Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

க்ரியா ராமகிருஷ்ணனுக்கு அஞ்சலி



வித்தியாசமான அட்டைப் படங்கள், வடிவமைப்பு, அழகான எழுத்துருக்கள், நேர்த்தியான இடைவெளி கொண்ட வாக்கியங்கள் என க்ரியாவின் புத்தகங்கள் பார்க்க ரம்மியமாக மட்டுமல்ல வாசிக்கவும் இணக்கமாக இருக்கும் - இது அனைவரும் அறிந்தது. ஆனால் அதோடு அவர் தன் பதிப்பகத்தில் வரும் நாவல்களின் வடிவம் சார்ந்து நிறைய வேலை பார்ப்பவர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். குறிப்பாக இமையத்தின் நாவல்கள் (அதாவது அவரது முதல் நாவல் முதலே) அவ்வளவு கச்சிதமான வடிவத்துடன் பிசிறின்றி இருப்பதில் க்ரியா ராமகிருஷ்ணனுக்கு பெரும் பங்குண்டு. அதாவது நான் எழுத்துப்பிழை, வாக்கியப்பிழையை திருத்துவதை அல்ல, கதையமைப்பு, கதைக்களன், பாத்திர அமைப்பு ஆகியவற்றில் வேலை பார்ப்பதை சொல்கிறேன். ஒரே துயரம் ராமகிருஷ்ணன் இந்த அறிவை பரவலாக்காமல் தனது சிறிய உலகத்தில் ஒதுங்கி இருந்து விட்டார் என்பது


நான் வாசிக்க வந்த என் பதின் பருவத்தில் காலச்சுவடு பதிப்புத் தொழிலில் உச்சத்தில் இருந்தது. அதன் பிறகு தமிழினி. நான் கணிசமான நூல்களை இந்த இரு பதிப்பகங்களில் இருந்தே வாங்கினேன். க்ரியா எனக்கு முந்தைய காலகட்டம்.

 நான் படிக்கத் தொடங்கிய போதே அதிகப்படியான நூல்கள் சந்தையில் குவியத் தொடங்கி இருந்தன. செம்பதிப்பில் மொத்தத் தொகுப்புகள் வந்திறங்கத் தொடங்கிய காலம். நான் வாங்கிய சு.ரா, பு.பி, அசோகமித்திரன், ஜெயகாந்தன் போன்றோரின் முதல் நூல்களே பெருந்தொகைகள் தாம். இன்னொரு பக்கம் ஜெயமோகன் தான் எழுதுகிற ஒவ்வொரு நாவலையும் இந்தஒட்டுமொத்த தொகுப்புகளுக்குஇணையாகக் கொண்டு வந்து கொண்டிருந்தார். சிறிய செறிவான கச்சிதமான நூல்கள் இந்த பிரம்மாண்ட வரிசைகள் முன் சிறுத்து நிழலில் ஒதுங்க ஆரம்பித்த காலகட்டம் அது.


