Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

கர்ணன்


முதலில் எனக்குப் பிடித்த விசயங்கள்:


1) அந்த பரந்துபட்ட திரைச்சட்டகம் - அது ஒரு ஐரோப்பிய செவ்வியல் ஓவியம் போல இருக்கிறது. நிறைய மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பட்டாம்பூச்சிகள், மீன் என. அவ்வளவு அழகியல் பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்ட கிராமத்தை வேறெங்கும் பார்க்க முடியாது. அதுவும் பிற உயிரினங்களுக்கு மனிதர்களுக்கு இணையாக கொடுக்கப்படும் இடம், இது பாரதிராஜாவின் கிராமிய படங்களில் ஆடுமாடுகள் தோளில் போட்டுக்கொள்ளத்தாக்க உடைமைகளாக வருவதில் இருந்து முழுக்க வேறானது. இது வேறொரு கருத்தியல்.


2) கழுதை, குதிரை, வாள், பருந்து போன்ற உருவகங்களை உணர்ச்சிகரமாக பயன்படுத்தி இருப்பது. இது எனக்கு எண்பதுகளின் புரட்சிகர படங்களை நினைவுபடுத்தியது. இதற்கு முந்தின படங்களிலும் இத்தகைய பண்பு உண்டு. ஆனால் நமது சமகால auteur இயக்குநர்கள் சற்று அந்நியமாக, சிந்திக்க வைக்கும் நோக்கில் உருவகங்களை பயன்படுத்துவார்கள். ஆனால் மாரி இதை செய்வதில்லை என்பதை பாராட்டத்தக்கது. மேலும் உருவகங்கள் துருத்தி நிற்காமல் கதையோட்டத்தின் பகுதியாக உள்ளன. படத்தொகுப்பையும் பாராட்டலாம்.


3) நாட்டார் கலைகளை சரளமாக பயன்படுத்தி இக்கதையை சற்றே மாய எதார்த்த பாணியில் காட்சிப்படுத்தி இருப்பது. கர்ணனின் தங்கை ஒரு நாட்டார் தெய்வமாக படம் நெடுக வருவது வித்தியாசமாக அழகாக இருந்தது. 


4) மேற்சொன்ன நாட்டார் கலைகள் ஊடுபாவும் போக்கு இப்படத்தில் வன்முறையை அழகியலுடன் ரசிக்கத்தக்க வகையில் காட்ட மாரிக்கு உதவுகிறது. பழிவாங்கல் என்பதே ஒரு நாட்டார் சடங்காக மாறுகிறது. அதற்கு முன்கூறலாக அந்த ஆரம்ப காட்சியில் கர்ணன் மீனை பறந்து வெட்டுவது அமைந்திருக்கிறது. (என்ன அந்த காட்சியில் காற்றில் தனுஷ் அடிக்கிற பல்டியை தவிர்த்திருக்கலாம்.) குதிரை, வாள் போன்ற உருவகங்களும் அப்படியே இதற்கு உதவுகின்றன. கர்ணனை ஒரு முழுமையான யதார்த்த கதையாக பார்க்காமல் இருப்பது இதன் ரசனைக்கு உதவும். எனக்கு இதிலுள்ள சண்டைகாட்சி பகுதிகள் ஏனோ Desparado படத்தை நினைவுபடுத்தியது. அப்படத்தில் போல வன்முறையில் சித்தரிப்பதில் ஒருவித சிலாக்கியம் இதிலும் உள்ளது. ஆனால் மிகை-புனைவாக அன்றி எதார்த்தமாக பண்ணியிருக்கிறார்கள்.


5) கொடியங்குளம் வன்முறை கால் நூற்றாண்டுக்குப் பின்னரே இங்கே படமாகிறது என்பதே நமது படங்களின் அரசியலின்மைக்கு சான்று. மாரியின் பங்களிப்பு அவ்வியசத்தில் பாராட்டத்தக்கது. 


