Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்திருக்காவிட்டால்?



தேர்தல் அரசியலில் இருமையாக இரு கட்சிகள் இருப்பது அவசியம். இந்த இரட்டைக் கட்சிகளுக்குள் கோட்பாட்டு ரீதியாக ஒரு புரிந்துணர்வு, கொடுக்கல் வாங்கல் இருக்க வேண்டும். கேரளாவின் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் முழுக்க இருவேறு தத்துவங்களுடன் செயல்படுவதில்லை. தமிழகத்தில் திமுக-அதிமுக இருமையும் அப்படித்தான். இக்கட்சிகளை மக்கள் மாறி மாறி தேர்ந்தெடுப்பதனால் ஒரு மாநிலத்தின் நலனுக்கான அடிப்படைக் கொள்கைகளில், சமூகநீதி, மத நல்லிணக்கம், சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு போன்ற விசயங்களில் ஒரு தொடர்ச்சி இருக்கும். ஆனால் கொள்கை அளவில் முற்றிலும் எதிர்முகாமை சேர்ந்த ஒரு கற்பனை அப்படி தேர்தல் களத்தில் மற்றமையாக தோன்றினால் அது ஆபத்தானதாகி விடும் - அது ஒரு கட்சியை முழுக்க அழித்து விட்டு அங்கு நிரந்தரமாக உட்காரப் பார்க்கும்; அது கொள்கை அளவில் ஒரு மிகப்பெரிய உளவியல் தாக்கத்தை, வாழ்வியல் மாற்றத்தை உண்டு பண்ணி மற்ற கட்சி திரும்ப தன்னளவில் தேர்தலில் வென்று வர முடியாத நிலையை ஏற்படுத்தும். மக்களை தமது அடிப்படையான நலன்களுக்கு விரோதமாக சிந்திக்க செய்யும். விளைவாக, ஆட்சியை இழந்த ஒரு கட்சி தன்னை கொள்கை அளவில் அதிகாரத்தில் உள்ள கட்சியை போலச் செய்தாலே தன்னால் உயிர்வாழ முடியும் என நம்பும் இடத்துக்கு நகர்த்தப்படும். 


தேசிய அளவில் இதற்கு சிறந்த உதாரணம் இன்று உள்ள அசகாய வலுக்கொண்ட பாஜக vs  எலும்பும் தோலுமான காங்கிரஸ் இருமுனைப் போட்டி. நீண்ட காலமாக இங்கு [1] இடதுசாரிகள்- [2](அவர்களுக்கு இணக்கமான கட்சிகள்) சிறிது இடதுசாரித்தனம், சிறிது வலதுசாரித்தனம் கலந்து மய்யமாக காங்கிரஸ்-[3]முழு வலதுசாரியான பாஜக என ஒரு கட்சிகளின் இருப்பு உள்ளது. சுதந்திரம் கிடைத்து சுமார் அரை நூற்றாண்டுக்கு இது மய்யமான முற்போக்கு காங்கிரஸ், அதற்கு எதிரணியாக இடதுசாரிகள், மாநில உரிமைகளைக் கோரும் சிறிய கட்சிகள் என ஒரு இருமையாக நீடித்து வந்தது. இது சில முறைகள் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு, கூட்டணி ஆட்சி அமையவும், இந்திரா காந்தி போன்ற ஒரு முன்னோடி சர்வாதிகாரியை எதிர்த்து அரசியல் தலைவர்கள் போராடவும் சாதகமான சூழலை ஏற்படுத்தியது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் சூழலுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்க அக்கட்சி தயங்க வில்லை - ஒரு காலத்தில் (நேருவிய) சோஷலிச நிலைப்பாடு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 90களில் தாராளவாத பொருளாதாரத்துக்கு இந்திய சந்தையை திறந்து விடுவதில் பெரிய தடை இருக்கவில்லை. நடுநடுவே காங்கிரஸ் வீழ்ந்து ஆட்சி மாற்றம் வந்த போதும் அது இந்தியாவை தலைகீழாக புரட்டிப் போடும் மாற்றங்களை உண்டு பண்ணவில்லை. சொல்லப் போனால் பாஜக 98இல் ஆட்சி அமைத்த போது கூட(இப்போது போல) தமது இந்துத்துவ கொள்கைகளை வெளிப்படையாக நடைமுறைப்படுத்த அவர்கள் துணியவில்லை. இது தொடர்ந்து கட்சிகள் மாறி மாறி அதிகாரத்துக்கு வருவதை சாத்தியமாக்கியது; தேசமும் அதன் மக்களும் கொள்கையளவில் தலைகீழாக்கம் செய்யப்படும் நிலையை ஏற்படுத்தவில்லை. ஆனால் 2014இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்த இடதுசாரிகள்-மய்யம்-வலதுசாரிகள் எனும் ஊசலாட்ட அணுகுமுறை அரசியலில் இருந்து முழுமையான வலதுசாரி அரசியலுக்கு நாட்டை ஆட்படுத்தியது. மற்றமையே சாத்தியப்படாத ஒரு தேர்தல் பிரச்சார சூழல், சித்தாந்த நிலை ஏற்பட்டது. ஏனென்றால் மிகத்தீவிரமான ஒரு மதவாத, தேசியவாத, வலதுசாரி கட்சி கொள்கை ரீதியாக தனக்கு நேரெதிர் முகாமில் இருக்கும் ஒரு கட்சியை மற்றமையாகக் கூட அங்கீகரிக்காது. (ஆனால் ஒப்பிடத்தக்க கொள்கை கொண்ட கட்சிகள் அதை அனுமதிக்கும்.)


