Skip to main content

இன்றைய எழுத்தும் ‘மூத்திர சந்தும்’




தமிழ் சமூகத்தால் எழுத்தாளர்கள் காய விடப்படுகிறார்கள் என அதிகம் புலம்பிய எழுத்தாளர் சாருவாகத் தான் இருப்பார். “அகாலம்” தொடரில் நிறைய இடங்களில் இது குறித்த சுயபகடி வருகிறது. எழுத்தாளர்களுக்கு ஓரளவுக்கு எழுத்து மூலம் வருமானம் வந்தால் நன்றாகத் தான் இருக்கும் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதைக் கடந்து பார்த்தால் அங்கீகாரம், புகழ் எல்லாம் தமிழ் எழுத்தாளனுக்கு தேவையற்ற நெருக்கடியை, அழுத்தத்தை கொண்டு வந்து விடும் என நினைக்கிறேன்.

 உங்கள் எழுத்தை1000-10,000க்குள் ஆட்கள் படிப்பதே வசதியானது. இப்படி எழுதினால் அப்படி சொல்வார்களோ, அப்படி அடிப்பார்களோ, இப்படி உதைப்பார்களோ என யோசிக்காமல், வாசகர்களை “மாட்டை போல சொறிந்து கொடுக்காமல்”, துணிச்சலுடன் சுதந்திரமாக எழுதலாம். எவ்வளவு குறைவாக வாசிக்கப்படுகிறானோ அந்தளவுக்கு எழுத்தாளன் அதிகமாக ரிஸ்க் எடுக்க முடியும்.

 ஒரு உ.தா., ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் இருந்து சுமார் பதினைந்து ஆண்டுகளில் தமிழில் கணிசமான புனைவெழுத்தாளர்கள் எதார்த்தவாத எழுத்துக்கு சட்டிப்பானை சகிதம் குடிபெயர்ந்து விட்டார்கள். இதற்கு எந்த கோட்பாட்டு, கொள்கைரீதியான காரணமும் இல்லை. இந்த காலகட்டத்தில் இணையம், பிரசுரத்தில் நிகழ்ந்த ‘புரட்சியால்’ அதிக வாசகர்களை போய் அடைந்து விட முடிகிறது. அதிக வாசகர்கள் படிக்க சுலபமானது மாய எதார்த்தம் அல்ல, எதார்த்த கதைவடிவமே. அதே போல இன்று நாடகீயமான உணர்ச்சிகரமான கதைகள் அதிகமாய் எழுதப்படுகின்றன. மேற்சொன்ன காரணம் தான். கவிதையை எடுத்துக் கொண்டால் இறுக்கமான, உள்மடிப்புக் கவிதைகள் அரிதாகி விட்டன. உணர்ச்சிகரமான, தன்னிலைக் கவிதைகள், நேரடிக் கவிதைகள், கதைகூறும் கவிதைகள் அதிகமாகி விட்டன. இன்றைய கவிதைகள் படிக்க அவ்வளவு சவாலாக இல்லை - இந்த எளிமையை சிலர் கவிதையின் பரிணாம வளர்ச்சி எனலாம். நான் இதை வெகுஜன ஊடகத்துக்கு அது முக்காடு விலக்கி வந்து கலகலப்பாய் பேச முயல்வதன் விளைவு என்கிறேன். கட்டுரைகளும் இன்று தகவல்கள், அரசியல் சரிநிலை, ஏற்கத்தக்க கருத்துக்கள் என தேய்வழக்காகி விட்டன. புதிய ஒன்றையும் அறிமுகப்படுத்த முடியாது; அறிவார்ந்து வாதிட்டால் வாசகன் பின் தொடர மாட்டான்; அதனால் சுலபத்தில் உட்கொள்ளும் வகையிலான பத்திரிகைத்தனமான கட்டுரைகளையே சிறு, நடுநிலை இதழ்களிலும் எழுதுகிறோம். 
 300இல் இருந்து 3000 வாசகர்களை அடைந்ததற்கே இவ்வளவு படாதபாடு பட்டு எழுத்தை லகுவாக்க, ஜனரஞ்சகமாக்க முயல்கிறோம் என்றால், சாரு எதிர்பார்ப்பது போல நாம் மூன்று லட்சம் வாசகர்களை அடைந்தால் என்னவாகும் யோசியுங்கள்.

அதிக வாசகர்கள் என்றால் எழுத்து ஜனரஞ்சகமாகி விடும் என நான் கூறவில்லை; உலக அளவில் அதிக வாசகர்களைக் கொண்ட எழுத்தாளர்கள் சமரசமின்றி எழுதி வருகிறார்கள். ஆனால் நமக்கு அந்த எதிர்பார்ப்பின் அழுத்தத்தை சமாளிக்கத் தெரியவில்லை என நினைக்கிறேன். 80 வயது தாத்தாவுக்கு 18 வயது மணமகள் கிடைத்ததைப் போல ஆகி விடுகிறோம். நிறைய மேக் அப் போட்டுக் கொண்டு பற்கள் கிடுகிடுவென ஒலியெழுப்ப வித்தைகள் பயில்கிறோம். இது முழுக்க முழுக்க தமிழ் எழுத்தாளனின் பலவீனத்தால் வருவதே. (நானும் நீங்களும் இதற்கு விதிவிலக்கில்லை.) 

