Skip to main content

ஒரு சந்திப்பு


நேற்று கீர்த்திகா தரனின் மகன் நிகினை சந்தித்தேன். நான் சந்தித்த இளைஞர்களில் சற்று வித்தியாசமானவர். 

பொதுவாக இன்றைய மாணவர்கள் கூகிளுக்குள் பிறந்தவர்கள். கூகிளுக்குள் தூங்கி விழித்து அதற்குள்ளே பல்துலக்கி துப்பி ஒரு நாளை துவக்குகிறவர்கள். அவர்களுக்கு தெரியாதது எதுவுமே இல்லை - எதைப் பற்றியும் சொற்பமான சில தகவல்களை வைத்துக் கொண்டு ஒரு தெனாவெட்டுடன் இருப்பார்கள். என் வகுப்புகளில் இந்த மாணவர்களை தகவலால் ஆச்சரியப்படுத்த முடியாது எனத் தெரிந்தே ஒரு மாற்றுப் பார்வையுடன் பேச முயல்வேன். நிகின் இந்த இளைஞர்களிடம் இருந்து ரொம்ப வித்தியாசமாக தெரிகிறார் - அவர், என்னுடைய தலைமுறையினரைப் போல, எதையும் கேட்டு அறியும் ஆர்வம் கொண்டவர்:


 நான் சின்ன வயதில் எந்த எழுத்தாளரை, ஆசிரியரைக் காண சென்றாலும் அணுக்கமாக அன்பாக பேசி அவர்களுடைய இதயத்தில் இடம்பிடிக்க முயல மாட்டேன். என் கைவசம் இருக்கும் கேள்விகளுடனே செல்வேன். போனதும் ஒவ்வொன்றாக கேட்க ஆரம்பிப்பேன். அவர்கள் சொல்லுகிற பதில்களில் இருந்து எனக்கு எழும் சிறுசிறு கேள்விகளை எழுப்புவேன். ஒரு மாணவனாக நான் வகுப்பில் கேள்வி எழுப்பத் தொடங்கினால் மற்ற மாணவர்கள் தூங்கி விடுவார்கள். என் இளமை முழுக்க நான் இப்படி கேள்வி கேட்பவனாக, எதையும் சுலபமாக ஏற்றுக் கொள்ளாமல் குறுக்குக் கேள்விகள், மறுப்புகள் என விவாதத்தை வளர்ப்பவனாக இருந்தேன். இந்த உலகமே எனக்கு ஒரு வகுப்பறை. இயல்பாக நலம் விசாரித்து, வம்பு தும்பு பேசி, கேட்பவரை புகழ்ந்து வசீகரித்து உரையாடலை வளர்த்து அவருக்கு வாக்குறுதிகள் அளித்து அவ்வுரையாடலை முடிக்கிறவனாக நான் இருக்கவில்லை. அது எப்படியென்றே எனக்குத் தெரியவில்லை. அந்த கெட்டப் பழக்கம் இன்றும் என்னிடம் தொடர்கிறது. இந்த small talk எனும் சம்பாஷணை முறை எனக்கு ரொம்ப அலுப்பூட்டுகிற காரியம். கூடிப் போனால் எனக்கு நெருக்கமாகி விடும் நண்பர்களிடம் எதாவது நகைச்சுவை சொல்லி விளையாட்டாக இருப்பேன். அதுவும் அரிது தான். எந்த உரையாடலும் எனக்கு ஒரு புதிய சிந்தனையை, கற்பனையை அளிக்க வேண்டும், அதில் இருந்து நான் ஒரு கட்டுரையோ கதையோ எழுத முடிய வேண்டும் என எதிர்பார்ப்பேன். சென்னை வந்த பிறகு நான் இன்னொரு வகையான இளைஞர்களை வாசகர்களாக சக எழுத்தாளர்களாக சந்தித்தேன். அவர்கள் அபிப்ராயங்களால், கருத்துக்களால் நிறைந்திருந்தார்கள். எதைச் சொன்னாலும் ஒரு மாற்றுப் பார்வையை வைக்க வேண்டும் என நினைப்பார்கள் - அதற்கும் நாம் சொல்கிற விசயத்துக்கும் சம்மந்தமே இல்லை என்றாலும். குடிக்க ஆரம்பித்தால் அதுவும் இல்லை. ரொம்ப லோக்கலாக இறங்கி எல்லாரையும் திட்டுவது, காயப்படுத்துவது என சாடிஸ்டுகளாகி விடுவார்கள். இவ்வளவு படித்தவர்களுக்கு குடிக்க மட்டும் தெரியவில்லையே என நான் கவலைப்படுவேன். அதன் பிறகு தான் நான் மேலே குறிப்பிட்ட கூகிள் தலைமுறை தோன்றியது. அதற்கு அடுத்து வாட்ஸாப், பேஸ்புக் தலைமுறை. எனக்குத் தெரிந்த ஒரு அஸ்ஸாமிய நண்பர் தமிழகம், அதன் அரசியல், மொழிப்பற்று பற்றி நாம் யாருக்கும் தெரியாத கதைகளை சொல்வார்; தமிழ் மண்ணில் கால் பதித்திராத உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று கேட்டால் “வாட்ஸாப்பில் படித்தேன்” என ‘தன்னம்பிக்கையுடன்’ சொல்வார். இவர்களால் எதைக்குறித்தும் யாருடனும் கவலையில்லாமல் வலுவாக அபிப்ராயங்கள் சொல்ல முடியும். கேட்டால் ஆதாரம் காட்டவா என வாட்ஸாப்பை திறப்பார்கள். ஒரு தலைமுறையே இப்படி விவாதங்கள் சாத்தியமில்லாத ஒரு முட்டுசந்தில் நிற்கிறது.


