பெண்கள் ஏன் திருமணம் செய்வதற்கு வசதியான, நிறைய சம்பாதிக்கிற ஆண்களையே தேர்ந்தெடுக்கிறார்கள் என நண்பர் கார்த்திக் தமிழன் ஒரு பதிவில் கேட்டிருந்தார். அவர் வயதான பணக்கார வியாபாரிகளை திருமணம் செய்து செட்டில் ஆகும் நடிகைகளை பட்டியலிட்டிருந்தார். ஒப்பிடுகையில் ஆண்கள் அப்படி செய்வதில்லை; ஒன்று காதலித்த பெண்களை மணக்கிறார்கள், அல்லது வீட்டில் பார்த்து கட்டி வைக்கும் பார்க்க சுமாரான பெண்களை ஏற்றுக் கொள்கிறார்கள்.
இதை முழுக்க நிரூபிக்க முடியாது - பணமும் புகழும் படைத்த ஆண்கள் அழகான பெண்களை, மாடல்கள், நடிகைகளைத் தேடி மணம் செய்வதுண்டு. அவை காதல் திருமணங்களாக அநேகமாக இருக்கும். பண வசதி இல்லாத ஆண்களை மணமுடித்து நிம்மதியான பெண்களும் உண்டு (விராத் கோலி - அனுஷ்கா சர்மா, ஹர்த்திக் பாண்டியா - நதாஸா ஸ்டான்கோவிக்). இன்னொரு பக்கம், காதலுக்காக வீட்டை விட்டு ஓடி வந்து பிடிவாதமாக காதல் கணவனுடன் வாழும் பெண்களும் உண்டு.
ஆனால் கார்த்திக்கின் கேள்வியின் அடிப்படை காதலுக்காக மணக்க வேண்டுமா? பணம், புகழுக்காக ஒருவரை தேர்வு செய்வது நேர்மையற்ற செயல் அல்லவா என்பது. எனக்கு இது பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கிலேய நாவலாசிரியர் ஜேன் ஆஸ்டினின் Pride and Prejudice, Sense and Sensibility போன்ற நாவல்களை நினைவுபடுத்தியது. இந்நாவல்களின் சாயலில் “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்” படத்தை ராஜீவ் மேனன் எடுத்தார். Bridget Jones’s Diaries மற்றொரு தழுவல்.
ஒரு பெண் எப்படியான கணவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே ஜேன் ஆஸ்டின் நாவல்களின் மையக் கேள்வி - ஒரு பெண் தன்னை மதிக்கிற, அன்பு காட்டுகிற, நம்பத் தகுந்த, நேர்மையான ஆணைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; அவன் ரொம்ப ரொமாண்டிக்காக, அழகாக, படோடோபமாக இல்லாவிட்டால் நல்லது என்பதே அவர் நாவல்களின் முடிவில் சொல்லும் பதில். காதலை அவர் “கர்வம், முன்தீர்மானம்” என அடையாளப்படுத்துகிறார். ஒரு கல்லூரி மாணவனாக எனக்கு இந்த நிலைப்பாடு பிடித்திருந்தது. ஆனால் அனுபவ ரீதியாக இந்த உண்மை புரிய எனக்கு காலம் பிடித்தது. நான் புரிந்து கொண்டது இதையே:
காதல் என்பது துணை விளைப்பொருள் (byproduct.)
