பேரிஸ் ரெய்வூவின் Writers at Work தொடரில் வரும் ஒரு பேட்டி எழுத்தாளர் கேரியுடனானது. அதில் அவரிடம் நீங்கள் உங்கள் சக எழுத்தாளர்களுடன் பேசி உங்கள் படைப்பில் உள்ள டெக்னிக்கலான பிரச்சனைகளை சரி செய்ய முயன்றதுண்டா எனக் கேட்கிறார்கள். அதற்கு கேரி சொல்லும் பதில் கூர்மையானது: “உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்கள் மட்டுமே தேர்வு காண முடியும், எழுதும் அனுபவம் வழியாக”.
அவர் இதை சொல்வதற்கு ஒரு முக்கிய காரணம் ஒரு நாவலின் அல்லது சிறுகதையின் தொழில்நுட்ப பிரச்சனையானது அதனுடைய குறிப்பிட்ட வடிவம் சார்ந்ததாகவே இருக்கும். அதை விலகி நின்று பார்த்து உணரும் திறன் இல்லாத போது நாம் அதற்குள்ளே மாட்டிக் கொள்வோம். எப்படி எழுதினாலும் கதை சரியாக வராது, எதோ ஒன்று அதை ஜீவனற்றதாக மாற்றும். அப்போது உங்களுக்கு அதைப் பற்றி ஒரு சக படைப்பாளியிடம் அரற்றுவதற்கு சபலம் வரும். அவரிடம் நீங்கள் உங்கள் நாவலின் / கதையின் ஒற்றை வரியை, நீங்கள் சொல்ல நினைப்பதை மட்டுமே சொல்ல முடியும். நீங்கள் எழுதிக் கொண்டிருக்கிற பிரதியின் இறுதி வடிவத்தைக் காணாமல் அவரால் உருப்படியாக எந்த அறிவுரையும் தர இயலாது. மாறாக உங்கள் புனைவின் களமோ, உணர்வுநிலையோ அவருக்கு ஈர்ப்பாய் இல்லையென்றால் உங்களை அவநம்பிக்கை ஏற்படும் விதமாய் (வேண்டுமென்றே அல்ல) பேசி விடவும் வாய்ப்புண்டு. அப்படியே நீங்கள் படைப்பை முடித்த பின் கரட்டுப் பிரதியை அவரிடம் கொடுத்து கருத்துக் கேட்டாலும் அதிலுள்ள பிரதானமான பிரச்சனையை அவரால் ஒருவேளை சுட்டிக் காட்ட முடியுமே ஒழிய தீர்வு சொல்ல முடியாது. அதனால் தான் கேரி ஒரு எழுத்தாளன் எழுதி மட்டுமே தன் எழுத்திலுள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும் என்கிறார். ஏனென்றால் ஒவ்வொரு படைப்பின் சிக்கலும் உங்கள் அகச்செயல்பாட்டோடு, அதை எழுதுகிற போது நீங்கள் வாழ்கிற வாழ்வினோடு, உங்கள் வாசிப்பு, வாழ்க்கைப் புரிதல்கள், செண்டிமெண்டுகள், உங்களுக்கே உரித்தான முட்டாள்தனங்களுடன் சம்மந்தப்பட்டது. ஒருவேளை உங்களுக்கு ஒரு தனிப்பட்ட மனத்தடைக்கும் உங்கள் நாவலின் வடிவத்தில் உள்ள சிக்கலுக்கும் ஒரு தொடர்பு இருக்கலாம். ஆகையால் நீங்களே தான் அதனோடு முட்டி மோதி சிடுக்கை அவிழ்க்க வேண்டும். அது உங்களுக்கு முக்கியமான படிப்பினைகளைத் தரும்.
இன்னொரு விசயம்: ஒவ்வொரு எழுத்தாளனும் தன் நாவலை / கதையை ஆரம்பித்து வளர்த்தெடுக்கிற பாணி தனித்துவமானது. சிலர் ஒரு உருவகத்தை வைத்து, சிலர் ஒரு அனுபவத்தை, ஒரு உணர்வெழுச்சியை மனத்தில் வைத்து, வேறு சிலர் ஒரு கருத்தை புனைவாக்கும் நோக்கில் அதை உள்முரணாக எடுத்தாண்டு, இன்னும் சிலர் பாதியில் இருந்து கதையை ஆரம்பித்து தன் போக்கில் எழுதுவார்கள்.சிலர் முழு கதைக்களனையும் துல்லியமாக திட்டமிட்டு - கொத்தனார் வீட்டை செங்கல் செங்கல்லாக வைத்து கட்டியெழுப்புவதைப் போல - செய்வார்கள். இப்படி கதையை அமைப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறதென்றால் அது நீங்கள் கதையை சொல்ல விரும்பும் பாணியில், அதற்கு பயன்படுத்தும் முறைமையில் தோன்றும் ஒரு ஆதாரப் பிரச்சனையாக இருக்கும். இதை இன்னொரு எழுத்தாளனிடம் விவாதிப்பதோ உங்களுக்குள் நீங்களே நினைத்து புலம்புவதாலோ கனவு காண்பதாலோ சரி செய்ய முடியாது. எழுத்துக்களத்தில் குதித்து நீங்களே அந்த துள்ளிப் பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளிப்பட்டு அழிச்சாட்டியம் பண்ணும் ‘புனைவை’ பிடிமாடாக்க வேண்டும். சிலமுறை விழுவீர்கள், அவநம்பிக்கை தோன்றும், ஆனால் விடாமல் முயன்றால் உங்கள் பிடிக்கு அது மாட்டி விடும். அதன் பிறகு அடுத்தடுத்த படைப்புகள் சுலபமாகும்.
அதனால் தான் (வாசித்தோ விவாதித்தோ அல்ல), எழுதித் தான் எழுத்தை கற்றுக் கொள்ள முடியும் என்கிறார்கள்.

Comments