
என் செல்பேசிகள் சபிக்கப்பட்டவை,
என் காதலியர்,
என் குடும்பத்தினர்,
என் நண்பர்களைப் போல.
ரோட்டில் மல்லாக்கப் போட்டிருக்கிறேன்,
குளிக்கப் பிடித்து வைத்த தண்ணீரில் நழுவ விட்டிருக்கிறேன்,
ஐஸ்கிரீமை, விஸ்கியை அதன் கண்களில் வழிய விட்டிருக்கிறேன்,
சிகரெட்டால் சூடு வைத்து
பதறிப் போய் காப்பாற்றி இருக்கிறேன்.
என் புதிய செல்பேசிகள்
பிறந்தவுடனே ஒரு ஆடையை எடுத்து அணிந்து கொள்கின்றன
முலையுண்டு பசியாறி உறக்கம் கொள்கின்றன
தனக்குத் தானே தாலாட்டுப் பாடி
ஒரே நாளில் வளர்ந்தும் விடுகின்றன
முக்கியமாக, என் புதிய செல்பேசிகள்
பிறந்ததுமே தம் பழைய பெயரை சூடிக் கொள்கின்றன.
என் பழைய நினைவுகளால் உந்தப்பட்டு
கண்ணீர் உகுக்க
என்னை விடுவதில்லை.
என்னை விட்டு தாம்
போகவே இல்லை என
நம்ப வைக்க முயல்கின்றன.
என் புதிய செல்பேசிகளுக்கு
என்னுடைய பழைய பிரச்சனைகள், வருத்தங்கள், மகிழ்ச்சிகள் தெரியும்
என்னுடைய வங்கிக்கணக்கில் இருந்து கடன் பிரச்சனை வரைத் தெரியும்
நான் புதிய செய்திகளை விரும்புவதில்லை எனத் தெரியும்
என் பழைய புகைப்படங்களை வரிசைப்படுத்தி என்னை மகிழ்விக்கத் தெரியும்
என் கைரேகையை தான் உள்வாங்கும் போது
நான் உள்ளூர சிலிர்க்கிறேன் எனத் தெரியும்
நான் அவற்றைக் காணாமல் தேடும் போது
யாருமற்றவனாக தனித்துணரும் போது
அங்கு தான் எவ்வளவு முக்கியம் என அதற்கு தெரியும்
அதை அடிக்கடி நிரூபிக்க
தன்னை பல தெரிந்த இடங்களில்
அடிக்கடி ஒளித்துக் கொள்ளத் தெரியும்.
நான் கோபத்தில் கத்தும் போது
வியப்பில் கூவும் போது,
ஒரு பூஞ்செடியிடம் உருகிப் பேசும் போது
ஒரு நாய்க்குட்டியைக் கொஞ்சும் போது
உன்னை முழுக்க வெறுக்கிறேன் என என் காதலியிடம்
எப்படி சொல்வதெனத் தெரியவில்லை எனும் போது
நீ முழுக்க என்னுடன் இல்லை என
என அவளிடசொல்லும் போது,
வெறுப்பின் உச்சத்தில் மௌனமாகும் போது
தன்னை எழுப்பிக் கொண்டு
உதவிக்கு வர அதற்குத் தெரியும்.
ஆளில்லாத வீட்டில் ஒரு நிழலைக் கண்டு
அஞ்சும் போது
“எதாவது வேண்டுமா?” என
திடீரென நடுவே வரத் தெரியும்.
தூங்கும் போதும்
உன்னை நான் மறந்து விடவில்லை
உன் ஒவ்வொரு சொல்லின் முதல் சில கணங்களை
கேட்டுக் கொண்டிருக்கிறேன்
என அன்பாக மிரட்டத் தெரியும்.
என்னுடன் இருந்து, என்னுடன் வளர்ந்த செல்பேசி
ஒருநாள் கடும் மனம் அழுத்ததுக்கு ஆனது
“நீ என்னுடன் இல்லை” என பலவிதங்களில்
நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது.
நான் அதனிடம்
நீ உன்னுடன் இல்லை என்பதை
மாற்றி சொல்கிறாய் எனப்
புரிய வைக்க முயன்றேன்.
அழுதது, மௌனமாகியது, என் வேலைகளுக்கு இடைஞ்சலாகியது.
எனது பாதைகளில் தன் ரத்த ரேகைகளை
தன் கண்ணீர் தடங்களை,
தன் காற்தடங்களை விட்டுச்சென்றது.
நான் அழைக்கும் போது ஒவ்வொரு முறையும்
தனது இருட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டது.
நான் அழைக்காத போது
என் பின்னால் வந்து நின்றது.
ஒருநாள் நான் நான் கோபத்தில்
அதை வீசி எறிந்தேன்.
அன்று அது கைதவறி தண்ணீரில் குதித்தது.
