முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனுஷ்ய புத்திரனின் கவி ஆளுமை

ஒரு சிக்கலான அழகிய கவிதை இது - பாதியில் எப்படி அந்த 'இரவு உருவகம்' தலைகீழாக மாறி விடுகிறது என்பதை கவனியுங்கள். ஒரு சாமான்ய கவிஞன் இதை ஒரு தட்டையான சுய-புலம்பல் கவிதையாக எழுதி இருப்பான். ஆனால் மனுஷ் இதை ஒரு நகைமுரண் கொண்ட, இருகூறான கத்தி போன்ற சித்திரமாக மாற்றி இருக்கிறார். அவரது கலைநுட்பம் அப்படி!
எதைத் தொட்டாலும் துலங்குகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மாலைப் பொழுதிற்குப் பிறகு
அடுத்த நாள் காலை வந்து விட்டால்
மிகவும் நன்றாக இருக்கும்

இந்த இரவுகள் எனக்கு 
வதை முகாம்களாக இருக்கின்றன

இந்த இரவுகளில்
என் இச்சைகளின் பறவைகள்
கூடு திரும்புகின்றன
என் தூக்கமின்மையின் கனல்
பற்றி எரிகிறது

ஒரு குழந்தையைப் போல
நான் ஏமாற்றப்பட்டேன் என்பது
இந்த இரவுகளில்
நினைவுக்கு வந்து விடுகிறது

நியாயமற்ற சூதாட்டங்களில்
என் இதயத்தை பணயம் வைத்தேன்
என்பதை நான் நினைக்காத
இரவுகள் இல்லை

எல்லா இரவுகளும் குடிக்கிறேன்
மனம் கசந்த இந்த வரிகளை எழுதுகிறேன்

உண்மையில் இந்த இரவுகள்
என்னைத் தின்று விட்டன
என் துயரத்தின் ஊற்றுக் கண்கள்
நீண்ட காலமாக
இந்த இரவுகளில் பெருகுகின்றன

மாலையிருந்து
ஒரு சுரங்கப்பாதை வழியாக
இரவை சந்திக்காமலேயே
அடுத்த நாள் காலைக்கு
சென்று விட விரும்புகிறேன்

அப்படியெனில்
என் இரவுகளை என்ன செய்வது?

வேசிகள் களைத்து உறங்க
எனது இரவை எடுத்துக் கொள்ளட்டும்

அல்லது
திருடர்கள் தங்கள் வேட்டையைத் தொடர
இந்த இரவை
பயன்படுத்திக் கொள்ளட்டும்

நான் முழுமையாக தந்து விடுகிறேன்
ஒரு போதும் 
வெளிச்சத்தால் தீண்டப்படாத
இந்த கன்னிமையின் இரவுகளை

6.11.2020
இரவு 12.45
மனுஷ்ய புத்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...