ஒரு சிக்கலான அழகிய கவிதை இது - பாதியில் எப்படி அந்த 'இரவு உருவகம்' தலைகீழாக மாறி விடுகிறது என்பதை கவனியுங்கள். ஒரு சாமான்ய கவிஞன் இதை ஒரு தட்டையான சுய-புலம்பல் கவிதையாக எழுதி இருப்பான். ஆனால் மனுஷ் இதை ஒரு நகைமுரண் கொண்ட, இருகூறான கத்தி போன்ற சித்திரமாக மாற்றி இருக்கிறார். அவரது கலைநுட்பம் அப்படி!
எதைத் தொட்டாலும் துலங்குகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாலைப் பொழுதிற்குப் பிறகு
அடுத்த நாள் காலை வந்து விட்டால்
மிகவும் நன்றாக இருக்கும்
இந்த இரவுகள் எனக்கு
வதை முகாம்களாக இருக்கின்றன
இந்த இரவுகளில்
என் இச்சைகளின் பறவைகள்
கூடு திரும்புகின்றன
என் தூக்கமின்மையின் கனல்
பற்றி எரிகிறது
ஒரு குழந்தையைப் போல
நான் ஏமாற்றப்பட்டேன் என்பது
இந்த இரவுகளில்
நினைவுக்கு வந்து விடுகிறது
நியாயமற்ற சூதாட்டங்களில்
என் இதயத்தை பணயம் வைத்தேன்
என்பதை நான் நினைக்காத
இரவுகள் இல்லை
எல்லா இரவுகளும் குடிக்கிறேன்
மனம் கசந்த இந்த வரிகளை எழுதுகிறேன்
உண்மையில் இந்த இரவுகள்
என்னைத் தின்று விட்டன
என் துயரத்தின் ஊற்றுக் கண்கள்
நீண்ட காலமாக
இந்த இரவுகளில் பெருகுகின்றன
மாலையிருந்து
ஒரு சுரங்கப்பாதை வழியாக
இரவை சந்திக்காமலேயே
அடுத்த நாள் காலைக்கு
சென்று விட விரும்புகிறேன்
அப்படியெனில்
என் இரவுகளை என்ன செய்வது?
வேசிகள் களைத்து உறங்க
எனது இரவை எடுத்துக் கொள்ளட்டும்
அல்லது
திருடர்கள் தங்கள் வேட்டையைத் தொடர
இந்த இரவை
பயன்படுத்திக் கொள்ளட்டும்
நான் முழுமையாக தந்து விடுகிறேன்
ஒரு போதும்
வெளிச்சத்தால் தீண்டப்படாத
இந்த கன்னிமையின் இரவுகளை
6.11.2020
இரவு 12.45
மனுஷ்ய புத்திரன்
Comments