Skip to main content

ஒரு எழுத்தாளனின் அரசியல் நிலைவிளக்கம்

"ஓர் எழுத்தாளன் திமுகவை ஆதரிக்கிறான் என்று கொள்வோம். திமுகவினர் செய்யும் எல்லாவற்றையும் அவன் ஆதரிக்கமுடியுமா? அவற்றுக்கு சப்பைக்கட்டு கட்டமுடியுமா? நாளை அவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் என்ன நிகழுமென்பதற்கு எந்த ஐயமும் தேவையில்லை, இதுவரையிலான ஆட்சிகளில் என்ன நடந்ததோ அதுதான். அதை ஆதரித்தபின் அவன் எதை எதிர்க்கமுடியும், என்ன நியாயம் பேசமுடியும்?

இங்கே இப்போது சகல அநீதிகளும் நிகழ்கிறது, திமுக வந்தால் ஒளிவந்துவிடும் என்று திமுக தொண்டன் சொல்லலாம். திமுக வந்தபின் தமிழகம் ஒளிர்கிறது என்று அவன் கூசாமல் வாதிடுவான். எழுத்தாளன் அன்றும் இன்றும் அவலங்களை, சரிவுகளை, அநீதிகளையே சுட்டிக்காட்டுவான். அவன் பணி அதுவே.

எந்த ஒரு அரசியல்தரப்பையும் ஆதரித்து நிலைபாடு கொள்ள எழுத்தாளனால் இயலாது. சீரிய எழுத்தாளர்கள் இந்தியாவின் காங்கிரஸ் இயக்கத்தையும், கம்யூனிஸ்டு இயக்கத்தையும் ஆதரித்தது உண்டு. திராவிட இயக்கத்தை ஆதரித்தவர்களும் சிலர் உண்டு. ஆனால் அந்த அமைப்புக்கள் அதிகாரம் நோக்கிச் சென்றபோது, அவையே அதிகார அமைப்புகளாக ஆனபோது அவர்கள் விலகிச் சென்றுவிட்டனர்.

இந்த உளநிலை இலக்கியம், பண்பாட்டுச்செயல்பாடு ஆகியவற்றில் ஆரம்ப அறிமுகம்கூட இல்லாதவர்களுக்குப் புரிவது அல்ல. அவர்கள் அதை எழுத்தாளனின் திமிர் என்றே எடுத்துக்கொள்வார்கள். இங்கே பாமரரகள் ஓர் அரசியல்வாதியின், ஒரு சினிமா ஆளுமையின் திமிரை ஏற்றுக்கொள்வார்கள், அவள் முன் கைகட்டி நிற்பார்கள். எழுத்தாளனின் திமிரை கண்டு சீற்றம்கொள்வார்கள். ஏனென்றால் அவர்களின் பார்வையில் எழுத்தாளன் ஒரு பொருட்டே அல்ல. அவன் என்ன செய்கிறான், அவனுடைய இடமென்ன என்று அவர்களுக்குத் தெரியாது.

இங்கே ஏதேனும் ஒரு கட்சியைச் சார்ந்து பேசும் அனைவருமே எழுத்தாளர்கள் தங்கள் தரப்பை ஏற்று தங்களுடன் சேர்ந்து கொடிபிடிக்க ஏன் வரவில்லை என்று கேட்பார்கள். எந்த ஒரு விவாதம் எழுந்தாலும் பத்துபேர் ‘இந்த எழுத்தாளர்கள் என்ன செய்கிறார்கள்?”என்று கேட்டு திட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

அது ஏதோ அறச்சீற்றம் போலிருக்கும். ‘எங்கள் அரசியலை ஏற்று எங்கள் கோஷத்தைப் போடு’ என்று மட்டுமே அதற்குப் பொருள். அறமென்பதெல்லாம் இவர்கள் அறியாதது. இவர்கள் தங்கள் தரப்பின் பிழைகளை காணும்போது கண்மூடிக்கொள்வார்கள். எது எழுத்தாளன் பேசவேண்டிய இடம், எப்படி அவன் பேசவேண்டும் என்று இவர்களே முடிவெடுத்துச் சொல்வார்கள், எழுத்தாளன் அடிபணியவேண்டும் என கருதிக்கொள்கிறார்கள்.

