Skip to main content

பெண்கள், ஆண்கள், சுதந்திரம்


பெண்கள், ஆண்கள், சுதந்திரம்

பேஸ்புக்கில் உள்ள ஆண், பெண் எழுத்தாளர்களைப் பற்றி நண்பர் மானசீகன் ஒரு பதிவு எழுதி இருந்தார். அதில் பெண் எழுத்தாளர்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட டெம்பிளேட்டை உடைத்துக் கொண்டு எழுதுவதில்லை, “முகநூல் நவீன எழுத்தை” ஆண்களே கட்டி எழுப்புகிறார்கள் என்கிறார். நான் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை என்றாலும் (என்னவித கலகம் அது என விவாதம் திரும்ப வேண்டாம் என்று) ஆண்களை விட துணிச்சலாக பேஸ்புக்கில் இயங்கும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதே என் நம்பிக்கை. ஒரே சிக்கல் பெண்கள் கலகம் பண்ணினாலும் அது ஆண்களால் ஒரு நுகர்வாக மாற்றப்படுகிறது. அவர்களை நிம்மதியாக ஒரு போட்டோ போடக் கூட நாம் அனுமதிப்பதில்லை. 

நான் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் எழுதவில்லை என்றாலும், எனக்கு சாத்தியமுள்ள சுதந்திரத்தில் சிறு பகுதி கூட முகநூலின் பெண் எழுத்தாளர்களுக்கு இல்லை. பொதுவெளியிலும் அப்படித் தான். அட, என் பேஸ்புக் பக்கத்தில் சுயவிபரத்தைப் பாருங்கள் - அதில் எங்கே வேலை பார்க்கிறேன் போன்ற தகவல்களை மறைத்து விட்டேன். பயம் தான் காரணம். வேறு பலரையும் போல நான் ஒன்றிய அரசைப் பற்றின விமர்சனக் கட்டுரைகளை, கார்ட்டூன்களை என் பக்கத்தில் வெளியிடுவதில்லை. ஒரு சமூகவலைதளப் பதிவுக்காக நான் என் வேலையை இழக்கத் தயாரில்லை. நாளை தமிழ்நாட்டுக்கு வந்து விட்டால் இந்த பயம் இருக்காது என்றாலும் இப்போதைய என் நிலையை நான் தெளிவுபடுத்தியாக வேண்டும்.
 எனக்கு தரப்பட்ட எல்லைக்குள் இருந்து தான் என்னாலே எழுதவும் செயல்படவும் முடிகிறது. எனில் பெண்கள் உள்ளிட்ட மற்றவர்களின் சுதந்திரம் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள்.

இன்னும் இரண்டு விசயங்களை சுட்டிக்காட்ட நினைத்தேன். அதற்காகத் தான் இந்த பதிவே:

1) பெண்ணியத்திற்கு முக்கியமாக மூன்று அலைகளைக் குறிப்பிடுவார்கள். அதில் மூன்றாம் அலையானது பிரெஞ்சு பின்னமைப்பியல் சிந்தனையாளர்களால் முக்கியமாக உருவானது. எனக்கு அவ்வகை சிந்தனையாளர்களை மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு அடுத்தபடியாக வந்த ஆண்மையியல் ஆய்வாளர்களை (masculinity studies) என் முனைவர்பட்ட ஆய்வின் போது பயன்படுத்தி இருக்கிறேன். ஆக, பாலின ஆய்வுகளைப் (gender studies) பொறுத்தமட்டில் முதலிரு அலைகளின் போது எழுத கருத்துக்களுடன் என்னால் உடன்பட முடிவதில்லை. ஏனென்றால் அவை ஆண்-பெண் எனும் இருமையை உடல் சார்ந்து கட்டி எழுப்பப்படுகின்றன. சமூகத்தில் ஏற்கனவே உள்ள அந்த இருமையை தமது அரசியலுக்காக பயன்படுத்தி ஒரு விரோத சூழலை வளர்க்கிறார்கள் இப்பெண்ணியவாதிகள்.

 ஆண்-பெண் தன்னிலைகளை உடலைக் கடந்தவை, அவை மொழிக்குள் சாராம்சவாதத்தால் தோன்றி, அதே மொழிக்குள் உருமாறி மற்றொன்றாக ஆகக் கூடியவை எனக் கூறும் பின்நவீன பெண்ணியமும், பாலின விவாதங்களும் எனக்கு உவப்பானவை. ஆரம்ப கால இறுக்கமான, உடல்சார்ந்த பெண்ணியத்தை அம்பை உள்ளிட்டோர் இங்கு முன்னெடுத்தார்கள். அதுவே இன்றும் பேஸ்புக் உரையாடல்களில் பிரதானமாக உள்ளது. அதற்கு மாற்றாகவே இலக்கியத்தில் லீனா மற்றும் அவர் உருவாக்கிய பெண்ணிய அலையை சேர்ந்தவர்கள் இங்கு இருக்கிறார்கள். ஆனால் இந்த பலவகைப்பட்ட பெண்ணியவாதிகள் இடையில் கொடுக்கல் வாங்கலும் தொடர்ந்து உள்ளது. 

