நேற்றுடன் நான் இனி சர்ச்சைக்குரிய, விமர்சனத்துக்குரிய எதையும் எழுதாமல், வம்பு தும்புக்குப் போகாமல் வாயைப் பொத்திக் கொண்டிருப்பேன் எனும் விரதம் முடிந்து போனது. ஆக, ‘இந்த விரதம் அனுஷ்டித்த பத்து நாட்களும் எப்படி இருந்தன’ என நான் இங்கு கூறியாக வேண்டும்:
1) முதல் இரு நாட்கள் அவ்வப்போது விரல்கள் கருத்தெழுத பரபரத்தன. கட்டுப்படுத்திக் கொண்டேன்.
2) போகப் போக அப்படி விரல்கள் இருப்பதையே மறந்து போனேன்.
3) யாரிடமும் விவாதத்துக்குப் போகாததால் ஒருவித அமைதி என் இதயத்தில் வந்து குடிகொண்டது. அது நன்றாகவே இருந்தது.
4) ரொம்பவும் கருத்து சொல்லுவது, தீர்ப்பெழுதுவது கெட்டப்பழக்கம் மட்டுமல்ல அது மனநிம்மதியையும் கெடுக்கிறது, நாம் நம் சொற்களை அடுத்தவரை நோக்கி அல்ல, இறுதியில் நம்மை நோக்கியே வீசுகிறோம் எனப் புரிந்து கொண்டேன்.
5) இந்த பத்து நாட்களும் கவிதை எழுதுவதில் கவனம் செலுத்தினேன். சில நீள்கவிதைகளை, narrative கவிதைகளை பிரசுரித்தேன். அவை ஓரளவுக்கு கவனமும் பெற்றன. பேரறிவாளன் பற்றி ஒரு கவிதை எழுதினேன் - அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது; நிறைய இடங்களில் என் கண்கள் துளிர்த்ததில் எழுதுவதே சவாலானது.
5) இது போக, என் நாவலில் தினமும் கவனம் செலுத்த முடிந்தது. சில நாட்களில் எந்த இடையூறும் இல்லாமல் 5 மணிநேரம் கூட எழுத முடிந்தது.
6) பேஸ்புக் சர்ச்சைகள் என் வாசிப்பை குறைப்பதோ கூட்டுவதோ இல்லை எனப் புரிந்து கொண்டேன்.
7) என்னதான் தினமும் செய்தி படித்து, நாட்டுநடப்புகளை கவனித்தாலும் நாம் “அரசியல் பண்ணாமல்” விலகி இருந்து கவனிப்பது நெஞ்சுக்கு ஆறுதலளிக்கிறது. அன்றாட அரசியலைத் தாண்டி மனிதர்களை கவனிக்க, பொருட்படுத்த முடிகிறது. அரசியல் எப்படி நம் பார்வைக்கு நிறமூட்டி உலகை மாற்றி விடுகிறது என ஆச்சரியப்பட்டேன். ஜெயமோகனுடன் பல விசயங்களில் நான் மாறுபட்டாலும் அன்றாட நடப்புகள், அரசியல் விவாதங்களில் எதிர்வினையாற்றுவதன் ஆபத்து பற்றி அவர் சொல்வதுடன் முழுக்க இப்போது உடன்படுகிறேன்.
ஆனால் முழுக்க அரசியலற்று இருப்பதும் ஆபத்தானது. இதன் நடுவே ஒரு சமநிலை வேண்டும்.
அது எப்படி என்று தான் யாருக்கும் தெரியவில்லை, அரசியல்வாதிகளைத் தவிர. ஏனென்றால் அவர்கள் எப்போதும் ஜாலியாக நல்லிணக்கத்துடன் இருக்கிறார்கள்.
8. அதே நேரம் இப்படி “சாமி சரணம்” என மாலைபோட்டுக்கொண்டு சுற்றுவதில் ஒரு சுயநலம் உள்ளது. ஒரு எழுத்தாளன் இப்படி இருக்கலாமா என எனக்கு ஒரு கேள்வி உள்ளது.
9) பத்து நாட்களை தாண்டிய நிலையில் இனி மெல்ல மெல்ல மாலையைக் கழற்றி, கோயில் குளம் சுற்றுவதை நிறுத்தி விட்டு கறிசாப்பாடு, கோபப்படுவது என “இயல்பு வாழ்க்கைக்கு” மீளலாம் என இருக்கிறேன். எல்லை மீறிப் போவதாகத் தோன்றினால் திரும்ப ஒரு 20 நாட்கள் மாலை போட்டு விடலாம்.
10) “நல்லவனாக” இருப்பதே இந்த உலகின் மிக ஜாலியான விசயம். அதனால் தான் இத்தனை நல்லவர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்.
Comments