க்ரியா ராமகிருஷ்ணனுக்கு ஜெ.மோ எழுதியுள்ள அஞ்சலிக் கட்டுரையைப் படித்தேன் - அதை அஞ்சலி எனக் கூற முடியுமா எனத் தெரியவில்லை. ஒருவிதமான ‘மறுவரையறை’ எனச் சொல்லலாம். ‘க்ரியா ராமகிருஷ்ணன் காலவதியாகி மூன்று பத்தாண்டுகள் ஆகின்றன, தொண்ணூறுகளுக்குப் பிறகு ஏற்பட்ட சிறுபத்திரிகை எழுச்சி, புதிய எழுத்து வகைமைகளின் அறிமுகம், இலக்கிய, அரசியல், சமூகப்பண்டாட்டு அலைகளில் அவரது தாக்கம் ஏதுமில்லை’ என நான் என்னுடைய அஞ்சலிக்குறிப்பில் குறிப்பிட்ட கருத்தை ஜெ.மோ இங்கு விரிவாக எழுதியிருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் முற்றுமுழுதாக அவர் க்ரியா ராமகிருஷ்ணனை நியாயமின்றி நிராகரிப்பதில் எனக்கு உவப்பில்லை. அதுவும் நிதி நல்கைகளைப் பெற்று அதற்காகவே நீண்ட காலம் பிரசுரிக்க எடுத்துக் கொண்டவர், அதைக் கடந்த எந்த இலக்கிய ஈடுபாடும், ரசனையும் அற்றவர் என அவர் கூறுவதில் எனக்கு ஒப்பில்லை. நிதிநல்கைகளைப் பெற்று எத்தனையோ மொழியாக்க நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. அது க்ரியா ராமகிருஷ்ணன் மட்டுமே எடுத்த குத்தகை அல்ல. பல பதிப்பகங்கள் வெளிநாட்டு நிதியைப் பெற்று அழகிய நூல்களைக் கொண்டு வந்துள்ளன. அதன் சாதக பாதகங்களைப் பற்றி பேசுமுன் அது ஏன் நிகழ்கிறது என நாம் யோசிக்க வேண்டும்:
1) மொழியாக்க நூல்கள் இங்கு விற்பதில்லை. நேரடியாக எழுதப்படும் புனைவு நூல்களை விட மொழியாக்க நூல்கள் குறைவாகவே அங்கீகரிக்கப்பட்டு கவனம் பெறுகின்றன. ஆனால் மொழியாக்க நூல் ஒன்றை கொண்டு வர நீங்கள் அதிகமாய் உழைக்கவும் பணம் செலவிடவும் வேண்டும்.
2) இங்குள்ள விற்பனைச் சூழலின் போதாமையை வெளிநாட்டு முகவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஒப்பந்தம் போட அவர்கள் கேட்கும் தொகையை கொடுக்க நமக்கு திராணியில்லை.
3) வெளிநாட்டு கலாச்சார அமைப்புகளின் நிதியை வாங்கி பிரசுரிப்பதே சிறந்த நடைமுறை உத்தியாக இருக்கும்போது நம் பதிப்பகங்கள் அதை செய்வதை நான் விமர்சிக்க மாட்டேன். மொழியாக்கங்களின் தரத்தை விமர்சிக்கலாம். ஆனால் நிதி வாங்கினாலே ஏதோ காண்டிராக்ட் எடுத்து ரோடு போடுகிறவன் என்கிற கணக்கில் கரியை பூசுவது நியாயம் அல்ல.
4) தலித், சிறுபான்மை எழுத்து சர்வதேச தளத்தில் ஒரு மதிப்பு ஏற்பட்டால் அதை பயன்படுத்தி இங்கிருந்து அத்தகைய எழுத்துக்களை அந்த சந்தைக்கு கொண்டு சென்றால் என்ன தப்பு? எதுவும் இல்லை. இலக்கிய நோக்கமும் சந்தை நோக்கும் இணையலாம். தப்பில்லை. வெறுமனே க்ரியா ஒரு வணிக ஸ்தாபனம் என ஜெ.மோ முத்திரை குத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.
