இன்றுடன் கிளப் ஹைவுஸில் தினமும் ஒரு மணிநேரம் என வார நாட்களில் மட்டும் வாசித்து மைக்கேல் இன்வுட்டின் Heidegger நூலை வாசித்து முடித்து விட்டோம். நானும் ஆயுஷும் இந்நூலின் ஒரு பகுதியை ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இணைந்து படித்திருக்கிறோம் என்றாலும் ஏழெட்டு பேராக கூட்டாக வாசித்து நூலை முடித்தது இதுவே முதன்முறை. அவ்விதத்தில் மிகவும் எழுச்சியூட்டிய விவாதங்களும், புத்துணர்ச்சியும், நிறைவும் அளித்ததாக வாசிப்பு நாட்கள் அமைந்தன. வழக்கமான கிளப் ஹவுஸ் அரட்டைகளில் எதையும் கற்றுக்கொள்ளாமல் உணர்ச்சிகளும் சிந்தனைகளும் சிதறிக்கொண்டே போவதை நான் கவனித்திருக்கிறேன். அல்லது தினமும் மாலையிலும் இரவிலுமாக பாடுகிறார்கள். அவர்கள் இடையே தினமும் வித்தியாசமாக இப்படி தத்துவம் வாசித்து விவாதித்தது ஒரு சாதனையாகத் தோன்றியது. இந்த சிக்கலான ஊடகத்தை ஒழுங்காக ஒரு விசயத்தை கற்பதற்கு பயன்படுத்தி இருக்கிறோம் எனும் திருப்தி.
இதன் முடிவில் அமர்ஜீத் போன்ற ஏற்கனவே தத்துவத்தில் ஆய்வு செய்திருக்கும், ஹைடெக்கரில் நல்ல வாசிப்புள்ள நண்பர் எங்களுக்கு கிடைத்தார். நேஹா, ஆயுஷ் மற்றும் எனக்கு ஹைடெக்கர் மீதுள்ள புரிதல் அதிகமானது. ஹபீப் இமானுவல் கேண்டில் இருந்து யுடர்ன் எடுத்து ஹைடெக்கர் வசம் வந்து விட்டார். இந்த வாசிப்பு பருவத்தில் அவர் ஹைடெக்கர் குறித்து சில நல்ல கட்டுரைகளை எழுதி விட்டார். நந்தினி, அனிதா போன்றோர் தத்துவ வாசிப்புக்கு பரிச்சயம் பெற்றிருக்கிறார்கள். சிமி முதல் சில வாரங்கள் வாசிப்பில் இருந்து பின்னர் அவருடைய வேலைகள் அதிகமாகியதால் நிறுத்திக் கொண்டார். ராஜ் போன்றோர் தொடர்ந்து கலந்து கொண்டனர். தினமும் எங்கள் வாசிப்பில் 5-8 பேர் கேட்பதற்காக வந்தனர். இன்று ஜமாலன் வந்திருந்தார். என்னுடைய ஆசை ஹபீபைப் போல தத்துவத்தில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வாசித்து எழுதும் இளைஞர்கள் இன்னும் ஐந்து பேர் தமிழில் உருவாக வேண்டும் என்பது. அப்படி ஒன்று எதிர்காலத்தில் நிகழ்ந்தால் அவர்களைக் கொண்டு ஒரு சிறிய தத்துவ இதழைக் கூட தமிழில் நடத்த முடியும். அது தமிழுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும்.
ஹபீபைப் போல நானும் இந்த விவாதங்களின் போது எழுந்த சிந்தனைகள், கேள்விகளைத் தொகுத்து ஐந்துக்கும் மேல் கட்டுரைகளை எழுதினேன். இன்னும் நிறைய எழுத ஆசைப்பட்டேன் - ஆனால் நடுவே தினமும் நாவலில் கூடுதலாய் நேரம் செலவிட நேர்ந்திட தத்துவத்தின் அழைப்பு மணிக்கு கதவைத் திறக்க முடியாமல் ஆயிற்று. என்னைப் போன்று எல்லா பக்கமும் கால் பாவி நிற்போருக்கு இது ஒரு சிக்கல்: தத்துவத்தில் நிபுணத்துவம் பெறுவது என் நோக்கம் அல்ல, தத்துவம் என் சிந்தனைகளைத் தொகுக்கவும், விவாதம் செய்ய ஒரு கூர்மையான மொழியைப் பெறவும் உதவுகிறது. இன்னும் சொல்லப் போனால் தொடர்ந்து தத்துவம் வாசிக்கும் போது யோசிக்கும், அதை ஒட்டி சொற்களைத் திரட்டும் வேகம் அதிகரிக்கிறது. இது புனைவெழுத்தை, கவித்துவத்தை பாதிக்குமா என தமிழில் ஒரு அச்சம் உள்ளது. இது தேவையற்றது. தத்துவத்துக்கான மனம் புனைவெழுத்தின் போது விழிப்பதில்லை. கவிதை வாசிக்கும் மனம் ஒரு கிரிக்கெட் போட்டியைக் கண்டு ஆவேசப்பட்டு கத்தும் போது கூட சேர்ந்து கத்துவதில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் நூறு மனங்கள் இயங்குகின்றன.