இவர்களுக்கு அரசியல்நிலைபாடே ஆதாரம். கருத்து சிந்தனை ஏதுமில்லை.  ‘இந்த தரப்பு என்னுடையது, இதிலுள்ள எல்லாவற்றையும் நான் நியாயப்படுத்துவேன் எதிர்தரப்பை முழுமையாக எதிர்ப்பேன்’ இவ்வளவுதான் சிந்தனை. இதற்கு தேவையான தர்க்கங்கள், நையாண்டிகள், தாண்டிக்குதித்தல்கள் எல்லாவற்றையும் கற்று வைத்திருப்பார்கள்.

- ஜெயமோகன் 

இந்த பார்வையின் பிரச்சனை இது (1) ஒரு தனிப்பெரும் பூர்வ உண்மையை கற்பனை செய்து அதை எழுத்தாளன் இயல்பாகவே அறிவான் என்பது. அப்படி ஒரு உண்மையே கிடையாது. அறம் என்பதும் ஜெயமோகனைப் பொறுத்தமட்டில் ஒருவித அத்வைத பிரம்மம். அவர் அதை எங்குமே தெளிவாக விளக்கியதில்லை.

 (2) அரசியலை இது 'நடைமுறை அரசியலாக' மட்டும் பார்க்கிறது. நடைமுறை அரசியல் தவறானது, ஊழலால் ஆனது, அரசியல் குவிப்பை கொண்டு வருவது எனும் ஒவ்வாமை அவரிடம் உள்ளது. இது ஒரு மத்திய வர்க்க பார்வை ஆகும். சங்கர் போன்றோரின் படங்களில் திரும்பத் திரும்ப வருவது இது. ஜெயமோகன் இதன் அடிப்படையிலேயே அன்றாட அரசியல் குறித்து எழுத்தாளன் கருத்துக் கூறலாகாது என்கிறார். அதற்குப் பதிலாக மதம், சம்பிரதாயம், கோயில் கலாச்சாரம், கூடவே இவையெல்லாம் கலந்த சாம்பார் சாத இலக்கியம், அவ்வபோது காந்தியம் பற்றி பேசலாம் என்கிறார் - ஆனால் காந்தியே - தேர்தலில் பங்கேற்கவில்லையே தவிர - ஒரு நடைமுறை அரசியல்வாதியே என்பதை மறந்து விடுவார்.
 
(3)  அதிகார அரசியலை, நுண் அரசியலை இது மறுக்கிறது என்பது மூன்றாவது பிரச்சனை.
ஜெமோவின் பார்வை 19ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. அவரை ஆதரிப்பவர்கள் ஜுராசிக் பார்க்கின் ஜீவராசிகள். ஒருவித மீட்புவாதிகள். பழங்கால சமூகக் கட்டமைப்புகள் குலைவதை விரும்பாதவர்கள்.
இன்று நாம் ஒரு தெளிவான அதிகார அரசியலுடன் எதிர்கால இலக்குடன் நகர்ந்து வருகிறோம். அதன் அடிப்படையில் சில கட்சிகளை ஆதரிக்கிறோம். சிலரை எதிர்க்கிறோம் - பாஜகவை எதிர்ப்பது அப்படியான எதிர்கால அனுகூலங்களை கணக்கில் கொண்டு நிகழ்வது. உ.தா., அடுத்த ஐந்து ஆண்டுகளில் சி.ஏ.ஏவின் விளைவாக இஸ்லாமிய தடுப்பு முகாம்கள் இங்கு தோன்றாதிருப்பது ஒரு அவசியம். அதற்கு யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என யோசித்து அதற்கு ஏற்ப அரசியல் பேச வேண்டும் என்பது என் நோக்கம். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு, நோக்கம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதைத் தெளிவாக வெளிப்படுத்தி முடிந்தளவுக்கு ஆதரவு திரட்ட வேண்டும் எனது இன்றைய அரசியல். இது ஒவ்வொரு சொல்லும் ஒரு அதிகார பரிமாற்றத்துக்கான முயற்சி எனப் பார்ப்பது. அறத்துக்காக, பிரம்மனுக்காக பேசுகிறோம் என ஜல்லியடிப்பது அல்ல.

