பேஸ்புக் தட்டச்சத் தெரிந்தவர்களுக்கு எல்லாம் எழுதும் தன்னம்பிக்கையை அளித்தது போல, யார் வேண்டுமானாலும் படக்கருவி முன் தடுமாறாமல் பேசும் பழக்கத்தை செல்போன்கள் அளித்ததைப் போல, கிளப் ஹவுஸ் விடிய விடிய பாடும் துணிச்சலை நிறைய சாமான்யர்களுக்கு கொடுத்துள்ளது. நடைமுறையில் தாம் பாடினால் முகம் சுளிப்பவர், கிண்டலடிப்பவர்கள் தவறாமல் இதில் பாராட்டி விடுவதால் அச்சம் முழுக்க மறைந்தது போல பாடுகிறார்கள். இதையெல்லாம் ‘மறைந்திருந்து’ கேட்பதற்கென்றே ஒரு குழு உள்ளது - எனக்கு ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் எப்.எம் வானொலி வந்த போது விடிய விடிய கையடக்க வானொலியை ஒலிக்க விட்டு தூங்காமல் கிடந்த நாட்கள் நினைவு வருகின்றன. ஆனால் நான் இதை எழுத வந்தது முழுக்க வேறொரு நோக்கத்திற்காக:
இந்த கிளப் ஹவுசெல்லாம் வருமுன்பே என் அப்பா ஊரில் ஒரு கிளப் ஹவுஸ் நடத்தினார். இரவு ஏழு மணிக்கு மேல் முழுபோதையில் கண்கள் சிவக்க அவர் ராஜ்கிரண் போல லுங்கியை உயர்த்தி கட்டிக் கொண்டு வீட்டு வாசலில் படுத்து எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடத் தொடங்குவார். நாங்கள் யார் சொன்னாலும் வீட்டுக்குள் வரவோ பாட்டை நிறுத்தவோ மாட்டார். பெரும்பாலும் 11 மணிக்கு மேல் நாங்களாக அவரை இழுத்து உள்ளே போட்டு விட்டால் தான் மெல்ல பாடிப் பாடி வீட்டுக்குள்ளே தூங்கிப் போவார். அப்பா பாடுவது இங்கு கிளப் ஹௌசில் இன்னிசை மன்னர்களைப் போல எந்த இசை போதமும் இல்லாமல், ‘நான் பாடுறது தாண்டா பாட்டு, கேட்கறதுன்னா கேளு’ எனும் கணக்கில் இருக்கும். நடுநடுவே நிறுத்தி அண்ணா, எம்.ஜி.ஆர், ராஜீவ் காந்தி போன்ற காலமான தலைவர்களின் பெயர்களை உரக்க கூவி இரங்கல் தெரிவிப்பார். அப்படியே அந்த துயர மனநிலையை ஒட்டிய ஒரு பாடலை ஆரம்பிப்பார்.
அப்பா இப்படி அந்த தெருவுக்கே பொழுதுபோக்காளராக திகழ்ந்தார். குழந்தைகளான எங்களுக்கும் அது பெரும் வேடிக்கையாக இருக்கும். காலையில் மகா சீரியஸாக, முறைத்துக் கொண்டு திரியும் அப்பா மாலையில் குதூகலமான பேர்வழியாக மாறுவது எங்களுக்கு பிடித்திருந்தது. அவருக்கு புற்றுநோய் வந்ததும் குடிப்பதையும் கூடவே பாடுவதையும் நிறுத்தினார். எங்கள் தெருவின் தொன்மையான கிளப்ஹவுஸ் இப்படி முடிவுக்கு வந்தது.
Comments