Skip to main content

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்திருக்காவிட்டால்?



தேர்தல் அரசியலில் இருமையாக இரு கட்சிகள் இருப்பது அவசியம். இந்த இரட்டைக் கட்சிகளுக்குள் கோட்பாட்டு ரீதியாக ஒரு புரிந்துணர்வு, கொடுக்கல் வாங்கல் இருக்க வேண்டும். கேரளாவின் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் முழுக்க இருவேறு தத்துவங்களுடன் செயல்படுவதில்லை. தமிழகத்தில் திமுக-அதிமுக இருமையும் அப்படித்தான். இக்கட்சிகளை மக்கள் மாறி மாறி தேர்ந்தெடுப்பதனால் ஒரு மாநிலத்தின் நலனுக்கான அடிப்படைக் கொள்கைகளில், சமூகநீதி, மத நல்லிணக்கம், சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு போன்ற விசயங்களில் ஒரு தொடர்ச்சி இருக்கும். ஆனால் கொள்கை அளவில் முற்றிலும் எதிர்முகாமை சேர்ந்த ஒரு கற்பனை அப்படி தேர்தல் களத்தில் மற்றமையாக தோன்றினால் அது ஆபத்தானதாகி விடும் - அது ஒரு கட்சியை முழுக்க அழித்து விட்டு அங்கு நிரந்தரமாக உட்காரப் பார்க்கும்; அது கொள்கை அளவில் ஒரு மிகப்பெரிய உளவியல் தாக்கத்தை, வாழ்வியல் மாற்றத்தை உண்டு பண்ணி மற்ற கட்சி திரும்ப தன்னளவில் தேர்தலில் வென்று வர முடியாத நிலையை ஏற்படுத்தும். மக்களை தமது அடிப்படையான நலன்களுக்கு விரோதமாக சிந்திக்க செய்யும். விளைவாக, ஆட்சியை இழந்த ஒரு கட்சி தன்னை கொள்கை அளவில் அதிகாரத்தில் உள்ள கட்சியை போலச் செய்தாலே தன்னால் உயிர்வாழ முடியும் என நம்பும் இடத்துக்கு நகர்த்தப்படும். 


தேசிய அளவில் இதற்கு சிறந்த உதாரணம் இன்று உள்ள அசகாய வலுக்கொண்ட பாஜக vs  எலும்பும் தோலுமான காங்கிரஸ் இருமுனைப் போட்டி. நீண்ட காலமாக இங்கு [1] இடதுசாரிகள்- [2](அவர்களுக்கு இணக்கமான கட்சிகள்) சிறிது இடதுசாரித்தனம், சிறிது வலதுசாரித்தனம் கலந்து மய்யமாக காங்கிரஸ்-[3]முழு வலதுசாரியான பாஜக என ஒரு கட்சிகளின் இருப்பு உள்ளது. சுதந்திரம் கிடைத்து சுமார் அரை நூற்றாண்டுக்கு இது மய்யமான முற்போக்கு காங்கிரஸ், அதற்கு எதிரணியாக இடதுசாரிகள், மாநில உரிமைகளைக் கோரும் சிறிய கட்சிகள் என ஒரு இருமையாக நீடித்து வந்தது. இது சில முறைகள் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு, கூட்டணி ஆட்சி அமையவும், இந்திரா காந்தி போன்ற ஒரு முன்னோடி சர்வாதிகாரியை எதிர்த்து அரசியல் தலைவர்கள் போராடவும் சாதகமான சூழலை ஏற்படுத்தியது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் சூழலுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்க அக்கட்சி தயங்க வில்லை - ஒரு காலத்தில் (நேருவிய) சோஷலிச நிலைப்பாடு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 90களில் தாராளவாத பொருளாதாரத்துக்கு இந்திய சந்தையை திறந்து விடுவதில் பெரிய தடை இருக்கவில்லை. நடுநடுவே காங்கிரஸ் வீழ்ந்து ஆட்சி மாற்றம் வந்த போதும் அது இந்தியாவை தலைகீழாக புரட்டிப் போடும் மாற்றங்களை உண்டு பண்ணவில்லை. சொல்லப் போனால் பாஜக 98இல் ஆட்சி அமைத்த போது கூட(இப்போது போல) தமது இந்துத்துவ கொள்கைகளை வெளிப்படையாக நடைமுறைப்படுத்த அவர்கள் துணியவில்லை. இது தொடர்ந்து கட்சிகள் மாறி மாறி அதிகாரத்துக்கு வருவதை சாத்தியமாக்கியது; தேசமும் அதன் மக்களும் கொள்கையளவில் தலைகீழாக்கம் செய்யப்படும் நிலையை ஏற்படுத்தவில்லை. ஆனால் 2014இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்த இடதுசாரிகள்-மய்யம்-வலதுசாரிகள் எனும் ஊசலாட்ட அணுகுமுறை அரசியலில் இருந்து முழுமையான வலதுசாரி அரசியலுக்கு நாட்டை ஆட்படுத்தியது. மற்றமையே சாத்தியப்படாத ஒரு தேர்தல் பிரச்சார சூழல், சித்தாந்த நிலை ஏற்பட்டது. ஏனென்றால் மிகத்தீவிரமான ஒரு மதவாத, தேசியவாத, வலதுசாரி கட்சி கொள்கை ரீதியாக தனக்கு நேரெதிர் முகாமில் இருக்கும் ஒரு கட்சியை மற்றமையாகக் கூட அங்கீகரிக்காது. (ஆனால் ஒப்பிடத்தக்க கொள்கை கொண்ட கட்சிகள் அதை அனுமதிக்கும்.)


