Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ராஜன் குறையின் “மறுப்புக்கு” ஒரு மறுப்பு



தமிழினி இணையதளத்தில் நான் எழுதிய “இந்து ராஷ்டிரம் குறித்து தெரிதா என்ன சொல்வார்?” எனும் கட்டுரைக்கு ராஜன் குறை ஒரு எதிர்வினையை அதே இணையதளத்தில் இம்மாதம் எழுதியிருக்கிறார். அதை எதிர்வினை, விமர்சனம் எனக் கூறுவது கூட மிகையே - ஒருவித மறுப்பு என்பேன். நான் எதைக் கூறினேன், அவர் எதை மறுத்தார்?

நான் கூறியது:

இந்து ராஷ்டிரத்தின் உருவாக்கம், அதன் செயல்முறை குறித்ததல்ல அக்கட்டுரை. அது இந்துத்துவர்களின் வாதமற்ற வாதங்கள், அவர்களுடைய கோடாபாட்டு நிலைப்பாடுகளில் உள்ள ஒருவித “அ-காலமான” நோக்கு பற்றின விளக்கம். ஏன் இந்துத்துவர்களுடன் தர்க்கபூர்வமாய் விவாதிக்கும் போது நமக்கு அவர்கள் பைத்தியமாகவும் அவர்களுக்கு நாம் துரோகிகளாகவும் தோன்றும்படியாக ஒரு பெரும் பள்ளத்தாக்கு இரு தரப்புக்கும் இடையில் தோன்றுகிறது என இக்கட்டுரை பகடியாய் அலச முயல்கிறது. அதற்கு தெரிதாவின் பார்வையை கடன்வாங்கிக் கொள்கிறது.

ராஜன்குறை சொல்வது:

 என் கட்டுரையில் என்ன பிழை, அது ஏன் தவறு என அலசி நிறுவுவதோ அல்லது வெறுமனே இதுதான் பிரச்சனை என குறிப்பிடுவதோ நியாயமான விமர்சனமாக இருக்கும். ஆனால் ராஜன்குறை இந்த பாணியிலான அலசலால் என்ன பயன் எனக் கேட்கிறார். “பயன்” என்பதை அவர் எப்படி புரிந்து கொள்கிறார் எனத் தெரியவில்லை. இந்துத்துவ கனவை, லட்சிய சிந்தனையை நான் பகுத்தறிவினால் புரிந்து கொள்ள முடியும் என நம்புவில்லை. பின்னமைப்பியல் உளவியல், தெரிதாவின் பார்வை (அதை விமர்சனம் எனக் கூறுவதை தெரிதா ஏற்க மாட்டார்) கொண்டு இதைப் புரிந்து கொள்ள முடியுமா என முயல்கிறேன். அதையும் நான் இங்கு ஆய்வு முறையில் நிறைய மேற்கொள்களுடன் (லக்கான், தெரிதா என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் என விளக்கி, அவர்களின் சொல்லாடல்களுடன்) விரிவாக அலசுவதில்லை; நான் என்னுடைய எந்த கட்டுரைக்கும் ஆய்வு முறைமையை பயன்படுத்துவதில்லை, அது வாசிப்பின் சரளத்தை தடை செய்யும் என்பதால். ராஜன்குறை இதற்குப் பதிலாக ஆட்சியியல், குடியாட்சி குறித்த லட்சியவாத தத்துவ / கோட்பாட்டு சிந்தனைகள், வரலாற்றுவாதம் சார்ந்து இதை எழுதியிருக்க வேண்டும் என்கிறார் அது அவரது முறைமை - குறிப்பாக, ஒவ்வொரு சிந்தனைக் குறுக்கீட்டையும் ஒரு நீண்ட வரலாற்று மரபின் ஒரு கண்ணியாகப் பார்ப்பது. 