5) க்ரியாவின் நூல்கள் வேண்டுமென்றே குறைவான எண்ணிக்கையில் பிரசுரிக்கப்பட்டன, அவை தமிழக வாசகர்களுக்கு போய் சேர்வதில் அவருக்கு அக்கறை இருந்ததில்லை என்பது நியாயமான கூற்று அல்ல. க்ரியாவின் நூல்கள் பரவலாக போய் சேர்ந்துள்ளன, அவை விற்பனையில் தொடர்ந்தும் இருந்தும் உள்ளன. 200 பிரதிகளுக்குள் மட்டுமே பதிப்பித்தார் என எந்த தரவின் அடிப்படையில் ஜெ.மோ கூறுகிறார் எனத் தெரியவில்லை. இன்று கணிசமான பதிப்பகங்கள் print on demandஇன் அடிப்படையில் 50 பிரதிகளே ஒவ்வொரு நூலுக்கும் பதிப்பிக்கின்றன. ஏனென்றால் அதுவே பாதுகாப்பான முடிவு. ஆயிரம் பிரதி போட்டாலே எழுத்தாளனுக்கு மரியாதை என சொல்வது நடைமுறை போதமில்லாத பிடிவாதம். அதை செய்யாதவன் இலக்கிய விரோதியும் அல்ல, செய்தவன் சாதனையாளனும் அல்ல.
6) வெளிநாட்டு நிதிகளை வாங்கியதனால் மட்டுமே ராமகிருஷ்ணன் சோரம் போனவர் ஆவதில்லை. மனித உரிமை செயல்பாட்டாளர்களை எந்த துடைப்பத்தால் சங்கிகள் எடுத்து அடிக்கிறார்களோ அதைய் ஜெ.மோவும் இப்போது ராமகிருஷ்ணனுக்காக எடுக்கிறார். “அகண்ட பாரதம்” எனும் லட்சியத்தின் இடத்தில் அவர் நாட்டார் கலையை வைக்கிறார். ஒரே கட்டம் தான், அதில் அவர் வைக்கிற ஆள் தான் வித்தியாசம். - இந்த ‘என்.ஜி.ஓ’ பீதியை, இந்தியா-வெளிநாட்டு கிறித்துவ இயக்கங்கள் எனும் இருமையை ஜெ.மோ ஒருநாள் கடந்து வர வேண்டும்.
7) குறைவான பணத்தில் பதிப்பித்து எந்த வாசகப் பரப்பும் இன்றி சிறுபத்திரிகை பதிப்பாளர்கள் தொண்ணூறுகள் வரை நஷ்டப்பட்டதில் எந்த பெருமையும் இல்லை. நாம் தமிழர்கள் அதை எண்ணி அசிங்கப்பட வேண்டும் என்பதைத் தவிர. வேறு எந்த ஊரிலாவது, மொழியிலாவது “அந்த காலத்தில் நாங்கள் குஷ்டரோகம் வந்து ரொம்ப சிரமப்பட்டோம்” என கற்பனைப் புண்ணைத் தொட்டுக் காட்டி சிலாகிப்பார்களா? லட்சியவாதம் நல்லது தான், ஆனால் புத்தகத்தை விற்பவனை விட விற்க முடியாமல் நட்டப்பட்டவனே உன்னதமானவன் என ஒளிவட்டம் கற்பிப்பது அவசியமில்லாத செயல். மீராவின் அன்னம் பதிப்பகத்தின் சாதனை என்பது பிடிவாதமாய் இலக்கிய பங்களிப்பு செய்ததே, ஆனால் வெற்றிகரமாய் ஒருவர் அதே கட்டத்தில் பதிப்பகம் நடத்த முடிந்திருந்திருந்தால் அவரை ஏன் தூற்ற வேண்டும்? “கோவேறு கழுதைகள்”, “ஆறுமுகம்” ஆகிய நாவல்களை தமிழர்கள் தானே படித்தார்கள், வெள்ளைக்காரர்கள் அல்லவே?