 இப்போட்டியில் காங்கிரஸால் நிலைக்க முடியாததற்கு ஒரு பிரதான காரணம் அதற்கான வெளியை பாஜக ஒரு போதும் அளிக்காது என்பது தான் - பாஜக கொள்கை அளவில் காங்கிரஸுக்கு முழுக்க எதிர்முகாமை சேர்ந்தது என்பதால் மக்களையும் அது தொடர்ந்து மதவாத அரசியலில் ஈடுபடுத்தி மூளைச்சலவை செய்வதால், அது வாக்கரசியலில் வெற்றியையும் அவர்களுக்கு தருவதால், காங்கிரஸ் இனி தன்னைத்தானே மூளைச்சலவை செய்து கொண்டு தீவிர வலதுசாரி கட்சியாக மாறினாலே ஈடுகொடுக்க முடியும் எனும் நெருக்கடி ஏற்படுகிறது; நிதியளிக்கும் பெருமுதலாளிகளும் காங்கிரஸ் அவ்வாறு தன்னை மறு உருவாக்கம் பண்ணாதவரை அல்லது மக்களின் கொள்கை நிலைப்பாடு மாறியதாக வெளிப்படையாக தெரியாதவரையில் அக்கட்சிக்கு உதவ முன்வராது. ஆக காங்கிரஸ் ஒரே சமயம் கொள்கையளவிலும் நிதியளவிலும் மக்கள் ஆதரவளவிலும் தான் வெளியே தள்ளப்பட்டு விட்டதாக உணர்கிறது; அவநம்பிக்கை கொள்கிறது. இந்த அவநம்பிக்கை அறிவுஜீவிகள். அரசியல் ஆய்வாளர்கள், அரசு அதிகாரிகள் மத்தியிலும் பரவுகிறது. விளைவாக மக்களாட்சியின் தார்மீக வலிமையை நாம் இழந்து, சர்வாதிகாரத்தை நோக்கி சாய்கிறோம். இப்போதுள்ள நிலையில் நாம் ஒன்று தீவிர மதவாத அரசியலையோ அல்லது மயமான மதவாத, சாதிய, தேசியவாத அரசியலையோ மட்டுமே மத்தியில் ஆட்சியில் அமர வைக்க முடியும். இந்த இடப்பெயர்வானது கொடூரமான அல்லது இதமான சர்வாதிகாரிகளிடம் நம்மை நிரந்த அடிமையாக வைத்திருக்கும். தப்பிக்கவே முடியாது. மேலும், நமது நாட்டைப் பொறுத்தமட்டில், தீவிர வலதுசாரிகள், மதவாதிகள் மக்களாட்சிக்கு அனுகூலமானார்கள் அல்ல. போகப் போக அவர்கள் தேர்தலற்ற ஆட்சி முறையை கொண்டு வரவே விரும்புவார்கள்.