அவரது வரலாற்றுவாதத்தில் எனக்குள்ள பிரச்சனை அது ஒரு லட்சியத்தை முன்வைத்து ஒரு படிநிலையை உண்டுபண்ணி, அத்தனை எத்தனங்களும் மனிதன் ஒரு மேலான இடத்தை அடைவதற்காக செய்யப்படுபவை, இந்த வரலாற்று வளர்சிதை மாற்றங்களில் சிலநேரங்களில் பாதகமான விளைவுகளும் ஏற்படும், அவற்றை எப்படி சரி செய்வது என வந்து முடியும். இந்த மானுட-மையவாதத்துடனும் எனக்கு உடன்பாடில்லை. அதனாலே அச்சு எந்திரத்தின் கண்டுபிடிப்பு, எந்திரமயமாக்கல், காலனிய படையெடுப்புகள், நவீன மனித சுயத்தின் உருவாக்கம் என கோவையாக வாசித்து, இன்றுள்ள அரசியல் எதார்த்தத்துக்கு வந்து ஒரு நேர்கோட்டு சித்திரத்தை உண்டு பண்ணுவதை நான் விரும்புவதில்லை. இது வேண்டாம் என்றல்ல, ஆனால் இது மட்டும் போதாது என்கிறேன். ஏனென்றால் இது சுலபத்தில் வரலாற்று மாந்தர்களை கட்டமைத்து, அவர்களை மையத்தில் கொண்ட இயக்கங்களுக்கு ஒரு கதையாடலை உருவாக்கி, நடைமுறை தளத்தில் நிகழும் முரணான, ஒழுங்கின்மையான அதிகார நகர்வுகளுக்கு ஒழுங்குமுறையை, நியாயத்தை அளிக்கும். அவரைப் போல ஒரு சிறந்த அறிவார்ந்த ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதி அதன் மூலம் ஊழல், குடும்ப அரசியல் போன்ற நடைமுறை “ஒழுங்கின்மைகளை” (chaos) நான் நியாயப்படுத்த முயலமாட்டேன். தெளிவான குளத்தில் ஒரு சிறிய கல்லை விட்டெறிவது, அப்போது நிகழும் கலவரத்தை ரசிப்பது, அதன் சிதறலுக்கு ஒரு சிறிய நியாயத்தை உருவாக்குவது மட்டுமே என் இலக்கு. இது “இரைச்சல்” என ராஜகுறை சொன்னால் அது அவரது விருப்பம். ஆனால் அது ஒரு நியாயமான விமர்சனம் என சொல்ல மாட்டேன். நியாயமான விமர்சனம் ஒரு சிந்தனை ஓட்டத்தின் தளத்துக்குள் நின்றே செய்யப்படுவது, தெரிதாவைக் கொண்டு நிகழ்த்தப்படும் சிந்தனையை தெரிதாவை மட்டும் அல்லது அவரை ஒத்த பின்னமைப்பியல் தத்துவ ஞானிகளை வைத்து உரசிப்பார்ப்பது, அலசுவது. முழுக்க வெளியே நின்று பார்த்து ஏன் ஒரு வரலாற்று சித்திரத்தின் அடிப்படையில் சிந்திக்க மாட்டேன் என்கிறாய் என எரிச்சல்படுவதல்ல. இந்த விசயத்தைப் பற்றி மரபார்ந்த முறையில் இப்படித்தான் பேச வேண்டும் என வாய்க்கால் பரப்பை நிறுவுவதல்ல.


மற்றபடி, ராஜன்குறை மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. அவரது சிந்தனைகள், எழுத்துக்கள் முக்கியமானவை. சமூக அரசியல் தளத்தில் அவர் நீதியின் பக்கம் நிற்பவர், எந்த கணத்திலும் துளியும் பிசகாதவர், தத்தளிக்காதவர், ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக பேசுபவர். இந்த “எதிர்வினையால்” அவர் மீதான என் மதிப்பீடு மாறப்போவதில்லை. அவர் இவ்விசயத்தில் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது (ஒரு பக்கம் அது நியாயமல்ல என ஏமாற்றமளித்தாலும்) எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக, ஆழமாக எழுதுவது எப்படி என்பது குறித்து சில படிப்பினைகள் எனக்குக் கிடைத்துள்ளன. அதற்கு அவருக்கு என் நன்றி!

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...