6) இப்படத்தில் கர்ணனுக்கும் ஏமனுக்குமான காட்சிகள் ஒரு bromance போன்றே உள்ளது. கிளைமேக்ஸிலும் நாயகனுக்கு ஒரு உணர்ச்சிகர தூண்டுதலை, உந்தித்தள்ளலை அளிப்பது தாய் அவமானப்படுத்தப்படுவதோ காதலி கடத்தப்படுவதோ அல்ல. காலங்காலமாக நம் படங்களில் அப்படித்தான் வரும். ஆனால் “கர்ணனிலோ” தாத்தா நெருப்பில் குளிப்பதே அந்த emotional pushஐ அளிக்கிறது, கர்ணனுக்கும் நமக்கும். அதே போல தங்கையின் நினைவைத் தூண்டும் தாத்தாவின் கனவு, காவல் நிலையத்தில் நின்று துணிச்சலாக பேசி அடிவாங்கி அந்த காயங்களால் காலமாகும் வயதான, இளைஞர்களான ஆண்கள், கர்ணனின் காலைப் பற்றி அவனை ஊரை விட்டு போகக் கேட்கும் பெரியவர்கள், முதலில் காவலர்களை நோக்கி கல்லை வீசி எறியும் சிறுவன் என முழுக்க முழுக்க இது ஆண்களின் உணர்ச்சித் தளமே. நீண்ட காலமாக பெண்களை மன எழுச்சிக்கான பாத்திரங்களாக இவர்கள் காட்டிக் காட்டி அதைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பெண்களுக்குமே அலுத்திருக்கும். இப்படத்திலும் ஆரம்பத்தில் ஒரு இளம்பெண்ணின் உருவத்தை ஆபாசமாக ஒரு மேல்சாதிக்காரர் வரையும் காட்சி வருகிறது. ஆனால் அக்காட்சி முடியும் போது அடிவாங்கி அவமானப்படுவது அவளுடைய அப்பாவே.  


7.  சந்தோஷ் நாராயணனின் அபாரமான இசை.


இனி குறைகள்:


8. கொடியங்குளம் இன அழித்தொழிப்பு முயற்சி இப்படத்தில் வருவது போல வெறுமனே ஒரு உயர்சாதி போலீஸ் அதிகாரியின் வெறியினால், அகங்காரத்தால் நிகழ்ந்தது அல்ல. அதன் பின்னால் சசிகலாவின் சாதி வெறியும், அதிகார குவிப்பை உறுதிப்படுத்தும் பதற்றமும் இருந்தது. அவர் அனுப்பிய இனவெறி விலங்குகளான சில போலீஸ் அதிகாரிகள் இருந்தார்கள். அவர்களுடன் தாக்குதல் நடந்த நாள் கூடவே களமிறங்கிய தேவர் சாதி அடியாட்கள் இருந்தார்கள். அம்மக்களின் கௌவரத்தை அழிக்க மட்டுமல்ல, அவர்களுடைய பணத்தை, நகைகளை கொள்ளையடிப்பது அவர்களின் நோக்கமாக இருந்தது. அவர்கள் அன்று கிராமத்தை விட்டகன்ற போது வீட்டு வாயில்களில் ஊர் தலித்துகளின் கைகால்கள் வெட்டப்பட்டு சிதறிக்கிடந்தன. அவர்கள் அன்று திட்டமிட்டு கிணறுகளில் நஞ்சைக் கலந்தார்கள். தலித் பெண்களை பலாத்காரம் செய்தார்கள். இதையெல்லாம் ஒப்பிடும் போது மாரி இப்படத்தில் காவலர்கள் + தேவர் சாதி அடியாட்களை நல்லவர்களாகவே காட்டி இருக்கிறார். உண்மையில், அவர்கள் வெறும் லத்தி சார்ஜ் மட்டும் செய்வதற்காக, சிலரை கைது செய்வதற்காக வரவில்லை. அவர்கள் கொல்ல, கொள்ளையடிக்க, பெண்களை பலாத்கார செய்ய வந்தார்கள். உடம்பை முண்டமாக்க வந்தார்கள். நிஜக் காவலர்களின் தீமை இப்படத்தில் முழுக்க காட்டப்படவில்லை என்பது மட்டுமல்ல, கிளைமேக்ஸ் வன்முறை நிகழும் முன்பு உயர்சாதி தலைவர் தனக்கு இதில் உடன்பாடில்லை எனச் சொல்லி நகர்ந்து விடுகிறார். இதுவும் உண்மையில்லை. அதிமுக, கொடியங்குளத்தை ஒட்டிய ஊர்களில் வசிக்கும் தேவர்கள், காவல் துறை இம்மூன்று தரப்பினரையும் ரொம்ப சீண்டவோ விமர்சிக்கவோ வேண்டாம் எனும் அழுத்தம் மாரிக்கு இருந்திருக்கலாம். வேறு யாராவது இந்த உண்மைகளை முழுமையாக அம்பலப்படுத்தி மற்றொரு படம் எடுக்க வேண்டும். அப்போதே பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு நீதி கிடைக்கும். (அதோடு இந்த கொடுங்குற்றத்துக்கு காரணமாக இருந்த அரசியல்வாதிகள், காவல் அதிகாரிகளை சிறையில் தள்ளும் காலமும் ஒருநாள் வர வேண்டும்.)