ஜி.நாகராஜன் சாப்பிட வழியில்லாமல் திரிந்த காலத்தில் தான் சு.ரா வசதியாக வாழ்ந்தார். அதனால் சு.ரா கெட்டவராகி விட்டாரா? இல்லையே. ஏழை எழுத்தாளன் மட்டுமே நல்லவன் என்றால் நம் தவறான விசயத்தை முன்னிறுத்துகிறோம் எனப் பொருள். பொருளாதார அழிவை மகத்துவப்படுவதும் ஒரு கற்பனாவாதம். அத்தகைய கற்பிதங்களில் இருந்து நாம் கடந்து வர வேண்டும். சி.சு செல்லப்பா தான் பதிப்பித்த நூல்களை தோளில் சுமந்து சென்றார் என்பதால் பார்சலில் புத்தகம் அனுப்பின பதிப்பாளன் இலக்கிய விரோதியா? “எழுத்து” இதழின் இலக்கிய பங்களிப்பே முக்கியம் அன்றி சி.சு செல்லப்பாவின் பட்டினியோ வறுமையோ அல்ல.
Poverty porn விசயத்தில் ஜெ.மோவுக்கு இருவிதமான அணுகுமுறைகள் உள்ளன:
1) ஒழுக்கக்கேட்டால் நலிந்தவர்களை கண்டித்து சித்தரிப்பார் (ராஜமார்த்தாண்டனைப் போல).
2) ஒழுக்கத்துடன் நலிந்தவர்களை பாராட்டுவார் (மீராவை போல).
இரண்டிலும் “நலிவை” முன்னிறுத்தி அதில் கிளுகிளுப்படைவார். தனது “ஏழாம் உலகம்” போன்ற புனைவுகளில் கூட ஜெ.மோ இதையே பிச்சைக்காரர்களை வைத்து செய்தார். ராமகிருஷ்ணனை அவர் இதே கண்ணோட்டத்திலே “வறுமையில் அழியாத மேற்தட்டு” ஒட்டுண்ணி என வசைபாடுகிறார். ஆனால் துன்புறுகிறவர்களுக்கு மட்டுமே துன்பத்தில் எந்த மகிமையும் இல்லை எனத் தெரியும். கைக்காசை போட்டு புத்தகம் வெளியிட்டு அதனால் துன்பங்களை அனுபவித்தவர்கள் தொடர்ந்து மேலும் பல நட்டங்களை அடைந்தால் பதிப்பு பக்கமே அடுத்து போக மாட்டார்கள். ஜெமோவைப் போல ஓரளவுக்கு வேறு சம்பாத்தியங்கள் மூலம் அந்நட்டத்தை சமனப்படுத்த தெரிந்தவர்கள் மட்டுமே அந்த கடந்த காலத்தை கற்பனாவாத ஒளியில் இன்று குளிர்காய்வார்கள். “சர்வராக நான் என் வாழ்க்கையை ஆரம்பித்தேன்” என ஒரு ஓட்டல் பெருமுதலாளி இன்று பெருமைப்படுவதைப் போன்றே இதுவும். அன்று காசில்லை, எச்சில் இலையைத் தூக்கினீங்க? இன்று அதை செய்ய மாட்டீங்க தானே? உண்மையில் இதில் என்ன பெருமை?
