2020 ஒரு சபிக்கப்பட்ட ஆண்டு - எத்தனை எத்தனை பேர்களை தொடர்ந்து இழக்கிறோம். அண்மையில் தமுஎகச மாநிலப்பொறுப்பாளர் கருப்பு கருணா, அடுத்து இப்போது தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார். இவர்கள் நம்முடன் தொடர்ந்து இருந்தால் அடுத்தடுத்த ஆண்டுககள் இன்னும் ஆழமாக அர்த்தம் பொருந்தியதாக இருக்குமே எனும் ஏக்கம் நம்மை ஆட்கொள்கிறது. ஆனால் இது நமது ஏக்கத்தின் அடிப்படையிலான இழப்புணர்வு மட்டுமே, அவர்களின் இன்மையை நியாயப்படுத்த இந்த ஏக்கம் நமக்கு உதவும். அதனாலே இருக்கும் போது ஒருவரைப் பற்றி நினைப்பதை விட இல்லாதபோது கூடுதலாய் நினைக்கிறோம்.
இவர்கள் எங்குமே போய் விடவில்லை என நினைக்கத் தோன்றுகிறது - இன்ன இடத்துக்கு சென்றார்கள் என எந்தவொரு சான்றும் இல்லைதானே. இவர்கள் போகவே இல்லை என நினைக்கத் தோன்றுகிறது. போனார்கள் என்றாலும் போக இடம் வேண்டுமல்லவா? நம் காலவெளியில் அவர்கள் சட்டென நின்று போன ஒரு கார். நம் பயணத்தடங்களின் பக்கத்தில் அந்த தடம் தனியாக பாதியில் உடைந்து போய் தொக்கி நிற்கிறது, அங்கு அவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். நம்மால் புதிர் சுற்றுப்பாதையில் இனி அவர்களின் பக்கத்தில் வர முடியாதபடி அத்தடம் நமக்குப் பின்னால் அணுக முடியாதபடி இருக்கிறது. அந்த வட்டப்பாதை எப்படித் தொடங்குகிறது, அது எங்கு செல்கிறது எனத் தெரியவில்லை என்பதால் நம்மால் அவர்கள் போய் விட்டார்கள் என இரங்க மட்டுமே முடிகிறது, அதை சொல்லும்போதே நமக்குப் பின்னாலே எங்கோ நின்று கொண்டிருக்கிறார்கள் என நமக்கு உள்ளுக்குள் ஒரு விளக்கு எரிந்தபடி இருக்கிறது.

Comments