9. என்னதான் காட்சிமொழி சிறப்பாக இருந்தாலும், உணர்வுரீதியாக இப்படம் திருப்தி அளிக்கவில்லை. காரணம் இது ஒரு தனிமனிதனின் கதையா இல்லை ஊரின் கதையா எனும் குழப்பம் இயக்குனருக்கு இருந்திருக்கிறது. இதை ஓரளவுக்கு சரி செய்யவே அவர் துவக்கத்தில் சாலையில் கிடந்து சாகும் சிறுமியை கொண்டு வந்து அவளுடைய சாவை கர்ணனுடன் தொடர்பு படுத்துகிறார். ஆனால் கர்ணனின் தேவை தான் என்ன என்பது தெளிவாக இல்லை. அவன் அதை அடைகிறானா என்பதும் தான். அவன் தனக்கு நேரும் பிரச்சனைகளுக்கு விடை தேடுகிறான், மோதுகிறான், அடிபடுகிறான், இறுதியில் பழிவாங்குகிறான், மீண்டு வருகிறான். இந்த தொடர் செயல்களில் அவனுடைய தனிப்பட்ட முயற்சிகள், திட்டங்கள், தீர்மானங்கள் ஒன்றுமில்லை என்பதை கவனிக்கலாம். இந்த போதாமையை உணர்ந்தோ ஏனோ இயக்குநர் நிறைய உணர்ச்சிகரமான காட்சிகளை அங்கங்கே வைக்கிறார். பொதுவாக இப்படியான ஊர் மக்களுக்கு நீதி கோரும் கதைகளில் ஊர்ப்பிரச்சனை ஒரு பின்னணியாக மட்டும் வரும். அதனுள் ஒரு தனிமனிதன், அவன் சம்மந்தட்ட சிலர், அவர்களுடைய ஒரு பிரச்சனை (அது ஊர்ப்பிரச்சனையுடன் மறைமுகமாக சம்மந்தப்பட்டிருக்கும்), அவன் அதை எப்படி சரி செய்து தீர்வு காண்கிறான் என இருக்கும் (“அசுரன்”, “காலா”, ஷோபா சக்தியின் “தீபன்” ). அப்படி எடுக்கப்படும் போது அந்த பாத்திரத்துடன் மனம் ஒன்றி கதையை உணர்ச்சிகரமாகத் தொடர வசதியாக இருக்கும். ஏனென்றால் திரைக்கதையானது அடிப்படையில் சிறுகதையின் நீட்டிக்கப்பட்ட வடிவம். அதில் ஊரின் கதைகளை சொல்வது கடினம். மாரி அவ்விசயத்தில் தான் கோட்டை விட்டிருக்கிறார்.

10. தனுஷுக்காக வைக்கப்பட்ட ஹீரோயிசக் காட்சிகள் எடுபடவில்லை, கதையுடன் பொருந்தவில்லை.

11. நடிகர்களின் தேர்வு - ரஜீஷா விஜயன், கௌரி கிஷன் ஆகியோரின் தோற்றம் இப்படத்தில் பொருந்தவில்லை. ஏதோ கொடியங்குளத்துக்கு சுற்றுலா வந்தவர்களைப் போல இருக்கிறார்கள். தமிழ்ப் பெண்களை இவர்களிடத்தில் தேர்வு செய்திருக்கலாம். அல்லது பாலுமகேந்திரா போல கறுப்பழகிகளை கொண்டு வந்திருக்கலாம். அதே போல, யோகி பாபு, ஷண்முகராஜா போன்றோரின் வேற்று மாவட்ட தமிழ் உறுத்தலாக இருக்கிறது. இவர்களுக்கு இன்னும் பயிற்சி அளித்து நெல்லை மொழியை ஒழுங்காக பேச வைத்திருக்கலாம். ஒரு நல்ல படத்தில் இத்தகையோரைப் பார்க்கும் போது பழைய தோனி அணியில் சீனியாரிட்டிக்கும், நட்சத்திர மதிப்புக்குமாக வயசாளிகளை தூக்கி சுமந்தது நினைவு வருகிறது. ஒரு புதிய களம், கதை, பிரச்சனை, அழகியல் என வரும் படத்தில் துணைப்பாத்திரங்களையும் புதிதாக எடுக்கலாம்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...