Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

நீயா நானாவின் “இன்றைய காந்தி”



இன்றைய இளைஞர்களின் சாதித் திமிர் குறித்தநீயா நானாபைப் பார்த்த போது அதன் காந்திய நிலைப்பாடுதான் என்னை ஆச்சரியப்படுத்தியது, ஏமாற்றத்துக்குள்ளாக்கியது - ஒருவேளை நான் பங்கெடுத்திருந்தால் இதை எடுத்துக்காட்டியிருப்பேன்


சாதிகள் இருக்கட்டும், ஆனால் பரஸ்பரம் வெறுக்காமல், ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஒத்திசைவுடன் இருக்கட்டும் என காந்தி வலியுறுத்தினார். அவர் வாழ்ந்த அதே காலத்தில் தான், அம்பேத்கர் சாதி ஒழிய வேண்டும் எனக் கோரினார். அவர் சாதி குறித்த எழுதிய எங்குமே சாதிக்குள் சமத்துவம் பேணலாம் எனச் சொல்லவில்லை, ஏனென்றால் அது ஒரு பாசாங்குப் பேச்சு என அவர் உணர்ந்திருந்தார்.

இவ்விதத்தில், “நீயா நானாவில்சமஸ் ஒரு கச்சிதமான சிறப்பு விருந்தினராக இருந்தார். இந்திய பாரம்பரியத்தின் மையத்தில் உள்ள வைதீக மதத்தின் மீது இருக்கும் புற்றுநோயான சாதியத்தை ஒரு சாதி எதிர்ப்பாளர் இன்னும் நேர்மையாக விமர்சித்து அங்கு பேசியிருப்பார். ஆனால் சமஸ் மேல்சாதிகளின் பதற்றம் எப்படி ஒரு வெறுப்பரசியலாக திரள்கிறது என அங்கே ஒரு கிள்ளலும், இட இதுக்கீடு எப்படி சமூகநீதிக்கு அவசியம் என இங்கே ஒரு விள்ளலுமாகசாதிய சமத்துவத்தைகாந்திய லாஜிக்குடன் பாதுகாத்து அருளாசி கூறினார்.

 எனக்கு இதையெல்லாம் பார்த்த போது எழுந்த கேள்வி சாதியமைப்பை வெறுமனே இனக்குழுக்களின் கூட்டிருப்பாக கருத முடியுமா என்பதே. ஏனென்றால், சாதி என்பதும் இனக்குழு என்பதும் ஒன்றல்ல. இனக்குழு பிற குழுக்களுடன் உறவாடாமல் தனித்து வாழும் ஒன்று. ஆனால் சாதி என்பது ஒரு படிநிலை. படிநிலை இன்றி சாதியில்லை. மனுநீதி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடுகிற அதே படிநிலையைத் தான் இன்றும் பின்பற்றுகிறோம். “நீயா நானாவில்ஒரு சாதிக்காரர் மற்றொரு சாதிக்காரரிடம் கெத்து காட்டும் போது தன்னை மேல் என்று தானே காட்டிக்கொள்ள உத்தேசிக்கிறார் என கோபி கேட்க அதற்கு பதில் சொல்லும் அவர்நாங்க எங்களோட பெருமையைத் தான் காட்டிக்கிறோம், வேறு யாரையும் மட்டம் தட்டலஎன்கிறார். கோபி மீண்டும் மீண்டும்எப்படி மட்டம் தட்டாம உங்க பெருமையை கட்டிக்க முடியும்? எனக் கேட்கிறார். நான் அதையே தான் மொத்த ஷோவையும் நோக்கி கேட்க விரும்பிகிறேன்: “பெருமையும் காட்டாமல், மட்டமும் தட்டாமல் எப்படி சாதிக்குள் இருக்க முடியும்?” முடியாது, ஆனால் அதை வெளியே காட்டி பிரச்சனையை பெரிதுபடுத்தாதீர்கள் என்பதே நீயா நானா அணியின் அரசியலாக இருக்கிறது.


எதார்த்தத்தில் நடப்பது என்ன? சாதிக்கட்சிகளின் தரப்பாக தம்மைக் காட்டிக்கொள்ளும் சில்லுண்டிகள் மட்டுமல்ல, சாதியை மைக்கை பிடித்து முழங்காமல் வாழும் அமைதியான மத்திய வர்க்கத்தினரும் அதே அதிகார அரசியலை தான் நுட்பமாக எடுத்தாள்கிறார்கள். ஒரு தெருவில் நான்கு குடும்பத்தினர் சேர்ந்து பழகும் போது அதற்குள் ஒரு சாதி சார்ந்த வரையறை தோன்றுகிறது, ஒரு அலுவலகத்திலும் இப்படியே நடக்கிறது. சில இடங்களில் சாதிப்பாசம் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இது ஒரு புண். இந்த புண்ணில் சீழ் வந்தால் மட்டும் தான் பிரச்சனை, மற்ற சமயங்களில் புண்ணைத் தடவி பூசை செய்யலாம் என்பதே காந்திய முட்டுக்கொடுத்தல்


அதாவது சாதியமைப்பு அதனளவில் ஆபத்தானதோ அநீதியானதோ அல்ல, சாதித் திமிர், சாதி வன்முறை மட்டுமே தப்பானது என்பது ஒரு மிகப்பெரிய பாசாங்கு. சாதியமைப்புக்குள் இருப்பது ஒரு வைரஸ் தொற்று என்றால், அது ஏற்படுத்தும் கசப்புகளும் வெறுப்பரசியலும் அதன் நோய்க்கூறுகள்