ஜெனேயின் A Thief’s Journal எனும் சுயசரிதை நாவலை படித்து வருகிறேன். அதில் அவர் பேசுவதை ஒத்த deviantஆன விசயங்களை நம் எழுத்தாளர்களாலும் எழுத முடியும், ஆனால் அவர் பயன்படுத்தும் மொழியை நிச்சயமாக நாம் கையாள மாட்டோம். ஜெனேயின் எழுத்தில் அப்படி ஒரு தத்துவார்த்த ஆழம், உள்முரண்களின், உருவகங்களின் அடர்த்தி உள்ளது. அதைப் படித்தவுடன் வாசகனுக்குப் புரியாது என ஜெனே கவலைப்படவில்லை. இதுவே என் கலை, இதுவே நான் சொல்ல வரும் அனுபவம், இது வெறுமனே மேட்டர் கதையோ, சாகச அனுபவமோ அல்ல எனும் தெளிவு இருந்தது. இத்தனைக்கும் சிறைக்குள் இருந்தபடி அப்படி யோசிக்க அவரால் முடிந்தது.
ஆனால் நாம் இக்கதையை எழுதினால் நேரடியான கிளர்ச்சியான சம்பவங்களை மட்டும் எடுத்து, நிறைய கண்ணீரும் கூக்குரலும் கலந்து ஒரு தன்னிரக்க பிரதி ஆக்கி விடுவோம். ஏனென்றால் அதுவே வாசகனுக்குப் பிடிக்கும் என நம்புகிறோம். இந்த வாசக அழுத்தத்தைப் பற்றித் தான் நான் பேசுகிறேன். ஜெனேயின் எழுத்துக்கள் பல லட்சம் பேரை சென்றடைந்தன. அவர் வசதியாக ஒரு செலிபிரிட்டியாக வாழ முடிந்தது. ஆனால் அந்த நிலைமாற்றத்தை அவரால் சமாளித்து எழுதவும் முடிந்தது. நமக்கு அந்த அங்கீகாரத்தில் பத்து சதவீதம் கிடைத்தாலே நாம் பாலகுமாரன் ஆகி விடுவோம்.

சம்பத்தின் “இடைவெளி” அல்லது நகுலன், மௌனி (அல்லது இன்றைய கோணங்கி) பாணியிலான பரீட்சார்த்த, சிக்கலான, நிறைய இடையூறுகள் கொண்ட பிரதிகளை நாம் இன்று உருவாக்கததற்கு காரணம் அது வாசகனுக்குப் புரியாதோ எனும் பயம் தான். அதற்கு சௌகர்யமாக இவர்களை பழித்தும் நிராகரித்தும் ஜெ.மோ போன்றவர்கள் சொல்லும் கருத்துக்களை நாமும் இறுக்கப் பற்றிக் கொள்கிறோம். அதை வைத்து நம் பயத்தை நியாயப்படுத்துகிறோம். 

வாசகர்களின் முதிர்ச்சியையும் குறிப்பிட வேண்டும். ஒருவேளை நாம் பரவலான வாசகர்களை அடையும் போது அவர்கள் முதிர்ச்சியற்றவர்களாக இருப்பதை அடையாளம் கண்டு, அவர்களுக்காக நம்மை மாற்றிக் கொள்கிறோமோ? ஒருவேளை அன்றைய பிரான்ஸில் ஜெனே போன்ற ஒரு திருடனுக்கு, ஆண் விபச்சாரிக்கு அந்த பிரச்சனை இருந்திருக்காது. இப்போது அமெரிக்காவில் ஒரு பால் ஆஸ்டருக்கு அச்சிக்கல் இல்லை. ஆனால் இந்திய ஆங்கிலப் புனைவில் - என்னதான் ஆங்கிலம் படிக்கிற, வெளிநாடுகளில் வாழ்கிற மேற்தட்டு வாசகர்கள் என்றாலும் - எழுத்தை ஜனரஞ்சகமாக்கும் நெருக்கடி ஒரு விக்ரம் சேத், அமிதாவ் கோஷ், அரவிந்த் அடிகாவுக்கு உள்ளது. ஒருவேளை இது நம் இந்தியத் திருநாட்டின் தனித்துவமான ஒரு கோளாறாக இருக்கலாம்.  

அந்தந்த கணத்தின் மகிழ்ச்சிக்காக எழுத முடிவதே எழுத்தாளனின் சொர்க்கமாக இருக்க முடியும். வாசகர்களின் எதிர்பார்ப்பு, சக எழுத்தாளனின் மதிப்பீடு, மூத்த எழுத்தாளனின் ஆசீர்வாதம் / நிராகரிப்பு மூன்றையும் மறந்து விட்டு எழுத முடிய வேண்டும். கடும் எதிர்பார்ப்பின் மத்தியிலும் துணிந்து இஷ்டத்துக்கு எழுதும் முதிர்ச்சி வரும் வரை நாம் இந்த “மூத்திர சந்தில்” இருப்பதே நலம்!

Comments

Ram said…
அபிலாஷ், ஆனால் எங்கள அப்டியே மூத்திர சந்திலேயே படுக்க வைத்து விடாதீர்கள்.... அவ்வப்போது மூத்திர சந்தில் நாங்கள் இருக்கும் இருத்தலை நினைவூட்டுவது சாலச் சிறந்தது... பாருங்கள் அபிலாஷ், இக்கணம் ஒரு எழுத்தாளர் பற்றியும் அவரது நாவல் பற்றியும் அதன் தன்மை பற்றியும் அறிந்து கொண்டோம். மற்றும் என்னுடன் மூத்திர சந்தில் என்னோடு படுத்திருக்கும் சகாக்களுக்கு இந்த விஷயத்தை கடத்த முடியும்.... சரிதானே...???

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...