தன்னளவில் காதல் தோன்றுவதோ மறைவதோ இல்லை. இருவர் மகிழ்ச்சியாக இருக்க சாத்தியமாகும் போது, அதற்கு முயற்சி பண்ணும் போது, காதல் - பெட்ரோலியம் தயாரிக்கும் போது பெர்பியூம், உரம், மண்ணெண்ணெய், டீசல் உள்ளிட்ட 6000 துணைப்பொருட்களாக விளைவதைப் போல - ஒரு துணை விளைபொருளாகத் தோன்றுகிறது. ஒரு கடப்புநிலை (transcendental) அனுபவமாக காதல் அவர்கள் மத்தியில் தோன்றுகிறது. சுஜாதா இதை ஒரு உயிரி வேதியல் தோற்றம், ஹார்மொன்களின் விளையாட்டு என்றார். நான் அதை ஏற்கவில்லை. இது காமத்துக்கான தயாரிப்பும் அல்ல. காதலிப்பதன் மூலம் நாம் காலத்தின் அமைவுகளை கடந்து, முன் தீர்மானங்களை மீறி, நமது தன்னிலையை கடந்து செல்கிறோம். இது தான் அந்த மேஜிக். ஆனால் நாம் செய்யும் ஒரே தவறு நாம் “காதலில் இருப்பதாக” நினைப்பதே.
உண்மையில் காதலை நாம் தாம் உருவாக்குகிறோம். தயிரில் திரளும் வெண்ணெய் போல காதல் திரண்டு வருகிறது. தோற்றுவிக்கப்படும் எதையும் போல அது அழியவும் செய்கிறது. காதலர்கள் கவிஞர்களாவது, இசையில் ஈடுபடுவது இதனால் தான் - கடப்புநிலை தன்மையால் காதல் ஒரு கலாபூர்வமான அனுபவமாகிறது.
ஆனால் ஒரு துணை விளைப்பொருள் மீது நின்று நீங்கள் வாழ முடியாது. உறவையும் தொடர முடியாது. காதலைப் போல வேறு பல சகிக்க முடியாத துணை விளைப்பொருட்களை ஆண்-பெண் உறவு உண்டாக்கும். அதை மீறி வர பணம், வசதி, செல்வாக்கு, சமூக அங்கீகாரம் தேவைப்படுகிறது. பணக்கார தம்பதியினர் விவாகரத்துக்குப் பின்பும் நட்புறவுடன் பெரிய தகராறு இல்லாமல் தொடர்வதைப் பாருங்கள் - ஒரே காரணம் பணம் தான். பெண்கள் இயல்பிலேயே புத்திசாலிகள் என்பதால், பெரிய தத்துவம் ஒன்றும் இல்லாமலே இது பளிச்சென அவர்களுக்கு புரிந்து போகிறது. அவ்வப்போது அவர்களுக்கு பைத்தியம் பிடித்து “காதலில் விழுந்தாலும்”, சட்டென தெளிந்து சரியான கணவனை தேர்ந்து கொள்கிறார்கள். அல்லது, சமூகம் அனுமதித்தால், நிம்மதியாக தனித்து வாழ்கிறார்கள். பெண்களின் மரபணுக்களும் இத்தேர்வில் உதவுகின்றன.
ஆண்கள் நன்றாக சமைத்துப் போடுகிற, குடும்பத்துக்கு “அடங்கின”, பந்தமான பெண்களையே மணமுடிக்க விரும்புகிறார்கள் என நினைக்கிறேன். காதலித்த பெண்களையே கட்டிக் கொண்டாலும் அவர்களை இப்படி மாற்ற முயலும் போது பல சிக்கல்கள் எழுகின்றன. அல்லது அவர்கள் அப்படி மாறின பிறகு முன்பு போல எப்படிக் காதலிப்பது, காதல் ஏன் அதே முகத்தைப் பார்த்தால் ஸ்விட்சைப் போட்டதைப் போல இப்போதும் வரவில்லை எனக் குழம்புகிறார்கள். இந்த உடலுக்காகவா, இந்த வாசனைக்காகவா, இந்த சுபாவத்துக்காகவே இப்படிக் கிடந்து ஏங்கினோம் என அதிர்ச்சியாகிறார்கள். சிலர் இந்த அதிர்ச்சியையும் மீறி தாம்பத்யத்திலும் காதலை மீள மீள உருவாக்கி அதில் நிழலாறி வாழ்க்கையை சுவையாக்குகிறார்கள். ஆனால் அது ரொம்ப ரொம்ப சிரமம் என்பதால் பலர் தோற்கிறார்கள்.

Comments