங்கு பல தமிழ் தேசிய அமைப்புகள், கட்சிகள் தோன்றி உள்ளனர்; அவர்களில் சிலர் தெலுங்கு போன்ற மாற்று மொழியை பிறப்படையாளமாய் கொண்டவர்களை எதிர்த்து பேசுவதுண்டு. அதனால் இங்கு தெலுங்கர்கள் தாக்கப்பட்டதுண்டா? இல்லையே. இந்த இயக்கங்கள் வளர்ந்தால் அப்படியான ஒரு வன்முறைக் கலாச்சாரம், அரசியல் தோன்றும் என்பதையும் நான் ஏற்கவில்லை. அப்படி ஆகும் என நினைப்பது உள்ளும் புறமும் ஒன்றே எனும் அமைப்புவாத சிந்தனை. உள்ளுக்கும் புறத்துக்கும் அப்படியான நேரடியான தொடர்பு இருப்பதில்லை - சித்தாந்தம், சிந்தனை, கருத்துக்கள் ஆகியவை நமது நடவடிக்கைகளுக்கு தூண்டுகோலாக அல்லாமல் ஒரு வெற்றுக் குறிப்பானாகவே இருக்கின்றன. இக்குறிப்பானின் நோக்கம் மக்களைத் திரட்டி அதிகாரத்துக்கு எதிராகப் போராடுவதே. உ.தா., திராவிடக் கொள்கை என்பது தமிழக அரசியலில் ஒரு வெற்றுக் குறிப்பான், அது வழிகாட்டும் வேதம் அல்ல. அதனாலே திராவிடத் தலைவர்களில் சிலர் அவைதீகர்களாக, இறைமறுப்பாளர்களாக இருந்தும் - தொடர்ச்சியாக அண்ணாவுக்குப் பின் கலைஞர் என இருமுறை முதல்வர்களாக அவர்கள் இருந்தும் - இங்கு கோயில் கலாச்சாரத்துக்கு, வைதீகத்துக்கு எந்த பாதகமும் அதனால் ஏற்படவில்லை. 

ஏன் தமிழ் தேசிய இயக்கங்களை மட்டும் நாம் ஒரு அவநம்பிக்கையுடன் பார்க்க வேண்டும்? காங்கிரசுக்குக் (திமுகவுக்கு) கொடுக்கிற சலுகையை ஏன் அவர்களுக்கு அளிக்கக் கூடாது?

இங்கு நான் சொல்வதில் ஒரு பிழை இருப்பதாக நீங்கள் கருதலாம், தமிழ் தேசியமும் இந்து தேசியமும் ஒன்று தானே என நம்புகிறவர் நீங்கள் எனில். நீங்கள் கேட்கலாம்: தமிழ் தேசியத்துக்கு அளிக்கிற சலுகையை ஏன் இந்து தேசியத்துக்கு அளிக்கக் கூடாது?

இரண்டுக்குமான வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் - தமிழ் இனம் எனும் உணர்வின் அடிப்படையில் மக்கள் திரள்வது தமிழ் தேசியம். இந்து எனும் உணர்வின் அடிப்படையில் தோன்றுவது இந்து தேசியம். இரண்டுக்குமான பிரதான வித்தியாசம் தமிழர்களுக்கு என்று ஒரு நிலம், மொழி, இனம் உண்டு, அது இந்துக்களுக்கு இல்லை என்பது. இந்து என்பது ஒரு உணர்வு மட்டுமே. அதற்கென நிலம், மொழி, இனம் எதுவும் இல்லை. இதை இந்துத்துவர் செயற்கையாக கட்டமைக்க வேண்டும் (ஹிட்லர் ஜெர்மனியில்‘ஆரியர்களைக்’ கட்டமைத்ததைப் போல). செங்கல் சிமிண்ட் வைத்து அல்ல, தொடர் கலாச்சார, அரசியல் நிகழ்த்துதல் வழியாக. இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்ட வேண்டிய இந்த அழுத்தமே அவர்களைத் தொடர்ந்து வன்முறையிலும், இருமை கட்டமைப்பிலும் ஈடுபடச் செய்கிறது. இந்த நெருக்கடி தமிழ் தேசியவாதிகளுக்கு என்றும் இருந்ததில்லை, இருக்கவும் செய்யாது, அதனால் அவர்கள் தம் “எதிரிகளை” ஒரு குறியீடாக கருதுவார்களே அன்றி, அவர்களை நிஜமென நிரூபிக்கும் கட்டாயத்துக்கு ஆளாக மாட்டார்கள். தமிழ் பேசினாலே, தமிழ் மண்ணில் இருந்தாலே தமிழன் தானே, அவனை கட்டமைக்க அவசியமில்லையே.

