Skip to main content

மதப்பிரச்சாரகர்களுடன் சேர்ந்து கடவுளைக் கொல்வது




நான் பிறந்த வளர்ந்த பகுதியில் கிறித்துவர்கள் அதிகம். பள்ளியில் குறிப்பாக என்னுடன் படித்த மாணவர்களில் இஸ்லாமியர் எனக்கு நெருக்கமாக இருந்தனர். அல்லது அவர்களுடைய ஆவேசமான, சினேகமாக, வெளிப்படையான குணம் எனக்குப் பிடித்திருந்தது. நான் பொதுமைப்படுத்த விரும்பவில்லை என்றாலும் இஸ்லாமியர் குறித்த என் மனப்பதிவு இது தான்; இஸ்லாமியர் இணக்கமாக ஒரு கூட்டான சமூகமாக வாழ்வதும், இந்துக்கள், கிறித்துவர்களைப் போல முழுக்க ‘நவீனப்படாமல்’ இருப்பதும் எனக்குப் பிடித்திருந்தது. மற்ற மதங்களில் ஒருவர் காலமானால் பக்கத்து வீட்டாருக்கே தெரிந்திருக்காது. ஆனால் நான் கவனித்த வரையில் ஈமச்சடங்குகளில் இஸ்லாமியர் பெருங்கூட்டமாக கலந்து கொண்டு ஆறுதல் அளிப்பதும் உதவுவதும் என்னைக் கவர்ந்தது. அதே போல, மத்திய வர்க்கத்தைப் பொறுத்தமட்டில் அதிக சிக்கலில்லாத பெண்கள் இஸ்லாமிய பெண்களே என்றும் என் அவதானிப்பு. அவர்களுடைய குடும்பச் சூழல் அவர்களை (இந்து, கிறித்துவப் பெண்களைப் போல) முற்போக்கு சிந்தனை, பிற்போக்கான மரபார்ந்த நம்பிக்கைகள், நவீன உலகம், பழமையான இறுக்கமான க்கடமைப்புகள் இடையே மூச்சுமுட்ட வைப்பதில்லை என நினைக்கிறேன். அந்த விதத்தில் ‘இயல்பான’, சிக்கலில்லாத, சற்றே (நல்ல அர்த்தத்தில்) ‘பின்நவீனக்’ குடும்ப அமைப்பு அவர்களுக்கு சாத்தியப்படுகிறது. இதுவொன்றும் அறுதியான கருத்தல்ல - நான் பேசி, பழகிய அளவில் சொல்கிறேன். (கல்வியும், வசதி வாய்ப்புகளும் அதிகமாக இஸ்லாமிய குடும்பங்களும் இந்து, கிறித்துவக் குடும்பங்களைப் போலவே மாறும்.) கூடவே அவர்களுடைய சுவையான உணவுப் பழக்கம், நெருக்கமான சொந்தங்கள் கொண்ட வாழ்க்கை முறை. இன்னொரு விசயம் - இதை நான் சொன்னதும் ‘ரொம்ப பிற்போக்கான கருத்து’ என நீங்கள் முகம் சுளிப்பீர்கள். ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் இதுவும் ஒரு முக்கிய எதார்த்தமே - நான் பார்த்தவரையில் இஸ்லாமிய இளைஞர்களில் ஒரு பகுதியினர் பள்ளிக்கல்வியை முடித்து விட்டு நேரடியாக வணிகத்துக்குள் நுழைந்து விடுகிறார்கள். இது ஒருவிதத்தில் நல்லதே; ஏனென்றால் நவீனக் கல்வி நம்மை ஒரு இறுக்கமான அசெம்பிளி லைன் வாழ்க்கைக்கு தயாராக்கி பரஸ்பரம் அந்நியர்களாக்கி விடுகிறது. படித்து வெளிவந்ததும் இதயம் துடிக்கும் ஒரு ரோபோ ஆகி விடுகிறோம். படிப்பையும், நவீன வாழ்க்கையையும் எட்டியே வைக்கும் போது ரத்தமும் சதையுமான ஒரு வாழ்க்கைக்குள் நுழைய இந்த இஸ்லாமிய இளைஞர்களால் முடிகிறது. படித்த இஸ்லாமிய இளைஞர்களிடம் ஒரு ‘புத்திசாலித்தனம்’ , சிந்தனையின் விலகல், அடுத்த மனிதன் மீதான ஒரு சிறிய சந்தேகம், கேள்வியுணர்வு வந்து விடுகின்றன; ஆக, கல்வியால் நன்மை இருக்குமளவுக்கு தீமையும் உண்டு.


