என் பால்கனியை ஒட்டிய
வேப்பமரத்தின் சொரசொர்ப்பான அடர்பழுப்பு பட்டை மீது
இவ்வளவு மழையிலும்
ஊளையிடும் காற்றுக்கு அசைந்து கொடுக்காமல்
துளிகள் முலைக்கணுக்களாய் தொங்கும்
ஜொலிக்கும் இலைகளுக்கு மத்தியில்
நடந்து செல்லும் சிற்றெறும்பே
உன் வழியில் எதிரே வந்தமர்ந்த சோப்புக்குமிழியில்
எதைக் கண்டாய்?
அதன் கதவுகளை அவ்வளவு சன்னமாக
தட்டிப் பார்த்து விட்டு
நீ வந்த வழியிலே
திரும்ப சென்று விட்டு
மீண்டும் வந்த போது
அது அதே இடத்தில்
சிறிய ஊடுருவும் நடுக்கத்துடன் இருந்தது.
தன் ஷணப்பொழுது வாழ்வை
இந்த உலகில் உன்னுடன் மட்டுமே
பகிர்ந்து கொள்ள அது காத்திருந்தது
உன் நடை எனும் கூரக்கத்தியால்
அதை நீ அதன் மாரைப் பிளப்பாய் என
அல்லது இன்னும் மென்மையாய்
ஒரு குழந்தையின் நம்பிக்கையுடன்
நீ அதன் கதவைத் தட்டி உள்ளே புகுந்து
பார்ப்பாய் எனும் ஏக்கத்துடன்
காத்திருந்தது
ஒவ்வொரு உயிரையும் போல
தன் அன்பின் உச்சத்தை தன் அழிதலில் மட்டுமே
காண முடியும் என அதுவும்
நம்பியது.
அது தன் உயிர்த்தலை தன் இன்மையுடன்
பிணைத்திருந்தது.
திரும்ப வந்த நீ
மற்றொரு முறை தொடாமல் தொட்டுப் பார்த்தாய்
ஆனால் நடுக்கம் அலைபாயும் கண்ணாடிப் பரப்பின்
அருகில் வந்ததும் நீ நின்று விட்டாய்
நீ உன் சக எறும்புகள் விட்டுச் சென்ற
வாசனைத் தடத்தைத் தொடர்ந்து
அப்புறம் சென்று விட்டாய்
அப்போது உன் தோற்றம்
பல்கிப் பெருகி ஒருமுறை நடுங்கியது.
நீ மறைந்ததும் ஊடுருவும் நடுக்கம்
காற்றில் தடுமாறும் ஊடுருவலாகியது
ஒரு பக்கம் பிதுங்க மறுபக்கம் வளைந்தது
நீ அதை ஊடுருவி சென்று விட்டாய்
என நம்பி உன் பக்கம் வந்து
கையால் உன் சிறிய முகத்தைத் தொட்டுப் பேசிய
எறும்பிடம் நீ மறுசைகை பண்ணிய போது
அது இல்லாமல் ஆகியிருந்தது.
உனக்குப் பின் வந்த உன் மற்றொரு சகா
ஈரமாய் படிந்திருந்த வட்டத்தைக் கண்டு
திகைத்து நின்றது

Comments