 இன்னொரு பக்கம், நவீன செவ்வியலக்கியம் மீது ஒரு போதாமை உணர்வு, அதிருப்தி, அலுப்பு ஏற்பட்டிருந்தது. பின்நவீனக் கோட்பாடுகள், மாய எதார்த்த சிறுகதைகள், நான்-லீனியர் நாவல்கள், லத்தீன் அமெரிக்க இலக்கியம் என தமிழின் திசை மாறத் தொடங்கியிருந்தது. 16 வயது இளைஞனான எனக்கு அப்போது சு.ராவை விட எஸ்.ரா, கோணங்கியே மேல் என ஒரு எண்ணம் ஏற்பட்டிருந்தது. சு.ரா அழகாக எழுதுகிறார், ஆனால் அவரை விட அசலான கலைஞர்கள் பின்நவீன எழுத்தாளர்களே என நினைத்தேன். அவர்களே புதிய வண்ணமயமான மொழியில் எழுதினார்கள், அவர்களே புதிய தத்துவங்கள், கோட்பாடுகள், எழுத்து பாணியை அறிமுகப்படுத்தினார்கள். பு.பியை ரசித்தாலும், சு.ரா இன்னமும் பு.பியை தாண்டி வரவில்லை என நினைத்தேன் (இன்று அந்த மாயை தெளிந்து விட்டது). எனக்கு அப்போது ரஜினி, கமல் எல்லாம் எஸ்.ராவும் கோணங்கியுமே. வரம் வாங்கி வந்த தெய்வம் ஜெ.மோ. ஜெ.மோவிடம் பேசும் போது அவர் நவீனப் படைப்புகளை, குறிப்பாக சு.ராவை ஒரே வரியில் அடித்து நொறுக்கி விடுவார். (ஆனால் நாங்கள் அப்படி நிராகரிப்பதை அனுமதிக்க மாட்டார்.) கலை இலக்கியப் பெருமன்ற வட்டத்தில் தொண்ணூறுகளுக்கு முன்பான இலக்கிய ஆகிருதிகள் அதிகார மையங்கள், சங்கர மடங்கள் எனும் ஒரு புரிதல் இருந்ததால் நானும் நவீன இலக்கிய பிரம்மாக்களின் எதிர்-முகாமில் இருந்தே ஆரம்பித்தேன். இந்த சூழலில் க்ரியாவின் பதிப்பாக்க சாதனைகள், அறிமுகங்கள் எனக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. குட்டி இளவரசன், அந்நியன் போன்ற படைப்புகளை முக்கியமான இலக்கியமாக அப்போது நான் கருதவில்லை. “ஜெ.ஜெ சில குறிப்புகள்கூட ஒரு விசித்திரமான கதை என்பதைக் கடந்துநூற்றாண்டுகளின் தனிமைபக்கத்தில் வர முடியாது என நினைத்தேன். இப்போது திரும்பிப் பார்க்கும் போது எனக்கு முந்தைய தலைமுறையினர் அளவுக்கு என் தலைமுறை படைப்பாளிகளை க்ரியா ராமகிருஷ்ணன் பெரிதும் கவரவில்லை, ஒரு கலகக்காரராக அவர் எங்களுக்குத் தெரியவில்லை எனத் தோன்றுகிறது.


நான் எழுத வந்த போது உயிர்மை ஒரு முக்கிய பதிப்பகமாக இருந்தது. மனுஷ் தன் அஞ்சலிக் குறிப்பில் சொல்வதைப் போல - எந்த எழுத்தாளனுக்கும் தன் புத்தகம் க்ரியாவில் வர வேண்டுமெனும் கனவு இருக்கும் - எனக்கு க்ரியாவில் வந்தாலே போதும் எனும் ஆசை இருந்ததில்லை. உயிர்மையில் வந்தால் போதுமென்றே நினைத்தேன். இதை ஒப்பீட்டுக்காக அல்ல காலம் எப்படி மாறி விட்டிருந்தது எனச் சொல்வதற்காகவே குறிப்பிடுகிறேன். க்ரியா இருபது ஆண்டுகளில் பதிப்பித்த நூல்களை விட பல மடங்கு அதிகமான புத்தகங்கள் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சியில் வெளியாகின. படித்தே வாழ்நாளில் தீர முடியாதளவுக்கு நல்ல புத்தகங்கள் மலை மலையாய் குவிந்தன. கடந்த பத்தாண்டுகளில் சில புதிய பதிப்பகங்கள் அழகான அட்டைப்படங்கள், எழுத்துருக்களுடன், நேர்த்தியாக எடிட் செய்து பேஜினேட் செய்த நூல்களை வரிசை வரிசையாக கொண்டு வருகின்றன (“ஸீரோ டிகிரிபதிப்பக நூல்கள் ஒரு உதாரணம்). அதாவது க்ரியா ராமகிருஷ்ணன் பல வருடங்களாய் தேடித்தேடி செதுக்கி உருவாக்கியவை இன்று சில மாதங்களிலேயே பதிப்பாளர்களுக்கு சாத்தியமாகின்றன. இன்று எண்ணிக்கை முக்கியமாக இருக்கிறது. இன்று அசல்-நகல் எனும் இருமை மறைந்து விட்டது. சொல்லப்போனால் நகலாக்கமே (duplication) இன்று படைப்பூக்கமிக்க செயலாக கருதப்படுகிறது. .தா., ஜெ.மோவின்வெண்முரசுநாவல்கள் பல ஆண்டுகளாய் அவர் எழுத எழுத பிரசுரமாகிக் கொண்டே வந்தன. அவற்றை பொறுமையாகப் படித்து திருத்தி மீள மீள எழுதி கச்சிதமான புத்தகங்களாய் கொண்டு வரும் பணியை க்ரியா ராமகிருஷ்ணன் ஒருவேளை எடுத்திருந்தால் அதை முடிக்கவே அவருக்கு 200 வருடங்கள் எடுத்திருக்கும். (அதற்குள் ஜெ.மோ இன்னொரு பத்து லட்சம் பக்கங்கள் நாவலை எழுதியிருப்பார்!)


