Skip to main content

கர்ணன்


முதலில் எனக்குப் பிடித்த விசயங்கள்:


1) அந்த பரந்துபட்ட திரைச்சட்டகம் - அது ஒரு ஐரோப்பிய செவ்வியல் ஓவியம் போல இருக்கிறது. நிறைய மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பட்டாம்பூச்சிகள், மீன் என. அவ்வளவு அழகியல் பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்ட கிராமத்தை வேறெங்கும் பார்க்க முடியாது. அதுவும் பிற உயிரினங்களுக்கு மனிதர்களுக்கு இணையாக கொடுக்கப்படும் இடம், இது பாரதிராஜாவின் கிராமிய படங்களில் ஆடுமாடுகள் தோளில் போட்டுக்கொள்ளத்தாக்க உடைமைகளாக வருவதில் இருந்து முழுக்க வேறானது. இது வேறொரு கருத்தியல்.


2) கழுதை, குதிரை, வாள், பருந்து போன்ற உருவகங்களை உணர்ச்சிகரமாக பயன்படுத்தி இருப்பது. இது எனக்கு எண்பதுகளின் புரட்சிகர படங்களை நினைவுபடுத்தியது. இதற்கு முந்தின படங்களிலும் இத்தகைய பண்பு உண்டு. ஆனால் நமது சமகால auteur இயக்குநர்கள் சற்று அந்நியமாக, சிந்திக்க வைக்கும் நோக்கில் உருவகங்களை பயன்படுத்துவார்கள். ஆனால் மாரி இதை செய்வதில்லை என்பதை பாராட்டத்தக்கது. மேலும் உருவகங்கள் துருத்தி நிற்காமல் கதையோட்டத்தின் பகுதியாக உள்ளன. படத்தொகுப்பையும் பாராட்டலாம்.


3) நாட்டார் கலைகளை சரளமாக பயன்படுத்தி இக்கதையை சற்றே மாய எதார்த்த பாணியில் காட்சிப்படுத்தி இருப்பது. கர்ணனின் தங்கை ஒரு நாட்டார் தெய்வமாக படம் நெடுக வருவது வித்தியாசமாக அழகாக இருந்தது. 


4) மேற்சொன்ன நாட்டார் கலைகள் ஊடுபாவும் போக்கு இப்படத்தில் வன்முறையை அழகியலுடன் ரசிக்கத்தக்க வகையில் காட்ட மாரிக்கு உதவுகிறது. பழிவாங்கல் என்பதே ஒரு நாட்டார் சடங்காக மாறுகிறது. அதற்கு முன்கூறலாக அந்த ஆரம்ப காட்சியில் கர்ணன் மீனை பறந்து வெட்டுவது அமைந்திருக்கிறது. (என்ன அந்த காட்சியில் காற்றில் தனுஷ் அடிக்கிற பல்டியை தவிர்த்திருக்கலாம்.) குதிரை, வாள் போன்ற உருவகங்களும் அப்படியே இதற்கு உதவுகின்றன. கர்ணனை ஒரு முழுமையான யதார்த்த கதையாக பார்க்காமல் இருப்பது இதன் ரசனைக்கு உதவும். எனக்கு இதிலுள்ள சண்டைகாட்சி பகுதிகள் ஏனோ Desparado படத்தை நினைவுபடுத்தியது. அப்படத்தில் போல வன்முறையில் சித்தரிப்பதில் ஒருவித சிலாக்கியம் இதிலும் உள்ளது. ஆனால் மிகை-புனைவாக அன்றி எதார்த்தமாக பண்ணியிருக்கிறார்கள்.


5) கொடியங்குளம் வன்முறை கால் நூற்றாண்டுக்குப் பின்னரே இங்கே படமாகிறது என்பதே நமது படங்களின் அரசியலின்மைக்கு சான்று. மாரியின் பங்களிப்பு அவ்வியசத்தில் பாராட்டத்தக்கது. 


