Skip to main content

மரணம்: ஒரு தத்துவார்த்த விளக்கம்



மரணத்தைக் கொண்டாடுவது தற்கொலை வழிவகுக்காதா?

இல்லை.


நமது நவீன உளவியல் மரணத்தை எதிர்மறையாக சித்தரித்ததே உலகம் பூரா தற்கொலைகள் அதிகரிக்க ஒரு காரணம் என நினைக்கிறேன். மற்றொரு காரணம் நகரங்களை மையமாகக் கொண்டு உருவான தாராளவாத பொருளாதாரமும், அதை நிர்வகிக்கிற அரசுகளின் தொடர் கண்காணிப்பும். நமது உடல் நம் வசம் இல்லை, தொடர்ந்து மதிப்பிடப் பட்டுக்கொண்டே இருக்கிறோம். நம் மீதான ஆட்சியாளர்களின் அதிகாரம் இப்படி உடலைக் கட்டுப்படுத்துவதன் மூலமே தோன்றுகிறது. இப்போது நாம் நம்மையே அழித்து இதே அதிகாரத்தை அடைய முயன்றோம். இதுவும் கடந்த ஒரு நூற்றாண்டாய் உலகம் முழுக்க தற்கொலைகள் அதிகரிப்பதற்கு ஒரு காரணம்.

 இதனுடன் தனிமையும் சேர்ந்து கொள்கிறது. தனிமையின் அழகு அது நம்மை நமது இருப்பு குறித்து, காலம் குறித்து சிந்திக்கத் தூண்டுகிறது என்பது. அப்போது தோன்றும் துக்கத்தில் ஒரு லாகிரி உள்ளது. மரணம் ஒவ்வொரு மலராக தாவிப் பறக்கும் ஒரு பட்டாம்பூச்சி. அதை துரத்தி செல்வது ஒரு வேட்டை மிருகம் ஒரு மாயமானை வனாந்தரத்தில் துரத்தி செல்வதற்கு சமானமானது. சும்மா மரணத்தைக் குறித்து சிந்தித்தாலே கிட்டத்தட்ட அந்த மாயமான் நமக்குப் புலனாகிறது, அதனைத் துரத்திச் சென்று காலத்தின் எல்லைகளைத் தொட முடிகிறது, ஆனால் அதைக் கடக்க முடியவில்லை என நமக்கு அப்போது புரிகிறது. இதன் அடுத்த கட்டமாகத் தான் நாம் தற்கொலைத் திட்டங்களை வகுக்கிறோம். இதுவரையில் பிரச்சனை இல்லை. மரணம் ஒரு மாயை, அப்படி ஒன்றே உலகில் இல்லை என நாம் புரிந்து கொள்வதில்லை. வாழ்க்கை நெருக்கடிகள் அதிகமாகி கழுத்தை நெரிக்கும் போது அதற்கு ஒரு நல்ல தீர்வு மரணம் என இயல்பாகவே நினைக்கத் தொடங்குகிறோம். திட்டங்கள் செயல்திட்டங்களாகி கசப்பாகி சில நேரம் நிறைவேறியும் விடுகின்றன. விஷப்பாம்போடு விளையாடுகிறவனை அது ஒருநாள் கொத்திவிடுவதைப் போன்றது இது.


நான் ஏன் மரணம் ஒரு கற்பனை என்கிறேன்?

நீங்கள் செத்துப் போன யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? யாராவது மரணத்துக்கு அமேசானில், கூகிளில் ரெவ்யூ எழுதிருக்கிறார்களா? மரணம் மட்டுமே நம்மால் அனுபவிக்க முடியாத, அனுபவிக்க ஆரம்பிக்கும் முன்னரே முடிந்து போகும் அனுபவம். அதனாலே அது நிஜத்தில் இல்லை என்கிறேன். பின்னோக்கி யோசித்தால் மரணமே இல்லையெனும் போது வாழ்க்கை மட்டும் இருக்கிறதா? அதுவும் இல்லை தான், ஆனால் அது இருக்கிறதே. எப்படி? அது மரணத்தைபின்னொட்டாகவைத்து உயிர்த்திருக்கிறது. மரணத்தை எடுத்து விட்டால் வாழ்க்கை குப்பையாகி விடும்

இதைப் பற்றிப் பேசும் மார்ட்டின் ஹைடெக்கர் நம் பிறப்பே மரணத்தில் இருந்து தான் என்கிறார். எப்படி நாம் மரணிக்கும் போது அதை அனுபவிப்பதில்லையோ அப்படியே நாம் இந்த பூமியில் ஒரு பிரக்ஞையாக தோன்றும் நொடியும் இருக்கிறது. இதோ பிறக்கிறேன் என முடிவு பண்ணி யாரும் இங்கு பிறப்பதில்லை தானே. ஆக அனுபவிக்க முடியாத அனுபவத்தில் இருந்தே தோன்றும் நாம் ஒருகடனாளியாகவேதோன்றுகிறோம் என்கிறார். இந்த கடனைக் கழிக்கவே நாம் வாழ்நாள் முழுக்க மரணத்தை நோக்கிப் பயணிக்கிறோம். அதை நோக்கி ஒரு பிச்சைக்காரனாக இறைஞ்சுகிறோம். மரணம் வரும் போது, எங்கிருந்து வந்தோமோ - அனுபவிக்க இயலா அனுபவம் - அங்கேயே போகிறோம் என்கிறார் ஹைடெக்கர்


