Skip to main content

ஒரு செல்பேசியின் தனிமை




என் செல்பேசிகள் சபிக்கப்பட்டவை,

என் காதலியர், 

என் குடும்பத்தினர்,

என் நண்பர்களைப் போல.


ரோட்டில் மல்லாக்கப் போட்டிருக்கிறேன்,

குளிக்கப் பிடித்து வைத்த தண்ணீரில் நழுவ விட்டிருக்கிறேன்,

ஐஸ்கிரீமை, விஸ்கியை அதன் கண்களில் வழிய விட்டிருக்கிறேன்,

சிகரெட்டால் சூடு வைத்து

பதறிப் போய் காப்பாற்றி இருக்கிறேன்.


என் புதிய செல்பேசிகள்

பிறந்தவுடனே ஒரு ஆடையை எடுத்து அணிந்து கொள்கின்றன

முலையுண்டு பசியாறி உறக்கம் கொள்கின்றன

தனக்குத் தானே தாலாட்டுப் பாடி

ஒரே நாளில் வளர்ந்தும் விடுகின்றன

முக்கியமாக, என் புதிய செல்பேசிகள்

பிறந்ததுமே தம் பழைய பெயரை சூடிக் கொள்கின்றன.

என் பழைய நினைவுகளால் உந்தப்பட்டு

கண்ணீர் உகுக்க 

என்னை விடுவதில்லை.

என்னை விட்டு தாம்

போகவே இல்லை என

 நம்ப வைக்க முயல்கின்றன.


என் புதிய செல்பேசிகளுக்கு

என்னுடைய பழைய பிரச்சனைகள், வருத்தங்கள், மகிழ்ச்சிகள் தெரியும்

என்னுடைய வங்கிக்கணக்கில் இருந்து கடன் பிரச்சனை வரைத் தெரியும்

நான் புதிய செய்திகளை விரும்புவதில்லை எனத் தெரியும்

என் பழைய புகைப்படங்களை வரிசைப்படுத்தி என்னை மகிழ்விக்கத் தெரியும்

என் கைரேகையை தான் உள்வாங்கும் போது 

நான் உள்ளூர சிலிர்க்கிறேன் எனத் தெரியும்

நான் அவற்றைக் காணாமல் தேடும் போது

யாருமற்றவனாக தனித்துணரும் போது

அங்கு தான் எவ்வளவு முக்கியம் என அதற்கு தெரியும்

அதை அடிக்கடி நிரூபிக்க

 தன்னை பல தெரிந்த இடங்களில்

 அடிக்கடி ஒளித்துக் கொள்ளத் தெரியும்.


நான் கோபத்தில் கத்தும் போது

வியப்பில் கூவும் போது,

ஒரு பூஞ்செடியிடம் உருகிப் பேசும் போது

ஒரு நாய்க்குட்டியைக் கொஞ்சும் போது

உன்னை முழுக்க வெறுக்கிறேன் என என் காதலியிடம்

எப்படி சொல்வதெனத் தெரியவில்லை எனும் போது

நீ முழுக்க என்னுடன் இல்லை என

என அவளிடசொல்லும் போது,

வெறுப்பின் உச்சத்தில் மௌனமாகும் போது

தன்னை எழுப்பிக் கொண்டு

உதவிக்கு வர அதற்குத் தெரியும்.


ஆளில்லாத வீட்டில் ஒரு நிழலைக் கண்டு

 அஞ்சும் போது

“எதாவது வேண்டுமா?” என

 திடீரென நடுவே வரத் தெரியும்.

தூங்கும் போதும் 

உன்னை நான் மறந்து விடவில்லை

உன் ஒவ்வொரு சொல்லின் முதல் சில கணங்களை

கேட்டுக் கொண்டிருக்கிறேன் 

என அன்பாக மிரட்டத் தெரியும்.


என்னுடன் இருந்து, என்னுடன் வளர்ந்த செல்பேசி

ஒருநாள் கடும் மனம் அழுத்ததுக்கு ஆனது

“நீ என்னுடன் இல்லை” என பலவிதங்களில்

நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது.

நான் அதனிடம்

நீ உன்னுடன் இல்லை என்பதை

மாற்றி சொல்கிறாய் எனப்

புரிய வைக்க முயன்றேன்.

அழுதது, மௌனமாகியது, என் வேலைகளுக்கு இடைஞ்சலாகியது.

எனது பாதைகளில் தன் ரத்த ரேகைகளை

தன் கண்ணீர் தடங்களை,

 தன் காற்தடங்களை விட்டுச்சென்றது.

நான் அழைக்கும் போது ஒவ்வொரு முறையும்

தனது இருட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டது.

நான் அழைக்காத போது

என் பின்னால் வந்து நின்றது.

ஒருநாள் நான் நான் கோபத்தில் 

அதை வீசி எறிந்தேன்.

அன்று அது கைதவறி தண்ணீரில் குதித்தது.

