நிலைகள் குறித்த ஒரு விசாரணை
இந்த (முதல்) அத்தியாயத்தில் நாகார்ஜுனர் காரணங்களின் சாரமின்மை பற்றி விவாதிக்கிறார். ஏன் காரணங்கள்? உலகம் குறித்த, இருப்பு குறித்த கற்பிதங்கள் பொதுவாக அவற்றை சாராம்சப்படுத்துவதால் விளைகின்றன. அதற்கு கருவியாக இருப்பவை காரணங்கள். காரணமில்லாமல் என்ன உண்டு என நீங்கள் யோசிக்கலாம். நீங்கள் இதைப் படிப்பதற்கு, நான் இதை எழுதுவதற்குக் கூட ஏதோ ஒரு காரணம் உண்டில்லையா? ஆனால் இக்காரணங்கள் தம்மளவில் முதல்முழுமையானவை அல்ல; பல துணைக்காரணங்கள், சங்கதிகள், பௌதீக காரணிகள், புலனுணர்வு என பல விசயங்கள் தொடர்ந்து இக்காரணங்கள் செயல்பட உதவுகின்றன. இவையும் கூட பல துணை சங்கதிகளை சார்ந்திருக்கின்றன. இப்படி இது பின்னுக்கு சென்று கொண்டே இருக்கின்றன. எதற்கும் சாராம்சமான காரணமிருக்க முடியும் எனும் நம்பிக்கையே பொதுவாக நம்மை செலுத்துகிறது. அது பல துயரங்களுக்கு, பிரமைகளுக்கு, மதவாதம், கடவுள் போன்ற கருத்துக்களுக்கு, இனவாத, சாதிய, பாலின பாகுபாடுகளுக்கு, இறையாண்மை போன்ற அரசியல் கட்டமைப்புகளுக்கு, அவற்றினால் விளையும் அரச வன்முறை, அதிகார குவிப்பு ஆகியவற்றுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. முதலீட்டிய பொருளாதாரத்தில் பணம் சாராம்சப்படுத்தப்படுவதால் வறுமை தோற்றுவிக்கப்பட்டு பெரும்பகுதி மக்கள் வாடுகிறார்கள். ஆகையால் நாகார்ஜுனர் காரணங்களை போட்டு மிதித்தபடி தன் புத்தகத்தை ஆரம்பிக்கிறார். அத்துடன் காரணங்களின் இடத்தில் சாராம்சமற்ற நிலைகளை பரிந்துரைக்கிறார்.
1. Neither from itself nor from another,
Nor from both
North without a cause,
Does anything whatever, anywhere arise.
“தன்னில் இருந்தோ மற்றொன்றில் இருந்தோ
இரண்டிலும் இருந்தோ
அல்லது காரணமே இன்றியோ
எதுவும் எங்கும் தோன்றுவதில்லை.”
இந்த எளிமையான பாடலுக்குள் சுருக்கமாக நாகார்ஜுனர் தன் காலத்தில் ஒரு விசயம் எப்படித் தோன்றுகிறது என்பதற்கு பரவலாக நம்பப்பட்ட காரணங்கள் குறித்த சில கருத்துக்களை மறுக்கிறார். இவை நான்கு:
அ) ஒரு விசயம் சுயமாக தன்னியல்பாகத் தோன்றுகிறது.
உங்கள் வீட்டுப் பக்கத்தில் ஒரு குடிகாரன் இருக்கிறான். தினமும் முழுபோதையில் ரோட்டில் கிடந்து சலம்புகிறான். அவன் இயல்பிலேயே போதை பேர்வழி, கெட்டவர், அறிவில்லாதவன், பண்பில்லாதவன் அதனால் அப்படி இருக்கிறான் என சிலர் சொல்லுவார்கள்.
ஆ) மேலும் சிலர், இல்லை அவனுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட சில ஏமாற்றங்கள் அவனை அப்படி குடியை நோக்கித் தள்ளி விட்டது. மற்றபடி இயல்பில் அவன் நம்மைப் போன்றவன் தான் என சொல்கிறார்கள். இது இரண்டாவது கருத்து - அதாவது ஒரு விசயம் மற்றொன்றினால் தோன்றுகிறது.
இ) அப்போது இதைக் கேட்டுக் கொண்டிருந்த “மையமான” சிலர் இல்லை, நீங்கள் ரெண்டு பேர் சொல்வதிலும் நியாயம் உள்ளது. அதே நேரம் இரண்டு கருத்துக்களையும் அதனளவில் தனியாக ஏற்றுக் கொள்ள முடியாது. யாரும் தன்னியல்பில் எதுவாகவும் ஆவதில்லை, ஏனென்றால் அவன் பிறக்கும்போதே குடிக்கவில்லை இல்லையா? அதே போல வெளியில் இருந்து ஒன்று தூண்டுவதால் மட்டுமே ஒருவன் குடிகாரன் ஆவதில்லை. ஏமாற்றங்கள் எல்லாருக்கும் தான் உள்ளன, நாமெல்லாம் இவனைப் போல ஆகவில்லை தானே? ஆனால் அதேவேளை இந்த இரண்டு கருத்துக்களும் இணைந்து வரும் போது அது சரியாக இருக்கிறது என பஞ்சாயத்துக்கு ஒரு முடிவு சொல்லுகிறார்கள். இது மூன்றாவது கருத்து.
ஈ) இப்படி பஞ்சாயத்து முடிந்த நிலையில் அங்கு வரும் ஒருவன் “நீங்க சொல்வது தவறு. எல்லா விசயங்களும் தற்செயலாகவே நிகழ்கின்றன, காரணங்களை நீங்களே கற்பிக்கிறீர்கள். எந்த தூண்டுதலும் நோக்கமும் இன்றி ஒன்று அப்படியே ஏற்படுவதுதான் நிஜம்” என குழப்புகிறான். இதுவே நான்காவது கருத்து. அதிர்ஷ்டம் பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோமே அது இந்த தற்செயல் வாதம் தான். ஒருவன் உழைத்தோ திருடியோ பெரும் பணக்காரன் ஆகிறான். நாம் “அவனுக்கு செம அதிர்ஷ்டம், எப்படியோ அவனுக்குப் பார்த்து எல்லாம் சரியாக அமைந்து விட்டது” என்போம். ஒரு விபத்து ஏற்படும் போது, அதற்கு நாமே காரணமாக இருக்கும் போது, அதன் பாட்டுக்கு நடந்து விட்டது எனச் சொல்லவே விரும்புவோம். காதல் ஒரு மேஜிக் என நம்புகிறவர்கள் “அவளைப் பார்த்ததுமே எனக்குள் எதுவோ நிகழ்ந்தது. அப்படியே விழுந்து விட்டேன்” என்பார்கள். இதையும் நாகார்ஜுனர் ஏற்பதில்லை.

Comments