 உ.தா., வலதுசாரிகளை எதிர்ப்பது எனும் இலக்கு கொண்ட ஒருவர் யூதவெறுப்பை கண்டடைந்து கண்டிக்கும் அதே நேரம் பாலஸ்தீன சார்பு அரசியலையும் பேசலாம்.  அதே நேரம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை உலகளவில் சில நாடுகளின் வரலாற்றைப் பொறுத்து கண்டித்து உரையாடலாம். ஆனால் இந்திய அரசியல் களத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் வலதுசாரி அரசியலில் பெருவாரியாக பங்கேற்க முடியாதபோது அவர்களைக் கண்டிக்காதிருப்போம். பங்குபெறும் போது (ஒவைஸி) கண்டிப்போம், எதிர்ப்போம். இங்கு எல்லா சிறுபான்மை மதவாதமும் அல்ல,  வலதுசாரி தேசிய அரசியலுக்கு துணை போகும் சிறுபான்மை மதவாதம் மட்டுமே பிரச்சனை. 

பொதுவான காலாதீதமான ஒரு அரசியல் நிலைப்பாடு என்னைப் பொறுத்தமட்டில் இல்ல. எழுத்தாளனின் அரசியல் அப்படியே இருக்க வேண்டும். அதனாலே யோகி ஆதித்யநாத்தை போல இஸ்லாமியரை நேரடியாக வெளிப்படையாக எதிர்க்கும் இந்துத்துவர் மேல் என்கிறேன். "நான் பாஜக ஆதரவாளன் அல்ல, நான் இஸ்லாமியரை வெறுக்கவில்லை, ஆனால் ... " என சுற்றிவளைத்துப் பேசும் பாசாங்காளர்களை எதிர்க்கிறேன். அவர்கள் மிக மிக ஆபத்தானவர்கள். 

ஆம் ஒரு எழுத்தாளன் இருமையை கடந்து இருண்மையை பரிசீலிக்க வேண்டும், ஆனால் கட்டுரைகளில், சமூகவலைதளங்களில் அல்ல. புனைவில், கவிதையில் அதை அவன் செய்யலாம். நேரடி வாழ்வில், உரையாடலில் அவன் வெளிபடையாக ஒரு தரப்பை எடுத்துக் கொண்டு அதற்கு ஏற்ப தன் அரசியலை செய்ய வேண்டும். அன்றாட வாழ்விலும் இருண்மையுடன் தடவித் தடவிப் பேசுகிறவன் பாசிசத்தை நோக்கி சாயவே வாய்ப்பதிகம். ஏனென்றால் மனித மனம் தீர்வை நோக்கி பாய்வது, அதுவும் வலுவான அதிகாரமிக்க தீர்வுகளை நோக்கி. ஜெர்மனியில் சில எழுத்தாளர்களை ஹிட்லரை ஆதரிக்க நேர்ந்தது இந்த 'இருண்மையில்-எப்போதும்-குத்தவைத்திருப்போம்' குழப்பத்தினாலே.

எல்லாரையும் எதிர்ப்பது, அதற்கு ஒரு கற்பனாவாத அறம் சார்ந்த நியாயத்தை கொடுப்பது, பின்னணியில் அடிப்படைவாதத்தை ஆதரிப்பதே ஜெ.மோவின் அரசியல். இடதுசாரி, 
திராவிட எதிர்ப்பை அவர் அதிகாரத்தை எதிர்ப்பது என்று நியாயப்படுத்தவும் செய்வார். அது அவரது விருப்பம். ஆனால் அவர் நேர்மையாக அதை ஒத்துக் கொள்வதில்லை என்பதே சிக்கல்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...