தாதா சாகெப் விருது பெறும் ரஜினி காந்துக்கு வாழ்த்து தெரிவிப்பது வீண் என்றாலும் (மோடியே தலைவா என விளித்து வாழ்த்தியபிறகு நாம வாழ்த்தினா என்ன வாழ்த்தாட்டி என்ன?) என் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்:
என் பார்வையில் ரஜினி இந்திய சினிமாவின் தனித்துவமான முக்கியமான நடிகர். Method acting பாணியில் நடிப்பவர்களுக்கு ஒரு பிரச்சனை உண்டு. பாத்திரத்துக்கு என ஒரு தனி குண வார்த்தை மனத்தில் வைத்துக் கொண்டு செயற்கையாக ஒரு பாவனையை தூக்கி அலைவார்கள். அதாவது கரடியாக நடிக்க சொன்னால் எப்படியாவது உடம்பெல்லாம் மயிர் வளர்த்து கரடியாக ஆக முடியுமா என தவிப்பது. ஆனால் ரஜினியோ காட்சிக்குள் வரும் சந்தர்பத்துக்கு ஏற்ப எதிர்வினையாற்றுவதே நடிப்பு என எளிமையாக, ஆழமாக புரிந்து கொண்டவர். ரஜினி வயதானவராக நடிக்கும் போது பாருங்கள் - லேசாக உடலை தளர்த்தி, அசைவுகளை மெதுவாக்கி, பார்வை வீச்சில் ஒரு பொறுமையை கொண்டு வருவார், அதுவே பார்வையாளனை நம்பி அப்பாத்திரத்தின் செயல்பாடுகளில் ஈடுபாடு கொள்ளச் செய்யும். மெத்தெட் நடிகர்கள் இதையே வலுக்கட்டாயமாக செய்யும் போது அங்கு அந்த பாவனை, வேடம் படக்காட்சி, கதையமைப்பு எல்லாவற்றையும் மீறி தனியாக தெரியும். அமீர் கானில் இருந்து கமல் வரை இந்த பிரச்சனை உண்டு - நான் நிக்கிறேன், நிக்கிறேன் என்பதைப் போல நான் நடிக்கிறேன், நடிக்கிறேன் என படத்துக்குள் ஒரு கட் அவுட் போல தெரிவார்கள். இந்த பாணி ஒரு மேற்கத்திய இறக்குமதி என்பதும் ஒரு பிரச்சனை. ஆனால் ரஜினியின் பாணி இந்திய பண்பாட்டின், தத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது. ஒரு நடிகராக ரஜினி சரிவர புரிந்து கொள்ளப்படுவில்லை என்பது ஒரு சோகம்.
மற்றொரு முக்கிய விசயம் ரஜினியின் நடிப்பில் உள்ள அந்த நுட்பம். தலையை குனிவது, தோள்களை அசைப்பது என சின்னச்சின்ன அசைவுகள் மூலம் நிறைய உணர்த்தக் கூடியவர். ஆனால் அவருடைய படகாட்சிகள் வேகமாய் நகரும் என்பதால் ரசிகர்கள் கவனிப்பதில்லை. ஒரு நடிகராக ரஜினியின் முக்கிய குறை வசன உச்சரிப்பு. இதில் கமல் அவரை ஓவர் டேக் பண்ணி விடுவார். ஆனால் சினிமா ஒரு காட்சி ஊடகம் தானே!
இந்த விஷயங்களை விரிவாக எனது “ரஜினிகாந்த்” நூலில் பேசியுள்ளேன்.

Comments