3.
The essence of entities
Is not present in the conditions, etc...
If there is no essence,
There can be no otherness-essence.
“உள்ளதான விசயங்களின் சாரம்
நிலைகளில் இருப்பதில்லை, இது போல இன்னும் பல....
எந்த சாரமும் இல்லையெனில்,
பிறிதின்-சாரமே இருக்க முடியாது.”
ஒரு பொருளில் சாரமில்லை என்றால் அது உருவாகக் காரணமான அதன் நிலையில் இருக்கலாம் இல்லையா? ஒரு கோப்பை தேநீரில் ஒரு கரண்டி சர்க்கரை சேர்த்தால் அது இனிக்கிறது. இப்போது சர்க்கரையை சேர்ப்பதான செயலூக்க நிலை அதை இனிப்பான காப்பியாக்குகிறது. இந்த இடத்தில் நாகார்ஜுனரின் எதிர்முகாமை சேர்ந்த சிந்தனையாளர்கள் ஒரு மாற்றுப்பார்வையை வைக்கிறார்கள் - சாரம் என்பது இருக்கின்ற பொருளில் இல்லை, ஆனால் அதை ஏற்படுத்துகிற நிலையில் சாரம் இருக்கிறது. மற்றொரு உதாரணத்தை தருவதானால் பிரம்மத்தை எடுத்துக் கொள்ளலாம். பிரம்மம் முதல்முழுதானது, தனியானது, சாரமானது, அழிவற்றது. பிரம்மத்தை இவ்வாழ்வில் நாம் உணர முடியும் என அத்வைதிகள் கூறுவார்கள். அப்போது வாழ்க்கை ஆன்மீக ஒளி பொருந்தியதாக மகத்தானதாகிறது. இவ்வாழ்க்கையில் இறை ஒளி அதன் சாரமாக இல்லாமல் இருக்கலாம்; தற்காலிமான ஒரு வெளிச்சமாக அது இருக்கலாம்; வாழ்தலில் இருத்தலில் மட்டும் இருக்கலாம், ஆனால் அந்த மனிதனில் இல்லாமல் இருக்கலாம். இந்த விளக்கத்தின் முடிவில் அவர்கள் பிரம்மம் சாரமானது, ஆனால் மனிதன் சாரமற்றவன் என சொல்வார்கள். இதை நாகார்ஜுனர் ஏற்கவில்லை. “கரகாட்டக்காரனில்” அந்த ஓட்டைக்காரை தள்ளிக் கொண்டு போகையில் ஒரு கெத்துக்காக, கிளுகிளுப்பாக, ஆறுதலுக்காக கவுண்டமணி அந்த காரை முன்பு நடிகை சொப்பன சுந்தரி வைத்திருந்ததாய் சொல்வார். இது ஓட்டைக்கார் தான், ஆனால் ஒரு காலத்தில் இதன் நிலை வேறு, அந்த பழங்கால பெருமை இதற்கு ஒரு சிறப்பளிக்கிறது எனும் வாதம் அவருடையது. ஆனால் என்னதான் சொப்பனசுந்தரியுடையது என்றாலும் அது ஓட்டைக் கார் தான். அழகான பளபளப்பான ஓடுகிற கார் ஆகாது. அதே போலத்தான் பிரம்மம் சாரமானது, ஆனால் மனிதன் அப்படி அல்ல என்பதும் இப்படி ஒன்று உருவாக காரணமான மற்றொன்றுக்கு சாரத்தைக் கொடுக்கிற ஒரு தவறான தந்திரம்.
இதை நாகார்ஜுனர் இப்படித்தான் தவறென நிரூபிக்கிறார் - எப்படி காரை விற்றவரின் சாரம் காரில் இருப்பதில்லையோ (காரை உருவாக்கியவரின், விற்றவரின் சாரமும் கூடத்தான்) அப்படியே கடவுள் நிலையை அடைகிற ஒருவரின் வாழ்வில் கடவுள் இருக்கிறார் என்றால் அது சாரம் கொண்டதாகவே இருந்தாக வேண்டும். சாரமான ஒன்று சாரமற்ற ஒன்றின் பகுதியாகவோ அதை ஏற்படுத்தவோ முடியாது. ஒரு மனிதன் கடவுள் நிலைக்கு செல்கிறானெனில், அவனுக்கு அகத்திறப்பு நிகழ்ந்து மகத்தானவனாக உருமாறுகிறான் என்றால் கடவுளும் அவனைப் போன்றே சாரமற்றவராக ஆக வேண்டியது தான்.
அடுத்து வரிகள் இன்னும் முக்கியமானவை. ஒரு விசயம் தோன்றுவதற்கு பல நிலைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் (அ) அந்நிலைகளும் தம்மளவில் சாரமற்றவை, அவற்றை பல உபநிலைகள் தோற்றுவிப்பதால் அவை சார்ந்திருக்கின்றன என நாகார்ஜுனர் சொல்கிறார். அடுத்து, அவர் இந்த நிலைகளின் வித்தியாசங்களுக்கு வருகிறார். காப்பி கசக்கிறது, ஆனால் சர்க்கரை இனிக்கிறது. இனிப்பே சர்க்கரையின் வித்தியாசம். இது தனித்துவமானது, சாரமானது என சிலர் கருதலாம். ஆனால் இந்த வித்தியாசமே அது பிற சங்கதிகளை நம்பியிருப்பதாலே நிகழ்கிறது என நாகார்ஜுனர் சொல்கிறார். முதலில் மற்றமை மற்றமையாக இருக்க அந்த பொருளுக்கு ஒரு தனித்துவம் இருக்க வேண்டும்; ஆனால் மற்றொன்றை சார்ந்திருக்கும் எதற்கும் சாரம் இருக்க முடியாது. (ஆ) தனித்துவம் சாரமில்லாததாகும் போது வித்தியாசமும் சாரமற்றதாகிறது. அடுத்து, மற்றமை அதற்கான நான்கு நிலைகளில் சிலவற்றையாவது காரணிகளாகக் கொண்டிருக்க வேண்டும் (சர்க்கரை பயன்படுத்தப்படும் செயலூக்கம், சர்க்கரையின் வேதியல் அமைப்பு, அதை கலக்க வேண்டும் எனும் முதன்மை நிலை இப்படி பல). இந்த நிலைகளும் வேறு பல நிலைகளை நம்பியிருந்தாக வேண்டும். ஆகையால் (ஆ) இந்த வித்தியாசம் கூட சாராம்சமானது அல்ல என நாகார்ஜுனர் கருதுகிறார்.
ஒரு விசயத்தின் வித்தியாசமானது சாரமானது என்பது நமது சாதியமைப்பின் அச்சாணியாக இருக்கும் கருத்து என்பதை கவனிக்க வேண்டும். இந்த வித்தியாசம் கற்பிதம் என்பதை நாகார்ஜுனர் இங்கு நிரூபிப்பது முக்கியமானது.

Comments