சுருக்கமாக, ஒப்பிடத்தக்க முற்போக்கு கொள்கை கொண்ட கட்சிகள் மற்றமையாக, எதிர்க்கட்சியாக இருப்பதே மக்களாட்சி ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு அவசியம். முற்போக்கினரிடம் இருந்து முழுமையாக மாறுபடும் தீவிர வலதுசாரி கட்சி அல்ல.


தமிழகம் இந்நிலையை நோக்கி எதிர்காலத்தில் பயணித்து வருகிறது என்பதே வருத்தத்துக்குரிய சேதி - அதைத் தடுக்க இரண்டு சாத்தியங்களே உள்ளன:

  1) மத்தியில் உள்ள கட்சி அடுத்தடுத்த பாராளுமன்ற தேர்தல்களில் எப்படியோ ஆட்சியை இழக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே என்பதால் அடுத்ததைப் பார்ப்போம்.

   2) இங்கே திமுகவுக்கு மற்றமையாக அதிமுக தொடர்ந்து இருப்பது. வருங்காலத்தில் அதிமுக அழிந்து, அடுத்த 20-30 ஆண்டுகளுக்கு பாஜக மத்தியில் நீடித்து, இங்கு திமுகவும் பலவீனப்பட்டு அதை பயன்படுத்தி பாஜக ஆட்சியைப் பிடித்தால் பத்தே ஆண்டுகளில் இன்று இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நிலை தமிழகத்துக்கும் ஏற்படும். பரந்துபட்ட மதவாத மனப்பான்மை, மூளைச்சலவை, பிளவுவாதம், இந்தியை, வைதீகத்தை மையமிட்ட தேசியவாதம் போன்றவை மக்கள் மனத்தில் ஆழமாக இறங்கும். அவ்வளவு சீக்கிரம் தமிழகம் மாறி விடுமா எனக் கேட்டால் நிச்சயமாக மாற முடியும் என்றே சொல்வேன். ஏனென்றால் பாஜகவின் சித்தாந்தம் மக்களின் பண்பாட்டில் ஒன்று கலந்த பிறகு அதற்கு மற்றமையாக ஒரு திராவிட கட்சி இயங்குவது அசாத்தியம். மத அளவில் தன்னை உருமாற்றிக் கொண்ட ஒரு மொழிவழி தேசியக் கட்சி அல்லது மய்யமான வலதுசாரி கட்சி  - நா.த.க, ம.நீ.ம போல - தோன்றி பாஜகவுக்கு மற்றமையாக உட்கார முடியுமே ஒழிய திமுக, அதிமுகவால் முடியாது. 


முத்தாய்ப்பாக, ஸ்டாலினுக்குப் பின்னும் திமுக இருக்க உதயநிதி அல்ல அதிமுகவே அவசியம். 


இதையே கலைஞர் ஒருமுறை தன் உதவியாளரிடம் சொல்லியதாக செந்தில்வேல் தன் யுடியூப் சேனலில் சொல்லிக் கேட்டேன் - அதாவது “எம்.ஜி.ஆர் அதிமுகவை ஆரம்பித்தது திமுகவுக்கு நல்லது, அல்லாவிடில் நாம் தொடர்ந்து இங்கு மாநில கட்சி vs தேசிய கட்சி எனும் இருமைக்குள்ளே மாடிக் கொண்டு இருப்போம், அது கட்சியின், மாநிலத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல” என்று. இது உண்மையென்றால், கலைஞர் ஒரு தீர்க்கதரிசி தான்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...