நான் வழக்கமாக பெண்ணிய படங்களின் ஆதரவாளன் அல்ல. அவை ஒரு ஆண்-பெண் இருமையை தூக்கிப் பிடிக்கின்றன, பிரச்சனைகளை எளிமைப்படுத்துகின்றன, மேலும் ஆண்-மையவாதத்தின் தோற்றுவாயாக ஆணை மட்டும் அவை காட்டுகின்றன, ஆண்களை முறியடித்தால் எல்லாம் சரி ஆகி விடும் என பாமக பாணி அரசியலை எடுக்கின்றன என்பது என் புகார். ஆனால் The Great Indian Kitchen இவ்வகைப் படங்களில், கதைகளில் இருந்து மாறுபட்டது. பெண்ணடிமைத்தனத்துக்குக் காரணம் நமது குடும்ப, சமூக அமைப்பு, அதை பின்னிருந்து அமைக்கும் மத, சனாதானவாத அமைப்புகள், இவற்றை தூக்கிப் பிடிக்கும் ஆண்களுமே என இப்படம் தெளிவாக வெளிப்படையாகக் காட்டுகிறது. ஏனென்றால் இப்படத்தில் ஒடுக்கப்படும் மருமகளுக்கு ஆதரவாகப் பேசும் மாமியார் இருக்கிறார் என்றால் அவரைப் புரிந்து கொள்ளாமல் “கணவன் வீட்டில் சென்று அனுசரித்து வாழ்” என விரட்டுகிற அம்மாவும் இருக்கிறார். அவளது அக்காவும் இப்படி கருணையற்றே இருக்கிறார். மருமகள் வீட்டுக்கு ‘விலக்காக’ இருக்கும் போது சமையலுக்கும், பராமரிப்புக்கும் வருகிற அந்த மாமி அந்த வீட்டு ஆண்களை விட குரூரமாக அவளிடம் நடந்து கொள்கிறார். அவர் வந்தவுடன் செய்கிற முதல் காரியமே கட்டிலில் அமரக் கூடாது எனச் சொல்லி பாயை விரித்து அவளை கீழே படுக்க சொல்வதே. அதே போல அவளது ஆடைகளை பொதுவில் காயப் போடக் கூடாது, அவள் வீட்டுக்குள் தங்கக் கூடாது என்றெல்லாம் உத்தரவுகள் பிறப்பித்து ஒடுக்குகிறாள். எத்தனை பெண்ணிய படங்களில் இப்படி ஆணாதிக்கவாதத்தின் முகவர்களாக பெண்கள் குடும்பத்துக்குள்ளேயே இருப்பதைக் காட்டி இருக்கிறார்கள்?
இப்படத்தில் அம்பையின் “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” கதையின் சாயல் நிறையவே உள்ளது. ஆனால் அக்கதையை விட படம் சிறப்பாக வந்துள்ளது என்பதே சுவாரஸ்யம். அம்பையின் கதையில் (அல்லது அவரது படைப்புகளில்) பெண்ணடிமைத்தனத்துக்கும் வைதீகத்துக்கு சனாதனவாதத்துக்குமான தொடர்பைப் பற்றி பேச மாட்டார். எந்த காரணம் கொண்டும் இந்து மதத்தை சீண்டி விடக் கூடாது என கவனமாகவே பெண்ணியம் பேசுவார் அம்பை. இது ஒரு போதாமையை அவரது அரசியலில் உண்டு பண்ணுகிறது. ஆனால் இப்படம் அந்த அரசியலை நேரடியாகவே பேசுகிறது. அடுத்து, அம்பையின் கதைகளில் பெண்கள் எல்லாரும் நல்லவர்கள், ஆண்கள் எல்லாரும் கெட்டவர்கள். பெண்களிலும், “வீட்டின் மூலையில்...” கதையில் வரும் மாமியரைப் போல, சக பெண்களை ஒடுக்குகிறவர்கள் இருப்பார்கள், ஆனால் அவர்கள் அறியாமையாலே அப்படி செய்கிறார்கள், ஒருநாள் திருந்தி பெண்ணியவாதிகள் ஆகி விடுவார்கள் என அம்பை காட்டுவார். ஆனால் ஆண்கள் சகல நேரமும் பெண்களை எப்படி ஒடுக்குவது என யோசித்திருக்கும் கயவர்கள் அல்லது அவர்களுக்கு உதவ முன்வராத பயந்தாங்கொள்ளிகள். இப்படத்தில் இவ்வாறான தட்டையான சித்தரிப்புகள் இல்லை.
இப்படத்தில் எனக்குப் பிடித்த மற்றொரு விசயம் அதன் வெளிப்படையான அரசியல் - இந்திய சினிமாவில் இப்படி செவிட்டில் அடித்தாற் போல எடுக்கப்படும் படங்கள் மிக மிக அரிது.
பெண்கள் மட்டுமே சமையலில் ஈடுபடுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதாக இப்படம் காட்டுகிறது என சில நண்பர்கள் விமர்சிப்பதைக் கண்டேன். ஆனால் இதே படத்தில் தான் மனைவிக்கு சமைத்து போடுகிற (குக்கர் பிரியாணி) கணவன் ஒருவனும் சில நிமிடங்கள் வந்து போகிறான் என மறந்து விடக் கூடாது. பிற்போக்கான மோசமான குடும்பங்களில் ஒன்றில் சமையலறை எப்படி ஒரு வதைக் கூடமாக செயல்படுகிறது என்றே இப்படம் காட்டுகிறது, எல்லா வீடுகளும் அப்படித் தான் என்றல்ல. அவ்விதத்தில் இப்படத்தில் வரும் அந்த நாலுகட்டு வீடு ஒரு உருவகம். படம் முழுக்க அது ஒரு தனி பாத்திரமாகவே வருகிறது. அதை நினைத்தாலே அச்சம் ஏற்படுகிற விதம் காட்டியிருக்கிறார்கள். இதுவரை நமது சினிமாக்களில் வீடு என்பதை எப்படி ஒரு சொர்க்கமாக - “எங்கள் வீட்டில் எல்லா நாளும் லாலாலா” என - காட்டி இருக்கிறார்கள் என யோசியுங்கள். இப்படம் ஒரு எதார்த்தமான சித்திரத்தை அளிக்கிறது.
அதே போல செக்ஸ் விசயத்தில் நம் ஆண்கள் எப்படி பத்தாம்பசலிகளாக உள்ளார்கள் என்பதைக் காட்டிய விதமும் அருமை. பாலசந்தரின் புரட்சிப் பெண்கள் கூட இதையெல்லாம் பேசியதில்லையே. Foreplay எனும் பதமே தமிழ் சினிமா வரலாற்றில் வந்ததில்லை. (அப்படி வந்தாலும் அதை சிம்பு போன்றவர்கள் விடலைத்தனமாக பயன்படுத்தி கடந்து விடுவார்கள்.)
பின்னணி இசையை பயன்படுத்தாமல் கதையை முன்னெடுத்த விதம் ஒருவித அச்சத்தை உருவாக்க உதவியது. அந்த தொனி இறுதியில் வந்த ஒரு பாட்டில் காலியாகிப் போன போது தான் இதுவரை நல்லவேளை இசையை பயன்படுத்தவில்லை எனத் தோன்றியது.

Comments