இந்த இளைஞர்கள் ஏன் இப்படி வெளிப்படையாக சாதித்திமிர் காட்டுகிறார்கள் என மேம்போக்காக இதை அலசாமல் இரண்டு கேள்விகளைநீயா நானாஅணி எடுத்தாண்டிருக்க வேண்டும்:


1) பொருளாதார, சமூக வளர்ச்சியால் சாதிப்படிநிலையில் ஒரு நடுக்கம், மறுசீரமைவு நடிக்கும் போதே கலவரங்கள் துவங்கி சாதித்திமிர் அடவாடித்தனங்கள் நிகழ்கின்றன. அதாவது, கீழே இருக்கும் சாதிக்காரர்கள் மேலே வரத் துவங்கும் போதே மேல்சாதிக்காரர்களிடம் இருந்து எதிர்ப்பு ஒரு வன்முறையாக, அகந்தையாக வெளிப்படுகிறது - இதை ஒருவர் லேசாக சுட்டிக்காட்டினார், ஆனால் கோபி பட்டும்படாமல் கடந்து விட்டார். ஆக அமைதி என நாம் கேட்பது சாதி அமைப்புக்குள் பெரிய மாற்றங்கள், நிலைகுலைவுகள் வராமல் இருந்தபடி இருக்க வேண்டும் என்பதே. நாளை தாழ்த்தப்பட்டோர் கூடுதலாக மேலே வர நேர்ந்தால் இதைவிட அதிகமான வெறுப்பரசியல் தோன்றத்தான் செய்யும் - அது (சமஸ் சொல்வதைப் போல) மேல்சாதியினரின் ஒரு தற்காப்பு உத்தி அல்ல, சாதியமைப்பு தன்னை மறுசீரமைப்பு செய்வதற்கான உத்திஇந்த சிக்கலுக்குள் செல்லாததனால் இந்த அத்தியாயம் மேலோட்டமாகி விட்டது. கடைசியில் எல்லாரும் பரஸ்பரம் அறிவுரை சொல்லி சமாதானமாகி விட்டார்கள். ஆனால் வெளியே போய் இப்படியே தான் இருப்பார்கள், வேறு வழியில்லை.


2) சாதிக்கும் மதத்துக்குமான, பாகுபாடுகளுக்கும் இறை எனும் கருத்தாக்கத்துமான தொடர்பைப் பற்றி பேசியிருக்க வேண்டும். ஒரு முழுமுதல் தனி உண்மை என இறைவன் தோன்றிய பின்னரே முழுமுதல் இனம், முழுமுதல் ஆண்ட வர்க்கம், முழுமுதல் சாதி என ஒவ்வொன்றும் அதன் சாயலில் ஏற்படுகிறது. இறைவனைக் கொல்லாமல், அதனுடனே தனிப்பெரும் தகைமை கொண்ட ஒவ்வொரு கருத்துருவையும் கொல்லாமல், சாதியைக் கொல்ல முடியாது. இந்தியாவில் வைதீகக் கடவுளர் சாதியின் ஆன்மாவாக இருக்கிறார்கள் என்றால், மற்ற நாடுகளில் கர்த்தர் அல்லாவும் மக்களை ஏற்றுத்தாழ்வுக்குள் ஆழ்த்துகிறார்கள்; நீட்சே சொன்னதைப் போல தாழ்வுமனப்பான்மையை, குற்றவுணர்வை இந்த உலகியல் வாழ்க்கை மீது ஏற்படுத்தி, அதில் இருந்து மீள நீங்கள் மதத்தைப் பின்பற்ற வேண்டும் என பிரச்சாரம் செய்து ஒரு பெரிய அநீதியான அதிகார அமைப்பை கட்டியெழுப்புகிறார்கள். வைதீக மதத்தினர் இந்த தாழ்வுணர்வை வளர்த்தெடுத்தே இந்தியா முழுக்க அடிமைப்படுத்தினால், கிறித்துவ காலனியவாதிகள் உலகம் முழுக்க கிறுத்துவைக் கொண்டு போய் கறுப்பர்களையும் பிறரையும் தாழ்வுணர்வு கொண்டவர்களாக ஆக்கி இனவாதத்தை முன்னெடுத்தார்கள்; அதற்கு முன்பு வெள்ளையர்கள் தமக்குள்ளே ஏற்பட்ட சமூகப்பிளவுகளை நியாயப்படுத்தவும் கர்த்தரை பயன்படுத்தினார்கள்.

 நீங்கள் வாழ்க்கையை சாராம்சப்படுத்துவதன், essentialize பண்ணுவதன் அரசியலைப் பேசாமல் சாதியை, இனவெறியை பற்றி பேச முடியாது.

இதைத் தொடாமல், ஏதோ வெங்காய் விலையேற்றம் போல இதை ஒரு பேச்சுவார்த்தையில் முடிக்கிறோம் என கையாண்டதே, 90 வருடங்களுக்கு முன்பு காந்தி பேசிய அதே அபத்தமான லாஜிக்கை வைத்து, அம்பேத்கரில் இருந்து பெரியார், அயோத்திதாசர் வரை யாரையும் தொடாமல் இதைப் பேசியதே “நீயா நானா” குழுவினர் செய்த தவறு.


Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...