Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஏன் மோடியை மட்டும் பழிப்பதில் அர்த்தமில்லை?



நாம் ஒரு மோசமான தலைவரை பழித்து விட்டு அவருக்கு வாக்களித்த மக்களை அப்பாவிகளாக காண முடியுமா? நீங்கள் சமைத்த சாப்பாடு கேவலமாக இருக்கிறது எனில் சாப்பாட்டை மட்டும் பழிப்பதில் அர்த்தமுண்டா? சமைத்தவர் அல்லவா பொறுப்பேற்க வேண்டும். அப்படி சமைக்க காரணமாக இருந்த சூழலை அல்லவா அகற்ற வேண்டும்.

இன்று தேசம் உள்ள நிலைக்கு இந்திய மக்களின் மதவெறியும் அதன் காரணமாக அவர்கள் இரு தேர்தல்களில் பாஜகவை ஆதரித்தது முக்கிய காரணம். இந்த மதவெறி மட்டுப்படாவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளும் பாஜக ஆண்டு இந்நாட்டை சுடுகாடாக்கும்!


ஆனால் நாம் இந்த படுபாதக நிலைக்கு வாக்காளர்களுக்கு உள்ள பங்கைப் பற்றி பேசாமல் தொடர்ந்து "மோடி ஏமாற்றி விட்டார்" என புலம்பிக் கொண்டிருப்போம். ஏனென்றால் மக்களாட்சி அமைப்பின் முக்கியமான பலவீனம் ஒன்றைப் பேச நாம் தொடர்ந்து தயங்கி வருகிறோம் - அது தேசியவாதமும், மதவாதமும் எப்படி மக்களாட்சியின் சாவுமணிகள் என்பது.


 எந்த மக்களாட்சியிலும் இந்த இரண்டுக்கும் தடையில்லை; ஏனென்றால் அரசியல் தலைவர்களுக்கு மக்களை திசைதிருப்பி சுரண்ட இவை தேவையாக உள்ளன. மோசமான குரூரமான தலைவர்கள் இந்த இரண்டையும் பயன்படுத்தி சர்வாதிகாரிகள் ஆகிறார்கள்; தன்னலத்துக்காக ராணுவத்தை ஏவி அண்டை நாடுகளை உடைக்கிறார்கள், உள்நாட்டுப் போரை ஏற்படுத்துகிறார்கள், அந்த போர்ச்சூழலால் தேசியவாத அலையைத் தூண்டி தேர்தலில் வென்று வலிமையான தலைவர்கள் என பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். மேற்கில் இதற்கு முசோலினி, ஹிட்லரில் இருந்து டிரம்ப் வரை ஏராளமான உதாரணங்கள் உண்டு. இதை வலதுசாரி அரசியலின் எழுச்சி என நாம் கடந்து விட முடியாது. ஏனென்றால் அது உண்மை அல்ல. மேற்கில் மதவாதமும் இனவாதமும் என்றால் இந்தியாவில் மதவாதமும் சாதிய அடிமை மனநிலையும் மக்களாட்சியின் சாவுமணிகளாக உள்ளன. உலகம் முழுக்க பெருமுதலாளிகள் மக்களை கேள்வியெழுப்பும் விழைவற்ற அடிமைகளாக தக்க வைக்க இந்த இரண்டையும் ஊடகங்கள், மத நிறுவனங்கள், ஆயுத உற்பத்தி, கட்சிக்கான நிதியுதவி மூலம் ஊக்குவிக்கின்றன.


 இந்த விசயத்தில் நமது ஜீக்குப் பின்னால் வரலாற்றில் இந்திரா காந்தியும் அவரது மகன் ராஜீவ் காந்தியும் இருக்கிறார்கள். இருவரையும் நான் ஜீயை விட கொடூரமான தலைவர்கள் என்பேன். அவர்களை ஆதரித்த மக்களுக்கு அன்றிருந்த அதே தேசியவாத வெறி, சர்வாதிகார ஆதரவு மனநிலை தான் இன்றும் ஜீயை அதிகாரத்தில் தக்க வைக்கிறது. அது ஒரு கொடுவாள், அதை யாரும் எடுத்து பயன்படுத்தலாம் என நமது அரசியலமைப்பு - மறைமுகமாக, நைசாக - அனுமதிக்கிறது. அதனால் தான் மதச்சின்னங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்துவதை, மதத்தின் பெயரால் பிளவுவாதத்தில் ஈடுபடுவதை தடை செய்ய காந்தி, நேரு என யாருமே பெரிய முயற்சிகள் எடுக்கவில்லை. தாகூரைப் போன்ற சிலர் மட்டுமே தேசியவாதத்தின் ஆபத்தை அறைகூவி வந்தார்கள். ஆனால் அன்றைய காந்திய ஆதரவு, இந்து மதவெறியின் அலைகளில் இந்த எச்சரிக்கைகள் அடித்து செல்லப்பட்டன.


 யோசித்துப் பாருங்கள் - இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு ஏற்பட்ட மிகப்பெரிய கலவரங்கள் மதத்தின் பெயரால் ஜின்னாவாலும் இந்து மகாசபை தலைவர்களாலும், ஆங்கிலேய அதிகாரிகளின் துணையுடன், நடத்தப்பட்டவை. விளைவாக பாகிஸ்தான் பிரிவினை, கொடூரமான படுகொலைகள் நிகழ்ந்தன. கொஞ்சமாவது பொறுப்புணர்வு இருந்திருந்தால் அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் "மதத்தையும் அரசியலையும் தனித்தனியாக பாவிக்க வேண்டும், ஒரு அரசியல் மேடையில் ஒரு மதத்தலைவர் வந்தாலோ,  அவர் ஒரு கட்சியை ஆதரித்துப் பேசி அதை அக்கட்சி கண்டிக்காவிடிலோ, அக்கட்சி மதச்சின்னங்களை எந்த ரீதியிலாவது பயன்படுத்தினாலோ அது நிரந்தரமாக தடை செய்யப்படும்" என ஒரு சட்டத்தை இயற்றி இருக்க வேண்டும். ஒரு மதசார்பற்ற நாட்டின் அரசியல் அப்படித் தானே இருக்க வேண்டும்? 


ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை; ஏனென்றால் India after Gandhi நூலில் ராமசந்திர குஹா சொல்வதைப் போல அன்றைய காங்கிரஸுக்குள் ஏகப்பட்ட சங்கிகள் ஸ்லீப்பர் செல்களாக செயல்பட்டனர். அதனாலே மதவாதத்தின் விளைவாக காந்தி படுகொலையான பின்னரும் அதை ஒரு பெரிய ஆபத்தாக காங்கிரஸ் கருதாமல், அப்படுகொலைக்கு தார்மீக ஆதரவும் உதவியும் வழங்கிய ஆர்.எஸ்.எஸ்ஸை தற்காலிகமாக தடை செய்தது. இந்த துரோகம், பாசாங்கு,  தவறு பின்னர் இந்திராவின் வடிவில் இந்தியாவையும் ராஜீவின் வடிவில் ஈழத்தமிழர்களையும் பாம்பாக மாறிக் கொத்தியது. அதே தவறு தான் 2014இல் காங்கிரஸின் முழுமையான அழிவுக்கும் இந்தியா ஒரு சர்வாதிகார அடிமை நாடாக மாறவும், இப்போது கொரோனா இரண்டாம் அலையின் போது நாட்டை ஒரு சுடுகாடாக்கி இருக்கிறது. 


மக்களாட்சி அமைப்பை காப்பாற்ற ஒரே வழிதான் - மோடியை கண்டிப்பது, விமர்சிப்பது நோய்க்குறியை சாடுவதற்கு சமம். அது வீண். நோய் என்பது மதவாதமும் அதனுடன் கைகோர்க்கும் தேசியவாதமுமே. சட்டரீதியாக அதை தடை செய்து ஆர்.எஸ்.எஸ், பாஜகவை முடிவுக்கு கொண்டு வருவது மட்டுமே ஒரே தீர்வு. 


மோடி வெறும் பொம்மை மட்டுமே. அவருக்குப் பின்னர் ஆயிரமாயிரம் மோடிகள் தோன்றுவார்கள். நீண்ட காலமாய் இடதுசாரிகள் ஆண்ட, கல்வி அறிவுமிக்க மேற்கு வங்கம் இப்போது இந்துத்துவ வெறியால் ஆட்பட்டுள்ளது, அங்கு பாஜக சொற்ப காலத்தில் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றுள்ளது ஒரு சான்று. இது இனி நாடு முழுக்க நிகழும். தமிழர்களாலும் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது என உறுதியாக சொல்வேன்.

 போதை மருந்தைக் கொடுத்து ஒரு இளைஞனை அடிமையாக்குவதைப் போன்றது மதவாதத்தைக் கொண்டு தேர்தல் அரசியல் பண்ணுவது. அது ஒரு அநீதியான, எளிமையான தந்திரம். அதை மக்களே முறியடிப்பார்கள் என எதிர்பார்ப்பது போதை அடிமை ஒருவர் தானாக மீள்வார், அதுவரை அவர் போதை மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம் என சொல்வதைப் போன்றது. அப்படி மக்களே ஒருநாள் பாஜகவை முறியடித்தாலும் அவர்கள் காங்கிரஸுக்கு உள்ளாகவே ஒரு சர்வாதிகாரியை மீண்டும் ஒருநாள் மேலெடுப்பார்கள். அல்லது பாஜகவை வேறொரு புதுத்தலைமையுடன் ஆதரிப்பார்கள். நம் வரலாறு இதைத் தான் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. ஏதாவது ஒரு மக்கள் தலைமை விழிப்புணர்வு பெற்று போராடி இதை ஒரேயடியாக ஒழித்துக் கட்டினால் உண்டு.


மக்களாட்சியில் சர்வாதிகார கட்சி மட்டுமல்ல அக்கட்சியை உள்ளூர விரும்பும் மக்களும் கெட்டவர்கள் தாம்; சிறுபான்மையினரை ஒடுக்குகிறது, தம் மதத்தை முன்னெடுக்கிறது என்பதற்காக ஒரு குரூர மகிழ்ச்சியுடன் ஒரு மதவாத தேசியத் தலைமைக்கு வாக்களிக்கும் மக்களும் கெட்டவர்கள் தாம். ஏனென்றால் அவர்கள் தமக்காக அல்ல இல்லாத ஒரு எதிரிக்காக, ஒரு கற்பனையான மற்றமை மீது அதிகாரம் செலுத்த வாக்களிக்கிறார்கள். அவர்களும் நிச்சயமாக கொடூரமானவர்களே, மக்களாட்சிக்கு விரோதமானவர்களே. இன்றைய கொரோனா சுடுகாடுகளில் எரியும் நெருப்பை மூட்டியவர்கள் அவர்களும் தாம். மக்களாட்சி மீது தாம் மூட்டிய தீயில் இன்று தாமே எரிய யாரை பழிப்பது எனத் தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள். 


 வாக்காளர்களுக்குள் உறைந்து இருக்கும் இந்த தீமையின் கரு வளர்ந்து தலையெடுக்கும் சூழல் உருவாக ஒரு தேசம் அனுமதிக்கக் கூடாது! அதை எப்படி செய்வது என மக்களாட்சியின் ஆதரவாளர்கள் சிந்திக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...