தருண் குமார் ஒரு அபாரமான நடிகர். இவரை எப்படி இத்தனை நாட்களாக கவனிக்காமல் விட்டேன்?
நடிப்பில் மோகன் லால், விஜய் சேதுபதி, தனுஷ், பகத் பாஸில், விநாயகன், ஒரு பாணி என்றால் இவர்களுக்கு மாறான method நடிப்பு பள்ளியை சேர்ந்தவர்கள் ரகுவரன், விக்ரம், சூர்யா, மனோஜ் பாஜ்பாய் (ஓரளவுக்கு மம்முட்டி) போன்றவர்கள். (சிவாஜி, கமல், ரஜினி ஒருவகையான கலவையான, தனித்துவமான பாணி.) ஹாலிவுட்டில் மார்லன் பிராண்டோ, ராபர்ட் டினிரோ, ஹீத் லெட்ஜர், டஸ்டின் ஹாப்மேன். இந்திப் படவுலகில் நஸ்ருதீன் ஷா, நானா படேகர், இர்பான் கான், அமீர் கான் என ஒரு பட்டியல் உள்ளது.
தருண் குமார் இதில் method நடிப்பை பின்பற்றுகிறார். ஒரு பாத்திரத்தை அதன் பின்னணி, கதைக்களம், உளவியல் ஆகியவற்றைக் கொண்டு அதற்கென ஒரு உடல்மொழியை தேர்ந்து கொள்கிறார்கள். அதற்கேற்ப படம் முழுக்க நடித்து விடுகிறார்கள். அவர்கள் பார்க்கிற, உதடு அசைகிற, முகத்தை வெட்டுகிற, தோளை அசைகிற பாணி என ஒவ்வொன்றும் அளந்தெடுத்தாற் போல இருக்கும். ஒரு கோடு கிழித்து துல்லியமாக நடப்பது போல. இதன் சிறப்பு ஒரு படம் பார்த்து முடித்ததும் அந்த நடிகரே அந்த பாத்திரம் தான் என நமக்குத் தோன்றும். இன்னொரு பாத்திரத்தில் நடிக்கும் போது அவரா இவர் என குழப்பமாக இருக்கும்.
தருணின் நடிப்பை “தேனில்” பார்த்து விட்டு அவரது பேட்டியைப் பார்த்தால் அவரா இவர் என வியந்து போனேன். ஏனென்றால் அந்த மலைக்கிராமத்து பழங்குடி ஆண் பாத்திரமாகவே அவர் உருகிக் கரைந்து போகிறார். அவரைத் தேர்ந்ததற்காக இயக்குநர் கணேஷ் விநாயகனை பாராட்ட வேண்டும். தருணின் வேறு படங்களை இதுவரைக் கண்டதில்லை. இனி ஒவ்வொன்றாக தேடிப் பார்க்க வேண்டும்.
தருணின் ஒரு பிரச்சனை அவருக்கு ஒழுங்காக தமிழ் பேச வராது என்பது. அத்தோடு, அந்த உயரமான கட்டான உடலை வைத்து அவருக்கு வில்லன் பாத்திரங்களைத் தான் பொதுவாக கொடுப்பார்கள். ஆனால் தொடர்ந்து வாய்ப்பளித்தால் ஒரு பெரிய ரவுண்டு வருவார்.

Comments