இத்தேர்தலில் தமிழகத்துக்கு நடந்தது தான் மே.வங்கத்துக்கும் நடந்தது - ஒரே வித்தியாசம் அதிமுக தலைவர்கள், இ.பி.எஸ், ஒ.பி.எஸ் தலைமையின் கீழ், "அடிச்சாங்களா? எங்க வலிக்கலியே!" என மானங்கெட்டத்தனமாக நடந்து கொண்டார்கள். பாஜக எதிர்ப்பலையை மமதா பயன்படுத்திக் கொண்டது போல எடப்பாடியால் முடியவில்லை. கழுத்தை சுற்றிய பாம்பு அனகோண்டாவாகி எடப்பாடியை நசுக்கி விட்டது.
மேற்கு வங்கத்தில் மமதா தொடர்ந்து எதிர்ப்பரசியல் செய்தார் என்றால் தமிழகத்தில் அதிமுக தலைவர்கள் வெளிப்படையாகவே கூட்டு சேர்ந்து தமிழகத்துக்கு வஞ்சித்தார்கள். பாஜகவுடன் சேர்ந்து மக்களை விளாசினார்கள். மேற்கு வங்கத்தில் ஆளும் அரசு தன்னை பாதிக்கப்பட்ட தரப்பாக காட்டியதென்றால் தமிழகத்தில் மக்களே அத்தரப்பு. அதிமுக சாட்டை விளாசும் நம்பியார் பக்கத்தில் நின்று "இன்னும் நல்லா அடிங்க, அப்போ தான் புத்தி வரும்" என ஏற்றி விடும் அல்லது "போதும் போதும் பாவம்" என சமாதானம் பண்ணும் தரப்பு.
நீட் தேர்வு, மும்மொழி விசயம், தேசிய கல்விக் கொள்கை, சி.ஏ.ஏ விசயங்களில் மக்களை கைவிட்டதுடன் அதிமுக தனக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை திரும்பக் கோரும் முதுகெலும்பு அற்றதாக இருந்தது. அத்துடன் தமிழகத்தின் பொருளாதாரத்தையும் தவறாக கையாண்டு, கட்டற்ற ஊழலில் ஈடுபட்டு மாநிலத்தை 5 லட்சம் கோடிக்கும் மேல் கடனாளியாக்கியது. தொடர்ந்து இவ்வாறு அடிபட்டு சீரழிந்து தெருவுக்கு வந்த மக்கள் தம் பிரதிநிதியாக இயல்பாக திமுக கூட்டணியை கண்டது. உறுதியாக நின்ற மமதாவை தம் தீதியாக மட்டுமல்ல பாதிக்கப்படும் தமது பிரதிநிதியாகவும் மே.வங்காளிகள் கண்டார்கள். அங்கு மே.வங்காளிகள் vs குஜராத்திகள் என அரசியல் இருமை அங்கே வலுப்பட்டது என்றால் தமிழகத்தில் அது தமிழகம் vs தமிழக- விரோத தாமரை + துரோகி இரட்டை இலை என்றனது. மக்கள் பூவை இலையோடு பிய்த்து எறிந்தனர்.
மானம், சூடு, சொரணை இருந்தால் அதிமுகவினர் வெளியே வந்து தாமரையுடன் கூட்டு வைத்தது தவறு என ஒப்புக் கொண்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! எல்.முருகன். எஸ்.வி சேகரிடம் மண்டியிட்டது தவறு என ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு செருப்பை எடுத்து காட்ட வேண்டும். அடுத்த தேர்தல் வரை நிலைத்து, மீண்டும் வெல்ல வேண்டுமெனில் அதிமுகவினர் இனி மத்தியில் ஆளும் அரசுக்கு எதிராக களமிறங்கி திமுகவுடன் கைகோர்த்து களத்தில் நிற்க வேண்டும், கூடவே திமுகவின் ஆட்சியில் நடக்கும் தவறுகளை விமர்சிக்கும் நல்ல எதிரணியாகவும் செயல்பட வேண்டும். ஆனால் தொடர்ந்து ஒவ்வொரு விசயத்தையும் தில்லியை கேட்டு முடிவெடுப்பவர்களாக, எல்.முருகன், எச்.ராஜா, குருமூர்த்தி வகையறாக்களிடம் தெண்டனிடுபவர்களாக தொடர்ந்தால் அவர்களுடைய அழிவு நிரந்தரம் தான். சந்தேகமே இல்லை.
அதிமுக உண்மையான திராவிட கட்சியாக உருமாறும் என, சங்கிகளைப் போல குங்குமப் பொட்டு அணிவது, ஜெய் ஸ்ரீராம் சொல்வதை நிறுத்தும் என எதிர்பார்ப்போம்! "நாங்கள் இனி அடிமைகள் அல்லர், சங்கிகள் எங்கள் எதிரிகள்" என அதிமுகவினர் உரத்து சொல்லுங்கள். தமிழகம் அதைக் கேட்க விரும்புகிறது.

Comments