Skip to main content

The Great Indian Kitchen



நான் வழக்கமாக பெண்ணிய படங்களின் ஆதரவாளன் அல்ல. அவை ஒரு ஆண்-பெண் இருமையை தூக்கிப் பிடிக்கின்றன, பிரச்சனைகளை எளிமைப்படுத்துகின்றன, மேலும் ஆண்-மையவாதத்தின் தோற்றுவாயாக ஆணை மட்டும் அவை காட்டுகின்றன, ஆண்களை முறியடித்தால் எல்லாம் சரி ஆகி விடும் என பாமக பாணி அரசியலை எடுக்கின்றன என்பது என் புகார். ஆனால் The Great Indian Kitchen இவ்வகைப் படங்களில், கதைகளில் இருந்து மாறுபட்டது. பெண்ணடிமைத்தனத்துக்குக் காரணம் நமது குடும்ப, சமூக அமைப்பு, அதை பின்னிருந்து அமைக்கும் மத, சனாதானவாத அமைப்புகள், இவற்றை தூக்கிப் பிடிக்கும் ஆண்களுமே என இப்படம் தெளிவாக வெளிப்படையாகக் காட்டுகிறது. ஏனென்றால் இப்படத்தில் ஒடுக்கப்படும் மருமகளுக்கு ஆதரவாகப் பேசும் மாமியார் இருக்கிறார் என்றால் அவரைப் புரிந்து கொள்ளாமல் “கணவன் வீட்டில் சென்று அனுசரித்து வாழ்” என விரட்டுகிற அம்மாவும் இருக்கிறார். அவளது அக்காவும் இப்படி கருணையற்றே இருக்கிறார். மருமகள் வீட்டுக்கு ‘விலக்காக’ இருக்கும் போது சமையலுக்கும், பராமரிப்புக்கும் வருகிற அந்த மாமி அந்த வீட்டு ஆண்களை விட குரூரமாக அவளிடம் நடந்து கொள்கிறார். அவர் வந்தவுடன் செய்கிற முதல் காரியமே கட்டிலில் அமரக் கூடாது எனச் சொல்லி பாயை விரித்து அவளை கீழே படுக்க சொல்வதே. அதே போல அவளது ஆடைகளை பொதுவில் காயப் போடக் கூடாது, அவள் வீட்டுக்குள் தங்கக் கூடாது என்றெல்லாம் உத்தரவுகள் பிறப்பித்து ஒடுக்குகிறாள். எத்தனை பெண்ணிய படங்களில் இப்படி ஆணாதிக்கவாதத்தின் முகவர்களாக பெண்கள் குடும்பத்துக்குள்ளேயே இருப்பதைக் காட்டி இருக்கிறார்கள்? 

இப்படத்தில் அம்பையின் “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” கதையின் சாயல் நிறையவே உள்ளது. ஆனால் அக்கதையை விட படம் சிறப்பாக வந்துள்ளது என்பதே சுவாரஸ்யம். அம்பையின் கதையில் (அல்லது அவரது படைப்புகளில்) பெண்ணடிமைத்தனத்துக்கும் வைதீகத்துக்கு சனாதனவாதத்துக்குமான தொடர்பைப் பற்றி பேச மாட்டார். எந்த காரணம் கொண்டும் இந்து மதத்தை சீண்டி விடக் கூடாது என கவனமாகவே பெண்ணியம் பேசுவார் அம்பை. இது ஒரு போதாமையை அவரது அரசியலில் உண்டு பண்ணுகிறது. ஆனால் இப்படம் அந்த அரசியலை நேரடியாகவே பேசுகிறது. அடுத்து, அம்பையின் கதைகளில் பெண்கள் எல்லாரும் நல்லவர்கள், ஆண்கள் எல்லாரும் கெட்டவர்கள். பெண்களிலும், “வீட்டின் மூலையில்...” கதையில் வரும் மாமியரைப் போல, சக பெண்களை ஒடுக்குகிறவர்கள் இருப்பார்கள், ஆனால் அவர்கள் அறியாமையாலே அப்படி செய்கிறார்கள், ஒருநாள் திருந்தி பெண்ணியவாதிகள் ஆகி விடுவார்கள் என அம்பை காட்டுவார். ஆனால் ஆண்கள் சகல நேரமும் பெண்களை எப்படி ஒடுக்குவது என யோசித்திருக்கும் கயவர்கள் அல்லது அவர்களுக்கு உதவ முன்வராத பயந்தாங்கொள்ளிகள். இப்படத்தில் இவ்வாறான தட்டையான சித்தரிப்புகள் இல்லை. 


இப்படத்தில் எனக்குப் பிடித்த மற்றொரு விசயம் அதன் வெளிப்படையான அரசியல் - இந்திய சினிமாவில் இப்படி செவிட்டில் அடித்தாற் போல எடுக்கப்படும் படங்கள் மிக மிக அரிது.


பெண்கள் மட்டுமே சமையலில் ஈடுபடுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதாக இப்படம் காட்டுகிறது என சில நண்பர்கள் விமர்சிப்பதைக் கண்டேன். ஆனால் இதே படத்தில் தான் மனைவிக்கு சமைத்து போடுகிற (குக்கர் பிரியாணி) கணவன் ஒருவனும் சில நிமிடங்கள் வந்து போகிறான் என மறந்து விடக் கூடாது. பிற்போக்கான மோசமான குடும்பங்களில் ஒன்றில் சமையலறை எப்படி ஒரு வதைக் கூடமாக செயல்படுகிறது என்றே இப்படம் காட்டுகிறது, எல்லா வீடுகளும் அப்படித் தான் என்றல்ல. அவ்விதத்தில் இப்படத்தில் வரும் அந்த நாலுகட்டு வீடு ஒரு உருவகம். படம் முழுக்க அது ஒரு தனி பாத்திரமாகவே வருகிறது. அதை நினைத்தாலே அச்சம் ஏற்படுகிற விதம் காட்டியிருக்கிறார்கள். இதுவரை நமது சினிமாக்களில் வீடு என்பதை எப்படி ஒரு சொர்க்கமாக - “எங்கள் வீட்டில் எல்லா நாளும் லாலாலா” என - காட்டி இருக்கிறார்கள் என யோசியுங்கள். இப்படம் ஒரு எதார்த்தமான சித்திரத்தை அளிக்கிறது.


அதே போல செக்ஸ் விசயத்தில் நம் ஆண்கள் எப்படி பத்தாம்பசலிகளாக உள்ளார்கள் என்பதைக் காட்டிய விதமும் அருமை. பாலசந்தரின் புரட்சிப் பெண்கள் கூட இதையெல்லாம் பேசியதில்லையே. Foreplay எனும் பதமே தமிழ் சினிமா வரலாற்றில் வந்ததில்லை. (அப்படி வந்தாலும் அதை சிம்பு போன்றவர்கள் விடலைத்தனமாக பயன்படுத்தி கடந்து விடுவார்கள்.) 


பின்னணி இசையை பயன்படுத்தாமல் கதையை முன்னெடுத்த விதம் ஒருவித அச்சத்தை உருவாக்க உதவியது. அந்த தொனி இறுதியில் வந்த ஒரு பாட்டில் காலியாகிப் போன போது தான் இதுவரை நல்லவேளை இசையை பயன்படுத்தவில்லை எனத் தோன்றியது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...