Skip to main content

என் தந்தை ஒரு கொடுங்கோலர்



என் தந்தை

எனக்கு மூன்று வயதிருக்கும் போது

என்னை அடிக்கடி காற்றில் தூக்கிப் போட்டு

 பிடித்து விளையாடுவார்.

ஒருநாள் நான் கைதவறி கீழே விழுந்தேன்.

எல்லாரும் பயந்தார்கள்.

அன்று நான் அழவில்லை.

அன்றிருந்தே நான் அறிவேன்,

என் தந்தை ஒரு பாசக்காரர்,

என் தந்தை ஒரு கொடுங்கோலர்.


என் தேசத்தை நினைக்கும் போது

எனக்கு என் தந்தை

நினைவுக்கு வருவார் ...

நான் நினைத்துக் கொள்வேன்,

என் தந்தை ஒரு பாசக்காரர்,

என் தந்தை ஒரு கொடுங்கோலர்.


சிறுவனாக நான் இருக்கும் போது

இரவில் அப்பாவின் மாரில் தான் தூங்குவேன்.

என் மீது அவரது வாசனை இருக்கும்.

என் பேச்சில் அவரது சொற்களே இருக்கும்.

என் தீர்மானங்களில் அவரது நம்பிக்கைகளே இருக்கும்.

நான் வளர்ந்ததும்

அவர் என் புதிய வாசனையை வெறுத்தார்.

அவர் என் புதிய சொற்களை மறுதலித்தார்.

அவர் என் புதிய நம்பிக்கைகள் பால் அச்சம் கொண்டார்.

ஆனால் என் அப்பா இதையெதையும் காட்டிக் கொள்ளவில்லை.

அவர் என்னைக் காணும் போதெல்லாம்

விலகிச் செல்ல ஆரம்பித்தார்.

தன்னுடைய முழுமையான பாசம்

தன்னைப் போன்றோருக்கு மட்டுமே

என அவர் ஒவ்வொரு சிறு அசைவிலும் காட்டினார்.


எங்கள் வீட்டில் அவர்

ஒவ்வொருவரிடம் இருந்தும் தனிமைப்பட்டார்.

என் அப்பா என் அம்மாவிடமும் 

“எங்கள் தந்தை ஒரு பாசக்காரர்

எங்கள் தந்தை ஒரு கொடுங்கோலர்.”


ஒருமுறை நாட்டில் கடும் வறுமை ஏற்பட்டது.

யாரிடமும் பணமில்லை. யாரிடமும் தானியமில்லை. 

எங்கள் தெரு மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பினர்.

வானம் பார்த்து நடந்தனர்.

ஒருநாள் என் அம்மா அண்டைவீட்டாருக்கு

சிறிது தானியம் கொடுப்பதைக் கண்ட

 என் அப்பா அதைத் தடுக்கவில்லை.

அவர் ஒரு தேசப்பற்றாளர்.

அதனாலே அவர்

இலவச உணவளிப்பது மக்களை சோம்பேறி ஆக்குமென்றார்.

ஆனால் அவர் என் அம்மாவைத் தடுக்கவில்லை.


அவர் என் அம்மாவின் பெயரில் ஒரு கணக்கை ஆரம்பித்தார்.

அவர் மாதாமாதம் ஒரு சிறுதொகையை அதில் இட்டார்.

அது அவர் எங்களுக்கு அளிக்கும் கடன் என்றார்.

அதற்குள் நாங்கள் வீட்டுச்செலவுகளை நடத்திக் கொள்ள வேண்டும்.

மாதாமாதம் நாங்கள் மேலும் மேலும்

 கடனாளி ஆகிக் கொண்டே வந்தோம்.

அவரைக் காணும் போதெல்லாம் தலையை தாழ்த்திக் கொண்டோம்.

மாலையில் மிகுந்த போதையில் அவர்

தன் தேசம் வறுமையில் அல்லாடுவதைச் சொல்லி கண்ணீர் வடிப்பார்.


எங்களுடைய மூன்று வேளை உணவு ஒருவேளை ஆனது.

எங்களுடைய ஆடைகள் நைந்து போயின.


ஒருநாள் அண்டை வீட்டில் இருந்து 

என் அம்மா சிறிது தானியம் வாங்கக் கண்ட அப்பா

 உணவு வேண்டுமெனில்

இனி தன்னிடம் மட்டுமே வாங்கிக் கொள்ள வேண்டும்

எனக் கட்டளையிட்டார்.

மாலையில் வீடு திரும்பும் போது அவர் கொணரும்

சாப்பாட்டுப் பொட்டலங்களை நாங்கள்

 ரகசியமாய் வீணடித்தோம்.

அதையும் அவர் கணக்கு வைத்துக் கொண்டார்.


வார இறுதியில் அவர் 

எங்களை சுற்றி அமர வைத்து 

கணக்கு வழக்குகளை வாசிப்பார்.

பிறகு உணர்ச்சிகரமாய் பேசுவார்.


நாங்கள் வாழ்நாள் கடனாளிகளாக மாறிக் கொண்டிருந்தோம்.

அம்மா கடனுக்கு தையல் எந்திரம் வாங்கி தைத்தார்.

அப்பளம், ஊறுகாய் செய்து விற்றார்.

நான் மாலையில் டியூஷன் எடுத்தேன்.

என் சகோதரி படிப்பை நிறுத்திக் கொண்டார்.

ஆனாலும் கடன் வளர்ந்து கொண்டே இருந்தது.


நாளிதழ்களில் பசியிலும் நோயிலும் 

மக்கள் கொத்துக் கொத்தாய் மடிந்து விழும் படங்களைக் காணும் போது

குற்றவுணர்வில் கண்களை மூடிக் கொண்டோம்.