நான் எழுத வந்த போது இங்கே பெண்ணிய உரையாடல்களும் ஆண்களின் கொடும் அமைதியும் இருசாரிகளாக பிரிந்திருந்தனர். குடும்பத்தில், வேலையிடத்தில், சமூகத்தில் பெண்கள் செலுத்தும் மென்-வன்முறை உண்டு. அதை யாரும் பேசுவதில்லை. அதனாலே நான் சில கட்டுரைகளை அந்த கோணத்தில் ஆண்மையியல் நோக்கில் எழுதினேன். குறிப்பாக, நெருக்கடிக்கு உள்ளாகி பலவீனப்படும் ஆண்மையின் உளவியல் சினிமா, இலக்கியப் பிரதிகளின் பின்னணியில் ஆய்வு செய்து எழுதினேன், வாசக சாலையின் கூட்டமொன்றில் பேசவும் செய்தேன். அதன் நீட்சியாகவே “மீ டூ” இயக்கம் குறித்து அதன் பிரச்சனைகளை மையப்படுத்தி ஒரு நூலும் எழுதினேன். அதிலுள்ள வாதங்களுடன் நான் இன்றும் உடன்பட்டாலும், அதன் அறச்சிக்கல் குறித்த தெளிவு எனக்கு அண்மையில் தான் ஏற்பட்டது. இன்றுள்ள நிலையில் நிச்சயமாக அந்நூலை நான் எழுத மாட்டேன். (அதைப் பற்றி வேறொரு குறிப்பு எழுதியிருக்கிறேன்.) ஆக, இன்றும் எனக்கு பின்னமைப்பியல் பெண்ணியவாதமே ஏற்கத்தக்கது என்றாலும் ஆரம்பகால பெண்ணியவாதத்தை பின்பற்றுவோரின் அரசியல் நியாயத்தையும், அறத்தையும் புரிந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு ஆணாலும் தன் மொழியிலும் உரையாடல்களிலும் இருத்தலிலும் பெண்மையின் “இருமையற்ற நிலையை” எட்ட முடியும், அதுவே அவனது இலக்காக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சுருக்கமாக, ஆண்கள் பெண்களைப் போல் இருக்க முயல வேண்டும். அதுவே அவர்களின் உளநலனுக்கும் நல்லது.

அதே நேரம் ஆண்கள் தம்மளவிலும் “பெண்மையின் இருத்தலில்” இருக்கையில், பெண்களுடனான உறவில் தடையற்ற ஆண் தன்மையை முன்னெடுக்க வேண்டும் என நினைக்கிறேன். “தடையற்ற” என நான் சொல்வது வன்முறையாலான, கெட்டவார்த்தைகளை உதிர்க்கும், களிப்பை மட்டும் முன்னெடுக்கும் செயல்களை அல்ல. பெண்ணியம் ஏற்படுத்தி உள்ள குற்றவுணர்வை தாண்டிச் செல்வது, பெண்களிடம் பாசாங்கில்லாமல், அரசியல் சரிநிலை இல்லாமல் இருப்பதையே நான் வலியுறுத்துகிறேன். ஏனென்றால் பெண்களே இத்தகைய ஆண்களை விரும்புவதில்லை.

 நம்மிடம் நிறைய கசடுகள் உள்ளன, ஆனால் அந்த கசடுகளை தடையற்று வெளிப்படுத்தும் போதே நமது தன்னிலை முழுமையாகிறது, அப்போதே நேர்மையானவர்கள் ஆகிறோம். கசடுகளை சேர்த்து வைத்து, மறைத்து வைத்து என்றோ ஒருநாள் வெளிப்படும் போது நாம் வன்முறையாளர்கள் ஆகிறோம்.

 மேலும் ஆண் பாலின அடையாளம் ஒரு புனைவு தானே, அதை ஏன் எடுத்து அணியக் கூடாது? அது நாம் என்றால் தானே கவலைப்பட வேண்டும்? நாம் அதை எடுத்து அணியாத போது பெண்கள் பெண்மையுடன் ஆண்மையையும் சேர்த்து அணிகிற நெருக்கடிக்குள் தள்ளப்படுவார்கள். ஆகையால் பெண்களிடம் ஆண்கள் முழுக்க முழுக்க மென்மையாக, கனிவாக, நளினமாக, நாகரிகமாக நடந்து கொள்வதுடன் நான் உடன்படவில்லை. அத்தகைய உறவுகள் நிலைக்காது. இது புரியாததாலே பேஸ்புக்கில் ஒரு இளம் ஆண் எழுத்தாளர் பஷீரின் “பூவன் பழம்” கதையை கண்டித்து ஒரு பதிவு எழுதி இருந்தார். ஏனென்றால் பெண்ணிய கோணத்தில் அது அவருக்கு தவறான கதையாகப் படுகிறது. பஷீரின் சிறப்பு என்னவென்றால் இதை (சீண்டலை, மிரட்டலை, செல்லமாக அடித்தலை) ஒரு உன்னதமான விளையாட்டாக மாற்ற அவரால் முடிந்தது, அதை மிக எளிதாக, அனைவருக்கும் புரியும்படியாகவும் அவரால் சொல்ல முடிந்தது. பெண்ணிய கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு படித்தாலும் இன்றும் அக்கதையின் சேதி யாருக்கும் புரியும். அக்கதையின் சுருக்கத்தை அளிக்கிறேன். அது நான் அடுத்து சொல்ல வரும் விசயத்தை தெளிவாக்கி விடும்:

