Skip to main content

ஆசானுக்கு ஒரு வேண்டுகோள்



"இலக்கியவாதி என இயங்கும் எவரிடம் சொல்ல எனக்கு ஒன்றே உள்ளது. எது ஒன்றாகவும் ’ஆக’ முயலாதீர்கள். எதுவாகவும் சித்தரித்துக் கொள்ளாதீர்கள். எதுவாக இருக்கிறீர்களோ அதுவாக வெளிப்படுங்கள்."

- ஜெயமோகன்


அன்புள்ள ஆசானே,

எனக்கு உங்களிடம் சொல்ல ஒன்றே ஒன்று உள்ளது: “நாம் உள்ளுக்குள் சாராம்சமாக ஒருவாறு இருக்கிறோம், அவ்வாறே நாம் இலக்கியத்திலும் வெளிப்பட வேண்டும்” எனும் உங்கள் மூடநம்பிக்கையை, 19 நூற்றாண்டில் லிபரல் ஹியூமனிஸ நோக்கை என்று கைவிடப் போகிறீர்கள்? என்று சமகால சிந்தனைப் பரப்புக்கு வந்து நிற்க போகிறீர்கள்? ஒருவர் எழுத்திலும் வெளியிலும் ஒரே ஆளாக இருக்க முடியாது, அவர் விரும்பினாலும் இல்லாவிடிலும். சொல்லப் போனால், வெளியே கூட ஒருவரால் ஒரே ஆளாக இருக்க முடியாது. எழுத்தில் இன்னும் மோசம்: அங்கு நாம் துண்டுத் துண்டாய் உடைபட்டு முன்னுக்குப் பின் முரணாக சிந்தனைகளால், உணர்வுகளால், இருப்பால், இன்மையால் பின்னப்பட்டிருக்கிறோம். யாராலும் பாவனைகள் இன்றி இருக்க இயலாது, ஏனென்றால் பாவனைகள் தாம் வாழ்வே; பாவனைகளுக்கு அப்பால் இன்மையாலான இருப்பு உள்ளது; அதை நான் மறுக்கவில்லை. (ஆனால் அது நிச்சயமாக இந்த வாழ்வை இந்நேரம் அனுபவிக்கும் இப்பிரக்ஞை அல்ல.)


சினிமா பார்க்கிற, குடிக்கிற, அரசியல் களியாட்டத்தில் தன்னை மறக்கிற எழுத்தாளன் தான் எழுத்திலும் இருக்கிறான். அதில் எந்த மாற்றும் குறைந்து போவதில்லை. இன்னும் சொல்லப் போனால், அது தான் இவ்வாழ்வின் சிறப்பே: நாம் ஒரே ஆள் நூறு நூறு பேர்களாக எந்த தொடர்பும் இன்றி கணத்துக்கு கணம், எந்த மைய விசையும், அச்சாணியும் இன்றி தனித்தனியே இருக்கிறோம். நம்மை ஒரு மாலையில் கோர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே இந்த இருப்பின் மகத்துவம், அதன் விடுதலை, அதன் அப்பாலை நிலை.  


இவ்வாழ்வை வாழும் எழுத்தாளன், எழுதும் எழுத்தாளன் இருவருமே இட்டுக்கட்டப்பட்ட நிலைகளே. இதை நீங்கள் ஏற்கும் போதே உங்கள் தேவையற்ற பிடிவாதங்கள், அகந்தை இல்லாமல் ஆகும்.