மேலும் சில கேள்விகள்: ஒரு இயக்கத்தின் வளர்ச்சியை, போக்கை - மரபான மார்க்ஸியர்களை, சம்பிரதாயமான வரலாற்றாசிரியர்களைப் போல நேர்கோட்டில் பார்ப்பது சரியா? ஒரு இயக்கத்தின் சிந்தனைப் போக்கை அதன் தலைவர்களின் கருத்தாக ஒற்றைப்படையாக, முரணற்றதாக பார்ப்பது சரியா? முன்னுக்குப் பின் முரணாகவே அரசியல் இயக்கங்கள் இருக்கும் போது அவற்றை தெளிவான லட்சியப் பாதை கொண்ட நகர்வுகளாகக் காணலாமா? 

இந்த கோணத்தில் நோக்கும்போது தமிழ் தேசியம் எதிர்காலத்தில் பாசிசமாகத் தான் மாறும் என சந்தேகிப்பதில் எந்த நியாயமும் இல்லை. அதில் சமூகநீதிப் பார்வை இல்லை என தடாலடியாக மறுப்பதிலும் நியாயமில்லை. ராமதாஸ் ஒரு தமிழ் தேசியத்தை முன்னெடுத்ததால் எல்லா தமிழ் தேசிய இயக்கங்களும், சமூகநீதியின்றி செயல்படும், பிற்போக்காய் மாறும் என நான் சந்தேகப்பட அவசியமில்லை. ஏனென்றால் தமிழுணர்வை முன்னிறுத்துகிற சுபாவம் விடுதலை சிறுத்தைகளுக்கும் உண்டே. அவர்கள் சாதி வெறியைத் தூண்டவில்லையே. வை.கோ, மே 17, நாம் தமிழர் போன்ற இயக்கங்கள் வரை மிகப்பிற்போக்கான அரசியலை ஆதரித்ததாகவோ, தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவோ நாம் பார்க்கவில்லையே. ஆம் சங்கிகளும் இன்று ஒரு பக்கம் பலவீனமாக தமிழுணர்வை தூக்கிப் பிடிக்கிறார்கள், ஆனால் அதற்காக அவர்களும் பிற தமிழ் தேசியவாதிகளும் ஒன்றாகி விடுவார்களா? அவர்களால் குறளை ஒரு வைதீக எதிர்ப்புப் பிரதியாக ஏற்கவோ, சங்கர மடத்தில் கைகட்டி நின்றபடி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனக் கோரவோ, கம்பராமாயணத்தை எரிக்கவோ முடியாது; பக்தி இலக்கியம் தமிழுணர்வுக்கு ஈடாகவும் செய்யாது. ஆக தமது எல்லையை சங்கிகள் நன்றாகவே அறிவார்கள். மேலும், அண்மையில் பாஜகவுக்கு எதிராக எழுந்த மிகப்பெரிய அலை கல்விக்கொள்கையில் இந்தித்திணிப்பு எதிர்ப்பு, “இந்தி தெரியாது போடா” ஆகியவை தானே - இந்த விசயத்தில் பாஜக தவிர்த்து அனைத்து இயக்கங்களும் ஒன்றாய் நின்றதைப் பார்த்தோம். 
இன்றைய சூழலில் மொழி அடிப்படையிலான தேசியத்தின் பயன் என்ன?
தமிழ் தேசியம் என ஒன்று இல்லாவிடில் இந்து எனும் உணர்வின் கீழ் தமிழர்கள் ஒன்றுதிரட்டப்படுவது அடுத்த மூன்று பத்தாண்டுகளில் நிச்சயம் நிகழும். இங்கு ஏற்கனவே வலுவான வைதீகக் கலாச்சாரம் உண்டு; சங்கிகளுக்கும் தமிழகத்துக்கும் இடையில் நிற்பது தமிழுணர்வு மட்டுமே. திராவிட இனவுணர்வு தமிழுணர்வின் ஒரு மேலான லட்சியவாத வடிவம். இன்றைய கவன ஈர்ப்பு, மற்றமை-எதிரி கட்டமைப்பு அரசியல் சூழலில் திராவிடத்துக்கு நடைமுறை மதிப்பு இருக்காது.