 இப்போட்டியில் காங்கிரஸால் நிலைக்க முடியாததற்கு ஒரு பிரதான காரணம் அதற்கான வெளியை பாஜக ஒரு போதும் அளிக்காது என்பது தான் - பாஜக கொள்கை அளவில் காங்கிரஸுக்கு முழுக்க எதிர்முகாமை சேர்ந்தது என்பதால் மக்களையும் அது தொடர்ந்து மதவாத அரசியலில் ஈடுபடுத்தி மூளைச்சலவை செய்வதால், அது வாக்கரசியலில் வெற்றியையும் அவர்களுக்கு தருவதால், காங்கிரஸ் இனி தன்னைத்தானே மூளைச்சலவை செய்து கொண்டு தீவிர வலதுசாரி கட்சியாக மாறினாலே ஈடுகொடுக்க முடியும் எனும் நெருக்கடி ஏற்படுகிறது; நிதியளிக்கும் பெருமுதலாளிகளும் காங்கிரஸ் அவ்வாறு தன்னை மறு உருவாக்கம் பண்ணாதவரை அல்லது மக்களின் கொள்கை நிலைப்பாடு மாறியதாக வெளிப்படையாக தெரியாதவரையில் அக்கட்சிக்கு உதவ முன்வராது. ஆக காங்கிரஸ் ஒரே சமயம் கொள்கையளவிலும் நிதியளவிலும் மக்கள் ஆதரவளவிலும் தான் வெளியே தள்ளப்பட்டு விட்டதாக உணர்கிறது; அவநம்பிக்கை கொள்கிறது. இந்த அவநம்பிக்கை அறிவுஜீவிகள். அரசியல் ஆய்வாளர்கள், அரசு அதிகாரிகள் மத்தியிலும் பரவுகிறது. விளைவாக மக்களாட்சியின் தார்மீக வலிமையை நாம் இழந்து, சர்வாதிகாரத்தை நோக்கி சாய்கிறோம். இப்போதுள்ள நிலையில் நாம் ஒன்று தீவிர மதவாத அரசியலையோ அல்லது மயமான மதவாத, சாதிய, தேசியவாத அரசியலையோ மட்டுமே மத்தியில் ஆட்சியில் அமர வைக்க முடியும். இந்த இடப்பெயர்வானது கொடூரமான அல்லது இதமான சர்வாதிகாரிகளிடம் நம்மை நிரந்த அடிமையாக வைத்திருக்கும். தப்பிக்கவே முடியாது. மேலும், நமது நாட்டைப் பொறுத்தமட்டில், தீவிர வலதுசாரிகள், மதவாதிகள் மக்களாட்சிக்கு அனுகூலமானார்கள் அல்ல. போகப் போக அவர்கள் தேர்தலற்ற ஆட்சி முறையை கொண்டு வரவே விரும்புவார்கள்.