ஆனால் நான் மேலே சொன்ன நிகின் ஒரு கால எந்திரத்தில் பின்னே சென்று விட்டவர். நேற்று வந்ததும் அவர் பேசிய முறை அப்படியே சின்ன வயதில் என்னை கண்ணாடியில் பார்ப்பதைப் போல இருந்தது. எனக்கு தத்துவத்தில் ஆர்வமுண்டு, அது குறித்து எழுதியிருக்கிறேன் என்பதால் என்னைப் பார்க்க வருமுன்னே சில எளிய தத்துவக் கேள்விகளுடனே வந்திருந்தார். ஏதோ விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிப்பது போல கேள்விகளைக் கேட்டார். எனக்கு தத்துவஞானிகளில் யாரைப் பிடிக்கும் என்றார். நாகார்ஜுனர் என்றேன். உடனே தனக்குத் தெரியும் எனக் காட்டிக் கொள்ள முனையாமல் ஏன் பிடிக்கும், அவர் என்ன சொல்லியிருக்கிறார் எனக் கேட்டார். நான் எளிமையாக நாகார்ஜுனரை விளக்க முயன்றேன். நவீன மனிதனுக்கு, நவீன வாழ்க்கைக்கு ஏற்ற தத்துவ சிந்தனையாளர் யார் என்றார். உடனே புரிந்து கொள்வதற்கு ஏற்ற, நவீனச் சிக்கல்களுக்கு பொருந்திப் போகிற கருத்துக்களை பேசியவர் ஹைடெக்கர் தான் என்றேன். அதன் பிறகு அவர் கேட்டுக் கொண்டதால் ஹைடெக்கர் “தொழில்நுட்பம்” பற்றி சொன்னதை நாங்கள் இருந்த இடம், எங்கள் முன்னிருந்த கண்ணாடிக் கோப்பையை வைத்து விளக்கினேன். ஒரு தத்துவத்தை அது எழுதப்பட்ட காலத்தில் எழுந்த கருத்துக்கள், சிந்தனைப் பள்ளிகளின் பின்னணியில் வைத்தே படிக்க வேண்டுமா எனக் கேட்டார். அது வரலாற்று வாசிப்பாகி விடும் என்றேன். அது எழுதப்பட்ட இடங்களுக்கு செல்வது பயனளிக்காதா என்றார். அதற்கும் தத்துவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, நாம் இப்போது இருக்கிற இடம் இவ்வாறு நாளை இருக்கப் போவதில்லையே என்றேன். அடுத்து மற்றவர்களுக்கு போரடிக்கிறதே என சம்பாஷணையை பொதுவான விசயங்களுக்கு, அரட்டைக்கு நகர்த்தினோம். ஆனால் நிகின் கவலையே படாமல் மீண்டும் தத்துவக் கேள்விகளுக்கு என்னை இழுத்து வந்தார் - நான் இதை உள்ளூர ரசித்தேன். சின்ன வயதில் எனக்கும் இந்த பழக்கம் இருந்தது, சந்தர்ப்ப சூழல் பற்றி கவலையே பட மாட்டேன். கிளம்பும் போது அவருக்கு நான் ஆயுஷ், நேஹாவுடன் இணைந்து எழுதிய ஹைடெக்கர் குறித்த நூலை (Plop) பரிசளித்தேன்.  


அவர் போன பின் எனக்கு இப்படித் தோன்றியது: காலம் மாறி விட்டது என நாம் அங்கலாய்க்கத் தேவையில்லை. காலத்தாலும் மாற்ற முடியாதவர்களாக சிலர் இருந்து கொண்டே இருப்பார்கள்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...