Skip to main content

ஹிந்து தமிழ் திசை பேட்டி - முழு வடிவம் (1)


தி ஹிந்து கேள்வி: “உலகளாவிய இலக்கியப் போக்குக்கும் தமிழ் இலக்கியப் போக்குக்கும் இடையிலான இடைவெளியை எப்படி பார்க்கிறீர்கள்?”


ஆர் அபிலாஷ் பதில்:


“என்னுடைய வாசிப்பு படி கடந்த இரு பத்தாண்டுகளின் தமிழ் இலக்கியப் போக்கில் சில குறிப்பிட்ட இயல்புகள், தன்மைகள் தென்படுகின்றன; அதில் குறிப்பிடத்தக்கவை

 (1) சமூகவலைதள எழுத்து நமது புனைவு மற்றும் அபுனைவு மொழியில் ஏற்படுத்தி உள்ள தாக்கம்.

(2) புதிய எழுத்தாளர்களின் - தம்மை எழுத்தாளர் என கருதிக் கொள்ளாதவர்களின் - வருகை.

(3) இலக்கிய - இலக்கியமற்ற எழுத்துகளுக்கு இடையிலான தடுப்புச்சுவர் பாதி உடைக்கப்பட்ட நிலையில் இங்குள்ளவர்கள் அங்கும் அங்குள்ளவர்கள் இங்கும் இருக்கிறார்கள் என்பது.

(4) குறுநாவல்கள் குறுகிய காலத்தில் எழுதப்பட்டு மின்நூலாக பிரசுரம் பெறுவது அதிகமாகி உள்ளது.

(5) மற்றபடி வழக்கமான இலக்கிய நாவல்கள், சிறுகதைகளின் வடிவம், கதைக்களம், மொழி, அழகியல் போன்ற சங்கதிகளீல் நாம் தொண்ணூறுகளில் இருந்து பெரிய மாற்றங்களை எதிர்கொள்ளவில்லை. 

(6) இங்கு தான் உலக எழுத்துக்கும் நமக்குமான மாறுபாடுகள் துலக்கமாகின்றன - தொழில்நுட்பத்தின் தாக்கத்தினால் அங்கு எழுதும் முறை, எழுதும் ஆட்கள், பிரசுரம் பெரிதும் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மாய எதார்த்தம், மிகுபுனைவு, விஞ்ஞான புனைவு, அழிவுகாலப் புனைவு (apocalyptic fiction), பின்நவீன பரீட்சார்த்த புனைவு, எதார்த்த புனைவு, திகில், துப்பறியும் கதைகள் என ஒவ்வொன்றும் அங்கு தத்தம் கிளைகளில் பத்திரமாக இருக்கின்றன. 

(7) மேற்கத்திய பிரசுர உலகில் உள்ள ஒரு தனித்துவமான அம்சம் அரசியல் சமூக கதையாடல்களுக்கு புனைவுலகில் உள்ள தாக்கம். குறிப்பாக, புலம்பெயர்வு காரணமாக பல்வேறு இனங்கள் இணைந்து வாழும் சூழல் அங்கு கடந்த சில பத்தாண்டுகளில் தீவிரமாகி உள்ளது. இது இனங்கள் இடையே உரசலை, அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளையினத்தவர் ஆதிக்கம் செலுத்தும் நிலங்களில் கறுப்பின, ஆசிய மக்கள் தமது அரசியல், சமூக அடையாளம், இடம் என்னவெனும் கேள்விக்கு ஆளாகிறார்கள். இன்னொரு பக்கம் வெள்ளையர்கள் (பெரும்பான்மையினராக இருந்தும் கூட) தாம் ஒடுக்கப்படுவதாய் ஒரு விசித்திர அச்சத்துக்கு ஆளாகிறார்கள். இந்த பின்காலனிய, புலம்பெயர்வு சூழல் ஏற்படுத்தியுள்ள சலனங்களை அவர்களது படைப்புகளில் அதிகமாய் காண்கிறோம். மூன்றாம் பாலினத்தோரின் சிக்கல்கள், நகரமயமான வாழ்வின் மேலோட்டமான, நிலையற்ற இருப்பு ஆகியவை சித்தரிக்கப்படுவதை பார்க்கிறோம். அண்மையில் நான் வாசித்த மிஷெல் வெபக்கின், ஹன்யா யானாகிஹாரா போன்றோரின் நாவல்கள் ஒரு உதாரணம். ஆனால் தமிழ் புனைவுகளில் நாம் இன்னமும் தனிமனித, குடும்பக் கதைகளை, கிராமங்களைத் தாண்டி அதிகமும் செல்லவில்லை (ஈழ இலக்கியம் ஒரு விதிவிலக்கு). தொண்ணூறுகளில் தோன்றிய வித்தியாசமான களங்களில், கதைகூறல்களுடன் புனைவெழுத வேண்டும் எனும் முனைப்பு அதன் பிறகு மாயமாகி விட்டது.

