Skip to main content

பெருந்தேவியுடன் ஒரு உரையாடல்


நேற்று பிரக்ரிதி இலக்கிய அமைப்பின் சார்பில் கவிஞர் பெருந்தேவி ஸூம் சந்திப்பில் கவிதை வாசித்து, வாசகர்கள், மாணவர்களுடன் உரையாடினார். ஆங்கில கல்விப்புலம் சார்ந்த நிகழ்ச்சிகளில் தமிழ் படைப்பாளிகள் கலந்து கொண்டால் அதைக் காண நான் ஆர்வம் கொள்வேன். மேலும், கவி பெருந்தேவி வேறு. அவர் நிகழ்வை ஆரம்பித்த விதம் எனக்குப் பிடித்திருந்தது: “இந்த பெருந்தொற்றில் நமது அரசு நம்மை கைவிட்டு விட்டது, இந்த மக்களை இத்தேசம் தவிக்க விட்டு விட்டது” என சொல்லி, இச்சூழலில் கவிதை எழுதுவதும் அதைப் பகிர்வதுமே தனக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தருகிறது என்றார். நான் பார்த்த பெரும்பாலான கல்விப்புல எழுத்தாளர்கள் தமக்கும் சமூகத்துக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல, ஏதோ இலை, தழை, பூ, காற்று, இலக்கியம் மகத்தானது, வாழ்வு அதி அற்புதமானது என மிதந்தபடி இருப்பார்கள். ஆனால் பெருந்தேவியைப் போன்ற தமிழ் படைப்பாளிகளும் மலையாள மண்ணை சேர்ந்த கவிஞர்களும் இதற்கு விதிவிலக்கு என நினைக்கிறேன். 



தனது கவிதைகளை ஆங்கிலத்திலும் தமிழிலுமாக அவர் வாசித்த போது, அவர் கவிதைகளை வாசிப்போருக்கு தமிழில் மட்டுமே உணர்தற்குரிய சில நுணுக்கங்களை ஆங்கில வாசகர்களுக்கு ஒரு போதும் கடத்த முடியாது எனத் தோன்றியது. குறிப்பாக பெருந்தேவி போன்று ஊடுபனுவலாக்கம் (intertextuality) கொண்ட ஒரு கவிஞருக்கு இது வெகுவாக பொருந்தும். 


அடுத்து, பெருந்தேவி தமிழ் கவிதை உலகில் கொண்டு வர முயலும் எதிர்-கவிதை அழகியல். அது ஆங்கிலக் கல்விப் புலத்தில் உள்ளோருக்கும், ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கே சற்று அந்நியமான விசயம் தான். தமிழில் நவீன, பின்நவீன கவிதைகளின் வரவுக்குப் பின்பும் ஒரு கற்பனாவாத தொடர்ச்சி உள்ளது. குறிப்பாக நமது கவிஞர்கள் பயன்படுத்தும் உருவகங்கள், குறியீடுகளில், செண்டிமெண்டுகளில் இதைக் காணலாம். இன்னும் நமது நவீன கவிதை நகரங்களுக்கு முழுமையாக வரவில்லை, அல்லது நகரங்களில் கால்பாவியபடி கிராமத்து வீதிகளில் கற்பனை உலா போகிறது என நினைக்கிறேன். இதற்கு விதிவிலக்கு உண்டென்றாலும், பொதுவான போக்கு மேற்சொன்னது தான். ஆனால் எதிர்க்கவிதை இந்த மிகைப்படுத்தப்பட்ட செண்டிமெண்டுகளை உடைத்து விட்டு அன்றாட வாழ்வின் அனைத்து விசயங்களை நோக்கியும், பாவனைகள் இன்றி, கவிதையை அழைத்து வரலாம் என்கிறது. தமிழில் இதே காரணத்துக்காகத் தான் எதிர்-கவிதைக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என நினைக்கிறேன். கூட்டத்திற்கு பிறகு இதைக் குறித்து பெருந்தேவியுடன் விவாதித்தேன்.


 கவிதை எழுதுவதற்கான சூழல், வெளி குறித்து அவர் பேசியதும் சுவாரஸ்யமாக இருந்தது. குறிப்பாக தன்னால் இந்தியாவில் இருக்கும் போது தான் கவிதை எழுத முடிகிறது, தன் காதில் தொடர்ந்து தமிழ் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டியது படைப்பூக்கத்துக்கு அவசியம் என்றார். ஒரு தமிழ் எழுத்தாளனாக என்னால் அவருடன் உடன்பட முடிந்தது. சொல்லப் போனால், இந்த சமூக வலைதளமும் அதனூடாக தொடர்ந்து உரையாடலும் சாத்தியப்படாவிட்டால் நான் முழுக்கத் துண்டிக்கப்பட்டிப்பேன் எனத் தோன்றுகிறது.


சும்மா சீண்டிப் பார்க்கலாம் என “நீங்க தான் அந்த ஶ்ரீவள்ளி என இப்போதாவது ஒப்புக்குவீங்களா?” எனக் கேட்டேன். வழக்கம் போல ரொம்ப தீவிரமாக அதை மறுத்து விட்டார். அதற்கான நியாயங்கள் - உணர்வுரீதியாகவும் கருத்தியல்ரீதியாகவும் - அவருக்கு உள்ளன என நினைக்கிறேன். எப்படி புக்காவஸ்கியை அவருடைய “பெண் வெறுப்புடன்” ஏற்கிறீர்கள் என்று கேட்டேன். ஒரு வாசகன் அன்னப்பறவை போல கசடை நீக்கி விட்டு சிறப்பானதை ஏற்க வேண்டியது தான் என்றார். நான் ஒரு விளையாட்டுக்காகத் தான் அக்கேள்வியை கேட்டேன். மற்றபடி, புக்காவஸ்கியிடம் பெண் வெறுப்பு இல்லை, அவர் பெண்களை எந்த கற்பனாவாதமும் அரசியல் சரிநிலைகள் இன்றி சித்தரிக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.


தமிழிலும் இது போன்ற உரையாடல்களை யாராவது ஒருங்கிணைக்க வேண்டும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...