சுருக்கமாக, ஒப்பிடத்தக்க முற்போக்கு கொள்கை கொண்ட கட்சிகள் மற்றமையாக, எதிர்க்கட்சியாக இருப்பதே மக்களாட்சி ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு அவசியம். முற்போக்கினரிடம் இருந்து முழுமையாக மாறுபடும் தீவிர வலதுசாரி கட்சி அல்ல.


தமிழகம் இந்நிலையை நோக்கி எதிர்காலத்தில் பயணித்து வருகிறது என்பதே வருத்தத்துக்குரிய சேதி - அதைத் தடுக்க இரண்டு சாத்தியங்களே உள்ளன:

  1) மத்தியில் உள்ள கட்சி அடுத்தடுத்த பாராளுமன்ற தேர்தல்களில் எப்படியோ ஆட்சியை இழக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே என்பதால் அடுத்ததைப் பார்ப்போம்.

   2) இங்கே திமுகவுக்கு மற்றமையாக அதிமுக தொடர்ந்து இருப்பது. வருங்காலத்தில் அதிமுக அழிந்து, அடுத்த 20-30 ஆண்டுகளுக்கு பாஜக மத்தியில் நீடித்து, இங்கு திமுகவும் பலவீனப்பட்டு அதை பயன்படுத்தி பாஜக ஆட்சியைப் பிடித்தால் பத்தே ஆண்டுகளில் இன்று இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நிலை தமிழகத்துக்கும் ஏற்படும். பரந்துபட்ட மதவாத மனப்பான்மை, மூளைச்சலவை, பிளவுவாதம், இந்தியை, வைதீகத்தை மையமிட்ட தேசியவாதம் போன்றவை மக்கள் மனத்தில் ஆழமாக இறங்கும். அவ்வளவு சீக்கிரம் தமிழகம் மாறி விடுமா எனக் கேட்டால் நிச்சயமாக மாற முடியும் என்றே சொல்வேன். ஏனென்றால் பாஜகவின் சித்தாந்தம் மக்களின் பண்பாட்டில் ஒன்று கலந்த பிறகு அதற்கு மற்றமையாக ஒரு திராவிட கட்சி இயங்குவது அசாத்தியம். மத அளவில் தன்னை உருமாற்றிக் கொண்ட ஒரு மொழிவழி தேசியக் கட்சி அல்லது மய்யமான வலதுசாரி கட்சி  - நா.த.க, ம.நீ.ம போல - தோன்றி பாஜகவுக்கு மற்றமையாக உட்கார முடியுமே ஒழிய திமுக, அதிமுகவால் முடியாது. 


முத்தாய்ப்பாக, ஸ்டாலினுக்குப் பின்னும் திமுக இருக்க உதயநிதி அல்ல அதிமுகவே அவசியம். 


இதையே கலைஞர் ஒருமுறை தன் உதவியாளரிடம் சொல்லியதாக செந்தில்வேல் தன் யுடியூப் சேனலில் சொல்லிக் கேட்டேன் - அதாவது “எம்.ஜி.ஆர் அதிமுகவை ஆரம்பித்தது திமுகவுக்கு நல்லது, அல்லாவிடில் நாம் தொடர்ந்து இங்கு மாநில கட்சி vs தேசிய கட்சி எனும் இருமைக்குள்ளே மாடிக் கொண்டு இருப்போம், அது கட்சியின், மாநிலத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல” என்று. இது உண்மையென்றால், கலைஞர் ஒரு தீர்க்கதரிசி தான்!

Comments

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

சாகும்வரை பொழுதுபோக்கு

  "Indeed, we may have reached the point where cosmetics has replaced ideology as the field of expertise over which a politician must have competent control." - Amusing Ourselves to Death, Neil Postman "ஒரு அரசியல் தலைவர் முழுமையான ஆளுகை கொண்டிருக்க வேண்டும் என நம்பிய கருத்தியலை வெளித்தோற்றம் பதிலீடாக்கி விட்ட ஒரு புள்ளியை நாம் இன்று எட்டி விட்டிருக்கிறோம்." "சாகும்வரை பொழுதுபோக்கு", நீல் போஸ்ட்மேன்