 தொலைவிலோ அண்மையிலோ இருந்து பார்க்கையில் “இஸ்லாமிய ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள்” என்று சற்றே பொறாமைப்பட்டுக் கொள்வேன். (இஸ்லாமிய பெண்களின் உரிமைப்பிரச்சனைகளை நான் இங்கே கொண்டு வரப் போவதில்லை; அது வேறு பிரச்சனை.) ஆனால் தீவிர மதவாத (வஹாபிய) மனநிலை கொண்ட இஸ்லாமிய குடும்பங்களின் தூய்மைவாதத்துடன் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. பதின்வயதில் இருந்தே (கலை இலக்கியப் பெருமன்ற நண்பர்கள் வழி) எனக்கு இது குறித்து புரிதல் உண்டு. ஆனாலும் யார் நட்பாக நெருங்கினாலும் தடையின்றி பழக அவர்களால் முடியும்; இன்னொரு பக்கம், ‘நம்மவர்களோ’ சாதி, மொழி, ஊர்ப்பின்னணி என ஒவ்வொன்றையும் மதிப்பிட்டே நம்மை அங்கீகரிக்கலாமா என கடைசி வரை ஊசலாடிக் கொண்டிருப்பார்கள்.


ஒருவேளை நான் இந்த பிறவியில் இஸ்லாமியனாக பிறந்திருந்தால் கூடுதலாக மகிழ்ச்சியாக இருந்திருப்பேன் என பகற்கனவு கண்டதுண்டு. ஆனால் அந்த மதம் நோக்கி நான் நகர்ந்ததில்லை. எம்.ஸி.ஸியில் என் ஜூனியராக படித்த ஒரு நண்பர் அண்மையில் என்னைத் தொடர்பு கொண்டார். அவருடைய இஸ்லாமிய பெயர் எனக்கு புதிதாக இருந்தது. இந்துப் பெயரை சொன்னதும், பழைய புகைப்படத்தைக் கண்டதும் யார் என அடையாளம் கண்டுகொண்டேன். அவர் இஸ்லாத்துக்கு மாறி விட்டார். எப்படி எனக் கேட்டால் கல்லூரியில் படிக்கும் போதே தனக்கு அந்த நாட்டம் இருந்ததாகவும் (எங்களுக்கு அப்போது இது தெரியாது), பின்னர் மதம் மாறி ஒரு இஸ்லாமியப் பெண்ணை மணந்ததாகவும் என்னிடம் கூறினார். இப்போது குழந்தை, உறவுக்காரர்கள் என நிம்மதியான வாழ்க்கை. அப்போது தான் நான் ஏன் ‘இப்படி’ ஒரு திசையை எடுக்கவில்லை என யோசித்தேன் - ஒரு முக்கிய காரணம் என் வளர்ப்பு: 


பொதுவாக நம்பிக்கையாளர்கள் எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும், கொள்கைக்கும் முழுமையாக மாறவும் தம்மை ஒப்புக்கொடுக்கவும் செய்வார்கள். என் அப்பா என்னை வேறுவிதமாக வளர்த்தார். அவருக்கு தாய், தந்தைப் பாசம், குடும்ப அமைப்பின் மகத்துவம், வேலையின் மகத்துவம், கடவுளின் மகத்துவம் என எதிலும் நம்பிக்கை இல்லை. அவர் இந்த கருத்துக்களை, கட்டமைப்புகளை தொடர்ந்து தூஷணை செய்வதைக் கேட்டே நான் வளர்ந்தேன். என் இளமைப் பருவ அனுபவங்களும் உறவுகள், நம்பிக்கைகள், உழைப்பு, கல்வி என ஒவ்வொன்றிலும் பல முரண்களைக் காட்டின. எதையும் சந்தேகிப்பதும் கேள்வி கேட்பதுமே சிறந்தது என அப்பா எனக்கு மறைமுகமாகக் கற்றுக் கொடுத்தார். சொல்லப் போனால் தன்னிடம் ஒரு மகனாக நான் பாசம் வைக்க வேண்டும் என்று கூட அவர் கோரவில்லை. “உன்னைப் பெற்று எவ்வளவு சிரமப்பட்டு வளர்த்தேன் தெரியுமா?” என என் அப்பாவோ, அம்மாவோ ஒரு தடவை கூட என்னிடம் கூறியதில்லை.

 இது ஓரளவுக்கு “தளைகள்” இன்றி வளர எனக்கு உதவியது. எனக்கு பெரிதாக உதவிய இன்னொரு விசயம் என்னுடைய “கால்”. அதைப் பார்க்கும் போதெல்லாம் இந்த உலகம் “சரியானதாக”, “நேரானதாக” இருக்க வேண்டியதில்லை என நினைப்பேன். “நேரற்ற” உலகில் “நேரான” கடவுளை, குடும்பத்தை, அமைப்புகளை நான் சுலபத்தில் ஏற்பதில்லை.