மரணம் ஒரு அழகிய உருவகம் என மட்டுமே ஆகும் போது, அதை அனுபவிக்க எத்தனிப்பதே இவ்வாழ்வின் மகத்தான தேட்டமாக, கடனைக் கழிக்கும் பணியாக ஆகிறது. விளையாட்டு, சிரிப்பு, கேலி கிண்டல், அழிவு விருப்பம், வன்முறை, செக்ஸ், உணவு ருசி, உடற்பயிற்சி, மாரத்தான் ஓட்டம், கலை சார்ந்த ஈடுபாடுகள், மொழி, ஆன்மீகம், அழகியல், இசை, நடனம், கூட்டு செயல்பாடுகள், உடலுழைப்பு, படைப்பாக்கம், எழுத்து என ஒவ்வொன்றுமே இக்கடனை கழிக்கும் வழிகள். (இந்த உடலால் சும்மா இவ்வுலகில் இருப்பதே நம் இருப்பை உணர போதும் என்கிறார் ஹைடெக்கர்.)


 ஆனால் மரணத்தை எதிர்கொள்ளாமல் நம்மைத் தடுப்பது, தொடர்ந்துகடனாளியாகவேவைத்து நம்மை துக்கத்தில் ஆழ்த்துவது இந்த முதலீட்டிய சமூகமே. ஒரு நுகர்வோனாக வாழ்ந்தாலே வாழ்க்கை மகத்தானதாகி விடும் என இது நம்மை திசை திருப்புகிறது. “தொடர்ந்து பணம் ஈட்டு, அதை செலவு செய்என முதலீட்டியம் ஒரு பக்கமும், இணைசேர்ந்து குடும்பத்தை உருவாக்கிடு என சமூகம் இன்னொரு பக்கமும் நம்மை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. மரணத்தை நோக்கி பாயும் நமது இருப்பை உணர விடாது தடுப்பதில் நம் குடும்பத்துக்கு ஒரு பெரும் பங்கு உள்ளது. மரணத்தின் இடத்தில் ஒரு அழகிய உருவகமாக அதுகுழந்தையைக்கொண்டு வருகிறது. ஒரு குழந்தை மட்டும் பிறந்து விட்டு வாழ்க்கைக்கு அர்த்தம் வந்து விடும் என நினைக்கிறோம். ஆனால் பிறந்த சில மாதங்களிலேயே (முலைகுடி நின்றபின்) குழந்தை நம்மிடம் இருந்து விலகி செல்ல ஆரம்பிக்கிறது. அடுத்து குழந்தையை வளர்ப்பது, அதற்கு ஒரு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தித் தருவது எனகடன்பட்ட நெஞ்சத்தைமறக்க முயல்கிறோம். குழந்தை மேலும் மேலும் நம்மை விட்டு தள்ளிப் போகிறது. வயோதிகம் வருகிறது. ‘ஐயோ வாழாமல் போய் விட்டோமே, இனிமேலாவது வாழ வேண்டுமேஎன கிடந்து அடித்துக் கொள்கிறோம். அப்போது ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, மாரடைப்பு என ஒவ்வொன்றாக வந்து நம்மை மீண்டும் பணத்தின் அடிமையாக்குகிறது. எப்படியாவது ஆயுளை நீட்டிக்க வேண்டும் எனும் ஆசை வளர்ந்து உண்மையான வாழ்வை மறந்து போகிறோம். நிறைய வயோதிகர்களின் வாழ்க்கை அதிருப்தியின் உச்சமாக இருப்பது தொடர்ந்து உடல் குறித்த பிரக்ஞையுடன் அச்சத்துடன் வாழ வேண்டி வருவதனால் தான். அதை மறக்க அவர்கள் அடுத்தொரு உருவகத்தைக் கண்டுபிடிக்கிறார்கள் - ‘பேரக் குழந்தை’. அதை வளர்ப்பதில் தம்மை மறந்து மரணப் படுக்கையில் அதன் கையைப் பற்ற நினைத்து அந்த அனுபவிக்க இயலாத அனுபவத்தை தழுவி செத்துப் போகிறார்கள்.


இதை விட மரணத்தை அதன் ரத்தச் சூட்டுடன் அனுதினமும் உணர்கிற வாழ்க்கையை வாழ இயல்பதே ஒரு கொடுப்பினை.


