Skip to main content

ஏன் மோடியை மட்டும் பழிப்பதில் அர்த்தமில்லை?



நாம் ஒரு மோசமான தலைவரை பழித்து விட்டு அவருக்கு வாக்களித்த மக்களை அப்பாவிகளாக காண முடியுமா? நீங்கள் சமைத்த சாப்பாடு கேவலமாக இருக்கிறது எனில் சாப்பாட்டை மட்டும் பழிப்பதில் அர்த்தமுண்டா? சமைத்தவர் அல்லவா பொறுப்பேற்க வேண்டும். அப்படி சமைக்க காரணமாக இருந்த சூழலை அல்லவா அகற்ற வேண்டும்.

இன்று தேசம் உள்ள நிலைக்கு இந்திய மக்களின் மதவெறியும் அதன் காரணமாக அவர்கள் இரு தேர்தல்களில் பாஜகவை ஆதரித்தது முக்கிய காரணம். இந்த மதவெறி மட்டுப்படாவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளும் பாஜக ஆண்டு இந்நாட்டை சுடுகாடாக்கும்!


ஆனால் நாம் இந்த படுபாதக நிலைக்கு வாக்காளர்களுக்கு உள்ள பங்கைப் பற்றி பேசாமல் தொடர்ந்து "மோடி ஏமாற்றி விட்டார்" என புலம்பிக் கொண்டிருப்போம். ஏனென்றால் மக்களாட்சி அமைப்பின் முக்கியமான பலவீனம் ஒன்றைப் பேச நாம் தொடர்ந்து தயங்கி வருகிறோம் - அது தேசியவாதமும், மதவாதமும் எப்படி மக்களாட்சியின் சாவுமணிகள் என்பது.


 எந்த மக்களாட்சியிலும் இந்த இரண்டுக்கும் தடையில்லை; ஏனென்றால் அரசியல் தலைவர்களுக்கு மக்களை திசைதிருப்பி சுரண்ட இவை தேவையாக உள்ளன. மோசமான குரூரமான தலைவர்கள் இந்த இரண்டையும் பயன்படுத்தி சர்வாதிகாரிகள் ஆகிறார்கள்; தன்னலத்துக்காக ராணுவத்தை ஏவி அண்டை நாடுகளை உடைக்கிறார்கள், உள்நாட்டுப் போரை ஏற்படுத்துகிறார்கள், அந்த போர்ச்சூழலால் தேசியவாத அலையைத் தூண்டி தேர்தலில் வென்று வலிமையான தலைவர்கள் என பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். மேற்கில் இதற்கு முசோலினி, ஹிட்லரில் இருந்து டிரம்ப் வரை ஏராளமான உதாரணங்கள் உண்டு. இதை வலதுசாரி அரசியலின் எழுச்சி என நாம் கடந்து விட முடியாது. ஏனென்றால் அது உண்மை அல்ல. மேற்கில் மதவாதமும் இனவாதமும் என்றால் இந்தியாவில் மதவாதமும் சாதிய அடிமை மனநிலையும் மக்களாட்சியின் சாவுமணிகளாக உள்ளன. உலகம் முழுக்க பெருமுதலாளிகள் மக்களை கேள்வியெழுப்பும் விழைவற்ற அடிமைகளாக தக்க வைக்க இந்த இரண்டையும் ஊடகங்கள், மத நிறுவனங்கள், ஆயுத உற்பத்தி, கட்சிக்கான நிதியுதவி மூலம் ஊக்குவிக்கின்றன.


 இந்த விசயத்தில் நமது ஜீக்குப் பின்னால் வரலாற்றில் இந்திரா காந்தியும் அவரது மகன் ராஜீவ் காந்தியும் இருக்கிறார்கள். இருவரையும் நான் ஜீயை விட கொடூரமான தலைவர்கள் என்பேன். அவர்களை ஆதரித்த மக்களுக்கு அன்றிருந்த அதே தேசியவாத வெறி, சர்வாதிகார ஆதரவு மனநிலை தான் இன்றும் ஜீயை அதிகாரத்தில் தக்க வைக்கிறது. அது ஒரு கொடுவாள், அதை யாரும் எடுத்து பயன்படுத்தலாம் என நமது அரசியலமைப்பு - மறைமுகமாக, நைசாக - அனுமதிக்கிறது. அதனால் தான் மதச்சின்னங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்துவதை, மதத்தின் பெயரால் பிளவுவாதத்தில் ஈடுபடுவதை தடை செய்ய காந்தி, நேரு என யாருமே பெரிய முயற்சிகள் எடுக்கவில்லை. தாகூரைப் போன்ற சிலர் மட்டுமே தேசியவாதத்தின் ஆபத்தை அறைகூவி வந்தார்கள். ஆனால் அன்றைய காந்திய ஆதரவு, இந்து மதவெறியின் அலைகளில் இந்த எச்சரிக்கைகள் அடித்து செல்லப்பட்டன.


 யோசித்துப் பாருங்கள் - இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு ஏற்பட்ட மிகப்பெரிய கலவரங்கள் மதத்தின் பெயரால் ஜின்னாவாலும் இந்து மகாசபை தலைவர்களாலும், ஆங்கிலேய அதிகாரிகளின் துணையுடன், நடத்தப்பட்டவை. விளைவாக பாகிஸ்தான் பிரிவினை, கொடூரமான படுகொலைகள் நிகழ்ந்தன. கொஞ்சமாவது பொறுப்புணர்வு இருந்திருந்தால் அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் "மதத்தையும் அரசியலையும் தனித்தனியாக பாவிக்க வேண்டும், ஒரு அரசியல் மேடையில் ஒரு மதத்தலைவர் வந்தாலோ,  அவர் ஒரு கட்சியை ஆதரித்துப் பேசி அதை அக்கட்சி கண்டிக்காவிடிலோ, அக்கட்சி மதச்சின்னங்களை எந்த ரீதியிலாவது பயன்படுத்தினாலோ அது நிரந்தரமாக தடை செய்யப்படும்" என ஒரு சட்டத்தை இயற்றி இருக்க வேண்டும். ஒரு மதசார்பற்ற நாட்டின் அரசியல் அப்படித் தானே இருக்க வேண்டும்? 


ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை; ஏனென்றால் India after Gandhi நூலில் ராமசந்திர குஹா சொல்வதைப் போல அன்றைய காங்கிரஸுக்குள் ஏகப்பட்ட சங்கிகள் ஸ்லீப்பர் செல்களாக செயல்பட்டனர். அதனாலே மதவாதத்தின் விளைவாக காந்தி படுகொலையான பின்னரும் அதை ஒரு பெரிய ஆபத்தாக காங்கிரஸ் கருதாமல், அப்படுகொலைக்கு தார்மீக ஆதரவும் உதவியும் வழங்கிய ஆர்.எஸ்.எஸ்ஸை தற்காலிகமாக தடை செய்தது. இந்த துரோகம், பாசாங்கு,  தவறு பின்னர் இந்திராவின் வடிவில் இந்தியாவையும் ராஜீவின் வடிவில் ஈழத்தமிழர்களையும் பாம்பாக மாறிக் கொத்தியது. அதே தவறு தான் 2014இல் காங்கிரஸின் முழுமையான அழிவுக்கும் இந்தியா ஒரு சர்வாதிகார அடிமை நாடாக மாறவும், இப்போது கொரோனா இரண்டாம் அலையின் போது நாட்டை ஒரு சுடுகாடாக்கி இருக்கிறது. 


மக்களாட்சி அமைப்பை காப்பாற்ற ஒரே வழிதான் - மோடியை கண்டிப்பது, விமர்சிப்பது நோய்க்குறியை சாடுவதற்கு சமம். அது வீண். நோய் என்பது மதவாதமும் அதனுடன் கைகோர்க்கும் தேசியவாதமுமே. சட்டரீதியாக அதை தடை செய்து ஆர்.எஸ்.எஸ், பாஜகவை முடிவுக்கு கொண்டு வருவது மட்டுமே ஒரே தீர்வு. 


மோடி வெறும் பொம்மை மட்டுமே. அவருக்குப் பின்னர் ஆயிரமாயிரம் மோடிகள் தோன்றுவார்கள். நீண்ட காலமாய் இடதுசாரிகள் ஆண்ட, கல்வி அறிவுமிக்க மேற்கு வங்கம் இப்போது இந்துத்துவ வெறியால் ஆட்பட்டுள்ளது, அங்கு பாஜக சொற்ப காலத்தில் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றுள்ளது ஒரு சான்று. இது இனி நாடு முழுக்க நிகழும். தமிழர்களாலும் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது என உறுதியாக சொல்வேன்.

 போதை மருந்தைக் கொடுத்து ஒரு இளைஞனை அடிமையாக்குவதைப் போன்றது மதவாதத்தைக் கொண்டு தேர்தல் அரசியல் பண்ணுவது. அது ஒரு அநீதியான, எளிமையான தந்திரம். அதை மக்களே முறியடிப்பார்கள் என எதிர்பார்ப்பது போதை அடிமை ஒருவர் தானாக மீள்வார், அதுவரை அவர் போதை மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம் என சொல்வதைப் போன்றது. அப்படி மக்களே ஒருநாள் பாஜகவை முறியடித்தாலும் அவர்கள் காங்கிரஸுக்கு உள்ளாகவே ஒரு சர்வாதிகாரியை மீண்டும் ஒருநாள் மேலெடுப்பார்கள். அல்லது பாஜகவை வேறொரு புதுத்தலைமையுடன் ஆதரிப்பார்கள். நம் வரலாறு இதைத் தான் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. ஏதாவது ஒரு மக்கள் தலைமை விழிப்புணர்வு பெற்று போராடி இதை ஒரேயடியாக ஒழித்துக் கட்டினால் உண்டு.


மக்களாட்சியில் சர்வாதிகார கட்சி மட்டுமல்ல அக்கட்சியை உள்ளூர விரும்பும் மக்களும் கெட்டவர்கள் தாம்; சிறுபான்மையினரை ஒடுக்குகிறது, தம் மதத்தை முன்னெடுக்கிறது என்பதற்காக ஒரு குரூர மகிழ்ச்சியுடன் ஒரு மதவாத தேசியத் தலைமைக்கு வாக்களிக்கும் மக்களும் கெட்டவர்கள் தாம். ஏனென்றால் அவர்கள் தமக்காக அல்ல இல்லாத ஒரு எதிரிக்காக, ஒரு கற்பனையான மற்றமை மீது அதிகாரம் செலுத்த வாக்களிக்கிறார்கள். அவர்களும் நிச்சயமாக கொடூரமானவர்களே, மக்களாட்சிக்கு விரோதமானவர்களே. இன்றைய கொரோனா சுடுகாடுகளில் எரியும் நெருப்பை மூட்டியவர்கள் அவர்களும் தாம். மக்களாட்சி மீது தாம் மூட்டிய தீயில் இன்று தாமே எரிய யாரை பழிப்பது எனத் தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள். 


 வாக்காளர்களுக்குள் உறைந்து இருக்கும் இந்த தீமையின் கரு வளர்ந்து தலையெடுக்கும் சூழல் உருவாக ஒரு தேசம் அனுமதிக்கக் கூடாது! அதை எப்படி செய்வது என மக்களாட்சியின் ஆதரவாளர்கள் சிந்திக்க வேண்டும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...