நாங்கள் சொல்லிக் கொண்டோம்,

“எங்கள் தந்தை ஒரு பாசக்காரர்

எங்கள் தந்தை ஒரு கொடுங்கோலர்.”


எங்கள் போராட்டம் தொடர்ந்த நிலையில்

அப்பா எங்களுடன் உரையாடலை

 முற்றிலும் துண்டித்துக் கொண்டார். 

அதன் பின்

அப்பா மாதம் ஒருமுறை

ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார்.

வீட்டிற்கு முன் அமர்ந்து

அவர் உணர்ச்சிகரமாக தேசிய கீதத்தை பாடுவார்.

அவர் கண்ணீர் தளும்ப எங்களுக்கு தன் பாசத்தை அள்ளித் தருவார்.

குடும்பத்தின் வளர்ச்சிக்கு, கட்டுப்பாட்டுக்கு

நாங்கள் செய்ய வேண்டியவற்றை பட்டியலிடுவார்.

நாங்கள் பசியின் சுடர் அணையாத கண்களுடன்

பார்த்திருப்போம்.

இறுதியாக, அவர்

எங்களிடம் கருத்துக் கேட்பார்.

நாங்கள் வாய் திறந்தால் 

அவரது கண்கள் நெருப்பைக் கக்கும். 

நாங்கள் மௌன சாட்சிகளாக இருக்க

 பழகிக் கொண்டோம்.

நாங்கள் மனத்துக்குள்

ஒருமித்த குரலில் சொல்லிக் கொள்வோம்,

“நம் தந்தை ஒரு பாசக்காரர்

நம் தந்தை ஒரு சர்வாதிகாரி”.


அப்போது ஒரு பெருச்சாளி

எங்களுடைய சிக்கன உணவை 

துவம்சம் செய்தது.

அதைக் கொல்ல நாங்கள்

பொறியை வைத்து காத்திருந்தோம்.

மாட்டியது பெருச்சாளி.

அது எங்கள் வீட்டு உணவுகளை

 தினந்தினம் உண்டு

அசைய முடியாதபடி பருத்துப் போயிருந்தது.

சிறிய கண்கள் மின்ன

எங்களிடம் பார்வையில்

தன்னை விட்டுவிடும்படி மன்றாடியது.

“நாம் ஓரினம்

நமக்கு ஒரே தெய்வம்

நமக்கு ஒரே தலைவன்

நமக்கு ஒரே எதிரி

நமக்கு ஒரே வயிறு”

நாங்கள் ஒரு சாக்கில் அதைப் போட்டு

தரையோடு அடிக்க தயாரானோம்.

அப்போது எங்கிருந்தோ வந்த அப்பா

சாக்கை வாங்கி வெளியே போனார்.

அவர் அதை ஒரு வயல்வெளியில்

திறந்து விடுவதை நான் பார்த்தேன்.


அதன் பிறகு அவ்வப்போது 

அது எங்கள் உணவு மேஜையில்

அடுக்களை மேடையில் 

வந்து அமர்ந்து

சிலநேரம் துணிச்சலாக

சிலநேரம் தன்னடக்கத்துடன்

 உணவருந்தும்.

நாங்கள் அதைத் தொட துணியவில்லை.


ஒருவேளை உணவு கூட இன்றி

ஒருநாள் நான்

வாடிய முகத்துடன்

பள்ளிக்கு செல்லும் வழியில் 

வயல்வரப்பு பொந்தின் வாயிலில்

அந்த பெருச்சாளியை கண்டேன்.

அது திரும்பிப் பார்த்து எனக்கு முகமன் கூறியது.

அப்பா சொல்லிக் கொடுத்ததாக

தேசப் பண்ணை பாடிக் காட்டியது.

அது சற்று வித்தியாசமாக இருந்தது.

தேசத்தை ஒரு அன்னையாக அன்றி தந்தையாக

உருவகித்தது.

நான் சொன்னேன்,

“என் அப்பா ஒரு பாசக்காரர்

என் அப்பா ஒரு கொடுங்கோலர்”

அது சொன்னது,

“பாசமே கொடுங்கோன்மை”

அது மேலும் கூறியது,

“சகோதரா, 

அன்னையரின் பாசம் நம்மை முதுகெலும்பு அற்றவராக்குகிறது

தந்தையரின் பாசமோ நம்மை உருக்கு போலாக்குகிறது.

அது இல்லாதவரின் வயிற்றில்

 பாலை வார்க்கிறது

அது உள்ளவரின் வயிற்றில்

 பசியின் அனலை வளர்க்கிறது

தேசத் தந்தையே உன்னை வணங்குகிறேன்.”

 

அப்போது பொந்தில் இருந்து

என் அப்பா வெளிப்பட்டார்.

அவர் தன் கையில் நெளிந்த பெருச்சாளிக் குஞ்சுகளை

 தூக்கிப் போட்டு விளையாடினார்.

நான் ஆச்சரியத்துடன் பார்த்திருக்க 

பெருச்சாளியிடம் சொன்னார்,

“மறந்து விடாதே,

உன் உயிர்

நானளித்த கடன்.

உன் குழந்தைகள்

கடன் இட்ட குட்டிகள்.

மறந்து விடாதே,

பாம்புகள் உன் வளையைச் சுற்றி

வளைய வருகின்றன.

நான் மட்டுமே உன் காவல் தெய்வம்.

மறந்து விடாதே,

பாசம் மட்டுமே நீ 

எனக்கு செலுத்தும் நன்றிக் கடன்.”

Comments

Ram said…
அபிலாஷ், கவிதையின் ஒவ்வொரு வரியும் " மோடி மோடி " என கதறுகிறது

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...