ஒரு போராட்டத்துக்கு, பேரணிக்கு அரசு அனுமதி தருகிறது, அரசு பணிந்து போகிறது, காவலர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்றால் போராளிகள் அங்கே சுதாரித்துக் கொள்ள வேண்டும். நாம் இதை ஜல்லிக்கட்டின் போது பார்த்தோம். அதுவே வேளாண் போராட்டங்களின் போது மீண்டும் நிகழ்கிறது. தில்லிக்கு முன்னேறி சென்று பேரணி நடத்துவதே ஒரு மோசமான திட்டம் தான். அதுவும் அப்பேரணியை போலிசார் தடுக்காமல் தள்ளி நின்று, போராளிகளில் சிலர் சீக்கிய கொடியை ஏற்ற விட்டு விட்டு, ஏற்கனவே இப்படித்தான் திரைக்கதை இருக்கும் என தெரிந்து கொண்டு தலைப்புகளுடன், வசனங்களுடன் தயாராக இருந்த டைம்ஸ் நவ் போன்ற சேனல்களின் துணையுடன் விவசாயிகளை கலவரக்காரர்களாக சித்தரித்து இப்போது போலீசை வைத்து அடித்து நொறுக்குகிறார்கள். புலியை வேட்டையாட ஆட்டை கட்டி வைத்து வேட்டைக்காரன் காத்திருப்பது போல ஜியின் அரசு குடியரசு தினத்தன்று காத்திருந்து தன் வேட்டையை நிகழ்த்தி விட்டது.
செங்கோட்டைக்கு சீக்கிய கொடியுடன் அல்ல, தேசியக் கொடியுடன் சென்றிருக்க வேண்டும். தலைநகரம் முழுக்க விவசாயிகள் தேசியக் கொடியுடன் அணிவகுத்து அதை கம்பத்தில் ஏற்றியிருந்தால் அரசு திகைத்து போயிருக்கும்.
காந்தியின் போராட்ட முறையில் விவசாயிகள் கற்றுக் கொள்ள இரண்டு முக்கிய பாடங்கள் உண்டு:
1) எந்த போராட்டத்தையும் பேச்சுவார்த்தை, பேரம் ஆகியவற்றைத் தாண்டி கொண்டு செல்லக் கூடாது. கோரிக்கையை ஏற்க வைப்பதல்ல, குரலைக் கேட்க வைப்பதே ஒரு போராட்டத்தின் இலக்கு. ஒரு கட்டத்தில் விவசாயிகள் அரசின் உத்தரவாதத்தை ஏற்று பின்வாங்கியிருக்க வேண்டும். அது அடுத்து மீண்டும் ஒரு தேவை வரும் போது திரண்டு போராட அவர்களுக்கு ஆற்றலைத் தரும். எந்த அரசையும் முழுமையாக உங்களால் மண்டியிட வைக்க முடியாது. இப்போதைக்கு தற்காலிகமாய் சட்டங்களை பின்வாங்குவது போதும் என விவசாயிகள் நினைத்திருந்தால் இப்போராட்டம் பெரும் வெற்றி பெற்றிருக்கும்.
2) அரசும் காவல்துறையும் வாய்ப்பளித்தாலும், தூண்டினாலும் போராளிகள் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது. ஏனென்றால் ஆங்கிலேயர் இங்கு ஆண்ட போதும் வன்முறையானது இறையாண்மையின் உரிமை மட்டும் தான். இப்போதும் அப்படித்தான். வன்முறையை போராளிகள் கையில் எடுக்கும் போது அவர்கள் இறையாண்மையின் விரோதிகளாக சித்தரிக்கப்பட்டு கொடூரமாய் நசுக்கப்படுவது அரசுக்கு சுலபமாகும். இனி விவசாயிகள் போலிசாரை நோக்கி லத்தி வீசுகிற காட்சிகளை மீண்டும் மீண்டும் காட்டி போலீஸ் வன்முறையை இந்த அரசு நியாயப்படுத்தும். விவசாயிகளின் தார்மீக உரிமை மீது நிரந்தரமாய் கரியைப் பூசும்.
எதிர்கால போராட்டங்கள் காந்தியின் இந்த அடிப்படை நெறிகளைப் பின்பற்றி நிகழட்டும். அடி எப்போதும் போராளிகள் மீது விழ வேண்டும். ரத்தத்தை எப்போதும் போராளிகளே சிந்த வேண்டும். திரும்ப அல்ல. சமரசத்துக்கு தயாராக இருக்க வேண்டும். நிரந்தர வெற்றியை விட தற்காலிக வெற்றிகளை இலக்காக்கி கொள்ள வேண்டும். மக்களின் நன்மதிப்பை இழக்காமல் போராட வேண்டும்.

Comments