6) இப்படத்தில் கர்ணனுக்கும் ஏமனுக்குமான காட்சிகள் ஒரு bromance போன்றே உள்ளது. கிளைமேக்ஸிலும் நாயகனுக்கு ஒரு உணர்ச்சிகர தூண்டுதலை, உந்தித்தள்ளலை அளிப்பது தாய் அவமானப்படுத்தப்படுவதோ காதலி கடத்தப்படுவதோ அல்ல. காலங்காலமாக நம் படங்களில் அப்படித்தான் வரும். ஆனால் “கர்ணனிலோ” தாத்தா நெருப்பில் குளிப்பதே அந்த emotional pushஐ அளிக்கிறது, கர்ணனுக்கும் நமக்கும். அதே போல தங்கையின் நினைவைத் தூண்டும் தாத்தாவின் கனவு, காவல் நிலையத்தில் நின்று துணிச்சலாக பேசி அடிவாங்கி அந்த காயங்களால் காலமாகும் வயதான, இளைஞர்களான ஆண்கள், கர்ணனின் காலைப் பற்றி அவனை ஊரை விட்டு போகக் கேட்கும் பெரியவர்கள், முதலில் காவலர்களை நோக்கி கல்லை வீசி எறியும் சிறுவன் என முழுக்க முழுக்க இது ஆண்களின் உணர்ச்சித் தளமே. நீண்ட காலமாக பெண்களை மன எழுச்சிக்கான பாத்திரங்களாக இவர்கள் காட்டிக் காட்டி அதைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பெண்களுக்குமே அலுத்திருக்கும். இப்படத்திலும் ஆரம்பத்தில் ஒரு இளம்பெண்ணின் உருவத்தை ஆபாசமாக ஒரு மேல்சாதிக்காரர் வரையும் காட்சி வருகிறது. ஆனால் அக்காட்சி முடியும் போது அடிவாங்கி அவமானப்படுவது அவளுடைய அப்பாவே.  


7.  சந்தோஷ் நாராயணனின் அபாரமான இசை.


இனி குறைகள்:


8. கொடியங்குளம் இன அழித்தொழிப்பு முயற்சி இப்படத்தில் வருவது போல வெறுமனே ஒரு உயர்சாதி போலீஸ் அதிகாரியின் வெறியினால், அகங்காரத்தால் நிகழ்ந்தது அல்ல. அதன் பின்னால் சசிகலாவின் சாதி வெறியும், அதிகார குவிப்பை உறுதிப்படுத்தும் பதற்றமும் இருந்தது. அவர் அனுப்பிய இனவெறி விலங்குகளான சில போலீஸ் அதிகாரிகள் இருந்தார்கள். அவர்களுடன் தாக்குதல் நடந்த நாள் கூடவே களமிறங்கிய தேவர் சாதி அடியாட்கள் இருந்தார்கள். அம்மக்களின் கௌவரத்தை அழிக்க மட்டுமல்ல, அவர்களுடைய பணத்தை, நகைகளை கொள்ளையடிப்பது அவர்களின் நோக்கமாக இருந்தது. அவர்கள் அன்று கிராமத்தை விட்டகன்ற போது வீட்டு வாயில்களில் ஊர் தலித்துகளின் கைகால்கள் வெட்டப்பட்டு சிதறிக்கிடந்தன. அவர்கள் அன்று திட்டமிட்டு கிணறுகளில் நஞ்சைக் கலந்தார்கள். தலித் பெண்களை பலாத்காரம் செய்தார்கள். இதையெல்லாம் ஒப்பிடும் போது மாரி இப்படத்தில் காவலர்கள் + தேவர் சாதி அடியாட்களை நல்லவர்களாகவே காட்டி இருக்கிறார். உண்மையில், அவர்கள் வெறும் லத்தி சார்ஜ் மட்டும் செய்வதற்காக, சிலரை கைது செய்வதற்காக வரவில்லை. அவர்கள் கொல்ல, கொள்ளையடிக்க, பெண்களை பலாத்கார செய்ய வந்தார்கள். உடம்பை முண்டமாக்க வந்தார்கள். நிஜக் காவலர்களின் தீமை இப்படத்தில் முழுக்க காட்டப்படவில்லை என்பது மட்டுமல்ல, கிளைமேக்ஸ் வன்முறை நிகழும் முன்பு உயர்சாதி தலைவர் தனக்கு இதில் உடன்பாடில்லை எனச் சொல்லி நகர்ந்து விடுகிறார். இதுவும் உண்மையில்லை. அதிமுக, கொடியங்குளத்தை ஒட்டிய ஊர்களில் வசிக்கும் தேவர்கள், காவல் துறை இம்மூன்று தரப்பினரையும் ரொம்ப சீண்டவோ விமர்சிக்கவோ வேண்டாம் எனும் அழுத்தம் மாரிக்கு இருந்திருக்கலாம். வேறு யாராவது இந்த உண்மைகளை முழுமையாக அம்பலப்படுத்தி மற்றொரு படம் எடுக்க வேண்டும். அப்போதே பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு நீதி கிடைக்கும். (அதோடு இந்த கொடுங்குற்றத்துக்கு காரணமாக இருந்த அரசியல்வாதிகள், காவல் அதிகாரிகளை சிறையில் தள்ளும் காலமும் ஒருநாள் வர வேண்டும்.)

