இந்தியா இங்கிலாந்து தொடரை ஏன் புறக்கணிக்கக் கூடாது?
ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத்தில் இருப்பது, பின்னிருந்து இயக்குவது எதுவும் புதுசு அல்ல தான். ஆனால் முன்பு எப்போதும் கிரிக்கெட் வீரர்கள் ஆளும் கட்சியின் பிரச்சார பீரங்கியாக பயன்படுத்தப்பட்டதாக எனக்கு நினைவில்லை. அதாவது நாட்டுக்காக நிற்பது வேறு, ஒரு கட்சியின் சார்பில் பேசுவது வேறு. சில நேரம் நீங்கள் ஒரு கட்சி சார்பாக பிரச்சாரம் செய்கையில், அந்த அரசு அப்பட்டமாக தனது மக்களுக்கு எதிராக சட்டங்களை இயற்றி, அவர்களை வன்முறை கொண்டு ஒடுக்கும் போது, நீங்கள் உங்கள் ஒரு கட்சிக்காக உங்கள் மக்களுக்கு எதிராக அரசியல் பண்ணுகிறவர்கள் ஆகிறீர்கள். அந்த அரசு போராடும் மக்களை தீவிரவாதிகள், தேச துரோகிகள், ரௌடிகள் என சொல்லும் போது அதுவும் உங்கள் கருத்தாவதை தவிர்க்க முடியாது போகிறது. இதற்கு ஒரு அணியின் தலைவர், பயிற்சியாளர் சகிதம் களமிறங்கும் போது, கிரிக்கெட் வீரர்களை பாராட்டுவதை வழக்கமாக ஒரு பிரதமரும் நிதியமமைச்சரும் வைத்திருக்கையில், இது ஒரு மோசமான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. நாளை கிரிக்கெட் வீரர்கள் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அதன் முடிவுகள், நடவடிக்கைகளுக்கு சாதகமாக டிவீட் போட்டாலே தாம் அணியில் நிலைக்க முடியும் என நம்புவார்கள்.
கிரிக்கெட் இதுவரை ஒரு தேசியவாத உணர்வலையின் உருவகமாக இருக்கிறது. இனி அது பச்சையான கட்சி ஆதரவு செயலாக மாறும். ஒரு கிரிக்கெட் அணியை ஆதரித்து அரங்கில் கைதட்டுகிறவர்கள் அனைவரும் மறைமுகமாக தனது ஆதரவாளர்களே என ஒரு நாட்டின் எதிர்கால பிரதமர்கள் நினைத்து புளகாங்கிதம் அடைகிற அபத்தம் நடக்கும். கிரிக்கெட் அணியின் தலைவரும், பயிற்சியாளரும் தேர்தலுக்கு முன்பு கட்சிப் பிரச்சாரம் செய்யுமாறு வலியுறுத்தப்படுவதும் நடக்கும். (ஏற்கனவே இதை பாலிவுட் வெளிப்படையாகவே செய்து கொண்டிருக்கிறது.) ஒரு கட்சி தன்னையே நாடு என நினைப்பது ஒரு அபத்தம் எனில், அக்கட்சியை ஆதரிப்பதே தேசபக்தி என செலிபிரிட்டிகள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் நினைப்பது இன்னும் அபத்தமானது. எனில் கட்சிக்கு வெளியே தேசம் என ஒன்றில்லையா? அரசுக்கு வெளியே மக்களின் குரலுக்கு மதிப்பில்லையா? அரசுக்கு வெளியே இருக்கும் மக்கள் தேசம் இல்லையா? எனில் ஏன் தேர்தலை நடத்த வேண்டும்? ஒரு கட்சியை நிரந்தரமாக ஆள அனுமதிக்கலாமே?
இந்த பின்னணியில் பார்க்கும் போது நமக்கு விராத் கோலி, ரவி சாஸ்திரி கும்பலின் டிவீட் அரசியல் எவ்வளவு மோசமான ஒரு தேச விரோத அரசியல் எனப் புரியும். இவர்கள் நமது மக்களாட்சி அமைப்புக்கே உலை வைக்கிற போக்குக்கு துணை போகிறார்கள். அதனால் இதை எதிர்க்க வேண்டியது அவசியம். ஆகையால் வெள்ளிக்கிழமை துவங்குகிற இங்கிலாந்து இந்தியா டெஸ்ட் தொடரை நாம் புறக்கணிக்கக் கூடாது? அதனால் இத்தொடருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனிலும், நம்மால் முடிந்த எதிர்ப்பை பதிவு செய்வோம். அதனால் #BoycottIndiavsEnglandSeries
என்னதான் அழுத்தம் இருந்தாலும் மக்கள் விரோதப் போக்கை ஆதரிப்பதை இனிமேலாவது கிரிக்கெட்டர்கள் நிறுத்த வேண்டும்.

Comments