திராவிடம் எனும் அவைதீக, ஆரிய எதிர்ப்பு, முற்போக்கு கொள்கை ஒரு நெடுந்தொலைவு இலக்கு - அதை ஒரு அரசியல் கொள்கையாகக் கொண்டு மக்களைத் திரட்டுவது, ஆட்சியின் போது செயல்படுத்துவது சுலபம் அல்ல. “ஆரிய மாயை” எழுதிய அண்ணாவாலே அதை செயல்படுத்தி ஆரியவாதத்தில் இருந்து தமிழகத்தை மீட்க முடியவில்லையே. ஆனால் இட-ஒதுக்கீட்டை செயல்படுத்தி சமத்துவத்தை நோக்கி கால் எடுத்து வைக்க முடிந்ததே. இப்படித்தான் ஒரு பக்கம் அநீதியை ஊக்கப்படுத்தும் ஒரு பக்திப் / வைதீக / சாதிய பண்பாட்டை அனுமதித்துக் கொண்டே நீதியை நிலைநிறுத்தவும் திமுக முயன்றது. இவ்வாறு ஒரு உள்முரணுடனே ஒவ்வொரு இயக்கமும் நகர முடியும் என்கிறேன். சமூக இயக்கமென்பது இப்படித்தான் இருக்க முடியும். திமுகவின் வெற்றியே அது ஆரிய-எதிர்ப்பு ஒரு வெற்றுக் குறிப்பான் என அறிந்திருந்ததே. (வெற்றுக் குறிப்பானை நேர்மறையாகவே இங்கு பார்க்கிறேன். ஏனென்றால் கொள்கை நேரடியாக முழுமையாக செயல்படுத்தப்பட்டால் அது பாசிசம் ஆகி விடும், நல்ல கொள்கைகள் கூட.) 

எதிர்காலத்தில் தமிழ் தேசிய இயக்கங்களின் அணியை தம்முடன் திமுக இணைத்துக் கொண்டு அவர்களை வைத்து செமையான அரசியலை செய்ய முடியும் என நினைக்கிறேன். திமுகவால் நேரடியாக செய்ய முடியாத அரசியலுக்கான - கூட்டணியில் இல்லாத - ஒரு B team ஆக அவர்கள் செயல்பட முடியும். 

தமிழ் தேசிய இயக்கங்கள் இங்கு செய்துள்ள ஒரே குற்றம் - தம் இருப்பை நீட்டிக்கும் பொருட்டு - ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கத் தொடங்கியதே. அது இன்று அவர்களை சங்கிகளிடம் பெட்டி வாங்கும் அளவுக்குத் தள்ளி இருக்கிறது. இவர்களுக்கு முட்டுக்கொடுப்பது என் நோக்கமல்ல, ஆனால் வரலாற்றில் எங்கெங்கோ சிந்தின குருதிக்கான கணக்கை இவர்களின் பெயரில் எழுதுவது நியாயமல்ல என்பதாலே இவ்வளவு பர்னிச்சரை உடைக்க நேர்ந்தது எனச் சொல்லி...

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...