நேற்று கீர்த்திகா தரனின் மகன் நிகினை சந்தித்தேன். நான் சந்தித்த இளைஞர்களில் சற்று வித்தியாசமானவர்.
பொதுவாக இன்றைய மாணவர்கள் கூகிளுக்குள் பிறந்தவர்கள். கூகிளுக்குள் தூங்கி விழித்து அதற்குள்ளே பல்துலக்கி துப்பி ஒரு நாளை துவக்குகிறவர்கள். அவர்களுக்கு தெரியாதது எதுவுமே இல்லை - எதைப் பற்றியும் சொற்பமான சில தகவல்களை வைத்துக் கொண்டு ஒரு தெனாவெட்டுடன் இருப்பார்கள். என் வகுப்புகளில் இந்த மாணவர்களை தகவலால் ஆச்சரியப்படுத்த முடியாது எனத் தெரிந்தே ஒரு மாற்றுப் பார்வையுடன் பேச முயல்வேன். நிகின் இந்த இளைஞர்களிடம் இருந்து ரொம்ப வித்தியாசமாக தெரிகிறார் - அவர், என்னுடைய தலைமுறையினரைப் போல, எதையும் கேட்டு அறியும் ஆர்வம் கொண்டவர்:
நான் சின்ன வயதில் எந்த எழுத்தாளரை, ஆசிரியரைக் காண சென்றாலும் அணுக்கமாக அன்பாக பேசி அவர்களுடைய இதயத்தில் இடம்பிடிக்க முயல மாட்டேன். என் கைவசம் இருக்கும் கேள்விகளுடனே செல்வேன். போனதும் ஒவ்வொன்றாக கேட்க ஆரம்பிப்பேன். அவர்கள் சொல்லுகிற பதில்களில் இருந்து எனக்கு எழும் சிறுசிறு கேள்விகளை எழுப்புவேன். ஒரு மாணவனாக நான் வகுப்பில் கேள்வி எழுப்பத் தொடங்கினால் மற்ற மாணவர்கள் தூங்கி விடுவார்கள். என் இளமை முழுக்க நான் இப்படி கேள்வி கேட்பவனாக, எதையும் சுலபமாக ஏற்றுக் கொள்ளாமல் குறுக்குக் கேள்விகள், மறுப்புகள் என விவாதத்தை வளர்ப்பவனாக இருந்தேன். இந்த உலகமே எனக்கு ஒரு வகுப்பறை. இயல்பாக நலம் விசாரித்து, வம்பு தும்பு பேசி, கேட்பவரை புகழ்ந்து வசீகரித்து உரையாடலை வளர்த்து அவருக்கு வாக்குறுதிகள் அளித்து அவ்வுரையாடலை முடிக்கிறவனாக நான் இருக்கவில்லை. அது எப்படியென்றே எனக்குத் தெரியவில்லை. அந்த கெட்டப் பழக்கம் இன்றும் என்னிடம் தொடர்கிறது. இந்த small talk எனும் சம்பாஷணை முறை எனக்கு ரொம்ப அலுப்பூட்டுகிற காரியம். கூடிப் போனால் எனக்கு நெருக்கமாகி விடும் நண்பர்களிடம் எதாவது நகைச்சுவை சொல்லி விளையாட்டாக இருப்பேன். அதுவும் அரிது தான். எந்த உரையாடலும் எனக்கு ஒரு புதிய சிந்தனையை, கற்பனையை அளிக்க வேண்டும், அதில் இருந்து நான் ஒரு கட்டுரையோ கதையோ எழுத முடிய வேண்டும் என எதிர்பார்ப்பேன். சென்னை வந்த பிறகு நான் இன்னொரு வகையான இளைஞர்களை வாசகர்களாக சக எழுத்தாளர்களாக சந்தித்தேன். அவர்கள் அபிப்ராயங்களால், கருத்துக்களால் நிறைந்திருந்தார்கள். எதைச் சொன்னாலும் ஒரு மாற்றுப் பார்வையை வைக்க வேண்டும் என நினைப்பார்கள் - அதற்கும் நாம் சொல்கிற விசயத்துக்கும் சம்மந்தமே இல்லை என்றாலும். குடிக்க ஆரம்பித்தால் அதுவும் இல்லை. ரொம்ப லோக்கலாக இறங்கி எல்லாரையும் திட்டுவது, காயப்படுத்துவது என சாடிஸ்டுகளாகி விடுவார்கள். இவ்வளவு படித்தவர்களுக்கு குடிக்க மட்டும் தெரியவில்லையே என நான் கவலைப்படுவேன். அதன் பிறகு தான் நான் மேலே குறிப்பிட்ட கூகிள் தலைமுறை தோன்றியது. அதற்கு அடுத்து வாட்ஸாப், பேஸ்புக் தலைமுறை. எனக்குத் தெரிந்த ஒரு அஸ்ஸாமிய நண்பர் தமிழகம், அதன் அரசியல், மொழிப்பற்று பற்றி நாம் யாருக்கும் தெரியாத கதைகளை சொல்வார்; தமிழ் மண்ணில் கால் பதித்திராத உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று கேட்டால் “வாட்ஸாப்பில் படித்தேன்” என ‘தன்னம்பிக்கையுடன்’ சொல்வார். இவர்களால் எதைக்குறித்தும் யாருடனும் கவலையில்லாமல் வலுவாக அபிப்ராயங்கள் சொல்ல முடியும். கேட்டால் ஆதாரம் காட்டவா என வாட்ஸாப்பை திறப்பார்கள். ஒரு தலைமுறையே இப்படி விவாதங்கள் சாத்தியமில்லாத ஒரு முட்டுசந்தில் நிற்கிறது.
