என் படைப்புகளை நிறைய பேர் படிக்க வேண்டுமா?
படிக்கலாம். படிக்காமல் இருந்தாலும் ஓக்கே என்பது என் தரப்பு. நிறைய பேர் படிக்கையில் ஒரு கிளுகிளுப்பு உண்டு. ஆனால் அது மலினமானது. எழுதும் போது கிடைக்கும் ஒரு சாகச, transcendental உணர்வு தான் மகத்தானது. ஒரு வாசகன் என் எழுத்து பிரசுரமான பின் அந்த இடத்துக்கு வருவது ஒரு பெரிய அனுபவம் அல்ல. அது என்னை நேரடியாகத் தொட முடியாது.
நாலு பேர் கூடப் படித்தாலோ இல்லாவிட்டாலோ என்னவாகி விடப் போகிறது? எப்படியும் நான் எழுதும் போது அவர்களால் என்னுடன் கூட அதில் பங்கேற்க முடியாது. அது முடிந்த பின் நடக்கும் process தான் வாசிப்பு. அதில் எனக்கு எந்த பங்கும் இல்லை. அது என் காதலியை இன்னொருவன் தொடுவது போல. அப்படியே விட்டுவிட வேண்டியது தான்.
அதனாலே நான் எனக்கு கிடைக்கும் விமர்சனங்களின், பாராட்டுக்களின் அளவை வைத்து கிளுகிளுப்படைவேன், ஆனால் பெருமை கொள்வதில்லை. அதில் கிடைக்கும் ஒரே பயன் ஒரு நம்பிக்கை.
அடுத்து, பதிப்பாளர்களின் மரியாதை. அவ்வளவு தான். இதுவும் கூட ஒரு நிபந்தனைக்கு உட்பட்டதே. ஒரு குப்பையான படைப்பு நிறைய பேரால் பாராட்டப்பட்டால் ஒரு சின்ன அவமதிப்புணர்வே எஞ்சும். ஒரு நுட்பமான பதிப்பாளரும் எந்தளவுக்கு என்னை இந்த எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் பொருட்படுத்துவார்? உள்ளூர அதையும் தாண்டி வேறொரு மதிப்பீடு அவருக்கும் இருக்கும். ஆகையால் எழுத்திற்குள் மதிப்பென்பது வாசகர் எண்ணிக்கை அல்ல. அது பூடகமானது, அரூபமானது.
கடைசியாக, நான் எழுதியது அதற்கு அடுத்த நாள் எனக்கு மறந்து விடும். ஆகையால் என்னை பாராட்டினாலோ திட்டினாலோ "நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்" உணர்வு தான். திரும்ப எதையாவது ஜாலியாக எழுத உட்கார்ந்து விடுவேன்.
ஒவ்வொரு நாளும் புதிய நாள், புதிய சவால், புதிய பஞ்சாயத்து என்பதே எனக்குப் பிடித்த வாழ்க்கை. என் எழுத்துலகம் ஒரு 50 First Dates. நான் அதில் ஒரு ட்ரூ பேரிமோர்.
Comments