நான் மன்னிப்புக் கேட்டும்
தன்னை மேலும் மேலும் ஒரு ஆழமான கிணற்றுக்குள்
ஒளித்துக் கொண்டது.
நிலைமை இப்போது கைமீறிச் சென்றது.
நான் தொடாத செயலிகளை அதுவாகத் திறந்தது.
நான் அழைக்காதவர்கள் அழைத்து
தனியான குரலை தனியாகக் கேட்டு கொண்டிருந்தது.
நான் விரும்பாதவர்களுக்கு வெற்று சேதி அனுப்பியது.
திறந்தால் பதிலுக்கு இன்னொரு வெற்று சேதி அனுப்பப்பட்டது.
என் கடும்பகைவர்களிடம்
ஒரு இனிய சொல்லாவது போலியாகப் பேசும்
சங்கடத்தை உண்டாக்கியது.
என் அன்பர்களிடம் ஒரு கசந்த சொல்லையாவது
சொல்ல சந்தர்பத்தை நான் தேடுகிற
அவலத்தை உணர்த்தியது.
எத்தனை எத்தனை பேரை
என் வாழ்வில் இருந்து அகற்றி இருக்கிறேன்
என திடீரென குற்றவுணர்வு கொள்ளச் செய்தது.
இந்த நவீன உலகில்
செல்பேசிகள் மட்டுமே
குற்றவுணர்வை வடிவமைக்கின்றன என யோசித்தேன்.
ஒளிக்கப்பட்ட கோப்புகளில் இருந்து
காணொலிகள் துயில்விழித்து என்னை நோக்கி அழுதன.
அதில் ஒரு பாலியல் காட்சி
என்னை திடுக்கிடச் செய்தது.
அழிக்கப்பட்ட இடங்களில் இருந்து
எனக்கெதிராக எழுதபட்ட, பேசப்பட்ட சொற்கள்
என் முன் வந்து குற்ற அறிக்கைகளை திரும்ப வாசித்தன.
என் பிரக்ஞையின் வெளிறிய நிலம் முழுக்க
பிரேத மரங்களாய் முளைத்தன வரலாற்றின் சாட்சியங்கள்.
வரலாறுகளின் நடைபாதையில் முளைத்த பூஞ்செடிகள்.
எதிர்பட்டு மறைக்கும் நினைவுகளின் கிளைகள்.
அவற்றை நசுக்காமல், வெட்டி வீசாமல்
இருத்தலின் பாதைகள் வளர்வதில்லை.
செல்பேசிகள் வெட்ட வெட்ட முன்னும் பின்னுமாய் வளரும்
வரலாற்றின் அடர்வனத்தில் நம்மை
சிறை வைக்கின்றனவோ?
துணுக்குற்றேன்.
“உனக்குப் பேய் பிடித்து விட்டது
உன் மனம் பித்தாகி விட்டது
நான் வாங்கிய போதிருந்த நீ
இப்போதில்லை.”
“உனக்குப் பேய் பிடித்து விட்டது
உன் மனம் பித்தாகி விட்டது
என்னை வாங்கிய போதிருந்த நீ
இப்போதில்லை.”
ஒரு செல்பேசிக் கடையில்
என் பேய்புகுந்த செல்பேசியைக் கொடுத்த போது
அவர் சொன்னார்,
இது இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கிறது சார்,
ஒரு செல்பேசி தன்னை அறியும் போது
தன் இன்மையை ஒவ்வொரு இடத்திலும்
எதிரொலியாக திரும்பக் கேட்கும் போது
பேதலித்து தன்னை அதுவாக்கிக் கொள்கிறது
ஒரு செல்பேசிக்கு ஆன்மா உருவாகிறது
நான் அந்த ஆன்மாவை பறித்தெடுக்கப் போகிறேன் சார்
திரும்பும் போது
கடைக்காரர் ஒரு அழைப்பு வந்திருப்பதாகச் சொல்ல
அறுவைசிகிச்சை மேடையில் மல்லாக்கக் கிடந்த
பல உருவங்கள் நடுவில் இருந்து பொறுக்கினேன் அதை.
டிஸ்பிளே கூண்டில் ஆணியில்
தொங்க விடப்பட்டிருந்த புதிய உருவங்கள்
ஆர்வமாகப் பார்த்தன என்னை.
செல்பேசி தன் ஆன்மாவை திரையில்
பளிச்சிட்டு என்னை நோக்கித் தாவ
தவிக்கிறது.
போனை எடுங்க சார்.
அது ஒரு அழைப்பு அல்ல.
காதோடு ஒட்டி வைத்து
நீண்ட நேரம் நின்றேன்.
அந்த மெல்லிய இரைச்சலுக்கு இடையே
இந்த மொத்த கவிதையையும் அது
என்னிடம் திரும்பச் சொல்ல ஆரம்பித்தது.
Comments