பாலு மகேந்திரா - ராம் - மாரி செல்வராஜ்: ஒரு பயணம்
இளந்தலைமுறை இயக்குநர்களில் காட்சிமொழியை அவ்வளவு லாவகமாக பயன்படுத்துபவர் மாரி செல்வராஜ். இலக்கிய எழுத்திலும் தனித்திறன் படைத்தவர். இப்படியானவர்கள் அபூர்வம். அவருடைய பரியேறும் பெருமாள் படத்தின் துவக்க காட்சிகளில் ஒன்றில் நாயகனின் வளர்ப்பு வேட்டை நாயை ரயில் பாதையில் கட்டியிட்டு கொலை செய்வார்கள் சாதி வெறியர்கள். அதைத் தொடர்ந்து அதே ரயில் பாதையில் நாயகனை அடித்து போடுவார்கள் அந்த வெறியர்களில் ஒருவன். அந்த நெஞ்சை உடையச் செய்யும் காட்சியானது அவர் உதவி இயக்குநராக வேலை செய்த ராமின் “கற்றது தமிழின்” கிளைமேக்ஸ் காட்சிக்கான ஒரு homage மற்றும் மீளுருவாக்கம் - ராமின் கிளைமேக்ஸில் காதலர்கள் ரயிலில் விழுந்து அந்த இருளில் தம்மை பலிகொடுப்பதாக குறிப்புணர்த்தப்படும் எனில் இங்கு அந்த துயரத்தின் சாதிய பரிமாணத்தை சுட்டி ராம் தொடாத ஒரு சமூக எதார்த்த சித்திரத்தை இட்டு நிரப்பி இருப்பார். ராமின் படத்தில் அக்காட்சி அவரது குருநாதர் பாலுமகேந்திராவின் “மூன்றாம் பிறை” படத்தில் கமலும் ஶ்ரீதேவியும் வரப்போகும் ரயிலின் தடதட ஒலியைக் கேட்டுணர தடத்தில் காதை வைத்து உட்கார்ந்திருக்கும் குழந்தைமையின் கற்பனாவாத தருணத்தின் உருவகத்தின் homage மற்றும் மீளுருவாக்கமாக இருக்கும். பாலுமகேந்திராவோ இதை சத்யஜித்ரேவின் “பதேர் பஞ்சாலி” படத்தில் வரும் பிள்ளைகள் இருவரும் இதே போல ரயிலின் வருகைக்காக காத்திருக்கும் கவிதையான காட்சியின் நினைவுறுத்தலாக, அர்ப்பணிப்பாக செய்திருப்பார் என்பது என் கணிப்பு.
ஒரு வங்காளப் படத்தில் நவீன மாற்றத்தின் எதிர்பார்ப்பை உணர்த்துகிற ஒரு காட்சியை அப்படியே தமிழுக்கு மூன்று சிறந்த இயக்குநர்கள் உள்வாங்கி கொண்டு வந்ததில் எங்கெங்கோ பயணித்து அது என்னென்னவோ அர்த்தங்களை உற்பத்தி பண்ணி ஒரு நிற்காத ரயிலாக எங்கு வந்து சேர்ந்திருக்கிறது என நான் “பரியேறும் பெருமாளைக்” கண்ட போது வியந்தேன். காட்சிமொழியின் மேதைமை மாரிக்கு உள்ளதால் தான் அவரால் ஒரு ரொமாண்டிக்கான காட்சியை எடுத்து வந்து பெருந்துயரத்தின் சமூக அவலத்தின் காட்சியாக அதை மீளமைக்க முடிந்தது.
அதே போல் அபபடத்தின் மையச் சிக்கலை கிளைமேக்ஸில் வரும் அந்த தேநீர் கோப்பை பிம்பத்தில் சுருக்கென உறைய வைத்திருப்பார். யாரால் அதை மறக்க முடியும்?
இந்த ரயில் பாதை காட்சி மட்டுமல்ல, கல்லூரி வகுப்பறை, ஆங்கிலத்தின் அதிகார அரசியல், யாருமில்லாமல் தவிக்கும் நாயகனின் வாழ்வில் தேவதையாக தோன்றும் 'ஆனந்தி' (இப்படத்தில் 'ஜோதி'), அவர்களுடைய உறவுக்கு குறுக்கே வரும் விதி என "கற்றது தமிழின்" சாதி அரசியல்படுத்தபட்ட வாசிப்பாகவே "பரியேறும் பெருமாளை" பார்க்க முடியும்.
ராமின் "கற்றது தமிழில்" வரும் தமிழ் தேசியத்தின் கோபத்தின், இருத்தலியத்தின் அவநம்பிக்கையின் இடத்தில் அம்பேத்கரிய புரட்சியை, மானுடவாதத்தின் நம்பிக்கையை வைத்தால் அதனுடன் மாரியின் கற்பனையை, அனுபவத்தை, தனித்துவமான பார்வையை, அரசியலை கலந்தால் "பரியேறும் பெருமாள்" படம் வந்து விடும்.
மாரியின் இரண்டாவது படமான “கர்ணனும்” மற்றொரு சாதனையாக அமையும் என்பதில் எனக்கு ஐயமில்லை. அதில் என்னென்ன அரசியல் மீளுருவாக்கங்களை முயன்று பார்த்திருக்கிறார் என்பதைக் காண ஆர்வமாக உள்ளேன்.
வாழ்த்துக்கள்!



Comments