“எதுவாக இருக்கிறீர்களோ” என ஒன்றை நிறுவுகிறீர்கள் அது எப்படி அவ்வாறு தோன்றியது? பிறப்பிலேயா? பிறப்பில் என்றால் கூட காலம், உலகம் அனுபவங்கள், தாயின் அண்மை, மொழி ஆகிய சார்புகளாலே “எதுவாக இருக்கிறோமோ” அது தோன்ற முடியும். எனில் அது “எதுவாக இருப்பது” அல்ல தானே? “எதுவாக இருக்கிறோமோ” அது ஒன்றாக தற்காலிகமாக சார்புநிலைகளால் தோற்றுவிக்கப்படும் ஒன்றல்லவா? சரி அது அதற்கு முன்பே கருவில் திருவாக இருந்தது, தாயின் வயிற்றில் “ஏதோ ஒன்றாக இருக்கிறோம்” என சொல்வீர்கள் என்றால் அங்கும் காலம், உயிரி ரசாயன மாற்றங்கள், தாயின் உடல், அந்த உடல் இருக்கும் சுழல் என பல விசயங்கள் “அதைத்” தோற்றுவிக்கின்றன. சாராம்சமாக, தாய் தந்தையின் நீட்சியாக கூட நாம் இருக்க முடியாது. இதை அப்படியே அள்ளி எடுத்து எப்படி மொழியில் கடத்த முடியும்? இதை எப்படி பூரணமாக படைப்பனுபவமாக்க முடியும்? ஒவ்வொரு கணமும் ஒவ்வொன்றாக இருக்கும் ஒருவன், அந்த ஒவ்வொன்றுக்குள்ளும் பலவாறாக தனக்குள்ளே நூறாயிரம் முறை முரண்படும் ஒருவன் எப்படி எழுத்துக்குள் “கலப்பின்றி, பொய்யின்றி” வந்து உட்கார முடியும்?

 

உங்களுடைய இந்த மூடநம்பிக்கையே ஒருவர் தன்னுடைய மரபை மட்டுமே உள்வாங்கி வெளிப்படுத்துகிறார், மரபு அடிப்படையில் சாராம்சமானது, அதன் பல்வேறு முகங்களே பண்பாட்டு வெளிப்பாடுகள் என்றெல்லாம் நம்ப வைக்கிறது. (இதுவே உங்களுடைய கலாச்சார இந்துத்துவா என சிலர் அடையாளப்படுத்துவது.) இதுவே ஒரு பெண்ணால் தன் உடலை எழுத்தில் கடக்க முடியாது; ஒரு மாற்றுத்திறனாளியால் தன் அனுபவத்தை மீறி எழுத்தில் வெளிப்பட முடியாது; உன் சாதியும், மதமுமே உன் எழுத்தில் நீயாக வேண்டும் என்றெல்லாம் உங்களை நம்பவும் அதை வெளியே இளைஞர்களிடம் போதனை செய்யவும் வைக்கிறது. 


உங்களை நம்பி பின் தொடரும் ஒரு கூட்டம் இளைஞர்கள் இதே காலாவதியான, ஆழமற்ற, தவறான எண்ணங்களை தாம் எழுதும் கட்டுரைகளில் வெளிப்படுத்தும் போது பார்க்க பரிதாபமாக இருக்கிறது. அவர்கள் எந்த கதையை எடுத்தாலும் இதில் அந்த எழுத்தாளனின் வாழ்க்கை பொய்யாக வெளிப்படுகிறதா, நேர்மையாக வெளிப்படுகிறதா என ஏதோ எழுத்தாளன் ஒரு காபரே டான்ஸர் எனும் கணக்கில் உற்று நோக்குகிறார்கள். கலையை ஒரு கருவியாக, உண்மையை மொண்டு எடுத்து விளம்பும் துல்லியமான முன்வைக்கிறார்கள். இந்த அபத்தமான சிந்தனைகள், கருதுகோள்கள் கடந்த ஒரு நூற்றாண்டில் பல்வேறு விவாதங்கள் வழி முறியடிக்கப்பட்டு விட்டன. நமது மரபில் கூட பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவை தர்க்கத்துக்கு புறம்பானவை என நிரூபிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டு விட்டன. நீங்கள் ஒரு பக்கம் எல்லாரையும் அவர்கள் வாழ்ந்த, வாழ்கிற வாழ்க்கையை இலக்கியத் தராசில் அளந்து மதிப்பிட்டு முத்திரை குத்துகிறீர்கள் என்றால், அவர்களும் இன்னொரு பக்கம் அதே உறையில் முத்திரை பதிக்கும் தபால் ஆபீஸ் பணியை கருத்தாக செய்து வருகிறார்கள். சதீஷ் ஶ்ரீனிவாசனுக்கு எழுதிய இந்த பதிலில் கூட இதைத் தான் செய்கிறீர்கள்.


  இதையெல்லாம் பார்க்க வருத்தமாக இருக்கிறது.


அதனால் தான் கேட்கிறேன்: இதை எப்போது நிறுத்துவீர்கள்?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...