பேரறிவாளன் தொடர்ந்து மூன்றாவது மாதமாக பரோலில் இருக்கிறார் எனப் படிக்கும் போது என்று அவரும் மிச்ச அறுவரும் விடுதலை ஆவார்கள் என ஏக்கம் வருகிறது. இதைப் பற்றி பேசும் போது நாம் எழுவருக்காக மட்டுமே பேசுவது, அவர்களின் விடுதலைக்காக குரல் எழுப்புவது நியாயம் அல்ல என்றும் தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாக சிறைகளை தகர்க்கும் நாள் ஒன்று வர வேண்டும். ஒரு நாகரிகமான சமூகத்தில் சிறை என ஒன்று இருக்கக் கூடாது. ஏன் எப்படி என்று சொல்கிறேன்:
1) சிறைத்தண்டனை சமூக ஒழுக்கத்தால், நீதியால் ஏற்க முடியாத செயலுக்கு அளிக்கப்படும் ஒன்று என்றால், அதற்காக ஒருவரை ஒரு ஆய்வக எலியைப் போல மாற்றி சமூகத்தில் இருந்து ஏன் விலக்கி வைக்க வேண்டும்? விலக்குதல் மட்டும் தான் தண்டனையா? சமூகத்தை காயப்படுத்திய ஒருவர் மன்னிப்பை எப்படி பெற முடியும், அச்சமூகத்துக்காக சேவை செய்யாமல் அன்றி?
2) தண்டனை எனும் பெயரில் சிறையில் பல லட்சம் பேரை அடைத்து வைத்து அவர்களுக்கு சமூக மன்னிப்பு, ஏற்பு கிடைக்காமல் பண்ணுகிறோம்.
3)சிறை எனும் பெயரில் லட்சக்கணக்கானோரின் மனித ஆற்றலை வீணடிக்கிறோம். சிறையில் இருந்து நேரத்தை வீணடிக்காமல் அவர்கள் சமூகக்கட்டுமானப் பணிகளில் ஈடுபடலாமே. உ.தா., என்னைப் போன்ற ஒரு ஆசிரியர் குற்றம் இழைத்தால் அவர் வசதி இல்லாதவர்களுக்கு இலவசமாக பத்து ஆண்டுகளுக்கு பாடமெடுக்கலாம். பேரறிவாளன் போன்றோர் பதிப்புத் துறையில் பணி செய்யலாம். கைதி எனும் அடையாளத்துடன் அரசியல் பிரச்சாரமும் செய்யலாம். ஜெயலலிதா, சசிகலா போன்றோரும் சிறையில் இருக்கையில் தம்முடைய அடையாளம், திறமையைப் பொறுத்து கலை, ஊடகத் துறைகளில் பணியாற்றலாம். கல்வி அறிவற்றவர்கள் (படித்துக் கொண்டே) உடல் உழைப்பில் ஈடுபடலாம். உ.தா., சாலை அமைப்பு, வேளாண் பணிகளில் ஈடுபடலாம். கொலைக்குற்றவாளிகள் தம்மால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேவை செய்யலாம், அவர்களுடைய ஊதியத்தில் 50% அம்மக்களுக்கு போய் சேரும்படி பண்ணலாம். உதா., ஆணவக் கொலைகள், சாதிவெறிக் கொலைகளில் ஈடுபட்டோரை ஒடுக்கப்பட்ட மக்களிடையே சேவை செய்யப் பணிக்கலாம்.
4) உடனடி ஊதியம் இல்லாமல், வங்கிக்கணக்கோ, அடையாள அட்டைகளோ, சொந்தமாக வீடோ எந்த பொருளோ இல்லாமல் தான் ஒரு கைதி இதைச் செய்ய வேண்டும். அவருக்கு குடும்பம் இல்லை, இச்சமூகமே அவரது குடும்பம், சொந்தபந்தம். கிட்டத்தட்ட ஒரு துறவியைப் போல ஒரு வாழ்க்கை இருக்க வேண்டும். அதாவது கண்ணுக்குப் புலப்படாத சிறை இருக்கும், ஆனால் சிறையில் இருக்கும் தனிமை, வீணாக்கப்படும் உணர்வில்லாமல் தாம் பிறருக்கு பயனுள்ளவிதம் வாழும் திருப்தியும் மகிழ்ச்சியும் இருக்கும்.
5) இவர்கள் சம்பாதிக்கும் பணத்தை சேர்த்து வைத்து அரசுக்கணக்கில் பங்குச்சந்தையில் முதலீடு பண்ணி,லாபத்துடன் இவர்கள் வெளிவரும் போது கொடுக்கலாம்.
6) கைதிகளை மக்களிடம் இருந்து பிரித்து வைக்காமல் மக்களுடனே வாழவும், பணி செய்யவும் அனுமதிக்க வேண்டும்.
7. தண்டனை என்பது தவறுக்கான பரிகாரமாக வேண்டுமே ஒழிய, மனரீதியாக ஒருவரை ஒடுக்குவதாக இருக்கக் கூடாது.
