எப்போது ஒருவரை மதிப்பிட்டு எழுதலாம் என்பதைக் குறித்து அடிக்கடி எனக்கு சொல்லப்படும் அறிவுரை ஒருவர் காலமாகும் போது இதைத் தவிர்க்க வேண்டும் என்பது. காரணம் மக்கள் மனம் புண்படலாகாது என்பது. இதையே நீங்கள் ஒருவர் விருது வாங்குவது போன்ற சாதனைகள் படைக்கும் போதும் சொல்லலாம். ஒரு நடிகருக்கு பத்மஶ்ரீ வழங்கப்படும் தருணத்தில் நீங்கள் சுலபத்தில் அவரை விமர்சனபூர்வமாய் மதிப்பிட முடியுமா? அவரது ரசிகர்கள் கொந்தளித்துப் போய் விட மாட்டார்களா? ஆனால் இந்த இரண்டையும் விட்டால் அவரைப் பற்றி பேச வேறு சிறந்த தருணம் ஏது?
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை ஒரு துயர நினைவு நாளாக சில இஸ்லாமியர் அனுஷ்டிப்பதுண்டு. எமர்ஜென்ஸி இயற்றபட்ட நாள் வரும் போது அதைப் பற்றி விமர்சனக் கட்டுரைகள் நாளிதழ்களில் வருவதுண்டு. இப்படி நாம் நினைவுகொள்ளத்தக்க எத்தனையோ தினங்கள் வரலாற்றில் உண்டு. அப்போது பேசுகிறவற்றை எப்போதும் பேசலாம் தான், ஆனால் அப்போது பேசும் போது கிடைக்கும் கவனமும் முக்கியத்துவமும் மற்ற சந்தர்பங்களில் இராது. இது ஒரு கருத்தை நோக்கி கவனம் திரும்ப வேண்டும் எனும் நோக்கமே அல்லாது கருத்தாளர் மீது திரும்ப வேண்டுமென்பதல்ல. ஒருவரது மறைவும் அப்படியான ஒரு சந்தர்ப்பமே. அப்போது அவரை அவதூறு செய்யக் கூடாது எனக் கோரலாம். ஆனால் அவரை புறவயமாய் மதிப்பிடலாகாது, அவரை பாராட்ட மட்டுமே செய்யலாம், அல்லது மௌனமாய் போய் விட வேண்டும் என்று வலியுறுத்துவது status quoவை தக்க வைக்க வேண்டும், ஒரு மாற்றுக் கருத்து கவனம் பெற்றுவிடக் கூடாது எனும் விருப்பம் மட்டுமே. அதை மறைக்கத் தான் bad taste, மனம் புண்படுகிறது என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். இதுவே அவர்களுக்கு சாதகமான மாற்றுக் கருத்தென்றால் “சொல்லி விட்டு போகட்டும்” என தள்ளி கைகட்டி நின்று பார்ப்பார்கள்.
யோசித்துப் பாருங்கள், ஒரு அரசியல் தலைவர், நடிகரின் நினைவு தினமன்று அவரை நீங்கள் கராறாய் மதிப்பிட முடியாது. ரசிகர்கள் குமுறி விடுவார்கள். கும்பல் மனப்பான்மை என்றுமே அதை அனுமதிக்காது. ஏனென்றால் ஒரு பிரபலம் அல்லது தலைவரை ஒரு செண்டிமெண்டின் மீது பிம்பமாய் கட்டியெழுப்புகிறோம். உண்மை மற்ற சந்தர்பத்தில் பேசப்பட்டால் பிரச்சனையில்லை, ஆனால் நினைவுதினம் அன்று கூடாது, அப்போது அது கவனம் பெற்று விடக் கூடாது என பதறுவார்கள். ஏனென்றால் கவனம் பெறத்தக்க சந்தர்பங்களை அதிகார மையங்கள் தம் வசம் வைத்துக் கொள்ள, கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். பிக்பாஸில் மங்கலம்-அமங்கலம் பற்றின சர்ச்சை நினைவிருக்கும். சுரேஷ், அர்ச்சனா போன்றோர் பலரும் அவ்வீட்டில் ஒரு மங்கலமான தருணத்தில் விதவைகள் பற்றி பேசப்படுவதை விரும்பவில்லை. சமூக சீர்திருத்தக் கருத்துக்களை பிறகு பேசிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். பிறகென்றால் எப்போது? யார் கவனத்திலும் அது இல்லாத போது. கும்பல் கலாச்சாரமும் இப்படி சில சந்தர்பங்களை பிறருக்கு அனுமதிக்காமல் ஒரு அதிகார மையமாகிறது. இதை ‘எங்கள் உணர்ச்சி காயப்படுகிறது’, அசந்தர்ப்பமான பேச்சென்று சொல்லி தம்மை நல்லவர்களாகக் காட்டிக் கொள்ளவும் செய்வார்கள்.
இந்த கும்பல் அதிகாரம் இலக்கியத்திலும் வந்து சற்று காலமாகி விட்டது. ஒரு ஆளுமை மறையும் போது வரும் அஞ்சலிகள் மட்டுமல்ல, நினைவு மலர்கள் கூட முழுக்க முழுக்க ஒற்றைக் குரலில் ஒலிப்பது இதனாலே. உங்களது கருத்தை புகழ்ச்சியாக மாற்றினால் அதற்கு ஒரு அதிகாரம் கிடைத்து விடும். இது பேசுவதற்கான அதிகாரம். இதுவே go corona என பாத்திரங்களை முழக்கிய போது பொதுமக்களுக்கு கிடைக்க ஒலியெழுப்புதலின் அதிகாரம். இது ஒலியெழுப்பாதவர்கள் துரோகிகள் எனும் அதிகாரம். தேசிய கீதம் ஒலிபரப்பப்படும் போது யாரெல்லாம் எழுந்திருக்காமல் இருக்கிறார்கள் என கண்காணிப்பதில் கிடைக்கும் அதிகாரம். ஒழுக்கத்தின் அதிகாரம். அனுசரித்து செல்வதில் உள்ள அதிகாரம். Status quoவின் அதிகாரம்.
இதில் மிகப்பெரிய கொடுமை அதிகமாய் உணர்ச்சிவசப்படுவது காலமான ஆளுமையுடன் நேரடியான எந்தவித தொடர்பிலும் இல்லாதிருந்தவர்களே என்பது. அவர்களே கம்பை சுழற்றிக் கொண்டு “வாயை மூடுடா” என முதலில் கத்துவது.
ஆனால் இந்த கலாச்சாரத்தைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. இலக்கிய உலகத்தில் உள்ள இத்தகைய அதிகார விளையாட்டை ரொம்ப காலமாய் கவனித்து வருகிறேன். எப்போதுமே இவர்கள் எதைச் செய்யக் கூடாது என்கிறார்களோ அதையே செய்ய வேண்டும். ஏனென்றால் அதுவே நியாயமாக இருக்கும். நாம் எப்போது பேச வேண்டும் என்பதை நாமே முடிவெடுக்க வேண்டும்.

Comments