9. என்னதான் காட்சிமொழி சிறப்பாக இருந்தாலும், உணர்வுரீதியாக இப்படம் திருப்தி அளிக்கவில்லை. காரணம் இது ஒரு தனிமனிதனின் கதையா இல்லை ஊரின் கதையா எனும் குழப்பம் இயக்குனருக்கு இருந்திருக்கிறது. இதை ஓரளவுக்கு சரி செய்யவே அவர் துவக்கத்தில் சாலையில் கிடந்து சாகும் சிறுமியை கொண்டு வந்து அவளுடைய சாவை கர்ணனுடன் தொடர்பு படுத்துகிறார். ஆனால் கர்ணனின் தேவை தான் என்ன என்பது தெளிவாக இல்லை. அவன் அதை அடைகிறானா என்பதும் தான். அவன் தனக்கு நேரும் பிரச்சனைகளுக்கு விடை தேடுகிறான், மோதுகிறான், அடிபடுகிறான், இறுதியில் பழிவாங்குகிறான், மீண்டு வருகிறான். இந்த தொடர் செயல்களில் அவனுடைய தனிப்பட்ட முயற்சிகள், திட்டங்கள், தீர்மானங்கள் ஒன்றுமில்லை என்பதை கவனிக்கலாம். இந்த போதாமையை உணர்ந்தோ ஏனோ இயக்குநர் நிறைய உணர்ச்சிகரமான காட்சிகளை அங்கங்கே வைக்கிறார். பொதுவாக இப்படியான ஊர் மக்களுக்கு நீதி கோரும் கதைகளில் ஊர்ப்பிரச்சனை ஒரு பின்னணியாக மட்டும் வரும். அதனுள் ஒரு தனிமனிதன், அவன் சம்மந்தட்ட சிலர், அவர்களுடைய ஒரு பிரச்சனை (அது ஊர்ப்பிரச்சனையுடன் மறைமுகமாக சம்மந்தப்பட்டிருக்கும்), அவன் அதை எப்படி சரி செய்து தீர்வு காண்கிறான் என இருக்கும் (“அசுரன்”, “காலா”, ஷோபா சக்தியின் “தீபன்” ). அப்படி எடுக்கப்படும் போது அந்த பாத்திரத்துடன் மனம் ஒன்றி கதையை உணர்ச்சிகரமாகத் தொடர வசதியாக இருக்கும். ஏனென்றால் திரைக்கதையானது அடிப்படையில் சிறுகதையின் நீட்டிக்கப்பட்ட வடிவம். அதில் ஊரின் கதைகளை சொல்வது கடினம். மாரி அவ்விசயத்தில் தான் கோட்டை விட்டிருக்கிறார்.

10. தனுஷுக்காக வைக்கப்பட்ட ஹீரோயிசக் காட்சிகள் எடுபடவில்லை, கதையுடன் பொருந்தவில்லை.

11. நடிகர்களின் தேர்வு - ரஜீஷா விஜயன், கௌரி கிஷன் ஆகியோரின் தோற்றம் இப்படத்தில் பொருந்தவில்லை. ஏதோ கொடியங்குளத்துக்கு சுற்றுலா வந்தவர்களைப் போல இருக்கிறார்கள். தமிழ்ப் பெண்களை இவர்களிடத்தில் தேர்வு செய்திருக்கலாம். அல்லது பாலுமகேந்திரா போல கறுப்பழகிகளை கொண்டு வந்திருக்கலாம். அதே போல, யோகி பாபு, ஷண்முகராஜா போன்றோரின் வேற்று மாவட்ட தமிழ் உறுத்தலாக இருக்கிறது. இவர்களுக்கு இன்னும் பயிற்சி அளித்து நெல்லை மொழியை ஒழுங்காக பேச வைத்திருக்கலாம். ஒரு நல்ல படத்தில் இத்தகையோரைப் பார்க்கும் போது பழைய தோனி அணியில் சீனியாரிட்டிக்கும், நட்சத்திர மதிப்புக்குமாக வயசாளிகளை தூக்கி சுமந்தது நினைவு வருகிறது. ஒரு புதிய களம், கதை, பிரச்சனை, அழகியல் என வரும் படத்தில் துணைப்பாத்திரங்களையும் புதிதாக எடுக்கலாம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...