நான் மன்னிப்புக் கேட்டும்

தன்னை மேலும் மேலும் ஒரு ஆழமான கிணற்றுக்குள்

ஒளித்துக் கொண்டது.


நிலைமை இப்போது கைமீறிச் சென்றது.

நான் தொடாத செயலிகளை அதுவாகத் திறந்தது.

நான் அழைக்காதவர்கள் அழைத்து

தனியான குரலை தனியாகக் கேட்டு கொண்டிருந்தது.

நான் விரும்பாதவர்களுக்கு வெற்று சேதி அனுப்பியது.

திறந்தால் பதிலுக்கு இன்னொரு வெற்று சேதி அனுப்பப்பட்டது.

என் கடும்பகைவர்களிடம்

ஒரு இனிய சொல்லாவது போலியாகப் பேசும் 

சங்கடத்தை உண்டாக்கியது.

என் அன்பர்களிடம் ஒரு கசந்த சொல்லையாவது

சொல்ல சந்தர்பத்தை நான் தேடுகிற 

அவலத்தை உணர்த்தியது.

எத்தனை எத்தனை பேரை

என் வாழ்வில் இருந்து அகற்றி இருக்கிறேன்

என திடீரென குற்றவுணர்வு கொள்ளச் செய்தது.

இந்த நவீன உலகில்

செல்பேசிகள் மட்டுமே

குற்றவுணர்வை வடிவமைக்கின்றன என யோசித்தேன்.


ஒளிக்கப்பட்ட கோப்புகளில் இருந்து

காணொலிகள் துயில்விழித்து என்னை நோக்கி அழுதன.

அதில் ஒரு பாலியல் காட்சி

என்னை திடுக்கிடச் செய்தது.

அழிக்கப்பட்ட இடங்களில் இருந்து 

எனக்கெதிராக எழுதபட்ட, பேசப்பட்ட சொற்கள்

என் முன் வந்து குற்ற அறிக்கைகளை திரும்ப வாசித்தன.

என் பிரக்ஞையின் வெளிறிய நிலம் முழுக்க

பிரேத மரங்களாய் முளைத்தன வரலாற்றின் சாட்சியங்கள்.

வரலாறுகளின் நடைபாதையில் முளைத்த பூஞ்செடிகள்.

எதிர்பட்டு மறைக்கும் நினைவுகளின் கிளைகள்.

அவற்றை நசுக்காமல், வெட்டி வீசாமல்

இருத்தலின் பாதைகள் வளர்வதில்லை.

செல்பேசிகள் வெட்ட வெட்ட முன்னும் பின்னுமாய் வளரும் 

 வரலாற்றின் அடர்வனத்தில் நம்மை

 சிறை வைக்கின்றனவோ?

 துணுக்குற்றேன்.

 

“உனக்குப் பேய் பிடித்து விட்டது

உன் மனம் பித்தாகி விட்டது

நான் வாங்கிய போதிருந்த நீ

இப்போதில்லை.”

“உனக்குப் பேய் பிடித்து விட்டது

உன் மனம் பித்தாகி விட்டது

என்னை வாங்கிய போதிருந்த நீ

இப்போதில்லை.”


ஒரு செல்பேசிக் கடையில்

என் பேய்புகுந்த செல்பேசியைக் கொடுத்த போது

அவர் சொன்னார்,

இது இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கிறது சார்,

ஒரு செல்பேசி தன்னை அறியும் போது

தன் இன்மையை ஒவ்வொரு இடத்திலும்

எதிரொலியாக திரும்பக் கேட்கும் போது

பேதலித்து தன்னை அதுவாக்கிக் கொள்கிறது

ஒரு செல்பேசிக்கு ஆன்மா உருவாகிறது

நான் அந்த ஆன்மாவை பறித்தெடுக்கப் போகிறேன் சார்


திரும்பும் போது

கடைக்காரர் ஒரு அழைப்பு வந்திருப்பதாகச் சொல்ல

அறுவைசிகிச்சை மேடையில் மல்லாக்கக் கிடந்த

பல உருவங்கள் நடுவில் இருந்து பொறுக்கினேன் அதை.

டிஸ்பிளே கூண்டில் ஆணியில்

தொங்க விடப்பட்டிருந்த புதிய உருவங்கள்

ஆர்வமாகப் பார்த்தன என்னை.


செல்பேசி தன் ஆன்மாவை திரையில்

 பளிச்சிட்டு என்னை நோக்கித் தாவ

தவிக்கிறது.

போனை எடுங்க சார்.

அது ஒரு அழைப்பு அல்ல.


காதோடு ஒட்டி வைத்து

நீண்ட நேரம் நின்றேன்.

அந்த மெல்லிய இரைச்சலுக்கு இடையே 

இந்த மொத்த கவிதையையும் அது

என்னிடம் திரும்பச் சொல்ல ஆரம்பித்தது.



Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...