நாம் இங்கு கொண்டாடுகிற பஷீர் தன் புத்தகங்களை தானே பதிப்பித்து விற்று அப்பணத்திலேயே வசதியாக வாழ்ந்தார். “பாத்தும்மாவின் ஆடு” நாவலில் அவர் அப்படியான ஒரு புத்தகத்தை தன் தம்பிக்கு சந்தையில் கொண்டு போய் விற்று பிழைத்துக்கொள்ளுமாறு கொடுத்ததைக் குறிப்பிடுகிறார். அப்படி எனில் பஷீர் இலக்கிய லட்சியவாதம் இல்லாத பிழைப்புவாதியா? அவர் இலக்கியத்துக்காக துன்பப்படாதவரா? உடனே நம் ஆட்கள் பஷீர் இளமையில் பட்ட பாடுகளை, அவர் அனுபவித்த பட்டினியைக் காட்டி அவரை லட்சியபுருஷன் என்பார்கள். ஆனால் பஷீர் இலக்கியத்துக்காக வேண்டுமென்றே பட்டினி கிடந்ததாக எங்குமே கூறவில்லை. வாய்ப்புகள் அமைந்த போது அவர் இலக்கியத்தைக் கொண்டே வசதியாக வாழ்ந்தார். இலக்கிய பிம்பத்தை பயன்படுத்தி தான் சிறையில் பெற்ற அனுகூலங்களை “மதில்கள்” நாவலில் வெளிப்படையாக சொல்கிறார். தஸ்தாவஸ்கி எழுத்தைக் கொண்டு மட்டுமே வாழ்ந்தார். அவர் தான் எழுதப்போகிற நாவல் ஒன்றை பணயம் வைத்தே வட்டிக்கு பணம் வாங்கினார் என்றால் ரஷ்யாவில் பதிப்பு நிலைமை 200 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தை விட நூறு மடங்கு மேல் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அன்றைய ரஷ்ய எழுத்தாளனை விட இன்றைய தமிழ் எழுத்தாளன் ஒப்பீட்டில் பிச்சைக்காரனே. ஒரே கொடுமை நாம் அதைக் காட்டி பெருமைப்படுகிறோம் என்பதே.
மீராவின் ஆவியும் இதைப் படித்து அசிங்கப்படுமே அன்றி பெருமைப்படாது.
இறுதியாக (8), அந்த “கால்திருத்தி” விவகாரம் - சு.ராவின் நாவலில் வரும் அந்த சொல்லின் பொருள் க்ரியா ராமகிருஷ்ணனுக்குப் புரியாதது அவர் மேட்டிமைவாதி என்பதால் அல்ல, சு.ரா அச்சொல்லை பயன்படுத்திய விதத்தினாலே. ஒரு வட்டார வழக்குச் சொல்லை நீங்கள் மரபான உரைநடைக்கு நடுவே கொண்டு வந்தால் குழப்பமே ஏற்படும். இதே வழக்கை சு.ரா ஒரு உரையாடலின் போது ஒரு விவசாயி “அதை கால்திருத்தி விட்டுட்டு போலே” எனக் கூறியதாய் எழுதினால் அது வாய்க்கால் திருத்துவதே என வாசகனால் ஊகிக்க முடியும். உ.தா., எங்கள் ஊர் வழக்கில் அவர்கள் / அவங்க என்பதை “அவிய” என ஒரு பகுதி மக்கள் சொல்வார்கள். நான் ஒரு நாவலின் நடுவே ஒரு வாக்கியத்தில் “நான் ஊரின் மையத்தை சென்றடைந்து விட்டபின் ஒரு மகிழுந்து அமர்த்தி விட்டு ‘அவியளை’ பார்க்க சென்றேன்” என எழுதினால் யாருக்கும் குழப்பமே ஏற்படும். “காரைப் பிடிச்சிட்டு அவியளைப் பார்க்கப் போனேன்” என்றால் சுலபத்தில் புரிந்து போகும். சு.ரா “கால் திருத்தி” எனும் வட்டார வழக்குச்சொல்லை அதன் கவித்துவத்துக்காக மற்ற சொற்களுடன் கலந்து பயன்படுத்தி இருக்கலாம், ஆனால் அது ஏற்படுத்தும் குழப்பமானது குமரிமாவட்ட வாசகனுக்கும் வரக் கூடியதே.
ஜெ.மோ சொல்வதைப் போல க்ரியா ராமகிருஷ்ணன் விசயத்தில் மிகையான அஞ்சலிகள் இங்கு எழுதப்பட்டது, எல்லாரும் ஒட்டுமொத்தமாக அவரை தேனாலும் பாலாலும் குளிப்பாட்டியது உண்மையே. ஆனால் அதற்கு ஈடான மிகையான வசைபாடலிலும் ஜெ.மோ ஈடுபடலாகாது அல்லவா?
Comments