 தமிழில் என்றில்லை, உலகம் முழுக்க இன்று இதுவே நிலை - சின்னச் சின்ன பிழைகள் இல்லாத பதிப்புகளே இன்றில்லை; வடிவ ரீதியான பிசிறுகளை பொருட்படுத்தாமல் வாசிப்பனுபவமும் பிம்ப கட்டமைப்புமே முக்கியமாகி விட்டன. எழுத்து ஒரு சீரியசான சாகச விளையாட்டாகி விட்டது


ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் இருந்தே புத்தகங்களை பலவித தலைப்புகளில் கொண்டு வருவது, எல்லாருக்கும் மேடை அமைத்துக் கொடுப்பது, இலக்கியத்துக்கும் சமூக அரசியல் பிரதிகளுக்குமுனான எல்லைக்கோட்டை அழிப்பது, பெரிய மேடைகளில் நூல் வெளியீடுகள் நிகழ்த்தி, நூல்களை ஒரு விவாதப் பொருளாக தொடர்ந்து வைத்திருப்பது, சமூகவலைதளங்கள் உள்ளிட்ட புதிய ஊடகங்களை பயன்படுத்தி விளம்பரப்படுத்துவது, மின்நூல்கள், ஒலிநூல்கள் என புத்தகங்களை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்வது என பிரசுரம் முழுக்க வேறொன்றாக வளர்ந்து விட்டது. மொழியாக்கத்தை பொறுத்தமட்டில் கடந்த சில பத்தாண்டுகளில் காலச்சுவடு உலகம் முழுக்க உள்ள எத்தனையோ மொழிகளில் இருந்து நூல்களை தமிழுக்கு மொழியாக்கம் செய்து தந்துள்ளது. கண்ணன் ராமகிருஷ்ணனை நிச்சயமாய் இவ்விசயத்தில் முந்தி விட்டார். மொழியாக்க உரிமை பெற சர்வதேச புத்தகக் கண்காட்சிகளுக்கு செல்வது, முகவர்களுடன் நல்ல தொடர்பில் இருப்பது இன்று முக்கியமாக உள்ளது. க்ரியா ராமகிருஷ்ணனுக்கு இதெல்லாம் தெரிந்திருந்தது, அவருக்கு நிறைய தொடர்புகளும் ஆங்கில பிரசுர உலகில், மேற்குலகில் இருந்தன, ஆனாலும் க்ரியா ராமகிருஷ்ணன் கடந்த மூன்று பத்தாண்டுகளாய் சற்று பின்தங்கி விட்டார் எனச் சொல்ல வேண்டும். அவரது பாணி வழக்கொழிந்து விட்டது


மற்றொரு பக்கம், அவரது மகத்தான பங்களிப்பான தற்காலத் தமிழ் அகராதி இன்னும் எத்தனைக் காலமானாலும் ஒரு தவிர்க்க முடியாத பிரதியாக இருக்கும். நான் சில வருடங்கள் மாலைமலரில் ஒரு சிறிய யூனிட்டில் வேலை செய்தேன். அப்போது எனக்கு தமிழ் மொழியாக்கத்திலும் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. பெரும்பாலான நேரம் க்ரியாவின் அகராதியுடனே இருப்பேன். தினமும் வேலைக்கு செல்லும் போது என் பையில் அந்த அகராதி இருக்கும். ஒரு சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் வேண்டுமா, வட்டாரச் சொற்களின் பொருள் வேண்டுமா, உபரியான தகவல்கள் வேண்டுமா, க்ரியாவின் அகராதியை புரட்டுவதே ஒரே வழி. இன்று இணையதளங்கள் ஓரளவுக்கு அந்த இடத்தை எடுத்துக் கொண்டு விட்டன என்றாலும் அது ஒரு அற்புதமான புத்தகமே.


க்ரியா ராமகிருஷ்ணனின் மறைவு ஒரு காலகட்டத்தின் மறைவு. அவருக்கு அஞ்சலிகள்.

  

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...