ஆனால் மற்றொரு பிரச்சனையே தத்துவத்தை விட பெரிது: வாசிக்க வாசிக்க எழுத குறைவான நேரமே வாய்க்கிறது. எனக்கு எழுத்தில் இருக்கும் பெரும் நெருக்கடியே வாசிப்பு தான். வாசிப்பு நான் எழுத வேண்டிய நேரத்தை அப்படியே தின்று விடுகிறது. தினமும் நான்கைந்து மணிநேரம் எழுத வேண்டி வரும் போது, அந்த நான்கு மணிநேரம் அப்படி ஆறு, ஏழு என வளரும் போது நான் ஒன்றுமே வாசிப்பதில்லை (செய்திக்கட்டுரைகள், முகநூல் பதிவுகள், புத்தகங்களில் ஒன்றிரண்டு பக்கங்கள் மேய்வதை தவிர்த்தால்.) எழுத்தாளர்கள் நிறைய வாசிக்க வேண்டும் எனக் கேட்பவர்கள் இப்பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்றும் பேச வேண்டும்.
ஆனால் இந்த கூட்டு வாசிப்பு எப்படியும் ஒரு கட்டாயமாவதால் தொடர்ச்சியாக படிக்க முடிகிறது. சில நாட்களில் வாசிக்க ஆற்றலோ ஆர்வமோ இல்லாத போது மற்றவர்கள் வாசிப்பு, பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கலாம். மனம் விழிக்கும் போது கூட சேர்ந்து விவாதிக்கலாம்.
கிளப் ஹவுஸில் இதைப் போல பிற நண்பர்கள் முக்கிய இலக்கிய நூல்களை - நாவல்களை - எடுத்து தினமும் படித்து சில நிமிடங்கள் அதை வைத்து கலந்துரையாடலாம். அதாவது படித்து வந்து பேசாமல், கூட்டாக படித்து பேசலாம். அது ஒரு உத்வேகமான, கிளர்ச்சியான அனுபவமாக இருக்கும். குறிப்பாக படிக்க சிக்கலான படைப்புகளை இதற்கு எடுத்துக் கொள்ளலாம். தஸ்தாவஸ்கியின் நாவல்கள், சரமாகோ போன்ற லத்தீன் அமெரிக்க படைப்பாளிகளின் நாவல்கள், புரூஸ்டின் In Search of Lost Time, தமிழில் நகுலனின் நாவல்கள், சம்பத்தின் “இடைவெளி”, கோணங்கியின் கதைகள், பா.வெங்கடேசனின் “பகீரதியின் மதியம்”, ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்” இப்படி பல படைப்புகள் இத்தகைய வாசிப்புக்கு தோதானவை (ஜி.நாகராஜனையும், புதுமைப்பித்தனையும் தினமும் ஒரு லிப்டில் ஏறி இறங்கும் அவகாசத்தில் போனில் படித்தே முடித்து விடலாம்.). புனைவு வாசிப்பில் (தத்துவம் சாத்தியப்படுத்துவது போன்ற) அவதானிப்புகள், அலசல்கள் இரண்டாம் பட்சமே. ஒன்றாக சேர்ந்து வாசித்து ஒரே சமயம் உணர்வெழுச்சி அடையும் போது அந்த புத்தகத்தின் ஆழம் கூடும். தினமும் வாசிக்க ஒரு உத்வேகமும் உண்டாகும்.
நாங்கள் அடுத்து நாளையில் இருந்து ஹைடெக்கரின் மாஸ்டர்பீஸான “இருத்தலும் காலமும்” (Being and Time) நூலை எடுத்துக் கொள்ளலாம் என இருக்கிறோம். ஒன்று அதை ஒன்றிரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டு முழுக்க படித்து விட வேண்டும். அல்லது முதலிரு பாகங்களை மட்டும் (பாதி நூல்) படித்து விட்டு அடுத்தொரு தத்துவத்துக்கு தாவ வேண்டும். என் ஆசை முழுநூலையும் கூட்டாகப் படிக்க வேண்டும் என்பதே.

Comments