பஷீரின் கதையில் ஒரு இளம் தம்பதி வருகிறார்கள். தன் கணவனிடம் மனைவி தனக்கு ஆரஞ்சுப் பழம் வேண்டும் எனக் கேட்கிறாள். வெளியே கடும் மழை. வெள்ளப்பெருக்கு. அவன் தன் மனைவிக்காக துணிந்து வெளியே சென்று கடும் போராட்டங்களுக்குப் பிறகு ஆரஞ்சுப் பழம் கிடைக்காமல் பூவன் (வாழைப்) பழங்களை வாங்கி தன் மடியில் கட்டிக் கொண்டு வெள்ளம் மிகுந்த நதியில் நீந்திக் கடந்து வீட்டுக்கு இரவில் வருகிறான். அங்கே திருடனுக்கு பயந்து அவன் மனைவி கதவை அடைத்து வைத்து கையில் ஒரு வெட்டுக்கத்தியுடன் காத்திருக்கிறாள். பின்வாசல் வழி உள்ளே வரும் அவன் அவளிடம் பழங்களைக் காட்டுகிறான். அதை ஏற்க முடியாது எனக் கூறி முரண்டு பிடித்து அவள் அழுகிறாள். அவன் உடனே கத்தியை எடுத்து ஓங்கியபடி “இது என்ன?” என மிரட்டுகிறான். அவள் அழுகை ஓய்ந்து பயந்து போய் “இது ஆரஞ்சு” என்கிறாள். அப்படியே அவளை முழுக்க ஏற்க வைப்பதுடன் கதை முடிகிறது. காதலின் லீலையை, பாலின விளையாட்டின் உச்சத்தை இதை விட அழகாக வேறு யாராவது சித்தரிக்க முடியுமா?

2. மானசீகன் சொல்வது உண்மை தான் - எனக்கு பேஸ்புக்கில் (அன்றாட உலகிலும்) பெண்களை ரசித்து கொண்டாடுவதுடன் உடன்பாடில்லை. பெண்ணழகை நான் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் ரசிப்பதுண்டு. ஆனால் அதே சமயம் இது பொய், அது கட்டமைக்கப்பட்டது என என் மனம் எச்சரித்தபடியே இருக்கும். இது எனக்குள்ள ஒரு சிக்கல், உள்முரண். இது கிட்டத்தட்ட அனைத்து ஆண்களிடமும் உண்டு; அதனாலே தாம் மிகவும் ரசித்த பெண்களை தொடர்ந்து அருகில் இருந்து பார்க்க வாய்ப்பு அமையும் போது அவர்களுக்கு “அலுப்பு” ஏற்பட்டு வேறு பெண்களை நாடிப் போகிறார்கள். ஏனென்றால் அதே பெண்கள் எந்தளவுக்கு அழகற்றவர்கள் எனும் உண்மையை அவர்கள் எதிர்கொள்ள விரும்பவில்லை.  பெண்களின் “அழகை” அவர்களுடைய பேச்சிலும், உடலிலுமே நாம் நாட வேண்டும், “தோற்றத்தில்”அல்ல என நான் நினைக்கிறேன் (புக்காவஸ்கி தன் புனைவுகளில் அதிர்ச்சிகரமாக இதையே கூறுகிறார்). ஆனால் இது மிக மிக சிரமமானது. ஆனால் ஒருநாள் நம் மனத்தை இதற்கு பழக்கிட முடியும் என நம்புகிறேன். இது ஏன் முக்கியமென்றால், பெண்ணின் தோற்ற அழகை ரசிக்க ரசிக்க அவர்களிடம் இருந்து நாம் விலகிச் சென்றபடியே இருக்கிறோம், ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பொருளைத் தேடுவதை போல. பெண்களை ஆராதிப்பது ஒருவிதத்தில் பெண்களை வெறுப்பதாகும். இந்த பெண் அழகைப் பற்றி ஒரு புத்தகத்தை ஒருநாள் எழுத வேண்டும் என எனக்கு விருப்பமுண்டு.

என்னைத் தொடர்ந்து வாசிப்பதற்காக மானசீகனுக்கு என் நன்றி!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...