இளமையில் நான் சாமியார்களை சந்தித்த போதும், ஆன்மீக உரைகளைக் கேட்ட போதும் ஆர்வம் கொண்டேன், ஆனால் அவர்கள் சொல்வதை மனப்பூர்வமாக நம்பவில்லை. வேதாகமம், திருக்குரான் போன்ற நூல்கள் என்னிடம் அளிக்கப்பட்ட போதும் அவற்றை ஒரு இலக்கிய நூலைப் போலத் தான் கண்டேன். இறைவாக்கு என நான் நம்பவில்லை. ஆனாலும் சாமியார்கள் என்னை ஈர்த்துக் கொண்டே இருந்தார்கள். கூடவே தத்துவமும். எந்த மதத்தவரும் மெய்யியல் சார்ந்து உரையாடினால் அவர்களுடன் சிறிது தூரம் சென்று விடுவேன். எதிர்கொண்ட எல்லா மதங்களிலும் என் மனம் ஈடுபட்டு பின்னோடி விடும். பிறகு மீண்டு வருவேன். இறைவனை, மதத்தை நம்பாத நான் ஏன் மதத்தின் மெய்யியல் உரைகளால் ஈர்க்கப்படுகிறேன் எனக் குழம்பினேன். அது வாழ்வனுவத்தின் இருத்தல் மீதான ஈர்ப்பே, கடப்புநிலை அனுபூதி மீதான ஆர்வமே என பின்னால் இருத்தலியல்வாதம், குறிப்பாக ஹைடெக்கரின் தத்துவம் எனக்குப் புரிய வைத்தது. ஆனாலும் அதிலும் ஒரு சன்னமான மீமெய்யியல் (metaphysics) ஒட்டிக் கொண்டிருந்தது. உலகுக்கும் ஆகாயத்துக்கும் இடையில் என்னை இது ஊசலாட வைத்தது. இது ஏன் என பின்னர் நாகார்ஜுனர் தன் பௌத்தம் மூலம் எனக்குப் புரிய வைத்தார். இந்த மீமெய்யியலின் சாராம்சவாதமே சிக்கல், அந்த பொய்மையை கண்டுணர முடிவதே பெரிய விடுதலை என ஒரு திசையை அவர் எனக்குக் காட்டினார். 


இப்போது சாமியார்களும், மெய்யியல் உரையாளர்களும், மதப்பிரச்சாரகர்களும் எனக்கு வேடதாரிகளாக புலப்பட்டார்கள். அவர்களுடைய கருத்துக்கள், வாதங்கள் எங்கே சுற்றி வந்தாலும் நாகார்ஜுனர் முன் தவிடுபொடியாகி விடும். இந்த பின்னணியை எதற்கு இங்கே சொல்கிறேன் என்றால் இன்று ஒரு இஸ்லாமியர் எனக்கு அவருடைய சமயநெறியை புரிய வைக்கப் போகிறேன் என உள்பெட்டியில் செய்திகளாக அனுப்பிக் கொண்டிருந்தேன். நான் பௌத்தத்தை நம்புகிறேன் என்ற போது அதிலுள்ள போதாமைக்கும் இஸ்லாமே பதிலளிக்க முடியும் என்றார். அவருடைய பதிலில் இருந்து அவருக்கு பௌத்தமும் தெரியாது, இஸ்லாமிய மெய்யியலும் தெரியாது எனப் புரிந்து கொண்டேன். நான் அவரைப் போன்றோரிடம் சொல்ல விரும்புவது இதுதான் - ஆன்மீகத்தை  காட்டி குழந்தைக்கு சாக்லேட் கொடுப்பது போல என்னை அடுத்தவர்கள் மயக்கி அழைத்து செல்லும் பருவத்தை நான் இப்போது கடந்து விட்டேன். 


பொறுமையும் விடுதலைக்கான ஆர்வமும் உண்டெனில் என்னிடம் வாருங்கள், உங்களுக்கு நாகார்ஜுனரைக் கற்றுத் தருகிறேன். உங்கள் சிறையில் என்னையும் ஏன் அடைக்க வேண்டும்? இறைவனைக் கொன்று விட்டால் இருள் விலகி விடும். உங்களுடைய கணிசமான துன்பங்களும் அகன்று விடும்.

என்ன அதை வாழும் ஒவ்வொரு நொடியும் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்காக புத்தியைப் பழக்க வேண்டும். மதப்பிரச்சாரகர்களே, உங்கள் நேரத்தை வீணடிக்காமல் என்னிடம் வாருங்கள். நீட்சே சொன்னது போல நாம் மெய்யியல் கொலைகாரர்கள் ஆவோம். இறைவனைக் கொல்வதன் ஒரு பிரச்சனை கொல்லக் கொல்ல அவன் உயிர்த்தெழுந்து கொண்டே இருப்பான் என்பது. ஆனால் அவன் சாவதற்கும் உயிர்ப்பதற்கும் இடைப்பட்ட நொடியில் நாம் முழுமையான நிம்மதியுடன், உயிர்ப்புடன் வாழலாம். சாகத்தக்க இறைவனின் கட்டளைகளை எனக்கு ஏன் சொல்லித் தருகிறீர்கள்? அவரை எப்படிக் கொள்வதென நான் உங்களுக்கு சொல்லித் தருகிறேன். வாங்க பாஸ்! இறைவனின் கழுத்தை நெரிப்போம்!

Comments

Ram said…
Abhilash, where to go for Jagarjunars preachings....????
நாகார்ஜுனரைப் பற்றி நானே எழுதியிருக்கிறேன். என் பிளாகில் தேடுங்கள்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...