ஆனால் நான் மேலே சொன்ன நிகின் ஒரு கால எந்திரத்தில் பின்னே சென்று விட்டவர். நேற்று வந்ததும் அவர் பேசிய முறை அப்படியே சின்ன வயதில் என்னை கண்ணாடியில் பார்ப்பதைப் போல இருந்தது. எனக்கு தத்துவத்தில் ஆர்வமுண்டு, அது குறித்து எழுதியிருக்கிறேன் என்பதால் என்னைப் பார்க்க வருமுன்னே சில எளிய தத்துவக் கேள்விகளுடனே வந்திருந்தார். ஏதோ விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிப்பது போல கேள்விகளைக் கேட்டார். எனக்கு தத்துவஞானிகளில் யாரைப் பிடிக்கும் என்றார். நாகார்ஜுனர் என்றேன். உடனே தனக்குத் தெரியும் எனக் காட்டிக் கொள்ள முனையாமல் ஏன் பிடிக்கும், அவர் என்ன சொல்லியிருக்கிறார் எனக் கேட்டார். நான் எளிமையாக நாகார்ஜுனரை விளக்க முயன்றேன். நவீன மனிதனுக்கு, நவீன வாழ்க்கைக்கு ஏற்ற தத்துவ சிந்தனையாளர் யார் என்றார். உடனே புரிந்து கொள்வதற்கு ஏற்ற, நவீனச் சிக்கல்களுக்கு பொருந்திப் போகிற கருத்துக்களை பேசியவர் ஹைடெக்கர் தான் என்றேன். அதன் பிறகு அவர் கேட்டுக் கொண்டதால் ஹைடெக்கர் “தொழில்நுட்பம்” பற்றி சொன்னதை நாங்கள் இருந்த இடம், எங்கள் முன்னிருந்த கண்ணாடிக் கோப்பையை வைத்து விளக்கினேன். ஒரு தத்துவத்தை அது எழுதப்பட்ட காலத்தில் எழுந்த கருத்துக்கள், சிந்தனைப் பள்ளிகளின் பின்னணியில் வைத்தே படிக்க வேண்டுமா எனக் கேட்டார். அது வரலாற்று வாசிப்பாகி விடும் என்றேன். அது எழுதப்பட்ட இடங்களுக்கு செல்வது பயனளிக்காதா என்றார். அதற்கும் தத்துவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, நாம் இப்போது இருக்கிற இடம் இவ்வாறு நாளை இருக்கப் போவதில்லையே என்றேன். அடுத்து மற்றவர்களுக்கு போரடிக்கிறதே என சம்பாஷணையை பொதுவான விசயங்களுக்கு, அரட்டைக்கு நகர்த்தினோம். ஆனால் நிகின் கவலையே படாமல் மீண்டும் தத்துவக் கேள்விகளுக்கு என்னை இழுத்து வந்தார் - நான் இதை உள்ளூர ரசித்தேன். சின்ன வயதில் எனக்கும் இந்த பழக்கம் இருந்தது, சந்தர்ப்ப சூழல் பற்றி கவலையே பட மாட்டேன். கிளம்பும் போது அவருக்கு நான் ஆயுஷ், நேஹாவுடன் இணைந்து எழுதிய ஹைடெக்கர் குறித்த நூலை (Plop) பரிசளித்தேன்.
அவர் போன பின் எனக்கு இப்படித் தோன்றியது: காலம் மாறி விட்டது என நாம் அங்கலாய்க்கத் தேவையில்லை. காலத்தாலும் மாற்ற முடியாதவர்களாக சிலர் இருந்து கொண்டே இருப்பார்கள்.
Comments