Skip to main content

எழுத்தில் பிரச்சனை என்றால் சக-எழுத்தாளர்களிடம் அறிவுரை கேட்கலாமா?



பேரிஸ் ரெய்வூவின் Writers at Work தொடரில் வரும் ஒரு பேட்டி எழுத்தாளர் கேரியுடனானது. அதில் அவரிடம் நீங்கள் உங்கள் சக எழுத்தாளர்களுடன் பேசி உங்கள் படைப்பில் உள்ள டெக்னிக்கலான பிரச்சனைகளை சரி செய்ய முயன்றதுண்டா எனக் கேட்கிறார்கள். அதற்கு கேரி சொல்லும் பதில் கூர்மையானது: “உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்கள் மட்டுமே தேர்வு காண முடியும், எழுதும் அனுபவம் வழியாக”.


அவர் இதை சொல்வதற்கு ஒரு முக்கிய காரணம் ஒரு நாவலின் அல்லது சிறுகதையின் தொழில்நுட்ப பிரச்சனையானது அதனுடைய குறிப்பிட்ட வடிவம் சார்ந்ததாகவே இருக்கும். அதை விலகி நின்று பார்த்து உணரும் திறன் இல்லாத போது நாம் அதற்குள்ளே மாட்டிக் கொள்வோம். எப்படி எழுதினாலும் கதை சரியாக வராது, எதோ ஒன்று அதை ஜீவனற்றதாக மாற்றும். அப்போது உங்களுக்கு அதைப் பற்றி ஒரு சக படைப்பாளியிடம் அரற்றுவதற்கு சபலம் வரும். அவரிடம் நீங்கள் உங்கள் நாவலின் / கதையின் ஒற்றை வரியை, நீங்கள் சொல்ல நினைப்பதை மட்டுமே சொல்ல முடியும். நீங்கள் எழுதிக் கொண்டிருக்கிற பிரதியின் இறுதி வடிவத்தைக் காணாமல் அவரால் உருப்படியாக எந்த அறிவுரையும் தர இயலாது. மாறாக உங்கள் புனைவின் களமோ, உணர்வுநிலையோ அவருக்கு ஈர்ப்பாய் இல்லையென்றால் உங்களை அவநம்பிக்கை ஏற்படும் விதமாய் (வேண்டுமென்றே அல்ல) பேசி விடவும் வாய்ப்புண்டு. அப்படியே நீங்கள் படைப்பை முடித்த பின் கரட்டுப் பிரதியை அவரிடம் கொடுத்து கருத்துக் கேட்டாலும் அதிலுள்ள பிரதானமான பிரச்சனையை அவரால் ஒருவேளை சுட்டிக் காட்ட முடியுமே ஒழிய தீர்வு சொல்ல முடியாது. அதனால் தான் கேரி ஒரு எழுத்தாளன் எழுதி மட்டுமே தன் எழுத்திலுள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும் என்கிறார். ஏனென்றால் ஒவ்வொரு படைப்பின் சிக்கலும் உங்கள் அகச்செயல்பாட்டோடு, அதை எழுதுகிற போது நீங்கள் வாழ்கிற வாழ்வினோடு, உங்கள் வாசிப்பு, வாழ்க்கைப் புரிதல்கள், செண்டிமெண்டுகள், உங்களுக்கே உரித்தான முட்டாள்தனங்களுடன் சம்மந்தப்பட்டது. ஒருவேளை உங்களுக்கு ஒரு தனிப்பட்ட மனத்தடைக்கும் உங்கள் நாவலின் வடிவத்தில் உள்ள சிக்கலுக்கும் ஒரு தொடர்பு இருக்கலாம். ஆகையால் நீங்களே தான் அதனோடு முட்டி மோதி சிடுக்கை அவிழ்க்க வேண்டும். அது உங்களுக்கு முக்கியமான படிப்பினைகளைத் தரும்.


இன்னொரு விசயம்: ஒவ்வொரு எழுத்தாளனும் தன் நாவலை / கதையை ஆரம்பித்து வளர்த்தெடுக்கிற பாணி தனித்துவமானது. சிலர் ஒரு உருவகத்தை வைத்து, சிலர் ஒரு அனுபவத்தை, ஒரு உணர்வெழுச்சியை மனத்தில் வைத்து, வேறு சிலர் ஒரு கருத்தை புனைவாக்கும் நோக்கில் அதை உள்முரணாக எடுத்தாண்டு, இன்னும் சிலர் பாதியில் இருந்து கதையை ஆரம்பித்து தன் போக்கில் எழுதுவார்கள்.சிலர் முழு கதைக்களனையும் துல்லியமாக திட்டமிட்டு - கொத்தனார் வீட்டை செங்கல் செங்கல்லாக வைத்து கட்டியெழுப்புவதைப் போல - செய்வார்கள். இப்படி கதையை அமைப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறதென்றால் அது நீங்கள் கதையை சொல்ல விரும்பும் பாணியில், அதற்கு பயன்படுத்தும் முறைமையில் தோன்றும் ஒரு ஆதாரப் பிரச்சனையாக இருக்கும். இதை இன்னொரு எழுத்தாளனிடம் விவாதிப்பதோ உங்களுக்குள் நீங்களே நினைத்து புலம்புவதாலோ கனவு காண்பதாலோ சரி செய்ய முடியாது. எழுத்துக்களத்தில் குதித்து நீங்களே அந்த துள்ளிப் பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளிப்பட்டு அழிச்சாட்டியம் பண்ணும் ‘புனைவை’ பிடிமாடாக்க வேண்டும். சிலமுறை விழுவீர்கள், அவநம்பிக்கை தோன்றும், ஆனால் விடாமல் முயன்றால் உங்கள் பிடிக்கு அது மாட்டி விடும். அதன் பிறகு அடுத்தடுத்த படைப்புகள் சுலபமாகும்.


அதனால் தான் (வாசித்தோ விவாதித்தோ அல்ல), எழுதித் தான் எழுத்தை கற்றுக் கொள்ள முடியும் என்கிறார்கள்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...