நமது இலக்கிய, வெகுன எழுத்துக்கள் மொழியாக்கப்பட்டு உலகம் முழுக்க, குறைந்தது இந்தியா முழுக்க கொண்டு செல்லப்படாதது, தமிழகத்துக்குள்ளும் பெரும் வாசகப் பரப்பை நம்மால் அடைய முடியாதது நம்மை இப்படி ஒரு சிறிய வட்டத்துக்குள் நின்று கத்தி சுழற்ற வைக்கிறதா? இக்கேள்வியை நான் என் சக எழுத்தாளர்களிடம், வாசகர்கள், நண்பர்களிடத்து வைக்கிறேன்.”


தி ஹிந்து கேள்வி: “நாவல்கள் - தத்துவ நூல்கள் இணையும் புள்ளி என்ன? உங்கள் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொள்ள முடியுமா?”


ஆர். அபிலாஷ் பதில்: 


“நாவல் என்பதை நாம் புலன்களால் பார்த்து உணரும் அனுபவங்களை, தகவல்களை வைத்து மட்டும் சித்தரிக்க வேண்டும் எனக் கோருவதே எதார்த்த, இயல்புவாத புனைவின் அடிப்படை. இத்தகைய எழுத்தால் புலனுலகைக் கடந்த பல விசயங்களை (தத்துவம், அறிவியல், வரலாறு, தொழில்நுட்பம், மீமெய்யியல்) கொண்டு வந்து விரிவை, ஆழத்தை நாவல் போன்ற வடிவத்தில் அடைய முடியாது. இதனாலே ஜெ.மோ, எஸ்.ரா, சாரு, பிரேம் ரமேஷ், பா. வெங்கடேசன், தமிழவன், எம்.ஜி சுரேஷ் போன்றோர் பலவிதமான மொழிகளில், கதைக்களங்களில் புனைவை முயன்று பார்த்தார்கள். உ.தா., ஜெ.மோவின் “விஷ்ணுபுரம்” அத்வைதத்தையும், (மறைமுகமாக) சுதந்திரத்துக்குப் பின்பான இந்திய அரசியல் வரலாற்றையும் தொன்மமாக்கி விவாதிக்கும் ஒரு பேராசைப் படைப்பு. நகுலன், சம்பத், மௌனி போன்றோர் தத்துவத்தையும் உளவியல் / மரபையும் இணைத்து புனைவில் சிந்திக்க முயன்றார்கள். தத்துவம் மட்டுமல்ல எந்தவொரு மாற்று புலத்திலும் புனைவு காலூன்றுவது அதற்கு ஒரு ஆழத்தை கொடுக்கும் என நம்புகிறேன். தத்துவம் எனக்கு பிடித்தமானது என்பதால் தத்துவ கோணம் கொண்ட புனைவுகளை நான் கூடுதலாக கொண்டாடுவேன்.”


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...