8. நம்முடனே வாழ்ந்து பணி செய்வதென்றால் அது என்னமாதிரி தண்டனை என நீங்கள் கேட்கலாம். நம்மைப் போல பெற்ற ஊதியத்தை செலவு செய்யும் உரிமை அவர்களுக்குக் கிடையாது. தேர்தலில் வாக்களிக்கலாமே ஒழிய சொந்தமாக ஒரு போன் நம்பரோ இணையத்தொடர்போ வைத்துக்கொள்ள முடியாது. கார், பைக், போன் வாங்க முடியாது. எதையும் அரசிடம் இருந்து பெற்றே பயன்படுத்தியாக வேண்டும். அவர்களால் பணத்தை இன்னொருவருக்கு வழங்கவும் முடியாது. இதுவே தண்டனை, இது அவர்களை மனதளவில் சுத்தீகரிக்கும் தண்டணையாக இருக்கும்.
9. நவீன உலகில் நமது தன்னிலையானது உற்பத்தி, நுகர்வு சார்ந்த செயல்பாடுகளால் உருவாகிறது. அது சாத்தியமில்லாமல், முழுக்க பிறரின் சமூகத்தின் பொது உற்பத்தி, பொது சமூக நுகர்வுக்கு தன் உழைப்பை செலுத்துவதன் மூலம் நிறைவை உணர்வது மட்டுமே ஒரு கைதிக்கு சாத்தியமாக இருக்கும்.
10. உணவை வாங்க முடியாது. அதை சமூகமே அவர்களுக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டும். அதாவது சமூக உணவுக்கூடங்கள் வழியாக. அது சாத்தியப்படாத போது அவர் வீடுவீடாக இரந்து வாங்க வேண்டும். இம்மக்கள் நமக்காக உழைக்கிறார்கள் என்பதால் அதை பிச்சையாக இழிவாக அன்றி கௌரவமான ஊதியமாக கருதி நாமும் உணவளிக்க வேண்டும். இரந்துண்பது ஆன்மீக ரீதியாக மக்களை மேம்படுத்தும் ஒரு பயிற்சி.
11. குடும்பம், நட்பு, காதல் போன்ற சமூக உறவுகள் கைதிகளுக்கு அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் இதை தன் உடைமையாக கோரல் கூடாது. கருணையுடன் அளிக்கப்பட்டால் பெற்றுக் கொள்ளலாம். ஆக உடலுறவு உண்டு, ஆனால் அந்த ஆணோ பெண்ணோ அதற்கு எதையும் பதிலுக்குப் பெற முடியாது.
12. இப்படியான ஒரு “திறந்தவெளி சிறை” தோற்றுவிக்கப்பட்டால் சிறைச்சாலை எனும் பெயரில் மனித உரிமை மீறல்கள், மனித ஆற்றல் வீணடிப்பு, மன அழுத்தம், தனிமை, வன்முறை, சித்திரவதை, போதை மருந்து பழக்கம், குற்றவாளிகள் மத்தியிலே இருக்க நேர்வதால் குற்றவாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்து அதுவே பின்னர் தொழிலாகிற நிலை ஒழியும்.
13. கைதிகளுக்கு உடனடியாக ஊதியம் அளிக்கத் தேவையில்லை என்பதால் மிகப்பெரிய தொகை ஒன்று அரசிடம் இருப்பாக சேரும். இதைக்கொண்டு சமூக நீதித்திட்டங்களை நிறைவேற்றலாம். திறமைமிக்க மனித ஆற்றலை தேசத்தின் வளர்ச்சிக்கு செலவழிக்கலாம். குற்றவாளிகள் மீது சமூகம் கொண்டுள்ள இழிவான பிம்பம், பயம், வெறுப்பு இல்லாமல் ஆகும். அவர்கள் கைதியாக ஆற்றும் பணியையே வெளியே வந்த பின்னும் தொடர முடியும் என்பதால் அவர்கள் மீண்டும் குற்றச்செயல்களுக்குத் திரும்பும் தேவையிருக்காது.
14. பணமும், நுகர்வும் இல்லாத வாழ்க்கையில் நிம்மதி இருக்கும். சாதி, மதப்பற்றுகள் குறையும். குடும்பத்துடன் இருக்கலாம், ஆனால் பொறுப்புகள் ஏற்க முடியாது என்பது கைதிகளை பணிவு கொண்டவர்களாக்கும். ஆண் கைதிகளின் ஈகோ மறையும். மனம் விரிவடையும்.
15. மரண தண்டனையை நிச்சயமாக ஒழிக்க வேண்டும்.
16. சிறைகளை ஒழிக்க சிறந்த வழி அவற்றை சமூகத்தின் நீட்சியாக மாற்றுவதும், தண்டனையை சமூக, தேச, மக்கள் சேவையாக மாற்றுவதுமே.