 இதனாலே எப்போதும் கலை மத்திய வர்க்க குடும்பஸ்த வாழ்க்கைக்கு எதிர் திசையில் நிற்கிறது. இதனாலே திருமணம் செய்து கொண்ட கலைஞர்கள் அதில் பொருந்திக் கொள்ளாமலே இருக்கிறார்கள். இதனாலே சமகாலத்தில் நகரங்களில் இளையதலைமுறையினர் திருமணத்தை தொடர்ந்து ஒத்திப் போடுகிறார்கள். இதனாலே ஐரோப்பிய சமூகங்களில் குழந்தைப் பிறப்பு வெகுவாக குறைந்து போய் வயோதிகர்களின் எண்ணிக்கை குறைந்தபடி இருக்கிறது. பின்நவீன காலம் மரணத்துக்கு அணுக்கமாய் சென்று அதனுடன் ஜாக்கிங் செய்ய, சூதாட, அதன் கையைப் பற்றி பப்பில் குதித்து லயிக்க முயல்கிற காலம்.  


இனி ஆரம்பித்த இடத்துக்கே வருகிறேன். நமது உளவியல் மட்டுமல்ல அறிவியலும் கூடத் தான் மரணத்தை தவறாக நமக்கு விளக்கியிருக்கிறது. அறிவியல் இந்த உடலை ஒரு கருவி எனக் கருதும் போதே, அதற்கு பழுது ஏற்பட்டு செயல்பட முடியாமல் நின்று போவதே மரணம் என ஒரு கருதுகோளை அது வைக்கிறது. ஆனால் ஒரு கருவியை நம்மால் உருவாக்க முடிவதைப் போல ஏன் உயிரை உண்டாக்க, உயிரின் துவக்கத்தை, முடிவைஉணர’, ‘அனுபவிக்கமுடியவில்லை எனும் கேள்வியை அது சாமர்த்தியமாக தவிர்க்கிறது. மாறாக வாழ்க்கையை வசதியாக பாதுகாப்பாக அனுபவிக்க தன்னால் உதவ முடியும் என்கிறது.


 அப்படி முடியாது போகும் போது அதை ஒரு நோய்மை எனச் சொல்லிக் கொண்டு நவீன உளவியல் வருகிறது. அது மனிதனின் இயல்பே மகிழ்ச்சியாக இருப்பது என்கிறது. அதற்கான மன அழுத்த மருந்துகளை கண்டுபிடிக்கிறது. அது துக்கத்தை அழிக்கும் இடத்தில் தோன்றுவது வெறுமை எனும் போது மனிதன் வாழும் ஆற்றலையே இழக்கிறான். இந்த மருந்துகளை வைத்து போராடிப் போராடி அலுத்துப் போய் அவநம்பிக்கையில் பலர் தற்கொலை பண்ணுகிறார்கள். ஏனென்றால் தற்கொலை சாத்தியம், தற்கொலை ஒரு உண்மை என நம்ப வைப்பதே நமது அறிவியலும் உளவியலும் தான். ஒரு செல்போனை ஸ்விட்ச் ஆப் பண்ணுவதைப் போல வாழ்வையும் பண்ணலாம் என அது நமக்கு தவறாக சொல்லித் தருகிறது. நிறைய நண்பர்களை உருவக்குவது, சமூக மதிப்பை உற்பத்தி பண்ணுவது, ‘நிறைவானவாழ்க்கையை வாழ்வது மகிழ்ச்சிக்கான ஆதாரம் என அது பொய் சொல்லுகிறது. இது முடியாமல் தன்கடன் சுமையைஎதிர்மறையாய் உணர்கிற மனிதன் குற்றவுணர்வுடன் தற்கொலை பண்ணுகிறான்.


மரணம் என்பதே இல்லை, அது நம்மால் கட்டமைக்கப்படுகிற ஒன்று என அறிவுபூர்வமாய் சொல்லிக் கொள்வதே தற்கொலையை தவிர்ப்பதன் ஒரே சிறந்த வழி.

மரணத்தைக் கொண்டாடுவது தற்கொலைக்கு வழிவகுக்காது. அகோரிகளை பிணங்களுடன் இருக்க, பிணங்களைத் தின்ன நம் கலாச்சாரம் பயிற்றுவித்தது இதனாலே, நெற்றியில் திருநீரை அணிந்துநான் ஒவ்வொரு நொடியும் மரணத்துடன் இருக்கிறேன்என மகிழ்ச்சியுடன் நம்மைப் போன்றோரை அது அறிவிக்கச் சொன்னது இதனாலே.


தொழில்நுட்பத்தின் இடையூறுகள் இன்றி வாழ்க்கையை தடையின்றி வாழ முயல்வதும் நம்மை மரணத்துக்கு வெகு அருகில் இருந்து தீக்காய உதவும். தள்ளிப் போனால் குளிரில் வாடி விடுவோம். ரொம்ப பக்கத்தில் போனால் பொசுங்கிப் போவோம். மரணம் எனும் அந்த அக்னியை வழிபடுவோம். அதில் குளிர்காய்வோம்


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...