நேற்று பிரக்ரிதி இலக்கிய அமைப்பின் சார்பில் கவிஞர் பெருந்தேவி ஸூம் சந்திப்பில் கவிதை வாசித்து, வாசகர்கள், மாணவர்களுடன் உரையாடினார். ஆங்கில கல்விப்புலம் சார்ந்த நிகழ்ச்சிகளில் தமிழ் படைப்பாளிகள் கலந்து கொண்டால் அதைக் காண நான் ஆர்வம் கொள்வேன். மேலும், கவி பெருந்தேவி வேறு. அவர் நிகழ்வை ஆரம்பித்த விதம் எனக்குப் பிடித்திருந்தது: “இந்த பெருந்தொற்றில் நமது அரசு நம்மை கைவிட்டு விட்டது, இந்த மக்களை இத்தேசம் தவிக்க விட்டு விட்டது” என சொல்லி, இச்சூழலில் கவிதை எழுதுவதும் அதைப் பகிர்வதுமே தனக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தருகிறது என்றார். நான் பார்த்த பெரும்பாலான கல்விப்புல எழுத்தாளர்கள் தமக்கும் சமூகத்துக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல, ஏதோ இலை, தழை, பூ, காற்று, இலக்கியம் மகத்தானது, வாழ்வு அதி அற்புதமானது என மிதந்தபடி இருப்பார்கள். ஆனால் பெருந்தேவியைப் போன்ற தமிழ் படைப்பாளிகளும் மலையாள மண்ணை சேர்ந்த கவிஞர்களும் இதற்கு விதிவிலக்கு என நினைக்கிறேன்.
தனது கவிதைகளை ஆங்கிலத்திலும் தமிழிலுமாக அவர் வாசித்த போது, அவர் கவிதைகளை வாசிப்போருக்கு தமிழில் மட்டுமே உணர்தற்குரிய சில நுணுக்கங்களை ஆங்கில வாசகர்களுக்கு ஒரு போதும் கடத்த முடியாது எனத் தோன்றியது. குறிப்பாக பெருந்தேவி போன்று ஊடுபனுவலாக்கம் (intertextuality) கொண்ட ஒரு கவிஞருக்கு இது வெகுவாக பொருந்தும்.
அடுத்து, பெருந்தேவி தமிழ் கவிதை உலகில் கொண்டு வர முயலும் எதிர்-கவிதை அழகியல். அது ஆங்கிலக் கல்விப் புலத்தில் உள்ளோருக்கும், ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கே சற்று அந்நியமான விசயம் தான். தமிழில் நவீன, பின்நவீன கவிதைகளின் வரவுக்குப் பின்பும் ஒரு கற்பனாவாத தொடர்ச்சி உள்ளது. குறிப்பாக நமது கவிஞர்கள் பயன்படுத்தும் உருவகங்கள், குறியீடுகளில், செண்டிமெண்டுகளில் இதைக் காணலாம். இன்னும் நமது நவீன கவிதை நகரங்களுக்கு முழுமையாக வரவில்லை, அல்லது நகரங்களில் கால்பாவியபடி கிராமத்து வீதிகளில் கற்பனை உலா போகிறது என நினைக்கிறேன். இதற்கு விதிவிலக்கு உண்டென்றாலும், பொதுவான போக்கு மேற்சொன்னது தான். ஆனால் எதிர்க்கவிதை இந்த மிகைப்படுத்தப்பட்ட செண்டிமெண்டுகளை உடைத்து விட்டு அன்றாட வாழ்வின் அனைத்து விசயங்களை நோக்கியும், பாவனைகள் இன்றி, கவிதையை அழைத்து வரலாம் என்கிறது. தமிழில் இதே காரணத்துக்காகத் தான் எதிர்-கவிதைக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என நினைக்கிறேன். கூட்டத்திற்கு பிறகு இதைக் குறித்து பெருந்தேவியுடன் விவாதித்தேன்.
கவிதை எழுதுவதற்கான சூழல், வெளி குறித்து அவர் பேசியதும் சுவாரஸ்யமாக இருந்தது. குறிப்பாக தன்னால் இந்தியாவில் இருக்கும் போது தான் கவிதை எழுத முடிகிறது, தன் காதில் தொடர்ந்து தமிழ் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டியது படைப்பூக்கத்துக்கு அவசியம் என்றார். ஒரு தமிழ் எழுத்தாளனாக என்னால் அவருடன் உடன்பட முடிந்தது. சொல்லப் போனால், இந்த சமூக வலைதளமும் அதனூடாக தொடர்ந்து உரையாடலும் சாத்தியப்படாவிட்டால் நான் முழுக்கத் துண்டிக்கப்பட்டிப்பேன் எனத் தோன்றுகிறது.
சும்மா சீண்டிப் பார்க்கலாம் என “நீங்க தான் அந்த ஶ்ரீவள்ளி என இப்போதாவது ஒப்புக்குவீங்களா?” எனக் கேட்டேன். வழக்கம் போல ரொம்ப தீவிரமாக அதை மறுத்து விட்டார். அதற்கான நியாயங்கள் - உணர்வுரீதியாகவும் கருத்தியல்ரீதியாகவும் - அவருக்கு உள்ளன என நினைக்கிறேன். எப்படி புக்காவஸ்கியை அவருடைய “பெண் வெறுப்புடன்” ஏற்கிறீர்கள் என்று கேட்டேன். ஒரு வாசகன் அன்னப்பறவை போல கசடை நீக்கி விட்டு சிறப்பானதை ஏற்க வேண்டியது தான் என்றார். நான் ஒரு விளையாட்டுக்காகத் தான் அக்கேள்வியை கேட்டேன். மற்றபடி, புக்காவஸ்கியிடம் பெண் வெறுப்பு இல்லை, அவர் பெண்களை எந்த கற்பனாவாதமும் அரசியல் சரிநிலைகள் இன்றி சித்தரிக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.
தமிழிலும் இது போன்ற உரையாடல்களை யாராவது ஒருங்கிணைக்க வேண்டும்.

Comments